இரட்சிப்பவர்
“உயிரோடு இருப்பவர்களில் மிகவும் தைரியமானவர்” என்று டெஸ்மாண்ட் அழைக்கப் பட்டார். ஆனால் மற்றவர்கள் எதிர்பார்ப்பதைப் போன்று அவர் இருந்ததில்லை. அவர் துப்பாக்கியை கையில் ஏந்த மறுத்த ஓர் இராணுவ வீரர். மருத்துவத் துறையைச் சார்ந்த அவர், தனிமனிதனாக, ஒரு யுத்தத்தின் போது, எழுபத்தைந்து காயமடைந்த வீரர்களை பதுகாப்பாக மீட்டார், அதில், அவரைக் கோழை என அழைத்தவர்களும், அவருடைய நம்பிக்கையை ஏளனம் செய்தவர்களும் அடங்குவர். இந்த வீரர், அதிகமான துப்பாக்கிச் சூடு நடைபெறும் பகுதியினுள் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே ஓடி, “தேவனே, இன்னும் ஒருவரைக் காப்பாற்ற உதவியருளும்” என்றார். அவருடைய வீரத்தைப் பாராட்டி, அவருக்கு கெளரவ பதக்கம் வழங்கப்பட்டது.
இயேசுவை அநேகர் புரிந்து கொள்ளவில்லை என வேதாகமம் கூறுகின்றது. சகரியா முன்னுரைத்தபடி (9:9) ஒரு நாளில், இயேசு எருசலேம் நகரத்திற்கு கழுதையின் மீது ஏறி, செல்கின்றார், மக்கள் கூட்டம் மரக் கிளைகளை அசைத்து, “ஓசன்னா!” (“இரட்சிப்பு” என்று அர்த்தம் கொள்ளும் ஆராதிக்கும் ஒரு வார்த்தை) என்று ஆர்ப்பரிக்கின்றது. சங்கீதம் 118:26ல் கூறப்பட்டுள்ள படி, அவர்கள், “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்!” என்று ஆர்ப்பரித்தார்கள் (யோவா.12:13). இந்தச் சங்கீதத்தின் அடுத்த வசனம் பலியைக் கொண்டுவருதலைக் குறிக்கின்றது (சங். 118:27). யோவான் 12ல் குறிப்பிட்டிருந்த கூட்டம், அவர்களை ரோமர்களிடமிருந்து விடுவிக்கும் ஒரு புவியாளும் மன்னனை எதிர்பார்த்தது, ஆனால் இயேசுவோ அதற்கும் மேலானவர், அவர் ராஜாதி ராஜா, நமக்காக பலியாக வந்தவர், தேவன் மாம்சத்தில் வந்தார், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்பதற்காக, மனப்பூர்வமாக சிலுவையை ஏற்றுக் கொண்டார், அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பாக தீர்க்க தரிசனமாக உரைக்கப்பட்டதை நிறைவேற்றினார்.
“இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை” என யோவான் எழுதுகின்றார். ஆனால் பின்பு, “இப்படி அவரைக் குறித்து எழுதியிருக்கிறதையும்……நினைவுகூர் ந்தார்கள்” (யோவா.12:16). அவருடைய வார்த்தையின் வெளிச்சத்திலே தேவனுடைய நித்திய நோக்கம் அவர்களுக்குத் தெளிவானது. நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பும் அளவுக்கு, அவர் நம்மை நேசிக்கின்றார்!

நம்முடைய ஆழ்ந்த ஏக்கங்கள்
ஒரு வாலிபனான டேனியல், தனக்குப் போதிய பணம் இல்லை என்ற பயத்தோடு, தன்னுடைய இளம்வயதிலேயே தனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதில் குறியாக இருந்தான். ஒரு பிரசித்திப் பெற்ற கணினி தொழிற்சாலையில் பணியைத்துவக்கி, அதில் படிப் படியாக உயர்ந்தான், மிகப் பெரிய செல்வத்தைச் சேர்த்தான். மிகப் பெரிய வங்கிக் கணக்கு, உயர் ரக கார், கோடிக் கணக்கான பெருமதியுள்ள வீடு என அவன் விரும்பியதையெல்லாம் வாங்கினான். ஆயினும் அவன் மிகவும் மகிழ்ச்சியற்றவனாக காணப்பட்டான். “நான் மிகவும் ஆவலோடும் திருப்தியற்றவனாகவும் காணப்படுகிறேன்” என்றான் டேனியல். “உண்மையில் செல்வம் வாழ்வை மிகவும் மோசமானதாக மாற்றிவிட்டது” என்றான். குவித்து வைக்கப் பட்டுள்ள பணத்தினால் நட்பையும், சமுதாய உறவையும், மகிழ்ச்சியையும் தரமுடியவில்லை, அதிக இருதய வேதனையைத் தான் கொண்டு வருகின்றது என்றான்.
சிலர் தங்களுடைய ஆற்றலையெல்லாம் செலவிட்டு, அதிகமான செல்வத்தைச் சேர்த்து வைப்பதன் மூலம் தங்களின் வாழ்வை பாதுகாத்துக் கொள்ள நினைக்கின்றனர். ஆனால் அது ஒரு முட்டாள் தனமான செயல். “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை” என வேதாகமம் கூறுகின்றது (பிர.5:10). சிலர் தங்கள் எலும்புகள் தேயும் வரை வேலை செய்கின்றார்கள். அவர்கள் போராடி, தள்ளி, மற்றவர்களின் உடைமைகளோடு ஒப்பிட்டு, ஒரு பொருளாதார அந்தஸ்தை அடைய தங்களை வருத்திக் கொள்கின்றார்கள். அவர்கள் தாங்கள் விரும்பிய பொருளாதார நிலையை அடை ந்தும் அவர்களுக்கு திருப்தி ஏற்படுவதில்லை, அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. பிரசங்கி கூறுவதைப் போன்று, “இதுவும் மாயையே” (வச. 10).
உண்மை என்னவெனின், தேவனைத் தவிர வேறெந்த காரியத்தையும் நிறைவேற்றும்படி நாம் உழைப்பதெல்லாம் வீண். நம்முடைய திறமைகளையெல்லாம் பயன் படுத்தி, கடினமாக உழைத்து, இவ்வுலகிற்கு ஏதேனும் நல்லது செய்யும்படி வேதாகமம் நம்மை அறிவுறுத்துகின்றது. நாம் எவ்வளவு தான் பொருட்களைச் சேர்த்தாலும், அது ஒரு போதும் நம்முடைய ஆழ்ந்த ஏக்கங்களை நிறைவு செய்ய மாட்டாது. இயேசு ஒருவராலேயே உண்மையான பரிபூரண வாழ்வைத் தரமுடியும் (யோவா. 10:10) – அது அன்பின் உறவுகளினால் ஏற்படும் உண்மையான நிறைவு!

அடுத்து வருவது என்ன?
1968 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 3ஆம் நாள் இரவில், முனைவர். மார்டின் லுத்தர் கிங் கடைசி உரையை ஆற்றிய போது, “நான் மலையின் உச்சிக்கு சென்று விட்டேன்” என்றார். அதன் மூலம் அவர் தான் அதிக நாட்கள் வாழப்போவதில்லை என்பதைத் தெரிவித்தார். மேலும் அவர், “நாம் இன்னமும் கடினமான நாட்களைச் சந்திக்க நேரிடும், ஆயினும் அது என்னை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. ஏனெனில் நான் மலையின் உச்சியில் இருக்கிறேன், நான் மேலே வாக்களிக்கப்பட்ட தேசத்தைக் காண்கின்றேன். நான் உங்களோடு அங்கு செல்வதில்லை……ஆனால் நான் இந்த இரவில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். நான் எதைக் குறித்தும் கவலைப் படவில்லை, எந்த மனிதனைக் குறித்தும் பயப்படவில்லை, என்னுடைய கண்கள் தேவனுடைய வருகையின் மகிமையைக் கண்டது” என்றார். மறு நாளில் அவர் கொலை செய்யப்பட்டார்.
அப்போஸ்தலனாகிய பவுலும் தன்னுடைய மரணத்திற்கு முன்பாக தன்னுடைய சீஷனான தீமோத்தேயுவிற்கு எழுதும் போது, “நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப் பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது… இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்” (2 தீமோ. 4:6,8) என்கின்றார். இப்பூமியில் அவருடைய வாழ்நாள் நிறைவடையப் போகின்றது என்பதை முனைவர்.கிங் அறிந்திருந்ததைப் போல, பவுலும் அறிந்திருந்தார். இருவருமே வாழ்வில் நம்பமுடியாத அளவு முக்கியத்துவத்தை உணர்ந்த போதும் தங்களுக்கு முன்பாக வைக்கப் பட்டிருந்த நித்திய வாழ்வைக் குறித்த தரிசனத்தைப் பெற்றிருந்தனர். இருவருமே அடுத்தபடியாக தங்களுக்கு நடக்க இருந்ததை வரவேற்றனர்.
இவர்களைப் போன்று நாமும் நம்முடைய கண்களை, “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கி” திருப்புவோமாக, “ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2 கொரி. 4:18).

உற்சாகமாகக் கொடுப்பவர்கள்
பல வருடங்களுக்கு முன்பு என்னுடைய மனைவி வாங்கிய ஒரு பொருளுக்கான தள்ளுபடியைப் பெற்றாள். அதனை அவள் எதிர்பார்க்கவில்லை, அதனைக் குறித்து மெயில் வந்தது. அதே நேரத்தில் அவளுடைய சினேகிதியும் ஒரு நாட்டிலுள்ள பெண்கள் தொழில் செய்வதில் ஆர்வமுடையவர்களாகவும், கல்வி மற்றும் வர்த்தகம் மூலம் தங்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்ளும்படி தேவையிலிருப்பதாகவும் பகிர்ந்து கொண்டாள். ஆயினும் அவர்களின் முக்கியமான தடையாக இருப்பது பொருளாதாரம்.
எனவே, என்னுடைய மனைவி, அந்தத் தள்ளுபடி தொகையோடு, ஒரு சிறிய கடனையும் பெற்று, இந்த பெண்களுக்கு உதவும் ஓர் ஊழியத்திற்குக் கொடுத்தாள். அந்த கடனைத் திருப்பிச் செலுத்திய போது, மீண்டும், மீண்டும் கடனைப் பெற்று அதற்குக் கொடுத்தாள். இதுவரை இருபத்தேழு முறை இவ்வாறு வழங்கியுள்ளாள். இதுவரை அவள் சந்தித்திராத, அந்த பெண்களின் வாழ்வு வளம் பெற்றுள்ளது என்ற செய்தியை அவள் கேட்கும் போது அவளின் முகத்தில் ஏற்பட்ட சிரிப்பை, அவள் அநுபவித்த வேறெந்த காரியத்திலும் நான் கண்டதில்லை.
“உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரி. 9:7) என்ற வாக்கியத்தின் முதல் சொல்லிற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதை நாம் கேட்டிருப்போம், அது சரியானதும் கூட. நம்முடைய கொடுத்தலுக்கும் ஒரு சிறப்பு பண்பு உள்ளது. ஒருவன் கொடுக்கும் போது “விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல”, நாம் பெருக விதைக்க வேண்டும் (வ.6-7), அதாவது மகிழ்ச்சியோடு கொடுக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாய் கொடுப்போம், ஆனால் நாம் கொடுப்பதில் ஏற்படும் மகிழ்ச்சியை நமது முகங்கள் காட்டும்.

இயேசுவைப் போல ஜெபித்தல்
ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. அதன் முன் பக்கத்தை “தலை” என்கிறோம், ஏனெனில் ஆதி ரோமர் ஆட்சி காலத்திலிருந்தே நாணயத்தின் முன் பக்கம் அந்த நாட்டின் தலைமையைக் குறிக்கும். அதன் பின் பக்கம் “வால்” எனப்படும். இது ஆங்கிலேயர் காலத்தில் துவங்கியிருக்கலாம், அந்த நாணயத்தில், ஒரு சிங்கத்தின் வால் உயர்த்தப்பட்ட நிலையில் காட்டப்பட்டிருக்கும்.
ஒரு நாணயத்தைப் போன்று, கெத்செமனே தோட்டத்தில், கிறிஸ்து ஏறெடுத்த ஜெபத்திற்கும் இரு பக்கங்கள் உள்ளன. இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முந்தின நாள் இரவு, தன்னுடைய வாழ்வின் துயரம் மிகுந்த நேரத்தில், ஜெபித்தார். “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது” (லூக்.22:42) என்றார். “இந்தப் பாத்திரத்தை என்னை விட்டு எடுத்து விடும், அதையே நான் விரும்புகின்றேன்” என்று கிறிஸ்து ஜெபித்திருப்பாரேயானால் அது தான் உண்மையை வெளிப்படுத்தும் ஜெபம், அது அவருடைய தனிப்பட்ட விருப்பத்தை வெளிப்படுத்தும் ஜெபமாயிருந்திருக்கும்.
பின்னர் இயேசு நாணயத்தின் மறு பக்கத்தைத் திருப்புகின்றார், “என்னுடைய சித்தத்தின் படியல்ல” என்று ஜெபிப்பதின் மூலம் தன்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்கின்றார். “தேவனே, நீர் என்ன செய்ய விரும்புகின்றீர்?” என்று நாம் கேட்கும் போது, நம்மை அவரின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க ஆரம்பிக்கின்றோம்.
இந்த இரு பக்க ஜெபம், மத்தேயு 26, மாற்கு 14 மற்றும் யோவான் 18 ல் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். இயேசு இரு பக்க ஜெபத்தை ஏறெடுத்தார்; இந்த பாத்திரத்தை என்னை விட்டு எடுத்து விடும் (தேவனே, இது நான் விரும்புவது), ஆயினும் என்னுடைய விருப்பத்தின் படியல்ல (தேவனே, நீர் என்ன விரும்புகின்றீர்?), இவ்விரண்டிற்கும் இடையே மட்டுமே அவருடைய ஜெபமிருந்தது. இயேசுவின் இரு பக்கங்கள், அவருடைய ஜெபத்தின் இரு பக்கங்கள்.