இது போன்ற விக்கிரகம்
சாம் பணி ஓய்வு பெற்றபோது, கிடைத்த தொகையின் கணக்கை ஒவ்வொரு நாளும் இரு முறை சரிபார்த்தான். அவன் 30 ஆண்டுகளாகச் சேமித்தான். அத்தோடு, பங்குச் சந்தை விலையேற்றத்தாலும் அவனுக்குப் போதுமான பணம் இருந்ததால், ஓய்வு பெற்றான். ஆனால், பங்குச் சந்தை சரியாமல் இருக்க வேண்டுமே. இந்த பயத்தினால், சாம் தன்னிடமிருந்த எஞ்சிய பணத்தைக் குறித்து கவலையுற்றான்.
“யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி” என்று எரேமியா தீர்க்கதரிசி எச்சரிக்கின்றார்.
யூதாவின் விக்கிரக ஆராதனை குறிப்பிடத்தகுந்தது. அவர்கள் தேவனை அறிவர், அப்படியிருந்தும் அவர்களால் எவ்வாறு மற்றவற்றை வணங்க முடிகிறது? அவர்கள் தங்களின் லாபத்திற்காக இரண்டுபேரையும் வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். மரணத்திற்குப் பின் உள்ள வாழ்விற்காக தேவனையும், ஏனெனில் உண்மையான தேவனால் தான், அவர்களை உயிர்த்தெழச் செய்ய முடியும். ஆனால், இப்பொழுது என்ன வேண்டும்? அந்நிய தேவர்கள் சுகத்தையும், செல்வத்தையும், செழிப்பையும் தருவதாக வாக்களிக்கின்றார்களே, ஒரு வேளை அப்படியிருந்தால், நாம் ஏன் அவர்களிடம் கேட்கக் கூடாது? என்று நினைக்கின்றார்கள்.
யூதாவின் விக்கிரக ஆராதனையைப் போன்று நாமும் சோதனையில் இழுக்கப்படுகின்றோம். திறமை, கல்வி, செல்வம் அனைத்தையும் பெற்றிருப்பது நல்லது. ஆனால் நாம் கவனத்தோடு இல்லையெனில், நம்முடைய நம்பிக்கை இவற்றின் மீது சென்றுவிடும். நாம் சாகும் போது நம்முடைய தேவன் நமக்குத் தேவை, நாம் இப்பொழுதே தேவன் நம்மை ஆசீர்வதிக்கும்படி கேட்போம். நாம் இவற்றின் மீது சற்றே சாய்ந்து கொள்ளலாம் என்று எண்ணாதே.
உன்னுடைய நம்பிக்கை எங்கேயுள்ளது? விக்கிரகங்கள் இன்னமும் சிலைகளாகவே உள்ளன. தேவன் நமக்குத் தந்துள்ள அநேக நன்மைகளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம். ஆனால், இவை ஒன்றின் மீதும் நம்பிக்கையை வைப்பதில்லை என்று தேவனிடம் சொல்லு. உன்னுடைய நம்பிக்கை தேவனாகிய கர்த்தர் மீதேயிருக்கட்டும்.

திரும்பக் கட்டுவது எப்படி?
இரவு வேளையில், தனக்கு முன்பாக இருக்கின்ற வேலையைக் குறித்து ஆராயும் படி, அந்தத் தலைவன் தன்னுடைய குதிரையில் புறப்பட்டான். இடிபாடுகளைச் சுற்றி வந்த அவன், பட்டணத்தின் சுற்றுச் சுவர் அழிக்கப்பட்டிருப்பதையும் அதன் வாயிற்கதவுகள் எரிக்கப்பட்டிருப்பதையும் கண்டான். சில பகுதிகளில் உள்ள இடிபாடுகளின் குவியல்களுக்கிடையே அவனுடைய குதிரை செல்வதற்கு வழியில்லாதிருந்தது. துக்கத்தோடு அந்த பிரயாணி, வீட்டிற்குத் திரும்புகின்றான்.
அந்தப் பட்டணத்தின் பாதிப்பைக் குறித்து, அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்த போது அவன், “நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே” (நெகே.2:17) என்று ஆரம்பிக்கின்றான். பின்னர் அந்த பட்டணம் அழிக்கப்பட்டு கிடக்கிறதையும், அதனைப் பாதுகாக்க வேண்டிய அலங்கம் உடைக்கப் பட்டு பயனற்றுக் கிடக்கின்றதையும் பற்றி கூறினான்.
துயரத்தில் இருக்கும் அந்த பட்டணத்தின் மக்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும்வகையில், “ தேவனுடைய கரம் அவன் மேல் நன்மையாக இருக்கிறதையும்” அவர்களுக்கு அறிவித்தான். உடனே அந்த ஜனங்கள், “எழுந்து கட்டுவோம் வாருங்கள்” (வ.18) என்றனர்.
அப்படியே செய்தார்கள்.
தேவன் மீதுள்ள நம்பிக்கையோடும், தங்களின் முழு முயற்சியோடும், எதிரிகளின் எதிர்ப்பின் மத்தியிலும், தங்களால் கூடாது என்று எண்ணக் கூடிய மிகப் பெரிய வேலையை எருசலேம் மக்கள், நெகேமியாவின் தலைமையில், அலங்கத்தை திரும்ப 52 நாட்களில் கட்டிமுடித்தனர் (6:15).
உன்னுடைய சூழ் நிலைகளைப் பார்க்கும் போது, தேவன் உன்னிடம் எதிர்பார்க்கும் வேலை, உனக்கு மிகவும் கடினமானதாக தோன்றுகின்றதா? ஒரு பாவச் செயலை விட்டு விட கடினமாக இருக்கின்றதா? ஓர் உறவு தேவன் விரும்பாதவகையில் போய் கொண்டிருக்கின்றதா? தேவனுக்காக செய்ய வேண்டிய ஒன்று கடினமானதாக காணப்படுகின்றதா?
தேவன் உன்னை வழி நடத்தும் படி கேள் (2:4-5), பிரச்சனைகளை ஆராய்ந்து பார் (வ.11-15), தேவனுடைய வழி நடத்துதலை அறிந்து கொள்(வ.18), பின்னர் கட்டுகின்ற வேலையைத் தொடங்கு.

ஒருவருக்காக ஒருவர் உண்டாக்கப்பட்டனர்
“நான் அவரைப் பாதுகாக்கின்றேன், அவர் மகிழ்ச்சியாக இருக்கும் போது நானும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்றாள் ஸ்டெல்லா. “அவள் என்னருகில் இருக்கும் போது நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்றார் பிரதீப். ஸ்டெல்லாவும் பிரதீப்பும் திருமணமாகி 79 ஆண்டுகள் ஆகின்றது. சமீபத்தில் பிரதீப் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டபோது, அவரது நிலை மிகவும் மோசமாக இருந்தது, எனவே, ஸ்டெல்லா அவரை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்தாள். அவருக்கு வயது 101, அவளுக்கு 95. அவள் ஒரு நடைகருவியை பயன்படுத்தி நடந்தாலும், அவருக்குப் பிடித்தமான உணவு தயாரித்தல் போன்ற, தன்னால் இயன்ற உதவியை, தன்னுடைய கணவனுக்குச் செய்து வந்தாள், அதையும் அவளால் தனிமையாகச் செய்யமுடியவில்லை. பேரப்பிள்ளைகளும், அருகில் இருப்போரும் அவளுக்கு உதவி செய்தனர்.
ஸ்டெல்லா, பிரதீப் ஆகியோரின் இணைந்த வாழ்க்கை, ஆதியாகமம் 2 ல் கூறப்பட்டுள்ள “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” (வ.18) என்று தேவன் கூறியதற்கு ஏற்ப அமைந்துள்ளது. ஆதாமுக்கு முன்பாக தேவன் கொண்டு வந்த அவருடைய படைப்புகளில் எந்த உயிரினமும் இந்த வார்த்தைக்கு ஏற்ப அமையவில்லை. ஆனால், அவனுடைய விலா எலும்பிலிருந்து உண்டாக்கப்பட்ட ஏவாளைத் தனக்கு ஏற்ற துணையாகவும் உதவியாளருமாகக் கண்டான் (வ.19-24).
ஆதாமுக்கு ஏற்ற துணையாக ஏவாள் அமைந்தாள், இவர்கள் மூலமாக தேவன் திருமணத்தை ஏற்படுத்தினார். இது, ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதற்காக மட்டுமல்ல, ஒரு குடும்பத்தை தொடங்கவும், அவருடைய படைப்புகளைப் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டது. இதில், மற்ற மக்களும் அடங்குவர் (1:28). அந்த முதல் குடும்பத்திலிருந்து சமுதாயம் உருவானது, திருமணம் ஆனவர்கள், தனியாக இருப்பவர், வயதானவர், இளைஞர் யாருமே தனியாக இல்லை. நாம் அனைவரும் ஒரு சமுதாயத்தினர், “ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமக்கத்தக்க” வாய்ப்பை தேவன் நமக்குத் தந்துள்ளார் (கலா. 6:2).

அவன் என்னை மாற்றினான்
லண்டன் பட்டணத்தில், மிகப்பெரிய விபச்சார விடுதி நடத்தி வந்த ஜாண், சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டபோது, தன்னை நல்லவன் என்று தவறாக நம்பினான். அங்கு சிறைச்சாலையில் நடைபெற்று வந்த வேதாகம வகுப்பில் தரப்படும் கேக் மற்றும் காப்பிக்காக அங்கு சென்றான். ஆனால், அங்கு வருபவர்களிடம் காணப்படும் மகிழ்ச்சி, அவனைச் சிந்திக்க வைத்தது. முதல் பாடல் வேளையில் அவன் அழ ஆரம்பித்தான், பின்னர் ஒரு வேதாகமத்தைப் பெற்று வாசிக்க ஆரம்பித்தான். எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் அவனை மாற்றியது. எதிர்பாராத விதமாக அவன் “துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தை விட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில்…………….. அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை” (எசே.18:27-28) என்ற வார்த்தையைப் படித்தான். தேவனுடைய வார்த்தைகள் அவனுக்குள் ஜீவன் பெற்றது, அவன் உணர்வடைந்தான், “நான் நல்லவனல்ல,………..நான் தீமை செய்தேன், நான் மாற வேண்டும்” என்றான், அவன் போதகரோடு சேர்ந்து ஜெபித்த போது, “நான் இயேசுவைக் கண்டேன், அவர் என்னை மாற்றினார்” என்றான்.
தேவனுடைய ஜனங்கள் சிறைப்பிடிக்கப் பட்டிருந்த போது, எசேக்கியேல் தீர்க்கதரிசி, இந்த வார்த்தைகளைப் பேசினார். அவர்கள் தேவனை விட்டு, பின்வாங்கிப் போயிருந்தாலும், அவர்கள் தங்கள் பொல்லாத கிரியைகளை விட்டு மனந்திரும்பி, “புது இருதயத்தையும், புது ஆவியையும்” (வ.31) உண்டு பண்ணிக்கொள்ள வேண்டும் என விரும்புகின்றார். “மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்” (வ.32) என்ற வார்த்தைகள் ஜாணுக்கு உதவியது. பாவிகளை மனந்திரும்புங்கள் (லூக்.5:32) என்று அழைத்த இயேசுவைப் பின்பற்றினான்.
நம்முடைய ஆவியில் உணர்த்தப் படுகின்ற பாவங்களைக் குறித்து மனம் வருந்துவோம். நாமும் மன்னிப்பைப் பெற்று விடுதலையோடு வாழ்வோம்.

நாம் இணைந்து வெற்றிபெறுவோம்
நடு இரவில், போதகர் சாமுவேல் என்பவருக்கு, அவருடைய சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு வருமாறு அழைப்பு வந்தது. அவர் அங்குச் சென்ற போது அவருடைய வீடு முழுவதும் பற்றி எரிவதைக் கண்டார். அந்த தந்தையின் மீது நெருப்பு பற்றிக் கொண்டபோதிலும், அதோடு தன்னுடைய குழந்தையைக் காப்பாற்றும்படி உள்ளே சென்று, மயங்கிய நிலையில் இருந்த தன் மகளை வெளியே கொண்டு வந்தார். அந்த கிராமப் பகுதியில், 10 கிலோமீட்டருக்கு அப்பால் தான் மருத்துவமனை இருந்தது. அவர்களுக்கு எந்த வாகன வசதியும் இல்லாதபடியால், அந்த போதகரும், தந்தையும் அக்குழந்தையோடு ஓடத்துவங்கினர், ஒருவர் அக்குழந்தையைச் சுமந்து களைத்துப் போனால், மற்றவர் அவளை சுமந்து கொண்டு ஓடுவார். இருவரும் சேர்ந்து அந்த பயணத்தைச் செய்தனர். தந்தையும் மகளும் சிகிச்சை பெற்று முழுவதும் குணமாயினர்.
யாத்திராகமம் 17:8-13ல், தேவன் யோசுவாவின் முயற்சியோடு, ஒரு திட்டமிட்ட வெற்றியை தருகின்றார். இங்கு யோசுவா யுத்தம் செய்யும் மனிதர்களை போர்களத்தில் வழி நடத்துகின்றான். மோசே தேவனுடைய கோலை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கின்றான். அவனுடைய கரங்கள் தளர்ந்த போது, ஆரோனும், ஊரும் அவனுடைய கரங்களை, சூரியன் மறையும் வரையும் தாங்கிப் பிடிக்கின்றனர், எதிரிகளைத் தோற்கடிக்கின்றனர்.
ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதின் மதிப்பை நாம் குறைவாக நினைக்கக் கூடாது. இரக்கமுள்ள தேவன், ஒருவருக்கொருவர் நன்மை செய்யும்படி, அவருடைய ஜனங்களைத் தன் சார்பாகத் தந்துள்ளார். நமக்கு செவிகொடுக்கும் காதுகளையும், உதவிசெய்யும் கரங்களையும், ஞானம், ஆறுதல் மற்றும் திருத்தும் வார்த்தைகளைத் தரக்கூடிய நபர்களை நம்மிடம் வரவும் நம்மூலமாக பிறருக்குக் கிடைக்கவும் செய்கின்றார். நாம் இணைந்து ஜெயிப்போம், தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக.