கீச்சொலி கொண்ட ஒரு சுண்டெலி, அதன் பெயர் ரீபிசீபி. இது நார்னியாவின் நடபடிகள் என்ற கதைகளில் வரும் வீரமிக்க கதாபாத்திரம்.

வினோதமான விலங்குகளும், மனிதரும் வாழும் ஒருகற்பனை உலகத்தில், ரீபிசீபி என்பது ஒரு வீரமிக்க சுண்டெலி. அது தன்னுடைய சிறிய வாளை வீசிய வண்ணம், போர்களத்தில் இறங்கியது. அது, பயத்தை புறம்பே தள்ளி விட்டு, ஓர் இருளடைந்த தீவிற்குள் நுழைந்தது. இந்த ரீபிசீபியின் தைரியத்திற்கான காரணம் என்ன? அந்த சுண்டெலியின் மனதிற்குள், எப்படியாவது அஸ்லான் தேசத்தை அடைந்து விட வேண்டும் என்றிருந்த ஆழ்ந்த ஆவல் தான் இதற்கு காரணம். “அது தான் என் இருதயத்தின் வாஞ்சை” என்று கூறியது .ரீபிசீபியின் உண்மையான, ஆழ்ந்த விருப்பம், அதனை அரசனுக்கு நேராக வழி நடத்தியது.

எரிகோவிலிருந்த பர்திமேயு என்ற குருடன், தன்னுடைய வழக்கத்தின் படியே ஓரிடத்தில் உட்கார்ந்து, குவளையிலிருந்த காசுகளை குலுக்கிய வண்ணம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது, அவ்வழியே இயேசுவும், திரள் கூட்டமும் வருவதை அறிந்தான். உடனே அவன், “இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் ‘ என்று கூப்பிடத் தொடங்கினான் (மாற். 10:47). அக்கூட்டத்தினர் அவனை அமைதியாயிருக்குமாறு அதட்டினர், ஆனால் அவனை அமைதிப்படுத்த முடியவில்லை.

மாற்கு சொல்கின்றார், “இயேசு நின்றார்” (வ.49) அந்த கூட்டத்தின் நடுவில் ,இயேசு பர்திமேயுவிற்கு செவிகொடுத்தார். அவனிடம், “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய்?” என்று கேட்டார் (வச. 51).

அவனுடைய பதில் என்னவாயிருக்கும் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும், பர்திமேயு தன்னுடைய ஆழ்ந்த விருப்பத்தை வெளிப்படுத்தும் படி, இயேசு விரும்பினார். அவனுடைய உறுதியான விசுவாசத்தின் மூலம் வெளிப்படும் வல்லமையை அவர் அறிந்திருந்தார். “ஆண்டவரே, நான் பார்வை அடைய வேண்டும்” என்றான் பர்திமேயு. இயேசு அவனை வண்ணங்களையும், அழகையும், நண்பர்களின் முகத்தையும் முதல் முறையாக காணச் செய்து, வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

எல்லா விருப்பங்களும் உடனே சந்திக்கப்படுவதில்லை. இங்கு தேவையானது என்னவென்றால், பர்திமேயு தன்னுடைய உள்ளத்தின் வாஞ்சையை இயேசுவிடம் எடுத்துச் சென்றான். இதை நன்கு கவனித்தோமேயானால், நம்முடைய ஆழ்ந்த விருப்பங்களும் , வாஞ்சைகளும் நம்மை இயேசுவிடம் வழி நடத்திச் செல்லும் என்பதைக் கண்டுகொள்வோம்.