எனக்கு ஒரு கதை சொல்
முன்னொரு காலத்தில் என்ற வார்த்தைகள் மிகவும் வல்லமை வாய்ந்தவையாக உலகெங்கிலும் திகழ்கின்றது. இந்த வார்த்தைகளின் வலிமையில் இருந்த வேறுபாடுகள் என்னுடைய இளமைப் பருவ நினைவில் இருக்கின்றது. ஒரு நாள் என்னுடைய தாயார் வீட்டிற்கு வந்தபோது, ஒரு பெரிய, கடின அட்டை கொண்ட, படங்களோடு கூடிய வேதாகம கதை புத்தகத்தைக் கொண்டு வந்தார்- நல்மேய்ப்பன் வேதாகம கதை புத்தகம் அது. ஒவ்வொரு நாள் இரவும் தூங்குவதற்கு முன்பு, நானும் என்னுடைய சகோதரனும் எதிர்பார்ப்போடு அமர்ந்திருப்போம். எங்கள் தாயார் முன்னொரு காலத்தில், தேவன் நேசித்த மக்களைப் பற்றிய ஆர்வமுள்ள கதைகளை வாசித்து, கூறுவார். இந்தக் கதைகள் ஒரு லென்ஸ் போல செயல் பட்டு, இவ்வுலகின் காரியங்களை எப்படிப் பார்க்க வேண்டும் என காட்டுகின்றன.
மறுக்க முடியாத, மிகப் பெரிய கதை சொல்லுபவர் யாரெனில், நசரேயனாகிய இயேசு. நம் ஒவ்வொருவருக்குள்ளும் கதை கேட்கும் ஓர் ஆர்வம் இருப்பதை அவர் அறிவார். எனவே அவர் சுவிசேஷத்தைக் கூற தொடர்ந்து அ ந்த ஊடகத்தையே பயன்படுத்தினார். முன்னொரு காலத்தில், ஒரு மனிதன் “நிலத்தில் விதைகளை விதைத்தான்” (மாற்.4:26), முன்னொரு காலத்தில் “ஒரு கடுகு விதை” இருந்தது (வச. 31), இன்னும் பல, பல. இயேசு அனுதினமும் மக்களோடு உவமைகளின் வாயிலாகவே உரையாடினார் என்பதை மாற்கு சுவிசேஷம் தெளிவாகக் கூறுகின்றது (வச. 34). இவ்வுலகத்தை தெளிவாகக் காணவும், அவர்களை நேசிக்கின்ற தேவனை நன்கு புரிந்து கொள்ளவும் இது உதவியாக இருந்தது.
தேவனுடைய இரக்கத்தையும், கிருபையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது இதனை நினைவில் கொள்வது புத்திசாலித்தனம். கதைகளைக் கேட்க யாரும் மறுப்பதில்லை.

ஆவியோடு இசைந்து
ஓர் அழகான, பெரிய பியானோவின் ஓசையைச் சரிசெய்பவர் வேலை செய்து கொண்டிருப்பதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். இதே பியானோவிலிருந்து வியத்தகு இசையைக் கேட்ட நாட்களை நான் நினைத்துப் பார்த்தேன். “How Great Thou Art” என்ற பாடலின் சிறப்பான இசையைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் இப்பொழுது அந்த இசைக் கருவியின் ஓசையை சரிசெய்ய வேண்டியுள்ளது. சில ஸ்வரங்களின் சுருதி சரியாக உள்ளது, சிலவற்றின் சுருதி சற்று உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ உள்ளது, எனவே அதன் இசை கேட்பதற்கு இனிமையாக இல்லை. இப்பொழுது அந்தக் கருவியை சரியாக்குபவரின் வேலை, ஒவ்வொரு கீயும் ஒரே ஓசையை எழுப்பச் செய்வதில்லை, மாறாக ஒவ்வொரு கீயிலிருந்தும் வரும் ஓசை மற்றதோடு இணைந்து, ஓர் இனிமையான ஒருங்கிணைந்த இசையை எழுப்புவதேயாகும்.
ஆலயங்களிலும் கூட, இணையாத ஓசைகளை கேட்க முடியும். வித்தியாசமான நோக்கமும், திறமையும் உள்ள மக்கள், அனைவரும் சேர்ந்து பாடும் போது, ஒருங்கிணையாத ஓசைகளை எழுப்பலாம். கலாத்தியர்
5 ஆம் அதிகாரத்தில், பவுல் விசுவாசிகளிடம், “இணங்காமை, பொறாமை, கோபம், தன்னலமான நோக்கம்” ஆகியவற்றை விட்டு ஒதுங்குமாறு கேட்கின்றார். இவை தேவனோடுள்ள உறவை அழிப்பதோடு, மற்றவர்களோடுள்ள உறவையும் கெடுக்கின்றது. ஆவியின் கனிகளாகிய, “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகிய இவைகளை நாம் அணைத்துக் கொள்ளும் படி பவுல் நம்மை ஊக்கப்படுத்துகின்றார்.
நம்முடைய வாழ்வு ஆவியினாலே நடத்தப்படும் போது, முக்கியமில்லாத காரியங்களுக்காக, தேவையில்லாமல் நாம் குழம்பிப் போவதைத் தவிர்ப்பது நமக்கு சுலபமாக இருக்கும். எதிர் காலத்தைக் குறித்து ஒரு தெளிவைப் பெற்றுக் கொள்வோம். நம்முடைய இருதயம் தேவனுடைய இருதயத்தோடு இசைந்து இருக்கும் போது, நாம் ஒரு மனதோடு அவருடைய கிருபையில் வளரவும் தேவன் நமக்கு உதவி செய்வார்.

கட்டுமானத்தில் உள்ளது
வாகனங்கள் மெதுவாகச் செல்ல ஆரம்பித்ததால், அந்த சாலையின் மேற்பரப்பை நிரப்புகிறார்கள் என நான் நினைத்தேன், மீண்டும் வேகமாக வேலையை செய்கின்றார்கள். இந்தச் சாலையை முழுமையாக போடும் வேலை ஏன் இன்னமும் செய்யப்படவில்லை? நான் இந்த சாலையில், “சாலை போடும் கம்பெனி, வேலையை முடித்து விட்டார்கள், இந்த நேர்த்தியான சாலையை அநுபவிக்கவும்” என்பதாகக் கூறும் ஓர் அறிவிப்பை நான் இதுவரையில் பார்த்ததேயில்லை.
இது போன்ற காரியம், என்னுடைய ஆவிக்குரிய வாழ்விலும் உண்மையானது. என்னுடைய விசுவாசத்தின் ஆரம்ப நாட்களில், நான் முதிர்ச்சி நிலையை எட்டி விட்டதாக நினைத்தேன், ஆனால் நான், “மேற்பரப்பில் சமமாக்கப் பட்டிருந்தேன்”. முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், “நான் இன்னமும் கட்டுமானத்தில் உள்ளேன்” என அறிக்கையிட்டேன். குழிகள் நிறைந்த அந்த சாலையைப் போல, என்னுடைய விசுவாச வாழ்வும் ஒரு போதும் முடிக்கப்பட்ட நிலையை எட்டவில்லை. சில வேளைகளில் அது என்னை எரிச்சல் அடையச் செய்தது.
எபிரெயர் 10ஆம் அதிகாரத்தில், நம்மை ஆச்சரியப் படுத்தும் வாக்குத்தத்தம் உள்ளது. வசனம் 14ல், “ஏனெனில், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப் படுத்தியிருக்கிறார்” என்பதாகக் காண்கின்றோம். இயேசு சிலுவையில் நிறைவேற்றிய வேலை நம்மை இரட்சித்தது, முழுமையாக, நேர்த்தியாக நிறைவேற்றியது. தேவனுடைய பார்வையில் நாம் முழுமையாக கட்டப்பட்டு விட்டோம், ஆனால் நாம் புவியில் இருக்கும் வரை இந்த கட்டுமான வேலை முழுமையடையாது, நாம் அவரை போன்று மாறும்படி உருவாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம், ”நாம் இன்னும் பரிசுத்தமாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்”.
ஒரு நாள், நாம் அவரை நேருக்கு நேர் சந்திப்போம், நாமும் அவரை போல இருப்போம் (1 யோவா. 3:2). அதுவரையிலும் நாம் “கட்டுமானத்தில் உள்ளோம்” நம்மில் நடைபெறும் வேலை உண்மையாக நிறைவடையும் போது, நாமும் அந்த மகிமையின் நாளை ஆவலோடு எதிர்பார்ப்பவர்களாவோம்.

விலகி நில்
என்னுடைய போதகர், எங்கள் வகுப்பில் இயேசுவின் வாழ்வைப் பற்றி ஒரு கடினமான கேள்வியைக் கேட்ட போது, நான் கரத்தை உயர்த்தினேன். நான் இந்தக் கதையை வாசித்திருக்கின்றேன், எனவே, அதனை நான் அறிவேன். மேலும் அந்த அறையிலிருந்த யாவரும், நான் அதை அறிவேன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் விரும்பினேன். நான் வேதத்தைப் போதிப்பவன். நான் இவர்களுக்கு முன்பாக தெரியாதவனாய் குறுகிப் போவேனேயானால், அது எத்தனை வெட்கத்துக்கு உரிய செயல்! ஆனால் இப்பொழுது, நான் என்னுடைய நிலையை எண்ணி மன உளைச்சலுக்கு உள்ளாகி, பயத்தால் இழுக்கப் பட்டேன். எனவே நான் எனது கையை கீழே இறக்கினேன். நான் இத்தனை நிலையற்றவனா?
யோவான் ஸ்நானகன் மற்றுமொரு சிறந்த வழியைக் காட்டுகின்றார். அநேக மக்கள் அவனை விட்டுப் பிரிந்து, இயேசுவைப் பின்பற்றுகின்றனர் என்று அவனுடைய சீஷர்கள் அவனிடம் குறை கூறுகின்றனர். அதற்கு யோவான், “நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப் பட்டவன் அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” (வச. 28-30) என்றான். தான் இவ்வுலகில் வந்ததின் நோக்கமே இயேசு தான் என்பதை யோவான் உணர்ந்தான். அவர், “உன்னதத்திலிருந்து வருகிறவர், எல்லாரிலும் மேலானவர்” (வச. 31), தேவக் குமாரன், நமக்காக தன் ஜீவனையே தந்தவர், அவருக்கே எல்லா புகழும், மகிமையும் உண்டாகக் கடவது.
நம்முடைய கவனம் நம்மிலேயே இருக்கும் போது, நாம் தேவனை விட்டு விலகுகின்றோம். அவரே நம்மை இரட்சித்தார், இவ்வுலகின் ஒரே நம்பிக்கையும் அவரே, எந்த மகிமையையும் நாம் அவரிடமிருந்து திருடிக் கொள்வோமேயானால், நாம் அவரை காயப்படுத்துகின்றோம்.
நாம் இத்தகைய காரியங்களிலிருந்து விலகி நிற்க தீர்மானிப்போம். அதுவே தேவனுக்கும், நமக்கும், இவ்வுலகிற்கும், உகந்தது.

விரித்த கரங்கள்
சாமுவேலும் அவனுடைய குடும்பத்தினரும், “விரிந்த கரங்கள், திறந்த வீடு” என்ற தத்துவத்தைக் கைக் கொண்டனர். அவர்களின் வீடு அனைவரையும் வரவேற்கிறது, “சிறப்பாக, வருத்தத்தில் இருப்போருக்கு” என்று அவர் கூறுகின்றார். லைபீரியாவில் ஒன்பது உடன்பிறந்தோரோடு, அப்படிப்பட்ட ஒரு வீட்டில் அவன் வளர்க்கப் பட்டான். அவனுடைய பெற்றோர் எப்பொழுதும் அவர்கள் வீட்டிற்கு வரும் அனைவரையும் வரவேற்பார்கள். அவன், “நாங்கள் ஒரு சமுதாயமாக வளர்ந்தோம், நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தோம், ஒவ்வொருவரும் மற்றவரின் பொறுப்பை ஏற்றோம், என்னுடைய தந்தை ஒருவரை ஒருவர் நேசிக்கவும், மற்றவர்களைப் பாதுகாக்கவும், ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளவும் கற்றுக் கொடுத்தார்” என்று கூறினான்.
தாவீது ராஜா தேவையில் இருந்த போது, இத்தகைய அன்பின் பாதுகாப்பை தேவனிடம் பெற்றார்.
2 சாமுவேல் 22 (சங்.18) ல் தாவீதின் துதி பாடல் எழுதப்பட்டுள்ளது. தேவன் அவனுடைய வாழ்நாள் முழுவதும் அடைக்கலமாக இருக்கின்றார். அவன், “எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று” (2 சாமு. 22:7) என்கின்றான். தேவன் அவனை அவனுடைய எதிரிகளிடமிருந்து விடுவித்தார், சவுல் அரசனிடமிருந்து பல முறை பாதுகாத்தார். கர்த்தர் அவருக்கு கன்மலையும், கோட்டையும்,உயர்ந்த அடைக்கலமும், புகலிடமும், ரட்சகருமாயிருக்கிறார், என்று பாடுகின்றார் (வச. 2-3).
தாவீதின் துயரங்களைப் பார்க்கும் போது நம்முடைய துயரங்கள் சிறியது தான். தேவன் நம்மையும் அவரிடம் ஓடி வரும்படி அழைக்கின்றார், நாம் தேடுகின்ற பாதுகாப்பான இடத்தை அவர் தருகின்றார், அவருடைய கரங்கள் எப்பொழுதும் விரிந்தே இருக்கின்றன, எனவே நாமும் “அவருடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவோம்” (வ.50).