வகை  |  odb

உண்மை நண்பர்கள்

நான் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் போது, “சந்தர்ப்பவாத சிநேகிதி” ஒருத்தி இருந்தாள். எங்களுடைய சிறிய ஆலயத்தில், (என்னுடைய வயதில், நாங்கள் இருவர் மட்டுமே இருந்ததால்) நாங்கள் இருவரும் சிநேகிதிகள். பள்ளிக்கூடத்திற்கு வெளியே எப்போதாவது நாங்கள் இருவரும் சேர்ந்து கொள்வோம், ஆனால் பள்ளிக் கூடத்தில், அது வேறு கதை. அவள் எப்போதவது என்னைப் பார்த்தால், அவளுக்கு அருகில் யாருமே இல்லையென்றால், ஒரு ஹலோ சொல்வாள். இதனை உணர்ந்து கொண்ட நான், பள்ளி வளாகத்தினுள் அவளுடைய கண்களில் படுவதேயில்லை. எங்களுடைய நட்பின் எல்லையை நான் அறிவேன்.

நாம் அனைவருமே ஒருபக்க நட்பு அல்லது மேலோட்டமான நட்பின் வேதனையை அநுபவித்திருப்போம். மற்றொரு வகை நட்பு உள்ளது. அந்த நட்பிற்கு வரம்பு கிடையாது. இவ்வகை நட்புடையவர்கள், ஒருமனமுடையவர்களாய், வாழ்க்கைப் பயணத்தை அர்ப்பணத்தோடு பகிர்ந்து கொள்வர்.

தாவீதும், யோனத்தானும் இத்தகைய சிநேகிதர்கள். யோனத்தான் தாவீதோடு ஒரு மனமுடையவனாய், அவனை “தன்னைப் போல சிநேகித்தான்” (1 சாமு. 18:1-3). சவுலின் மரணத்திற்குப் பின், யோனத்தான் அரசாட்சிக்கு வருவதற்கு உரிமையிருந்தும், அரசனாக, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட தாவீதிடம் உண்மையுள்ளவனாயிருந்தான். சவுல், தாவீதைக் கொல்வதற்கு திட்டமிட்டிருந்தை அறிந்த யோனத்தான், தாவீதை இருமுறை காப்பாற்றினான் (19:1-6, 20:1-42).

எத்தனையோ இடர் வந்த போதும், தாவீதும், யோனத்தானும் “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்” என்ற நீதிமொழிகள் 17:17 வார்த்தைக்கேற்ப உண்மையான நண்பர்களாக இருந்தனர். இந்த உண்மையான நட்பு, தேவன் நம் மீது வைத்துள்ள அன்பின் ஆழத்தின் ஒரு பகுதியைக் காட்டுகின்றது (யோவா. 3:16; 15:15). இவர்களின் நட்பின் மூலம், தேவன் நம் மேல் வைத்துள்ள அன்பும் எத்தனை ஆழமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

நம்முடைய ஆசிர்வாதங்களும், அவருடைய அன்பும்

2015 ஆம் ஆண்டு ஒரு பெண், காலம் சென்ற தன் கணவனுடைய கம்ப்யூட்டரை மறு சுழற்சி மையத்திற்கு கொடுத்தாள். அந்த கம்ப்யூட்டர் 1976ல் உருவாக்கப்பட்டது. ஆனால், அது எப்பொழுது செய்யப்பட்டது என்பதைவிட, அது யாரால் உருவாக்கப்பட்டது என்பதே முக்கியம். அது ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகரான ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் தன்னுடைய கையால் உருவாக்கிய 200 கம்ப்யூட்டர்களில் ஒன்று. அதன் மதிப்பு 0.25 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டது ! சில பொருட்களின் உண்மையான மதிப்பு அதை உருவாக்கியவராலேயே கிடைக்கின்றது.

தேவன் நம்மை அவருடைய சாயலால் உருவாக்கியதால் நாம் அவருக்கு அதிக விலையேறப் பெற்றவர்கள் (ஆதி. 1:27). சங்கீதம் 136ல் ஆதி இஸ்ரவேலர்களின் சில முக்கிய நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர்கள் விடுபட்ட விதம், (வச. 11-12), வனாந்தரப் பயணம் (வச. 16), கானான் தேசத்தைச் சுதந்தரித்தல் (வச. 21-22) என்பன குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேல் சரித்திரத்தின் நிகழ்வுகள், ஒவ்வொரு முறை குறிப்பிடப்படும் போதும், அதனோடு “அவர் கிருபை என்றுமுள்ளது” என்ற பல்லவி திரும்பத் திரும்ப வருகின்றது. இந்தப் பல்லவி, இஸ்ரவேலரின் சரித்திர நிகழ்வுகள் தற்செயலாய் நடந்தவையல்ல என்பதை அவர்களுக்கு நினைவு படுத்துகின்றது. ஒவ்வொரு நிகழ்வும், தேவன் திட்டமிட்டு செயல் படுத்துவதையும், தான் படைத்த ஜனங்களின் மேல் அவர் வைத்துள்ள மாறாத அன்பினையும் காட்டுகிறது.

என்னுடைய வாழ்வில் தேவன் கிரியை செய்கிறதையும், அவருடைய அன்பின் வழிநடத்துதலையும், நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும், பரத்திலிருந்து உண்டாகி, என்னை உருவாக்கி, என்னை நேசிக்கின்ற சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது. (யாக். 1:17) என்பதையும் நான் நினைவுகூற அடிக்கடி தவறி விடுகிறேன். நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு ஆசிர்வாதமும், நம் மீது மாறாத அன்பு கொண்டுள்ள தேவனாலேயே வருகின்றது என்பதை புரிந்துகொள்ள நீயும், நானும் கற்றுக்கொள்ள வேண்டும்.

தேவனுடைய விருப்பதின் படியே ஆகட்டும்

நாங்கள் நியூயார்க் செல்லும் வழியில் ஒமகசே என்ற ஜப்பானிய உணவகத்திற்குச் சென்றிருந்த போது, நாட்டே, ஷெர்லின் ஆகிய இருவரும் அதனை மிகவும் ரசித்தனர். ஒமகசே என்பதற்கு ” உன்னுடைய விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன் “என்று அர்த்தம். இவ்வகை உணவகங்களுக்கு வருபவர்களின் உணவை சமையற்காரரே தீர்மானிப்பார். இந்த வகை உணவகத்திற்கு முதல் முறையாக வந்திருந்த போதிலும், இதில் தவறு ஏற்பட வாய்ப்பு இருந்த போதிலும், அந்த சமையற்காரர் தேர்ந்தெடுத்து தயாரித்த உணவை அவர்கள் விரும்பிச் சாப்பிட்டனர்.

இந்த கருத்தினைப் போன்று, நாம் தேவனிடம் எடுத்துச் செல்லும் ஜெபங்களை “நான் உம்முடைய விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன்” என்று கூறுவது சிறந்ததாகும். இயேசு அடிக்கடி தனிமையான இடத்திற்குச் சென்று ஜெபிப்பதைக் கண்ட சீடர்கள் (லூக். 5:16) இயேசுவிடம் தங்களுக்கும் ஜெபிக்க கற்றுத் தருமாறு கேட்கின்றனர். இயேசு, அவர்களின் அனுதின தேவைகளுக்காகவும், மன்னிப்பிற்காகவும், சோதனையில் விழாதபடி காக்கவும் ஜெபிக்க கற்பிக்கின்றார். இந்த ஜெபத்தின் மற்றொரு பகுதி நம்மை முற்றிலுமாக தேவனுக்கு அர்ப்பணிக்கும் படி கூறுகிறது. “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:10) என்று ஜெபிக்கும் படி கற்பித்தார்.

நம்முடைய தேவைகளை நாம் ஜெபத்தில் தேவனிடம் ஊற்றிவிட வேண்டும். அவர் நம்முடைய இருதயத்தின் விருப்பங்களைக் கேட்க விரும்புகின்றார், அவற்றைக் கொடுப்பதில் அதிக மகிழ்ச்சியடைகின்றார். ஆனால் நாம் குறைவுள்ள மனிதர்கள், நமக்கு எது நல்லது என்பது தெரியாது எனவே, தாழ்மையான சிந்தையோடு, நம்மை அவரிடம் ஒப்படைப்பதே சாலச் சிறந்தது. அவர் நம்பத்தகுந்தவர், அவர் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து நமக்கு தருவார் என்ற நம்பிக்கையோடு, ஜெபத்திற்கான பதிலையும் அவரிடமே விட்டு விடுவோம்.

பரதீசில் எரிமலையின் அக்கினிக் குழம்பு

வெப்ப மண்டல பசுமை காடுகள் வழியே, மெதுவாக நகர்ந்து வரும் நெருப்பு குழம்பு ஏற்படுத்திய ஓசை, அந்த அமைதியான சூழலில் கேட்டுக்கொண்டிருந்தது. அருகில் குடியிருப்பவர்களின் முகம் விறைத்துப் போனாலும், ஆச்சரியப்பட்டனர். அநேக நாட்களில் இவ்விடம் “பரதீசு” என்றே அழைக்கப்பட்டாலும், தற்சமயம், ஹவாய் தீவிலுள்ள பூனா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலபிளவு, தேவன் இந்த தீவுகளை கட்டுக்கடங்காத எரிமலையின் வல்லமையோடு உண்டாக்கியுள்ளார் என்பதைக் காட்டுகின்றது. 

ஆதி இஸ்ரவேலர்களும் கட்டுப்படுத்த முடியாத ஒரு வல்லமையைச் சந்தித்தனர். தாவீது அரசன் உடன்படிக்கைப் பெட்டியை மீண்டும் கைப்பற்றிய போது (2 சாமு. 6:1-4), ஒரு பெரிய ஆர்ப்பரிப்பு எழும்புகின்றது (வச. 5). உடன்படிக்கை பெட்டி சரிந்து விடாமல் பிடிக்கும்படி கையை நீட்டின ஒரு மனிதன் செத்த போது, அவர்களின் மகிழ்ச்சி நின்று போனது (வச. 6-7).

ஒரு எரிமலையைப் போன்று தேவனும் எப்பொழுது, எப்படி செயல் படுவார் என்பதை முன்னறிய முடியாதவர் என்று நாம் நினைக்கத் தோன்றும்.,உருவாக்கிய அவர் அழிக்கவும் செய்வார் எனவும் நினைக்கத்தோன்றும். ஆனால் தேவன் தன்னை ஆராதிப்பதற்கு என்று உருவாகிக்கியவற்றை எப்படி கையாள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். (எண். 4 பார்க்கவும்) இஸ்ரவேலர் தேவன் அருகில் வர உரிமையைப் பெற்றிருந்தும், அவருடைய பிரசன்னத்தின் மகிமை தகுதியற்ற அவர்களால் மேற்கொள்ள முடியாததாயிருக்கின்றது.

எபிரெயர் 12, பற்றியெரிகிற ஒரு மலையைப் பற்றி நினைவு படுத்துகின்றது. அங்கு தேவன் மோசேக்கு பத்து கட்டளைகளைக் கொடுத்தார். அது காண்போரை நடுங்கச் செய்தது (வச. 18-21). எபிரெயரை ஆக்கியோன், இந்த காட்சிக்கு மாறாக “நீங்கள் புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கு… வந்து சேர்ந்தீர்கள்” (வச. 22-24) என்கின்றார். அருகில் நெருங்க முடியாத, ஆனால் அன்புள்ள தந்தையிடம் நாம் நெருங்கி வரக்கூடிய வழியை, அவருடைய குமாரனாகிய இயேசு நமக்கு உருவாக்கிக் கொடுத்தார்.