வகை  |  odb

இயேசுவால் விடுதலை

“நான் என் தாயாரோடு அதிக நாட்கள் இருந்தமையால், அவள் வெளியேறினாள்!” இவை கே.சி.யின் வார்த்தைகள், தன் வாழ்வை இயேசுவுக்கு அர்ப்பணிக்கும் முன்பு, அவருடைய வாழ்வில் சோகம் நிறைந்திருந்தது. அவர் தன் போதை பழக்கத்தைத் தொடர, தனக்கன்பானவர்களிடமிருந்தும் திருட வேண்டியதாயிற்று என்பதை ஒத்துக்கொண்டார். இது அவருடைய கடந்த கால வாழ்க்கை, இப்பொழுது, அவர் தூய்மைப் படுத்தப்பட்ட பின்பு, தான் கடந்து வந்த வருடங்கள், மாதங்கள், நாட்களை நினைத்துப் பார்க்கிறார். நானும் கே.சி.யும் அமர்ந்து, தேவனுடைய வார்த்தைகளை, கிரமமாக கற்றுக்கொண்டிருக்கிறோம், இப்பொழுது ஒரு மாற்றம் பெற்ற மனிதனை நான் காண்கின்றேன்.

முன்பு அசுத்த ஆவிகளால் பிடிக்கப் பட்டிருந்த ஒரு மனிதனின் வாழ்வு, மாற்றப் பட்டதை மாற்கு 5:15ல் காண்கின்றோம். சுகம் பெறுவதற்கு முன்பு, உதவியற்றவன், வீடற்றவன், நம்பிக்கையிழந்தவன், கைவிடப்பட்டவன் ஆகிய வார்த்தைகளே அவனை விவரித்தன  (வச. 3-5). இயேசு அவனை விடுவித்த பின்பு, இவையெல்லாம் மாறிவிட்டன (வச. 13). இயேசு கிறிஸ்து வருவதற்கு முன்பு, கே.சி. யின் வாழ்வும் இயல்பு வாழ்வைவிட வெகு தூரத்தில் இருந்தது. அவனுக்குள்ளேயிருந்த குழப்பத்தை, அவன் பயங்கரமாக வெளிப்படுத்தினான். இத்தகைய, காயப்படுத்தும் மக்கள், பாழடைந்த கட்டடங்களிலும், வாகனங்களிலும் மற்றும் யாருமற்ற இடங்களிலும் வாழ்கின்றனர், சிலர் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்தாலும், உணர்வு சார்ந்து தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்கின்றனர். கண்களால் காணமுடியாத சங்கிலிகள், அவர்களின் இருதயத்தையும், மனதையும் கட்டி வைத்திருப்பதால், அவர்கள் தங்களை, மற்றவர்களிடமிருந்து தனிமைப் படுத்திக் கொள்கின்றனர்.

கடந்த காலம், நிகழ்காலத்தில் ஏற்பட்ட காயங்கள், அவமானங்களின் மத்தியில் நம்முடைய நம்பிக்கைக்குரியவர் இயேசு ஒருவரே. இரக்கத்தின் கரங்களை விரித்தவராய், நமக்காகக் காத்திருக்கும் நம் தேவனிடம் லேகியோனோடும், கே.சி.யோடும் நாமும் ஓடிச் சென்று அவர் தரும் விடுதலையைப் பெற்றுக்கொள்வோம் (வச. 19).

நமக்காகக் குத்தப்பட்ட அன்பு

அவள் அலைபேசியில் அழைத்தாள், குறுஞ்செய்தி அனுப்பினாள். இப்பொழுது கார்லா அவளுடைய சகோதரனின் வீட்டின் முன்புறமுள்ள வாயிலின் அருகில் நின்று கொண்டிருக்கின்றாள், அவனை எழுப்ப முடியவில்லை. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, போதைக்கு அடிமையாகி, அதனை விட்டு வெளியே வரமுடியாமல் போராடிக் கொண்டிருக்கும் அவளுடைய சகோதரன், தன்னுடைய வீட்டிற்குள் தன்னை ஒளித்துக் கொண்டான். அவனுடைய தனிமைக்குள் எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற விடாப்பிடியான முயற்சியில், கார்லா அவனுக்குப் பிடித்தமான அ நேக தின்பண்டங்களோடும், சில உற்சாகப்படுத்தும் வேத வார்த்தைகளோடுமுள்ள தனது பையை வெளிகேட்டின் வழியாக உள்ளே இறக்கினாள்.

அவளுடைய கரத்தை விட்டு நழுவிய அந்தப் பை, கேட்டிலுள்ள ஒரு கொக்கியில் மாட்டி, கிழிந்து, அதிலுள்ள அனைத்தும் கீழே மணலில் கொட்டியது. அவள் நல்லெண்ணத்தோடும், அன்போடும் வாங்கி வந்த அனைத்தும் கொட்டப்பட்டு, வீணானது போலாகிவிட்டது. அவளுடைய சகோதரன், அவள் வாங்கி வந்த நற்கொடைகளை கவனிப்பானா? அவள் எதிர் பார்த்த நம்பிக்கையினை, அவளால் கொடுக்க முடியுமா? அவளால் நம்பிக்கையோடு ஜெபிக்கவும் அவன் விடுதலை பெறும் மட்டும் காத்திருக்கவும் தான் முடிந்தது.

சோர்வினாலும், தனிமையினாலும் தவித்துக்கொண்டிருந்த இவ்வுலகினை தேவன் நேசித்தப் படியால், அவருடைய ஒரே நேசக் குமாரனை, அன்பு, சுகம் ஆகிய நற்கொடைகளோடு, பாவம் நிறைந்த கோட்டைக்குள் இறக்கினார் (யோவா. 3:16). இந்த அன்புச் செயலின் கிரயத்தைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி, ஏசாயா 53:5ல் குறிப்பிடுகின்றார். இந்த நேசக் குமாரன் “நம்முடைய மீறுதல்களின் நிமித்தம்…. காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம்…… நொறுக்கப்பட்டார்” அவருடைய காயங்கள், நாம் முழுமையான சுகத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நம்பிக்கையைத் தருகின்றது. “நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும்” அவர் தன்மேல் விழப்பண்ணினார் (வச. 6).

நம்முடைய பாவத்திற்காகவும், தேவைகளுக்காகவும் குத்தப்பட்டவராய், தேவனுடைய ஈவாகிய இயேசு நம்முடைய வாழ்வினுள் இன்று புதிய பெலத்தோடும், புதிய எண்ணத்தோடும் வருகின்றார். அவருடைய ஈவு உனக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது?

ஆதிகாலத்திலிருந்து வரும் வாக்குத்தத்தங்கள்

1979 ஆம் ஆண்டு, முனைவர். காபிரியேல் பார்க்கேயும் அவருடைய குழுவினரும், பழைய எருசலேம் பட்டணத்தின் புறம்பேயுள்ள கல்லறைத் தோட்டத்தில், இரண்டு வெள்ளிச் சுருள்களைக் கண்டெடுத்தனர். இருபத்தைந்து ஆண்டுகள் அதனைக் கவனமாக ஆய்வு செய்து, 2004 ஆம் ஆண்டு அது பழைய வேதாகமத்தின் வார்த்தைகள் என்பதைக் கண்டுபிடித்தனர். கி.மு.600 ஆம் ஆண்டில் புதையுண்ட அச்சுருள் இன்னமும் அழியாதிருக்கின்றது. அந்தச் சுருளில் என்ன இருக்கிறது என்பது என்னை மிகவும் அசைத்தது. தேவன், ஆசாரியரைப் போன்று, அவருடைய ஜனங்களை ஆசீர்வதிக்கும் வாசகத்தைப் பார்க்கிறோம். “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப் பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர், கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்”  (எண். 6:24-26) என்பதே.

இந்த ஆசீர்வாதத்தைக் கூறும்போது, தேவன் ஆரோனுக்கும் அவனுடைய குமாரருக்கும், தேவனுடைய சார்பாக, ஜனங்களை எப்படி ஆசீர்வதிக்கவேண்டுமெனக் காண்பிக்கின்றார். சபை போதகர்கள் இவ்வாக்கியங்களை, அப்படியே மனனம் செய்து கொண்டு, தேவன் விரும்புகிற படி, மக்களிடம் கூற வேண்டும். இந்த வார்த்தைகள், தேவன் ஒருவரே ஆசீர்வதிப்பவர் என்பதைக் காட்டுகிறது, ஏனெனில் மூன்று முறை “கர்த்தர்” என்ற வார்த்தையும், ஆறு முறை “உன்” என்ற வார்த்தையும் வருகிறது. இதனைப் பார்க்கும் போது, தேவன் எவ்வளவாய் தனது ஜனங்கள், தன்னுடைய அன்பையும், ஆதரவையும் பெற்றுக்கொள்ள விரும்புகின்றார் என்பதைக் காட்டுகிறது.

ஒரு கணம் சிந்திப்போமாகில், அழியாமலிருந்த பழைய வேதாகமத்தின் அந்த ஒரு பகுதி, தேவன் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகின்றார் என்பதைக் காட்டுகிறது. தேவன் நம்மீது கொண்டுள்ள அளவற்ற அன்பினையும், அவர் நம்மோடு உறவு கொள்ள விருப்புகின்றார் என்பதையும் இது நமக்கு நினைப்பூட்டுகிறது. நீ தேவனை விட்டு வெகு தொலைவிலிருப்பதாகக் கருதுவாயாயின், இந்த ஆதிகால வார்த்தைகளை உறுதியாகப் பற்றிக் கொள். தேவன் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.

தனக்குச் சொந்தமான இடம்

தங்களுடைய வாழ்க்கைத் துணையை இழந்த, சோகமான நிகழ்வுக்குச் சில ஆண்டுகளுக்குப் பின், ராபியும், சபரினாவும் ஒருவரையொருவர் நேசித்தனர். திருமணம் செய்துகொண்டதன் மூலம் இரு குடும்பத்தினரையும் ஒன்று சேர்த்தனர். அவர்கள் ஒரு புதிய வீட்டைக் கட்டி, அதற்கு ஹாவிலா என்று பெயரிட்டனர் (எபிரேய மொழியிலே வேதனையில் உழன்று  இதனைப் பெற்றேன் என்று அர்த்தம்). அழகிய ஒன்றினை வேதனையின் வழியாக உருவாக்குவதை இது காட்டுகிறது. எங்களுடைய பழைய வாழ்வை மறப்பதற்காக இவ்வீட்டைக் கட்டவில்லை, மாறாக, “சாம்பலில் இருந்து வாழ்வைப் பெற்றோம் என்ற நம்பிக்கையை கொண்டாடவே” இதைக் கட்டினோம் என்றனர் அந்த தம்பதியினர். “இது சொந்தம் கொண்டாடும் ஒரு இடம், வாழ்க்கையைக் கொண்டாடும் ஒரு இடம், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை பற்றிக் கொள்ளும் ஒரு இடம்” என்று அவர்கள் கூறினர்.

இது இயேசு கிறிஸ்துவிற்குள் நம் வாழ்வை அழகாகச் சித்தரிக்கின்றது. அவர் நம்மை சாம்பலிலிருந்து தூக்கி எடுத்து, அவருக்குச் சொந்தமான இடமாக்குகின்றார். நாம் அவரை ஏற்றுக் கொள்ளும் போது, அவர் நம்முடைய இருதயங்களில் தங்குவார் (எபே. 3:17). இயேசு கிறிஸ்துவின் மூலம் நம்மை அவருடைய குடும்பத்தில் சேர்த்துக்கொள்கின்றார் (1:5-6), எனவே நாம் அவருக்குச் சொந்தமானவர்களாகிறோம். நாம் அனைவருமே வேதனைகளின் வழியாகக் கடந்து வந்துள்ளோம், தேவன் அவற்றை, நம் வாழ்வில் நன்மையாக மாற்றித் தருவார்.

ஒவ்வொரு நாளும் நாம் தேவனுடைய அன்பினை உணர்ந்து, அவர் நமக்குத் தந்துள்ளவற்றைக் கொண்டாடும் போது, தேவனை அறிந்துகொள்வதில் வளருவதற்கான சந்தர்ப்பங்களைப் பெறுகிறோம். அவர் நம்மோடு இருக்கும் போது தான் நான் வாழ்வின் முழுமையைப் பெற்றுக் கொள்கின்றோம், அவரின்றி நம் வாழ்வு பரிபூரணமடைய முடியாது (வச. 19). அவரோடு நாம் பெற்றுக் கொள்கின்ற இந்த உறவு என்றும் நிலைத்திருக்கும் உறவு என்று அவர் வாக்களிக்கின்றார். இயேசுவே நமக்குச் சொந்தமான இடம், நம் வாழ்வைக் கொண்டாட காரணமானவர் இயேசுவே, இப்பொழுதும், எப்பொழுதும் நம் நம்பிக்கையாக இருப்பவரும் இயேசுவே.

மிகக் கடினமான இடங்கள்

ஜெஃப் என்பவர் வாலிபர்களுக்கான போதகர். அவர் எந்தப் பட்டணத்தில் போதைக்கு அடிமையாயிருந்தாரோ, அதே பட்டணத்திலேயே, இப்பொழுது போதகராயிருக்கிறார். தேவன் அவருடைய இருதயத்தையும், சூழல்களையும் பிரமிக்கத்தக்க வகையில் மாற்றினார். “சிறுவர்கள், நான் செய்த அதே தவற்றைச் செய்யாதபடியும், நான் பட்ட வேதனைகளின் வழியாக அவர்களும் செல்லாதபடியும் அவர்களைத் தடுக்க விரும்புகிறேன்” என்றார் ஜெஃப். “தேவன், அவர்களுக்கு உதவி செய்வார்” என்றார். சில நாட்களுக்கு முன்பு தேவன் அவரைப் போதையின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார், அவருடைய கடந்த காலம் மோசமானதாயிருந்தாலும், தேவன் அவருக்கு ஒரு முக்கியமான ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார்.

நாம் நம்பிக்கை யிழந்த சூழல்களிலிருந்தும், எதிர்பாராத நன்மையைக்கொண்டு வர தேவனுக்குத் தெரியும். யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டு, எகிப்துக்கு கொண்டு போகப்பட்டான், அங்கு தவறாக குற்றம் சாட்டப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான், அநேக ஆண்டுகளாக அவனை யாரும் தேடவும் இல்லை. ஆனால் தேவன் அவனை மீட்டார், அவனைப் பார்வோனுக்கு அடுத்தபடியான உயர் அதிகாரியாக வைத்தார். அதன்  மூலம், அநேகருடைய ஜீவனைக் காத்தான், தன்னை கைவிட்ட சகோதரர்களின் ஜீவனையும் காத்தான். யோசேப்பு எகிப்திலேயே திருமணம் செய்தான், குழந்தைகளைப் பெற்றான். அவனுடைய இரண்டாவது மகனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான். (எபிரேய பாஷையிலே இரட்டிப்பான பலன் என அர்த்தம்) ஏனெனில், “நான் சிறுமைப் பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப் பண்ணினார்” (ஆதி. 41:52) என்றான்.

ஜெஃப் மற்றும் யோசேப்பின் கதைகள் நடைபெற்ற காலங்களுக்கிடையே ஏறத்தாள மூவாயிரம் முதல் நான்காயிரம் ஆண்டுகள் இடைவெளியிருந்த போதும், தேவனுடைய உண்மை மாறவில்லை. நம் வாழ்வின் கடினமான இடங்களையும் விளை நிலங்களாக மாற்றி, அநேகருக்குப் பயன்படும்படி செய்ய, தேவனாலே கூடும். நமது இரட்சகரின் அன்பும், வல்லமையும் ஒரு நாளும் மாறாது. அவர் மீது நம்பிக்கையாயிருக்கிறவர்களுக்கு அவர் எப்பொழுதும் உண்மையுள்ளவராகவே இருக்கிறார்.