
கிளைகளில் வாழுதல்
ஓர் அழுத்தம் நிறைந்த வாரக் கடைசியில், என்னுடைய மனதை உருட்டிக் கொண்டிருந்த அத்தனை உணர்வுகளையும் என்னுடைய ஆலோசகரோடு பகிர்ந்து கொண்டேன், அவளும் சிரத்தையோடு கவனித்தாள். பின்னர் அவள், ஜன்னல் வழியே, பழங்களால் நிறைந்திருந்த ஓர் ஆரஞ்சு மரத்தை எனக்குச் சுட்டிக் காட்டினாள், அதன் கிளைகள் காற்றில் அசைந்து ஆடுவதைக் கவனித்தேன்.
அம்மரங்களின் அடித்தண்டு காற்றினால் அசையவேயில்லை என்பதை என்னுடைய ஆலோசகர், என்னிடம் சுட்டிக் காண்பித்து, “நாமும் இதனைப் போலவே இருக்கின்றோம், நம் வாழ்வைப் புயல் எல்லாத் திசையிலிருந்தும் தாக்கும் போது, நம்முடைய உணர்வுகள் மேலும் கீழும், எல்லாத்திசைகளுக்கும் சுழற்றப்படுகின்றன. சில வேளைகளில் நாம் கிளைகள் மட்டும் உள்ளவர்கள் போல செயல் படுகின்றோம். நீங்கள் உங்களுடைய அடித்தண்டை கண்டுபிடிக்க உதவுவதே எங்களின் இலக்கு. இதேப் போலவே, உங்களுடைய வாழ்வும் எல்லாப் பக்கங்களிலிருந்தும் இழுக்கப் படும் போது, நீங்கள் உங்களுடைய கிளைகளில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. நீங்கள் இன்னமும் பாதுகாப்பாகவும், நிலையாகவும் இருக்கிறீர்கள்” என்றாள்.
இந்தக் காட்சி என்னோடு ஒட்டிக் கொண்டது, இதைப் போலவே ஒரு காட்சியை, அப்போஸ்தலனாகிய பவுல், எபேசு சபையின் புதிய விசுவாசிகளுக்குக் கொடுக்கின்றார். தேவன் அவர்களுக்குக் கொடுத்த விலையேறப் பெற்ற ஈவாகிய, பெரிய நோக்கமும், மதிப்பீடுகளும் நிறைந்த புதிய வாழ்வை குறித்து அவர்களுக்கு நினைப் பூட்டுகின்றார் (எபே.2:6-10). அவர்கள் கிறிஸ்துவின் அன்பிலே வேரூன்றி, நிலைப் பெற்றவர்களாகி (3:17), மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப் போல அடிபட்டு, அலைகிறவர்களாயிராமல் (4:14) வளரும்படி, பவுல் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்கின்றார்.
நம்முடைய சுய முயற்சியினால், நாம் பாதுகாப்பற்றவர்களாகவும், உடைந்து போகக் கூடியவர்களாகவும், நம்முடைய பயத்தினாலும், பாதுகாப்பின்மையினாலும் குத்தப்பட்டவர்களாகவும் காணப்படுகின்றோம். கிறிஸ்துவுக்குள் நமக்குக் கொடுக்கப் பட்ட அடையாளத்தோடு நாம் வாழ்வோமாகில் (வ. 22-24), தேவனோடு தரும் சமாதானத்தை, ஒருவரோடொருவர் அநுபவிப்பதோடு (வ.3), அவர் தரும் அழகினாலும் வல்லமையினாலும் ஊட்டப்பட்டு, பாதுகாக்கப் படுகின்றோம் (வ.15-16).

உண்மையான விடுதலை
அமிஸ்டட் (Amistad) என்ற ஆங்கில படத்தில் வரும் கதையில், 1839 ஆம் ஆண்டு, மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அடிமைகளை, வேறு இடத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்த படகை, அந்த அடிமைகள் மேற்கொண்டனர், அந்த படகின் கேப்டனையும் வேறு சில நபர்களையும் கொன்றனர், ஆனால் உடனடியாக அவர்கள் பிடிபட்டனர், சிறையில் அடைக்கப் பட்டனர், பின்னர், விசாரணைக்கு கொண்டு செல்லப் பட்டனர், ஒரு மறக்க முடியாத நீதிமன்ற காட்சியில், அடிமைகளின் தலைவன், எப்படியாகிலும் தனக்கு விடுதலை தரும்படி, உணர்ச்சிவசத்தோடு கெஞ்சுகின்றான். மூன்று எளிய வார்த்தைகள், சங்கிலிகளால் கட்டப்பட்ட ஒரு மனிதனின் வாயிலிருந்து, உடைபட்ட ஆங்கில வார்த்தைகளாக திரும்பத் திரும்ப, மேலும் மேலும் வலிமையோடு வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன, அந்த நீதி மன்றமே அமைதியாக இருக்கின்றது, “எங்களுக்கு விடுதலை தாருங்கள்!” என்பதே அந்த வார்த்தைகள். அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட்டது, அந்த மனிதர்கள் விடுதலைப் பெற்றார்கள்.
இன்றைக்கு நம்மில் அநேகர் உடல் ரீதியாக கட்டப்பட்டவர்களாய் இல்லையெனினும், பாவத்தின் பிடியிலிருந்து ஆவியின் உண்மையான விடுதலையை இன்னமும் பெற்றுக் கொள்ளவில்லை. யோவான் 8:36ல் கூறப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள் உண்மையான விடுதலையைக் கொடுக்கின்றது. “ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள்” என்கின்றார். இயேசு தன்னை உண்மையான விடுதலையைக் கொடுப்பவராகச் சுட்டிக் காண்பிக்கின்றார், ஏனெனில் அவரை விசுவாசிக்கிற யாவருக்கும் அவர் உண்மையான மன்னிப்பை வழங்குகின்றார். கிறிஸ்துவின் போதனையைக் கேட்ட சிலர் விடுதலையைப் பெற விரும்பினாலும் (வச. 33), இயேசுவைக் குறித்த அவர்களின் வார்த்தையும், நடத்தையும், செயலும் அவர்களை விடுதலை பெற முடியாதவர்களாகச் செய்தது.
அந்த அடிமையின் வேண்டுதலை எதிரொலிக்கின்றவர்களின் வார்த்தையைக் கேட்க இயேசு ஆவலாய் இருக்கின்றார், நாமும் “எனக்கு விடுதலையைத் தாரும்!” என்று கேட்போமா? அவநம்பிக்கையினாலும், பயத்தினாலும் மற்றும் தோல்வியினாலும் விலங்கிடப்பட்டவர்களாய் இருக்கின்றவர்களின் கதறலை கேட்க, மனதுருக்கத்தோடு இயேசு காத்திருக்கின்றார். விடுதலை இருதயத்தில் ஏற்பட வேண்டும். நம்மை பாவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக தேவன் தம்முடைய குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பினார் என்பதை விசுவாசிக்கிறவர்களே, அவருடைய மரணம், உயிர்த்தெழுதலின் மூலம் விடுதலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

உனக்கு மிக அருகிலேயே
ஒவ்வொரு நாளும், எருசலேமிலுள்ள ஒரு தபால் நிலையத்தில், விநியோகிக்க முடியாத, குவியலான கடிதங்களைப் பிரிப்பதில் வேலையாட்கள் ஈடுபட்டுள்ளனர். எப்படியாகிலும் அவற்றை அதனதன் பெறுநரிடம் கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கோடு செயல்படுகின்றனர். அநேகக் கடிதங்கள், “தேவனுக்கு கடிதங்கள்” என்ற பெட்டியை அடைகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான, இத்தகைய கடிதங்கள் வருகின்றன, அவற்றில் விலாசம் தேவனுக்கு அல்லது இயேசுவுக்கு என்றிருக்கும். இவற்றை என்ன செய்வது என்று அறியாது, திகைத்தனர், வேலையாட்கள் அவற்றை எடுத்துச் சென்று, எருசலேமின் மேற்குப் பக்க சுவரிலுள்ள கற்களுக்கு இடையேயுள்ள மற்ற கடிதங்களோடு வைத்தனர். அதிலுள்ள அநேகக் கடிதங்களில் வேலைக்காகவும், தனக்கு கணவன் அல்லது மனைவி கிடைக்க வேண்டும் எனவும் அல்லது நல்ல சுகத்திற்காகவும் வேண்டி, எழுதப் பட்டிருக்கும். சிலர் பாவமன்னிப்பை கேட்கின்றனர், வேறு சிலர் நன்றியைத் தெரிவிக்கின்றனர். ஒரு மனிதன், மரித்துப் போன தன்னுடைய மனைவி கனவில் வர வேண்டும், ஏனெனில் தான் அவளைப் பார்க்க ஏங்கிக் கொண்டிருப்பதாகக் கேட்கிறார். ஒவ்வொரு அனுப்புனரும், தங்களின் கடிதம் தேவனைச் சேர்ந்து விட்டால், தேவன் கவனிப்பார் என்று நம்புகின்றனர்.
இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தின் வழியே பயணம் செய்கையில் அநேகச் செய்திகளை கற்றுக் கொண்டனர். அவற்றில் ஒன்று, அவர்களின் தேவன் மற்ற தேவர்களைப் போல தூரத்தில் இருப்பவர் அல்ல, செவிடானவரும் அல்ல, ஒரே இடத்தில் தான் இருப்பார், நீண்டபயணம் செய்வதாலோ, அல்லது பன்னாட்டு மெயில் மூலமாகவோதான் அவரை அடையக் கூடும் என்பதாகவும் அல்ல, “நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுது கொள்ளுகிற போதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாய் இருக்கிறார்” (உபா. 4:7). இது ஒரு புரட்சிகரமான செய்தியல்லவா! மற்றவர்கள் இவ்வாறு கூற முடியுமா?
தேவன் எருசலேமில் மட்டும் வாழவில்லை, நாம் எங்கிருந்தாலும், அவர் நமக்கு மிக அருகிலேயே இருக்கிறார், சிலர் இந்த உண்மையை இன்னமும் கண்டுபிடிக்காமல் இருக்கின்றனர், அந்த கடிதங்கள் ஒவ்வொன்றிற்கும், “தேவன் உன்னருகில் தான் இருக்கிறார், அவரிடம் பேசு” என்று பதில் அனுப்பினால், அவர்களும் உண்மையைக் கண்டுபிடிக்கக் கூடுமே.

நாம் தேவனைத் துதிப்போம்!
எஸ்தரின் அலைபேசியின் அலாரம் ஒவ்வொரு நாள் மாலையிலும் 3:16 க்கு அடிக்கின்றது, அது அவளுடைய துதி இடைவெளி. தேவன் செய்த நன்மைகளுக்காக அவள் நன்றி கூறுகின்றாள். அவள் நாள் முழுவதும் தேவனோடு பேசிக் கொண்டே இருந்தாலும், இந்த இடைவெளியை அவள் விரும்புகின்றாள், ஏனெனில் தேவனோடு அவள் கொண்டுள்ள உறவைக் கொண்டாட இது உதவியாய் இருக்கின்றது.
அவளுடைய இந்த மகிழ்ச்சியான பக்தியினால் ஈர்க்கப்பட்ட நானும், ஒவ்வொரு நாளும், ஒரு திட்டமான நேரத்தை ஒதுக்கி, கிறிஸ்து நமக்காக சிலுவையில் நிறைவேற்றிய தியாகத்தை எண்ணி நன்றிகூறவும், இன்னமும் இரட்சிக்கப் படாதவர்களுக்காகவும் ஜெபிக்கும்படி திட்டமிட்டேன். கிறிஸ்துவின் விசுவாசிகள் யாவரும் அனுதினமும் அவரைத் துதிப்பதை விட்டு விட்டு, மற்றவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்து விட்டால் என்னவாகும் என்று அதிசயித்தேன்.
அவரை ஆராதிக்கும் ஓசையின் அழகிய அலைகள் நகர்ந்து, பூமியின் கடைமுனை மட்டும் செல்கின்றது என்பதாக சங்கீதம் 67 சொல்கின்றது. சங்கீதக்காரன் தேவனுடைய இரக்கத்திற்காக கெஞ்சுகின்றார், எல்லா ஜாதிகளுக்குள்ளும் அவருடைய மகத்துவமான நாமத்தை விளங்கப்பண்ணும்படி தெரிவிக்கின்றார் (வச. 1-2). அவர், “தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக” (வச. 3) என்று பாடுகின்றார். சர்வ வல்லவரின் அரசாட்சியையும், அவருடைய உண்மையான வழி நடத்துதலையும் அவர் கொண்டாடுகின்றார் (வச. 4). தேவனுடைய மிகப் பெரிய அன்பிற்கும், அளவற்ற ஆசிர்வாதங்களுக்கும் சாட்சியாக இருந்து, தேவனுடைய பிள்ளைகளை அவரைத் துதிக்கும்படி வழி நடத்துகின்றார் (வச. 5-6).
அவருக்கு அன்பான பிள்ளைகளின் மீது, தேவன் தொடர்ந்து உண்மையுள்ளவராய் இருப்பது, நம்மையும் அவரை போற்றச் செய்கின்றது. நாம் அப்படிச் செய்யும் போது, மற்றவர்களும் அவர் மீது நம்பிக்கை வைக்கவும், அவருக்கு மரியாதை செலுத்தவும், அவரைப் பின்பற்றவும் அவரே தேவனென்று ஆராதிக்கவும் நம்மோடு சேர்ந்து கொள்வர்.
