எஸ்தரின் அலைபேசியின் அலாரம் ஒவ்வொரு நாள் மாலையிலும் 3:16 க்கு அடிக்கின்றது, அது அவளுடைய துதி இடைவெளி. தேவன் செய்த நன்மைகளுக்காக அவள் நன்றி கூறுகின்றாள். அவள் நாள் முழுவதும் தேவனோடு பேசிக் கொண்டே இருந்தாலும், இந்த இடைவெளியை அவள் விரும்புகின்றாள், ஏனெனில் தேவனோடு அவள் கொண்டுள்ள உறவைக் கொண்டாட இது உதவியாய் இருக்கின்றது.

அவளுடைய இந்த மகிழ்ச்சியான பக்தியினால் ஈர்க்கப்பட்ட நானும், ஒவ்வொரு நாளும், ஒரு திட்டமான நேரத்தை ஒதுக்கி, கிறிஸ்து நமக்காக சிலுவையில் நிறைவேற்றிய தியாகத்தை எண்ணி நன்றிகூறவும், இன்னமும் இரட்சிக்கப் படாதவர்களுக்காகவும் ஜெபிக்கும்படி திட்டமிட்டேன். கிறிஸ்துவின் விசுவாசிகள் யாவரும் அனுதினமும் அவரைத் துதிப்பதை விட்டு விட்டு, மற்றவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்து விட்டால் என்னவாகும் என்று அதிசயித்தேன்.

அவரை ஆராதிக்கும் ஓசையின் அழகிய அலைகள் நகர்ந்து, பூமியின் கடைமுனை மட்டும் செல்கின்றது என்பதாக சங்கீதம் 67 சொல்கின்றது. சங்கீதக்காரன் தேவனுடைய இரக்கத்திற்காக கெஞ்சுகின்றார், எல்லா ஜாதிகளுக்குள்ளும் அவருடைய மகத்துவமான நாமத்தை விளங்கப்பண்ணும்படி தெரிவிக்கின்றார் (வச. 1-2). அவர், “தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக” (வச. 3) என்று பாடுகின்றார். சர்வ வல்லவரின் அரசாட்சியையும், அவருடைய உண்மையான வழி நடத்துதலையும் அவர் கொண்டாடுகின்றார் (வச. 4). தேவனுடைய மிகப் பெரிய அன்பிற்கும், அளவற்ற ஆசிர்வாதங்களுக்கும் சாட்சியாக இருந்து, தேவனுடைய பிள்ளைகளை அவரைத் துதிக்கும்படி வழி நடத்துகின்றார் (வச. 5-6).

அவருக்கு அன்பான பிள்ளைகளின் மீது, தேவன் தொடர்ந்து உண்மையுள்ளவராய் இருப்பது, நம்மையும் அவரை போற்றச் செய்கின்றது. நாம் அப்படிச் செய்யும் போது, மற்றவர்களும் அவர் மீது நம்பிக்கை வைக்கவும், அவருக்கு மரியாதை செலுத்தவும், அவரைப் பின்பற்றவும் அவரே தேவனென்று ஆராதிக்கவும் நம்மோடு சேர்ந்து கொள்வர்.