கிறிஸ்மஸ் விருந்தாளி
1944 ஆம் ஆண்டு, கிறிஸ்மஸ் அன்று மாலை, “ஓல்ட் பிரிங்கர்” என்று அழைக்கப்பட்ட ஒரு கைதி, சிறைச்சாலை மருத்துவமனையில், மரிக்கும் தருவாயில், சக கைதிகளால் நடத்தப்படும் எளிய கிறிஸ்மஸ் ஆராதனையை எதிர்பார்த்திருந்தார். அவர், “எப்பொழுது இசை ஆரம்பமாகும்?” என்று வில்லியம் மேக்டோகல் என்ற கைதியிடம் கேட்டார். இவரும் பிரிங்கரோடு, சுமத்ராவிலுள்ள முன்டோக் சிறைச்சாலையில், கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். “சீக்கிரத்தில்” என்றார், மேக்டோயல். “நல்லது, அப்படியானால் நான் அவர்களின் பாடலை, தூதர்களின் பாடலோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்,” என்று மரிக்கும் நிலையிலுள்ள பிரிங்கர் கூறினார்.
பல ஆண்டுகளுக்கு முன்னரே பிரிங்கர் இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தை விட்டு விலகிப் போயிருந்தாலும், கடைசி நாட்களில், அவர் தன் பாவங்களை அறிக்கையிட்டு, தேவ சமாதானத்தைப் பெற்றுக்கொண்டார். யாரையும் கசப்பான முகத்தோடு பார்க்கும் அவர், இப்பொழுது புன்முறுவலோடு, “முற்றிலும் மாற்றம் அடைந்தேன்” என்று கூறுவதாக மேக்டோகல் தெரிவித்தார்.
மெலிந்து போன, பதினோரு கைதிகளாலான பாடகர் குழு, பிரிங்கரின் விருப்பப்படி, அமைதியான இரவு (Silent Night) என்ற பாடலைப் பாடி முடித்ததும், பிரிங்கரும் அமைதியாக மரித்தார். அவர் மீண்டும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால், இப்பொழுது தேவனோடு பரலோகத்தில் இருப்பார் என்றும், “பிரிங்கருக்கு சாவு என்பது, இனிய கிறிஸ்மஸ் விருந்தாளியாக அமைந்தது” என்றும் மேக்டோகல் கூறினார்.
பிரிங்கர், சாவை எதிர் நோக்கிய விதம், எனக்குச் சிமியோனை நினைவுபடுத்துகின்றது. இந்த பரிசுத்தவானுக்கு, “கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடைய மாட்டாய்” என்று பரிசுத்த ஆவியினாலே அறிவிக்கப் பட்டிருந்தது. (லூக். 2:26) சிமியோன் தேவாலயத்தில் இயேசுவைக் கண்டு, “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்… உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” என்றார் (வச. 29,32).
பிரிங்கரோடு சேர்ந்து, மிகப் பெரிய கிறிஸ்மஸ் பரிசாக நாம் பெற்றுக்கொள்வதும், பகிர்ந்து கொள்வதும், இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தைக் காத்துக் கொள்வதேயாகும்.

ஆம், ஆம்… என்னும் தொடர் சங்கிலி
ஒரு கிறிஸ்மஸ் தினத்தன்று, என்னுடைய பாட்டியம்மா எனக்கு ஒரு முத்து மாலையைக் கொடுத்தார்கள். அந்த அழகிய முத்துக்கள் என் கழுத்தில் மின்னிக் கொண்டிருந்தன. ஒரு நாள், அந்த மாலையின் கம்பி அறுந்து, அதின் முத்துக்களெல்லாம் மரத்தினாலான தரையில் சிந்தி, குதித்து, நாலாபக்கமும் சிதறின. நான் அந்த தரையில் தவழ்ந்து, ஒவ்வொரு சிறிய முத்தையும் பொறுக்கினேன். ஒவ்வொன்றும் தனித் தனியே சிறியதாக இருந்தாலும், அவையனைத்தையும் சேர்த்து கோர்த்திருந்த போது எத்தனை அழகாய் இருந்தது!
சில வேளைகளில் தேவன் கேட்கும் காரியங்களுக்கு, நான் ஆம் என்று கூறுவதும், அந்த தனி முத்தைப் போன்று முக்கியமற்றதாகக் காணப்படலாம். இயேசு கிறிஸ்துவின் தாயாராகிய மரியாளின் அற்புதமான கீழ்ப்படிதலைப் பார்க்கும் போது, நான் என்னை ஒப்பிட்டுப் பார்க்கின்றேன். மேசியாவை தன்னுடைய கருவில் சுமக்க வேண்டுமென தேவன் அழைத்த போது மரியாள், தன்னை உடனே அர்ப்பணிக்கின்றாள். “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்றாள். (லூக். 1:38). அந்நேரத்தில் அவளிடம் கேட்கப்பட்ட அனைத்தையும் அவள் புரிந்து கொண்டிருந்தாளா? மேலும் தன்னுடைய மகனை, பின்னர் சிலுவையில் அறைவதற்கும், ஒப்புக்கொடுக்கப்போவதை அறிந்திருந்தாளா ?
லூக்கா 2:19 ல் காண்கின்றோம், தேவதூதர்களும், மேய்ப்பர்களும் இயேசுவைப் பணிந்து கொண்ட பின்பு,” மரியாளோ, அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனை பண்ணினாள்.” அவள் நடந்த காரியங்களையெல்லாம் தன்னுடைய இருதயத்தில் “சேகரித்து” வைத்தாள், அத்தனையும் “ஒன்றாக இணைத்து”ப் பார்த்தாள். இதே வார்த்தைகளை லூக்கா 2:51 ல் மீண்டும் பார்க்கின்றோம். அவள் தன் வாழ்க்கையில் அநேகம் முறை, ஆம், ஆம்… என்றே பதிலளிக்கின்றாள்.
நம்முடைய தந்தை நமக்கு கொடுக்கின்ற ஒவ்வொரு அழைப்பிற்கும், நாமும் மரியாளைப்போன்று, கீழ்ப்படிதலோடு, ஆம் என்று சொல்வதை நம்முடைய நோக்கமாகக் கொள்வோம். நம் வாழ்க்கை முழுவதும் நாம் கூறுகின்ற ஆம் அத்தனையும் பொக்கிஷமாகச் சேர்த்து வைக்கப்படும்.

தந்தையின் ஆசிர்வாதம்
எங்களுடைய ஆலயத்தில் அநேக மக்கள், தங்களுடைய தகப்பனாருடன் சரியான உறவில் இல்லாத படியால், ஓர் அன்பான தந்தையாக நின்று, அவர்களை ஆசிர்வதிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டனர். தங்களுடைய பிள்ளைகளிடமிருந்து மிக அதிகமாக எதிர்பார்த்தல், பிள்ளைகளை அன்போடு சந்திப்பதில்லை, அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் தூரத்தில் வைத்துவிடல் போன்ற பல காரணங்களுக்காக மன்னிப்பை கேட்பதன் மூலம் ஆசிர்வதித்தல், மேலும் பிள்ளைகளைக் காண்பதில் பெருமகிழ்ச்சியடைதல், அவர்களை ரசித்தல், அவர்கள்மேல் மிகவும் அன்பு செலுத்துவது, போன்ற பல காரணங்கள் மூலம் அவர்களை ஆசிர்வதித்தேன். நான் இவ்வாறு ஆசிர்வாதங்களைப் பகிர்ந்து கொண்ட போது, என்னுடைய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. நானும் என் தந்தையிடமிருந்து இத்தகைய வார்த்தைகளைப் பெற வேண்டியுள்ளது, என்னுடைய பிள்ளைகளுக்கும் கொடுக்கவேண்டியுள்ளது என்பதை நினைத்துப் பார்த்தேன்.
நம்முடைய உலகத் தந்தையைக் குறித்து, நாம் வைத்திருக்கும் உருக்குலைந்த வடிவத்தை மாற்றி, மறுபடியும் புதிப்பித்து தருகின்றவர் நம்முடைய தந்தையாம் தேவன் என்று வேதாகமம் கூறுகின்றது. நம்முடைய பரம தந்தை, நம்மை “தம்முடைய பிள்ளைகளாக” ஏற்றுக் கொண்டதினால், அவர் நம்மேல் பாராட்டின “மிகப் பெரிய அன்பு” விளங்குகின்றது (1 யோவா. 3:1) நாம் தேவனுடைய மகன் அல்லது மகள் என்பதே, இந்த நிலையற்ற, பயம் நிறைந்த உலகில், நாம் வாழுவதற்கு தேவன் தந்துள்ள அடிப்படை ஆதாரம். “நாம் தேவனுடைய பிள்ளைகள்” என்று அழைக்கப் படுகின்றோம், ஆனால்,” இனி எவ்விதமாயிருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை’’ என்று யோவான் கூறுகின்றார் (வச. 2). நம்முடைய பரமத் தந்தை நம்மை நேசித்து, நம்முடைய தேவைகளையெல்லாம் சந்தித்து வருகின்றார், அதை அவர் நிறுத்துவதேயில்லை என்ற நம்பிக்கையே, ஒவ்வொருநாளும் வரும் சவால்களைச் சந்திக்க பெலன் தருகின்றது. அவர் கூறியவற்றில் நாம் நிலைத்திருக்கும் போது, நாமும் அவரைப் போலாவோமென்று யோவான் எழுதுகின்றார் (வச. 2).
நம்முடைய எதிர்பார்ப்புகள், காயங்கள், தோல்விகளின் மத்தியில், நம்முடைய நல்ல தந்தை, குறைவற்ற அன்பையும் நம் மீது பொழிகின்றார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்பதை வலியுறுத்துகின்றார், ஏனெனில், அவர் நம்மை அவருடைய பிள்ளைகளாக மாற்றியிருக்கின்றார்.
கொடுப்பவரின் மகிழ்ச்சி
டிக்கிள் மீ எல்மோ(Tickle Me Elmo), காபேஜ் பாட்ச் கிட்ஸ் (Cabbage Patch Kids ), த ஃபர்பீ (The Furby) இவையெல்லாம் என்னவென்று நினைவிருக்கின்றதா ? இவையெல்லாம், கிறிஸ்மஸ் காலத்தில், சிறுவர்களுக்கு கொடுக்கப்படும் பிரசித்திப் பெற்ற வெகுமதிகள். இந்த வரிசையில் வரும் வேறு சில வெகுமதிகள்- மோனோபோலி, நைன்டென்டோ கேம் பாய், மற்றும் வீ என்ற விளையாட்டுகள்.
நாமெல்லாருமே கிறிஸ்மஸ் காலத்தில் வெகுமதிகள் கொடுப்பதில் மகிழ்ச்சியடைவோம். ஆனால் முதல் கிறிஸ்மஸ் அன்று, தேவன் கொடுத்த வெகுமதியின் மூலம், அவர் அடைந்த மகிழ்ச்சியை ஒப்பிடவே முடியாது. இந்த பரிசு, ஒரு குழந்தையாக, பெத்லகேமில், ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தது (லூக். 2:7).
அவர் தாழ்மையாகப் பிறந்த போதிலும், அவருடைய பிறப்பை தேவதூதன் அறிவித்தான். அந்த தூதன், “பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (வச. 10-11), என்றான். இந்த அற்புத செய்திக்குப் பின்னர், “பரம சேனையின் திரள்” தோன்றி, “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக,” என்று தேவனைத் துதித்தார்கள் (வச. 13-14).
இந்த கிறிஸ்மஸ் காலத்தில், நீங்கள் நேசிக்கும் நபர்களுக்கு பரிசுகளைக் கொடுத்து மகிழுங்கள், ஆனால் எதற்காக வெகுமதிகளைக் கொடுக்கிறோம் என்பதைக் காணத் தவறிவிடாதிருங்கள். தேவன் நமக்குத் தந்த மிகப் பெரிய நற்கொடை, அவருடைய படைப்புகளாகிய நம்மை, பாவத்திலிருந்து மீட்பதற்கு தன்னுடைய சொந்த மகனையே தந்ததில் அடங்கியுள்ளது. அவர் தம்மைத் தந்ததால், நாமும் கொடுக்கின்றோம். நாம் நன்றியோடு ஆராதிப்போம்!


தோல்வி என்பதே இல்லை
“தோல்வி என்பதே இல்லை” என்றார், சூசன் பி. அன்டொனி (1820-1906). அவள், அமெரிக்காவில் பெண்கள் உரிமைக்காக, அசைக்க முடியாத உறுதியோடு போராடினவள் அவள் வன்மையான விமர்சனங்களையும், பின்னர், கைது, விசாரணை, சட்ட விரோதமாக வாக்களித்ததால் குற்றவாளி என்ற தீர்ப்பு என பலவிதமான பிரச்சனைகளைச் சந்தித்தாள். ஆனாலும் அன்டொனி, பெண்கள் ஓட்டுரிமையை பெறும் வரை போராடுவதெனத் தீர்மானித்தாள். அவளுடைய போராட்டத்தின் நோக்கம் நேர்மையானது எனக் கருதினாள். அவளுடைய போராட்டத்தின் விளைவை, காண்பதற்கு அவள் உயிரோடு இல்லாவிட்டாலும், அவளுடைய அறிக்கை உண்மையென நிரூபிக்கப் பட்டது. 1920ல், அரசியல் அமைப்பின் பத்தொன்பதாவது சட்ட திருத்தம், பெண்களுக்கு ஓட்டுரிமையை வழங்கியது.
தோல்வியென்பது, நெகேமியாவின் செயல்களிலும் இல்லை, ஏனெனில், வல்லமையான உதவியாளராக தேவன் அவரோடிருந்தார். அவருடைய நோக்கத்தை ஆசிர்வதிக்கும் படி தேவனிடம் கேட்ட பின்பு, அவர் எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்ட ஆரம்பிக்கின்றார். நெகேமியாவும், அவரோடு, பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து, எருசலேமுக்குத் திரும்பிய சிலரும் சேர்ந்து இந்த வேலையை முடித்தனர். பகைவரிடமிருந்து மக்களைக் காப்பாற்ற அலங்கம் தேவைப்பட்டது. ஏமாற்றுதல், அச்சுறுத்தல் மூலமாக, அவருடைய நோக்கத்திற்கு எதிர்ப்புகள் வந்தன. ஆனால் எந்த எதிர்ப்பும், அவருடைய வேலையைத் தடுக்க முடியவில்லை. தன்னை தடுக்க எண்ணியவர்களுக்கு, “நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது” என்று சொல்லி அனுப்பினான் (நெகே. 6:3). பின்பு அவன், “தேவனே, நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்” என்று ஜெபித்தான் (வச. 9). அவனுடைய விடாமுயற்சியினால் அந்த வேலையை முடிக்க முடிந்தது (வச. 15).
நெகேமியாவை தேவன் பெலப்படுத்தி, எதிர்ப்புகளை மேற்கொள்ளச் செய்தார். நீ எடுத்துக் கொண்ட எந்தவொரு வேலையை விட்டு விட நினைக்கின்றாய்? அதனைத் தொடர்ந்து செய்வதற்குத் தேவையானவற்றை தேவனிடம் கேள்.