வகை  |  odb

பெலவீனரைப் பெலப்படுத்தல்

1967 ல், அமெரிக்க பாடகரான, டோட்டி ராம்போ எழுதிய “அவர், நான் செய்யும்  தவறுகளையெல்லாம் தாண்டி, என்னுடைய தேவைகளைப் பார்க்கிறார்” (He Looked Beyond My Fault and Saw My Need) என்ற பாடலை நான் சிறுவனாக இருந்த போது கேட்டிருக்கின்றேன். ஆனால், அப்பொழுது, நான் அந்தப் பாடலின் ஆழ்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. பின்னர் தான் உண்மையைத் தெரிந்து கொண்டேன். டோட்டியின் சகோதரன் எடி, அநேகத் தவறுகளைச் செய்தபடியால், தன்னை யாரும் நேசிக்க மாட்டார்கள் என அவன் கருதினான், ஆனால் தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு அவனுக்குண்டு. தேவன் அவனுடைய பெலவீனங்களை அறிவார், ஆனாலும் அவனை நேசிக்கிறார் என்பதை டோட்டி, இப்பாடலின் மூலம், அவனிடம் உறுதியாகக் கூறினாள். 

இஸ்ரவேலரும், யூதா ஜனங்களும் பெலவீனத்தை உணர்ந்த அநேக நேரங்களில் தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு அவர்களுக்குக் காட்டப்பட்டதைக் காண்கின்றோம். தேவன், ஏசாயா போன்ற தீர்க்கதரிசிகளை, நிலையற்ற அந்த ஜனங்களிடம் அனுப்பி, செய்திகளைக் கொடுக்கின்றார். ஏசாயா 35 ல், தீர்க்கதரிசி, தேவன் அவர்களை மீட்டுக்கொள்வார் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறார். அவர்கள் நம்பிக்கையைத் தழுவிக்கொள்ளும் பொழுது, உற்சாகத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்கின்றார். “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்” (வ.3) என்கின்றார். உற்சாகத்தைப் பெற்றுக்கொண்ட தேவனுடைய ஜனங்கள், மற்றவர்களையும் திடப்படுத்தும்படி அழைக்கின்றார், இதைத் தான் ஏசாயா, வசனம் 4 ல், ”மனம் பதறுகிறவர்களைப் பார்த்து, நீங்கள் பயப்படாதிருங்கள்; திடன் கொள்ளுங்கள்” என்று தைரியப்படுத்துங்கள்” என்று கூறுகிறார்.

நீயும் பெலவீனமாக இருக்கிறாயா? உன்னுடைய பரலோகத்தந்தையிடம் பேசு. அவர் பெலவீனரைத் தமது வேத வார்த்தையாலும், தமது வல்லமையுள்ள பிரசன்னத்தாலும் பெலப்படுத்துகின்றார். அப்படியானால் நீயும் மற்றவர்களை உற்சாகப்படுத்த முடியும்.

முழுமையான ஜீவன்

1918 ஆம் ஆண்டு, முதலாம் உலகப் போர் முடிவுறும் நிலையில், புகைப்படநிபுணர் எரிக் என்ஸ்ட்ராம், தான் எடுத்துக்கொண்ட அனைத்துப் படங்களையும் கோர்வையில் அடுக்கிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் ஒரு முழுமையை வெளிப்படுத்திய ஒரு படத்தை, அவர் அதனோடு சேர்க்க விரும்பினார், ஆனால், அநேகர் அப்படத்தில் வெறுமையை உணர்ந்தனர். அவர் மிகவும் நேசித்த அப்படத்தில், தாடியுடன் ஒரு முதியவர், தலைகவிழ்ந்தவராய் ஒரு மேசையின் அருகில் அமர்ந்திருக்கின்றார், அவருடைய கரங்களைக் குவித்து ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அ ந்த மேசையில் அவரின் எதிரே ஒரு புத்தகமும், மூக்கு கண்ணாடியும், ஒரு கோப்பை கஞ்சும், ஒரு துண்டு ரொட்டியும், ஒரு கத்தியும் உள்ளன. இதை விட ஒன்றும் கூடுதலாகவும் இல்லை, குறைவாகவும் இல்லை.

சிலர் இப்படம் பற்றாக்குறையைக் காட்டுகின்றது என்றனர். ஆனால், என்ஸ்ட்ராமின் கருத்து முற்றிலும் எதிராக இருந்தது. இங்கே வாழ்வு நிரம்பியுள்ளது, ஒருவர் நன்றியோடு வாழ்கின்றார், நாம் வாழும் சூழ்நிலைகளைத் தாண்டி, நீயும் நானும் அனுபவிக்க வேண்டிய நன்றியைக் காட்டுகின்றார், என்றார். யோவான் 10 ஆம் அதிகாரத்தில் இயேசு ஒரு நற்செய்தியைக் கூறுகின்றார். “வாழ்வு …….பரிபூரணப்படவும் வந்தேன்” (வ.10) என்கின்றார் .பரிபூரண வாழ்வு என்பதை, அநேகப் பொருட்களால் நிறைந்த வாழ்வு என்று கருதுவோமாயின், நாம் இந்த நற்செய்தியை இழிவு படுத்துகின்றோம். இயேசு குறிப்பிடும் பரிபூரணம் என்பது இவ்வுலகத்தின் செல்வம் அல்லது நிலபுலங்களால் வருவதில்லை. மாறாக, “ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற” (வ.11), நம்மைப் பாதுகாக்கிற, நம் அனுதினத் தேவைகளை பூர்த்திசெய்கிற, அந்த நல்மேய்ப்பனுக்கு நம் இருதயமும், மனதும், ஆன்மாவும்  நம் முழு பெலத்தோடும், நன்றியால் நிறைந்து  வழிய வேண்டும். இதுவே வாழ்வின் பரிபூரணம், தேவனோடுள்ள உறவில் மகிழ்ந்து வாழ்வதே பரிபூரணம். இது நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடியது.

ஒரு பழைய மண் பானை

நான் பல ஆண்டுகளாக அநேக பழைய பானைகளைச் சேகரித்துள்ளேன். அதில், ஆபிராகாம் வாழ்ந்த காலத்தில் உள்ள ஒரு பகுதியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட ஒரு பானை, எனக்கு மிகவும் பிடித்தமானது. எங்கள் வீட்டிலுள்ள பானைகளில் குறைந்தது ஒன்றாகிலும் என்னுடைய வயதைக் காட்டிலும் அதிகமானதாக இருக்கும்! அதில் பார்க்கக் கூடியதாக ஒன்றுமிராது, அவை கறை பிடித்ததும், கீரல் விழுந்ததும், உடைந்ததுமாக இருக்கும். அவைகளை நன்கு தேய்த்து எடுக்க வேண்டும். நானும் மண்ணினாலேயே உருவாக்கப்பட்டேன் என்பதை நினைத்துக் கொள்ளவே அவற்றை வைத்துள்ளேன். நான் உடையக் கூடியதும், பெலவீனமான பானையாக இருந்த போதும், எனக்குள் விலையேறப் பெற்ற செல்வமாகிய இயேசுவைச் சுமக்கிறேன். “இ ந்த பொக்கிஷத்தை (இயேசுவை) மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” 2 கொரி.4:7)

மேலும் பவுல், “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை; கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை” (வ.8-9). என்கின்றார். நெருக்கப்படல், கலக்கமடைதல், துன்புறுத்தப்படல், கீழே தள்ளப்படல் ஆகிய இந்த அழுத்தங்களை அந்தப் பானை தாங்க வேண்டும். ஒடுங்குவதில்லை, மனமுறிவதில்லை, கைவிடப்படுவதில்லை, மடிந்து போவதில்லை என்பன, நமக்குள்ளேயிருக்கும் இயேசு  இவற்றிற்கெதிராக நம்மை பெலப்படுத்தும் விளைவுகளாகும்.

 “இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்” (வ.10) இது, இயேசு நமக்காக அனுதினமும் மரித்தார் என்ற பண்பைக் காட்டுகின்றது. நம்முடைய சுய முயற்சியை மனப்பூர்வமாக சாகடிக்க வேண்டும், நமக்குள்ளே வாசம் பண்ணுகின்றவரை முற்றிலும் போதுமானவராக நம்ப வேண்டும் என்கின்ற பண்பை நமதாக்கிக் கொள்ளவேண்டும்.

அப்படியானால், “கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்” (வ.!0). அதன் விளைவு என்னவெனின், ஒரு பழைய மண்பானையில், இயேசுவின் அழகு காணப்படும்.

நண்பர்களின் இருக்கை

ஜிம்பாபே என்ற ஆப்பிரிக்க தேசத்தின் மக்கள், யுத்தத்தின் விளைவாலும், அதிக வேலையில்லா திண்டாட்டத்தினாலும் விரக்தியடைந்துள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கைத் தரும் ஒரே இடம் “நண்பர்கள் இருக்கை” என்ற அமைப்பு. நம்பிக்கையிழந்த மக்கள் அவ்விடத்திற்குச் சென்று, பயிற்சி பெற்ற “பாட்டியம்மா” க்களிடம் பேசலாம். இந்த மூத்த பெண்கள், மன அழுத்தத்தால் போராடிக் கொண்டிருக்கிறவர்களின் பேச்சை கவனித்துக் கேட்க கற்றுக் கொண்டவர்கள். அவர்களின் தேச மொழியாகிய ஷோனா மொழியிலே, மன அழுத்தம் என்பது kufungisisa எனப்படும், அதாவது “அதிகமாகச் சிந்தித்தல்” என்பதாகும்.

இந்த நண்பர்களின் இருக்கை, என்ற திட்டம் இன்னும் அநேக இடங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. சான்சிபார், லண்டன் மற்றும் நியூயார்க் ஆகிய பட்டணங்களிலும் இவை உண்டு. “அதன் விளைவுகளைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனோம்” என்கின்றார், லண்டனைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர். நியூயார்க்கைச் சேர்ந்த ஓர் ஆலோசகர், “ நீ அத்தகைய ஒரு நண்பர்களின் இருக்கையில் அமர்ந்திருக்கின்றாய் என்பதை அறியும் முன்பே, உன் மீது கரிசனை கொண்ட ஒருவருடன், நீ ஒரு அன்பின் உரையாடலில் இருப்பாய்” என்றார்.

இந்தச்  செயல் திட்டத்தின் மூலம், சர்வ வல்ல தேவனிடம் உறவாடும் அற்புதத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவர முடிகிறது. மோசே தேவனோடு உறவாடுவதற்கு இருக்கைகளை பயன் படுத்தவில்லை, மாறாக ஒரு கூடாரம் அமைத்தான். அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பேரிட்டான். “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவது போல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்” (யாத். 33:11) அவனுடைய பணிவிடைக் காரனாகிய யோசுவா, ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான். அவன் தேவனோடு செலவிடும் நேரத்தை மிகவும் விலையேறப் பெற்றதாகக் கருதியிருக்க வேண்டும் (வ.11).

இப்பொழுது நமக்கு ஓர் ஆசரிப்புக் கூடாரம் தேவையில்லை, இயேசு, பிதாவை நம்மருகிலேயே கொண்டுவந்துவிட்டார். அவர் தம் சீடர்களிடம், “நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (யோவா.15:15). ஆம், நம் தேவன் நமக்காகக் காத்திருக்கின்றார், அவர் நம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஞானமுள்ள உதவியாளர், நம்மைப் புரிந்து கொள்ளும் நல்ல நண்பர். இப்பொழுதே அவரிடம் பேசு.

குழந்தைகளை தேவனிடம் வழி நடத்துதல்

பெற்றோர் தங்களுடைய குழ ந்தைகளுக்கு, தங்களுடைய மதத்தை உண்மையானது என்று  கற்றுக் கொடுப்பது அறநெறியாகாது எனவும், பெற்றோர் தங்களின் நம்பிக்கையை தங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுப்பது குழந்தைகளை தவறான வழியில் நடத்துவதற்குச் சமம் எனவும் வெளிப்படையாக பேசக்கூடிய நாத்திகன் ஒருவன் கூறினான். இவை தீவிரவாத கருத்துக்களாக இருந்தபடியால், நான் சில பெற்றோரை அணுகி, அவர்களிடம் கருத்து கேட்டேன். அவர்கள் தங்களின் நம்பிக்கையை தங்களின் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் நம்மில் அநேகர் நம்முடைய குழந்தைகளின் மீது, அரசியல், ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு பற்றிய நம்முடைய கருத்துகளை திணிக்கின்றோம், ஏனெனில் நம்மில் சிலர், ஏதோ காரணங்களுக்காகத் தேவனைப் பற்றிய நம்பிக்கையை வேறு விதமாகத் திரிக்கின்றார்கள்.

இதற்கு மாறாக, பவுல் தீமோத்தேயுவைப்பற்றி எழுதும் போது, “கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே, உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவன்” (2 தீமோ.3:15). தீமோத்தேயு வளர்ந்து  வாலிபனான போது, தன்னுடைய சுய முயற்சியினால் கிறிஸ்தவ விசுவாசத்திற்குள் வரவில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை. ஆனால் அவனுடைய தாயார் அவனுடைய இருதயத்தை தேவனுக்கு நேராகத் திருப்பினார்கள், அவனும் தான் கற்றுக் கொண்டவற்றை, உறுதியாகத் தொடர்ந்தான் (வ.14) தேவனே நம்முடைய வாழ்வும், உண்மையான ஞானத்தின் உறைவிடமாகவும் இருப்பாராயின், நம்முடைய குடும்பங்களில் தேவனுடைய அன்பை மென்மையாக வளரச் செய்வது நமது முக்கிய கடமையாகும்.

நம்முடைய குழந்தைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அநேக நம்பிக்கைகள் நம்மைச் சூழ்ந்துள்ளன. டெலிவிஷன் காட்சிகள், திரைப்படங்கள், இசை, ஆசிரியர்கள், நண்பர்கள், ஊடகங்கள் ஆகிய இவைகள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ  நம்பிக்கையைக் குறித்த அநேக ஊகங்களைக் கொண்டு வந்து விடுகிறார்கள். அவை நம் குழந்தைகளின் மீது உண்மையாகவே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாம் அமைதியாக இருக்க முடியாது. நாம் அநுபவித்தை அழகிய கிருபை, நம்முடைய குழந்தைகளையும் அந்த தேவனிடம் வழி நடத்தும்படி நம்மைக் கட்டாயப் படுத்துகின்றது.