1979 ஆம் ஆண்டு, முனைவர். காபிரியேல் பார்க்கேயும் அவருடைய குழுவினரும், பழைய எருசலேம் பட்டணத்தின் புறம்பேயுள்ள கல்லறைத் தோட்டத்தில், இரண்டு வெள்ளிச் சுருள்களைக் கண்டெடுத்தனர். இருபத்தைந்து ஆண்டுகள் அதனைக் கவனமாக ஆய்வு செய்து, 2004 ஆம் ஆண்டு அது பழைய வேதாகமத்தின் வார்த்தைகள் என்பதைக் கண்டுபிடித்தனர். கி.மு.600 ஆம் ஆண்டில் புதையுண்ட அச்சுருள் இன்னமும் அழியாதிருக்கின்றது. அந்தச் சுருளில் என்ன இருக்கிறது என்பது என்னை மிகவும் அசைத்தது. தேவன், ஆசாரியரைப் போன்று, அவருடைய ஜனங்களை ஆசீர்வதிக்கும் வாசகத்தைப் பார்க்கிறோம். “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப் பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர், கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்”  (எண். 6:24-26) என்பதே.

இந்த ஆசீர்வாதத்தைக் கூறும்போது, தேவன் ஆரோனுக்கும் அவனுடைய குமாரருக்கும், தேவனுடைய சார்பாக, ஜனங்களை எப்படி ஆசீர்வதிக்கவேண்டுமெனக் காண்பிக்கின்றார். சபை போதகர்கள் இவ்வாக்கியங்களை, அப்படியே மனனம் செய்து கொண்டு, தேவன் விரும்புகிற படி, மக்களிடம் கூற வேண்டும். இந்த வார்த்தைகள், தேவன் ஒருவரே ஆசீர்வதிப்பவர் என்பதைக் காட்டுகிறது, ஏனெனில் மூன்று முறை “கர்த்தர்” என்ற வார்த்தையும், ஆறு முறை “உன்” என்ற வார்த்தையும் வருகிறது. இதனைப் பார்க்கும் போது, தேவன் எவ்வளவாய் தனது ஜனங்கள், தன்னுடைய அன்பையும், ஆதரவையும் பெற்றுக்கொள்ள விரும்புகின்றார் என்பதைக் காட்டுகிறது.

ஒரு கணம் சிந்திப்போமாகில், அழியாமலிருந்த பழைய வேதாகமத்தின் அந்த ஒரு பகுதி, தேவன் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகின்றார் என்பதைக் காட்டுகிறது. தேவன் நம்மீது கொண்டுள்ள அளவற்ற அன்பினையும், அவர் நம்மோடு உறவு கொள்ள விருப்புகின்றார் என்பதையும் இது நமக்கு நினைப்பூட்டுகிறது. நீ தேவனை விட்டு வெகு தொலைவிலிருப்பதாகக் கருதுவாயாயின், இந்த ஆதிகால வார்த்தைகளை உறுதியாகப் பற்றிக் கொள். தேவன் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.