பழி வாங்குவதற்குப் பதிலாக…
1956 ஆம் ஆண்டு, ஜிம் எலியெட்டும் மற்றும் நான்கு மிஷ்னரிகளும் வரானி என்ற பழங்குடியினரால் கொல்லப்பட்ட போது, அதற்குப் பின்பு என்ன நடந்தது என்பதை யாருமே எதிர் பார்க்கவில்லை. ஜிம்மின் மனைவி எலிசபெத், அவர்களின் இளம்வயது மகள், மற்றொரு மிஷ்னரியின் சகோதரி ஆகியோர் மனப்பூர்வமாக, தங்களுக்கு அருமையானவர்களைக் கொன்ற அதே மக்களோடு வசிக்கும் படி தேர்ந்து கொண்டனர். அவர்கள் அநேக வருடங்களை, வரானி சமுதாயத்தினரோடு செலவிட்டனர். அவர்களுடைய மொழியைக் கற்றுக் கொண்டனர், வேதகமத்தை அவர்களின் மொழியிலேயே எழுதினர். இந்த மூன்று பெண்களும் காட்டிய மன்னிப்பையும், இரக்கத்தையும் கண்ட வரானி இன மக்கள், தேவன் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்து கொண்டனர், அநேகர் இயேசுவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர்.
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள் (ரோமர் 12:17) என்ற வேத வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக, எலிசபெத்தும் அவளுடைய சிநேகிதியும் நம்பமுடியாத காரியத்தைச் செய்தனர். தேவன் தங்களுடைய வாழ்வில் கொடுத்துள்ள மாற்றத்தை, அவர்கள் தங்கள் செயலில் காட்ட வேண்டுமென, அப்போஸ்தலனாகிய பவுல், ரோமாபுரியிலுள்ள சபை மக்களை ஊக்கப்படுத்துகின்றார். பவுல் மனதில் சிந்திப்பது என்ன? அவர்களுக்குள், இயற்கையாகத் தோன்றும் பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு, இதையெல்லாம் தாண்டிய காரியங்களைச் செய்யச் சொல்கின்றார், தங்களுடைய எதிரிகளின் தேவைகளைச் சந்திக்கச் சொல்கின்றார், அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுக்கச் சொல்கின்றார்.
ஏன் இவற்றைச் செய்ய வேண்டும்? பவுல், பழைய ஏற்பாட்டிலுள்ள ஒரு பழமொழியைச் சுட்டிக் காட்டுகின்றார். “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரம்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.”(ரோமர் 12:20. நீதி.25:21-22) மேலும், விசுவாசிகள் அவர்களிடம் காட்டும் அன்பின் மூலம், தங்கள் எதிரிகளையும் ஆதாயப்படுத்திக் கொள்ள முடியும், அவர்களின் இருதயத்தில் மனம் திரும்புதலின் நெருப்பைக் கொளுத்திவிடவும் முடியும் என்கின்றார், இந்த அப்போஸ்தலன்.

புயலைப் பின்தொடர்தல்
“புயல் காற்றை பின்தொடர்வது” என்பது கொல்கத்தா மற்றும் வேறு சில இடங்களில் உள்ள வானிலை ஆர்வலர்களின் பொழுது போக்கு நிகழ்வு. இவர்கள் புயலைப் பின்தொடர்ந்து சென்று அதன் செயலைக் குறித்துத் தெரிந்துகொள்கின்றனர், மின்னல் தாக்குவதைப் படமெடுக்கின்றனர், அவற்றின் பின் விளைவுகளையும் கண்டறிகின்றனர், இத்தகைய மோசமான வானிலையின் போது நம்மில் அநேகர், இத்தகைய வலிமையான, தீய விளைவுகளை ஏற்படுத்தும் புயலின் போது வெளியே வருவதற்கே அச்சப்படும் போது, வெவ்வேறு இடங்களில் உள்ள இத்தகைய ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து, ஊடகங்களோடு இணைந்து, புயலைப் பின் தொடர்கின்றனர்.
என்னுடைய அநுபவத்தில், என் வாழ்வில், நான் புயல்களை பின் தொடர அவசியமில்லை, அவைகள் என்னை விரட்டிக்கொண்டே வருகின்றன. அந்த அநுபவம், சங்கீதம் 107 ல் அப்படியே கூறப்பட்டுள்ளது. அது, புயலில் சிக்கிக் கொண்ட கடல் பிரயாணிகளைப் பற்றி விளக்குகின்றது. அவர்கள், தவறானவற்றைத் தேர்ந்து கொண்டதால் வந்த பின் விளைவுகளால் துரத்தப்படுகின்றனர். சங்கீதக்காரன் சொல்கின்றார், “தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்” (சங். 107:28-30).
நம் வாழ்வில் ஏற்படும் புயல்கள், நம்மால் உருவாக்கப்பட்டவையோ அல்லது இந்த உடைந்து போன உலகத்தில் வாழ்வதால் ஏற்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் நம்முடைய தந்தை, இவை எல்லாவற்றையும் விடப் பெரியவர். புயல்கள் நம்மைத் துரத்தும் போது, அவர் ஒருவராலேயே, அவற்றை அமைதிப் படுத்த முடியும், அல்லது நமக்குள்ளேயுள்ள புயலை அடக்க முடியும்.

உன்னிடத்தில் உள்ளதைக் கொண்டு வா
“கல் சூப்”(Stone Soup) என்பது அநேக வெளியீடுகளில் வந்துள்ள ஒரு பழங்காலக் கதை. இக்கதையில், ஒரு கிராமத்திற்கு, ஒரு மனிதன் மிகுந்த பசியோடு வருகின்றான். ஆனால், அங்கு யாருமே அவனுக்கு ஒரு பிடி உணவளிக்க முன்வரவில்லை. அவன் நெருப்பை மூட்டி, அதில் ஒரு பானைத் தண்ணீரை வைத்து, அதில் ஒரு கல்லைப் போடுகின்றான். அவன், தன் “சூப்பை” கிண்ட ஆரம்பித்தவுடன், ஆர்வத்தோடு கவனித்துக்கொண்டிருந்த அந்த கிராமத்தினரில் ஒருவர், இரண்டு உருளைக்கிழங்குகளை அதனோடு சேர்க்கும் படி கொண்டுவந்தார், மற்றொருவர் சில கேரட்டுகள், வேறொருவர் சில வெங்காயங்கள் இன்னும் ஒருவர் ஒரு கை பார்லி, ஒரு விவசாயி கொஞ்சம் பால் என அதனோடு சேர்த்தனர். கடைசியாக “கல் சூப்” மிகவும் ருசியான சூப்பானது.
இந்த கதை, பகிர்ந்து கொள்வதின் மதிப்பை விளக்குகின்றது. அத்தோடு, நம்மிடம் இருப்பது சாதாரணப் பொருளாக இருந்தாலும், அதையும் கொண்டுவரும்படி சொல்லுகின்றது. யோவான் 6:1-14 வரையுள்ள வார்த்தைகளில், ஒரு பெரிய கூட்ட மக்களிடையே, ஒரு சிறு பையன் மட்டும் தான், தனக்கு உணவு கொண்டு வ ந்திருக்கின்றான். அவனுடைய கொஞ்ச உணவான ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும், கிறிஸ்துவின் சீடர்களுக்கு எந்த வகையிலும் உதவுவதாக இல்லை. ஆனால், அதை இயேசுவிடம் அர்ப்பணித்த போது, அவர் அதைப் பெருகச் செய்து, ஆயிரக்கணக்கான ஜனங்களைப் போஷித்தார்!
ஒருமுறை, ஒருவர், “நீங்கள் ஐந்தாயிரம் மக்களுக்கு உணவளித்திருக்கத் தேவையில்லை, ஒவ்வொருவரும் தங்களுடைய உணவைக் கொண்டு வந்திருக்க வேண்டும்” என்றார். இயேசு ஒருவரின் உணவை எடுத்து, ஆசிர்வதித்து, நாம் நினைக்கவும், எதிர்பார்க்கவும் முடியாத அளவிற்குப் பெருகச் செய்தது போல (வ.11), நம்முடைய சிறிய முயற்சியையும், திறமைகளையும், சேவையையும் அவர் ஏற்றுக் கொள்வார். அவர் விரும்புவதெல்லாம், நம்மிடமுள்ளதை, மனப்பூர்வமாக அவரிடம் கொண்டு வர வேண்டும் என்பதையே.

ஆவியானவரோடு நடத்தல்
பத்தாயிரம் மணி நேரம். எந்த ஒரு கைத்தொழிலிலும் கைதேர்ந்தவராக வேண்டுமெனின், இவ்வளவு நேரத்தை, அதற்குச் செலவிட வேண்டுமென, எழுத்தாளரான மால்காம் கிளாட் வெல் பரிந்துரைக்கிறார். மிகச் சிறந்த கலைஞர்களும், இசைஞர்களும் நிபுணத்துவத்தை அடைவதற்கு, அவர்களின் சுபாவத் திறமைமட்டும் போதுமானதாக இல்லை. அவர்கள், ஒவ்வொரு நாளும், தங்களின் கலையில் மூழ்கி, பயிற்சி எடுத்தப் பின்னரே இத்தகைய நிலையை அடைய முடிந்தது.
பரிசுத்த ஆவியின் வல்லமைக்குள் வாழக் கற்றுக் கொள்வதற்கும், இத்தகைய ஒரு மனநிலையே நமக்குத் தேவை என்பது, சற்று வினோதமாகத் தோன்றலாம். கலாத்தியரில், உங்களை தேவனுக்கென்று பிரித்துக்கொள்ளுங்கள் என்று கூறி, பவுல் சபையின் மக்களை ஊக்கப்படுத்துகின்றார். வெறுமனே சட்ட திட்டங்களை கைக்கொள்வதன் மூலம் இதனை அடைய முடியாது, நாம் பரிசுத்த ஆவியானவரோடு நடக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார். “நடத்தல்” என்பதற்கு, கலாத்தியர் 5:16 ல் பவுல் பயன் படுத்திய கிரேக்க வார்த்தை (peripateo), ஒன்றினைச் சுற்றி சுற்றி நடத்தல் அல்லது பயணித்தல் என்பதாகப் பொருள்படும். எனவே, ஆவியானவரோடு நடத்தல் என்பதன் மூலம் பவுல் கூற விரும்புவதென்னவெனின், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை ஒரு முறை மட்டும் அநுபவிப்பதல்ல, அனுதினமும் அவரோடு பயணம் செய்வதேயாகும்.
பரிசுத்த ஆவியானவர் நம்மோடிருந்து, அவர் நமக்குச் சொல்லும் வேலையை நாம் செய்யும் படி, நமக்கு ஆலோசனை தந்து, வழிநடத்தி, தேற்றும்படி, அவர் நம்மை முழுவதும் நிரப்புமாறு நாம் ஜெபிப்போம். இவ்வாறு நாம் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படும் போது (வ.18), அவருடைய வார்த்தையை கேட்பதிலும், அவருடைய வழிகாட்டலின்படி நடப்பதிலும் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண்போம். பரிசுத்த ஆவியானவரே, இன்றைக்கும், இனிவரும் நாட்களிலும் நான் உம்மோடு நடக்க, எனக்கு உதவியருளும்.

காலத்தின் வேகத்தைக் குறைத்துக்கொள்ளல்
1840 ஆம் ஆண்டு, மின்சாரக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, அநேக மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. நாம் இப்பொழுது, ஸ்மார்ட் கைக்கடிகாரங்களிலும், ஸ்மார்ட் அலைபேசிகளிலும், மடிக்கணினிகளிலும் நேரத்தைப் பார்க்கின்றோம். வாழ்க்கை வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது, நம்முடைய “ஓய்வு நேர” நடையின் வேகம் கூட அதிகரித்து விட்டது, முக்கியமாக, பட்டணங்களில் இந்நிலையைக் காணலாம். இது நம்முடைய உடல் நிலையை பெரிதும் பாதிக்கும் என அறிவாளிகள் சொல்கின்றார்கள். “நாம் வேக வேகமாக பயணம் செய்கின்றோம், நம்மால் இயன்ற மட்டும், சீக்கிரமாக மக்களைச் சந்திக்கின்றோம். எல்லா காரியங்களும் இப்பொழுதே நடந்து விட வேண்டுமென, நம்மை நினைக்கத் தூண்டுகின்றது” என்கின்றார், ஓர் அமெரிக்க பேராசிரியர்.
வேதாகமத்திலுள்ள மிகப்பழமையான சங்கீதங்களில் ஒன்றினை எழுதிய மோசே, நேரத்தைக் குறித்து சி ந்திக்கிறார். வாழ்க்கையின் வேகத்தை தேவன் கட்டுப்படுத்துகிறார், என அவர் கூறுகின்றார். “உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள் போலவும், இராச்சாமம் போலவும் இருக்கிறது” என எழுதுகிறார் (சங்.90:4).
காலத்தைக் கையாளுதலின் இரகசியம், வேகமாகச் செல்வதிலோ அல்லது மெதுவாகச் செல்வதிலோ இல்லை. அது எப்பொழுதும் தேவனோடிருத்தலாகும். அவரோடு அதிக நேரம் செலவிடுதலாகும். அப்படியாகும் போது, நாம் தேவனோடும், நம்மை உருவாக்கியவரோடும், (139:13) நாம் உருவாக்கப்பட்ட நோக்கத்தையும், திட்டங்களையும் அறிந்திருக்கிறவரோடும் ஒருமித்து செயல் பட ஆரம்பிப்போம். (வ.16)
இப்பூமியில், நாம் நிரந்தரமாக வாழப்போவதில்லை. ஆனாலும் நம்முடைய நாட்களை, நாம் ஞானத்தோடு திட்டமிடலாம். வெறுமனே கடிகாரத்தை கவனித்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளையும் தேவனுடைய கரத்தில் கொடுத்து விடலாம். மோசே சொல்வது போல, “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும் (90:12) அப்பொழுது நாம் இப்பொழுதும், எப்பொழுதும் சதாகாலங்களிலும் தேவனோடு இருப்போம்.