
ஆனந்த தைலம்
ஒரு திரைப்படத்தில் இயேசுவாக நடிக்க வேண்டுமானால், அதனை எப்படிச் செய்ய முற்படுவாய்? இது தான் புரூஸ் மார்சியானோ எதிர் நோக்கிய சவால். 1993 ஆம் ஆண்டு, “மத்தேயு” என்ற வேதாகம திரைப் படத்திற்கு, அவன் இயேசுவாக நடித்தான். அவனுடைய நடிப்பின் மூலம் பல மில்லியன் பார்வையாளர்கள் இயேசுவைக் குறித்து தீர்மானிப்பார்கள் என்பதை உணர்ந்த அவனுக்குள் கிறிஸ்துவைப் பற்றி “மிகத்துல்லியமாக” தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அவன் முழங்காலில் நின்று ஜெபித்தான், இயேசுவை நன்கு எனக்கு காட்டும் என வேண்டினான்.
புரூஸ், எபிரெயர் முதலாம் அதிகாரத்திலிருந்து ஒரு தெளிவைப் பெற்றுக் கொண்டான். நம்முடைய பிதாவாகிய தேவன், தம்முடைய குமாரனை, மற்றவர்களைப் பார்க்கிலும் “ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்” என்பதாக எபிரெயரை ஆக்கியோன் எழுதுகின்றார் (1:9). நாம் கொண்டாடக் கூடிய இந்த மகிழ்ச்சி, நாம் முழு மனதுடன் பிதாவோடு இணைக்கப்பட்டுள்ளதால் வரும் சந்தோஷத்தால் கிடைக்கும். இத்தகைய மகிழ்ச்சியினால் இயேசுவின் இருதயம் நிரப்பப்பட்டதாக அவருடைய வாழ் நாள் முழுவதும் இருந்தது. எபிரெயர் 12:2ல் கூறப்பட்டுள்ளபடி, “அவர் தமக்கு முன் வைத்திருந்த ச ந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்”.
வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள இந்தக் காரியத்தைஎடுத்துக் கொண்ட புரூஸ், வித்தியாசமான மகிழ்ச்சி நிரம்பிய இரட்சகரின் காட்சிகளைக் கொடுத்தார். அதன் விளைவாக அவன் “புன்னகை ததும்பும் இயேசு” என்று அழைக்கப் பட்டான். நாமும் முழங்காலில் நின்று, “இயேசுவே என்னை உம்மைப் போல் மாற்றும்” என்று கேட்போமாக. அவர் நம்மை அவருடைய குணங்களினால் நிரப்புவார், நம்மைக் காணும் மக்கள் இயேசுவின் அன்பை நம்மில் காண்பர்.

நம்முடைய விருப்பத்தின் படி செல்லும் போது
அலைபேசி சேவையும் இல்லை, நடைபாதையின் வரைபடமும் இல்லை, எங்கள் நினைவில் பதிந்திருந்த வரைபடம்தான் எங்களை வழி நடத்தியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது, கடைசியாக அந்தக் காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி, வாகனங்கள் நிறுத்தும் இடத்தை அடைந்தோம். ஒரு திருப்பத்தை தவற விட்டதால், மேலும் அரை மைல் தூரம் நடந்தோம், நாங்கள் நீண்ட பாதை வழியே நடக்க வேண்டியதாகி விட்டது.
நம்முடைய வாழ்வும் சில வேளைகளில் இதேப் போன்றே உள்ளது. நாம் செய்யும் காரியங்கள் சரியா அல்லது தவறா என்று மட்டும் கேட்பதோடல்லாமல், இது எங்கே என்னைக் கொண்டு போய் சேர்க்கும் என்பதையும் கேட்க வேண்டும். சங்கீதம் 1, இரண்டு வகையான வழிகளை ஒப்பிடுகின்றது. ஒன்று நீதிமானின் வழி (தேவனை நேசிப்பவர்கள்), மற்றது துன்மார்க்கனின் வழி (தேவனை நேசிப்பவர்களை பகைப்பவர்கள்). நீதிமான் மரத்தைப் போல செழிப்பான், துன்மார்க்கனோ காற்றுப் பறக்கடிக்கும் பதரைப் போல் இருக்கிறான் (வ.3-4). செழிப்பு என்பது எவ்வாறு இருக்கும் என்பதையும் இந்த சங்கீதம் காட்டுகின்றது. அவன் எல்லாவற்றிற்கும் தேவனையே சார்ந்து வாழ்ந்து காட்டுவான்.
நாமும் இத்தகைய மனிதனாக எப்படி மாறலாம்? சங்கீதம் 1, நம்மை துன்மார்க்கருடைய நட்பிலிருந்தும், விரும்பத்தகாத பழக்கங்களில் இருந்தும் விலகுமாறு கற்பிக்கின்றது. தேவனுடைய வார்த்தையில் பிரியமாய் இருக்கும் படி (வ.2) நமக்கு கற்பிக்கின்றது. தேவன் நம் மீது கண்ணோக்கமாய் இருக்கும் போது தான், நம்முடைய வாழ்வு செழிக்கும். “கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்” (வச. 6).
உன்னுடைய வழிகளை தேவனிடத்தில் ஒப்படைத்து விடு. போகிற இடத்தை அறியாமல் சென்று கொண்டிருக்கின்ற உன்னுடைய பழைய வழியை, அவர் மாற்றி, புதிய வழியில் நடத்துவார், வேத வார்த்தையாகிய நதியை உனக்குள்ளே பாய்ந்து செல்லும்படி செய், அப்பொழுது உன்னுடைய இருதயமாகிய வேர்த் தொகுதி செழித்து வளரும்.

சமாதானம் என்கின்ற ஈவு
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ், தன்னுடைய மரணத்திற்கு முன்பு தன்னுடைய மகனிடம், “நான் இயேசுவை விசுவாசிக்கின்றேன், அவரே என் இரட்சகர், ஆகையால் மரணத்தைக் குறித்த பயம் எனக்கில்லை” என்றார். இந்த மிகச் சிறந்த நம்பிக்கை தரும் வார்த்தைகள், உறுதியான, ஆழ்ந்த விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றன. இயேசுவை அறிந்து கொண்டதால் கிடைக்கப் பெற்ற தேவனுடைய ஈவாகிய சமாதானத்தை, அவள் தன்னுடைய மரணத்தருவாயிலும் அநுபவித்தாள்.
முதலாம் நூற்றாண்டில், எருசலேமில் வாழ்ந்த சிமியோனும் ஆழ்ந்த சமாதானத்தை இயேசுவின் மூலம் பெற்றுக் கொண்டான். பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் சிமியோன் தேவாலயத்திற்கு வருகின்றான். அங்கு மேரியும், யோசேப்பும், நியாயப் பிரமாணத்தை நிறைவேற்ற, விருத்த சேதனம் செய்யும்படி, இயேசு பாலகனை தேவாலயத்திற்கு கொண்டு வருகின்றனர். வேதாகமத்தில் சிமியோனைப் பற்றி வேறெங்கும் குறிப்பிடவில்லையெனினும், லூக்கா அவனைக் குறித்து கூறியிருப்பதிலிருந்து, அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று கூறமுடியும். அவன் நீதிமான், தேவபக்தி நிறைந்தவன், மேசியாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்தவன், “அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்” (லூக். 2:25). ஆயினும் அவன், இயேசுவைக் காணும் வரையிலும், சமாதானத்தை (ஷலோம்) முழுமையாகப் பெற்றுக் கொள்ளவில்லை.
இயேசுவைத் தன் கரங்களில் ஏந்தியவனாக, சிமியோன் தேவனைப் போற்றி பாடுகின்றான், தன்னுடைய முழுதிருப்தியையும் வெளிப்படுத்துகின்றான், “ஆண்டவரே, உமது வார்த்தையின் படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போக விடுகிறீர்; ….தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” (வ.29-32) என்று பாடுகின்றான். அவன் தேவ சமாதானத்தைப் பெற்றுக் கொண்டான் ஏனெனில், இவ்வுலகிற்கு நம்பிக்கைப் பிறந்ததை அவனால் ணமுடிந்தது.
நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் கொண்டாடும் நாம், தேவன் தரும் ஈவாகிய சமாதானத்தில் மகிழ்ந்து களிகூருவோம்.

ஒரு பெயரில் என்ன உள்ளது?
தேவன் குறித்த நேரத்தில், ஒரு வெள்ளிக் கிழமை, எங்களுடைய மகன் கோஃபி பிறந்தான், அதுவே அவனுடைய பெயரின் அர்த்தம்- வெள்ளிக் கிழமை பிறந்த பையன் என்பது அதன் அர்த்தம். கானாவைச் சேர்ந்த, எங்களுடைய நண்பனும் போதகருமானவருடைய ஒரே மகன் மரித்துப் போனான், நாங்கள் அவனுடைய பெயரையே எங்களுடைய மகனுக்கு வைத்துள்ளோம். அவர் எங்களுடைய மகனுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறார். எங்களை மிகவும் மதிக்கின்றவர்.
ஒரு பெயரின் பின்னாலுள்ள கதையைத் தெரிந்து கொண்டாலன்றி, அதன்முக்கித்துவத்தை நம்மால் உணரமுடியாது. லூக்கா 3 ஆம் அதிகாரத்தில், யோசேப்பின் முன்னோர்களைப் பற்றிய விளக்கத்தைக் காண்கின்றோம். யோசேப்பிலிருந்து பின்னோக்கி ஆதாம் வரை, ஏன் தேவன் வரையும் வம்ச வரலாற்றைக் காண்கின்றோம் (வ.38). வசனம் 31ல், “நாத்தான் தாவீதின் குமாரன்” என்பதாக வாசிக்கின்றோம். நாத்தான்? அது நமது ஆர்வத்தைத் தூண்டுகிறது. 1 நாளாகமம் 3:5 ல், நாத்தான் பத்சேபாளின் குமாரன் எனக் காண்கின்றோம்.
பத்சேபாளின் குமாரனுக்கு நாத்தான் என்று பெயரிட்டது தற்செயலாக நடைபெற்றதா? இதன் முன்கதையைப் பார்ப்போம். பத்சேபாளை தாவீதின் மனைவி என்றே கூற முடியாது. தாவீது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, பத்சேபாளின் கணவனை கொலை செய்து, அவளை வஞ்சித்தான் என்பதை, நாத்தான் தீர்க்க தரிசி தைரியமாக ராஜாவிடம் எடுத்துக் கூறுகின்றான் (2 சாமு. 12).
தீர்க்கதரிசி, தாவீதை நேரடியாக கண்டித்து, அவனுடைய பயங்கரமான தவறுகளைச் சுட்டிக் காட்டுகின்றான். அவனுடைய காயங்கள் ஆற்றப்பட்ட பின்பு, அவன் தனது மகனுக்கு நாத்தான் என்று பேரிட்டிருப்பான். பத்சேபாளின் இந்த மகன் தான், இயேசுவினுடைய உலகத் தந்தையான யோசேப்பினுடைய முன்னோர்களின் பட்டியலில் வருகின்றவர் (லூக். 3:23).
ஒவ்வொரு காரியத்திலும் தேவனுடைய கிருபை பிணைக்கப் பட்டிருப்பதை வேதாகமத்தில் காண்கின்றோம். நாம் அதிக கவனம் செலுத்தாத பகுதியான, ஜென்ம வரலாற்றுப் பகுதியிலுள்ள பெயரிலும் கூட, அவருடைய கிருபையைக் காண்கின்றோம். தேவனுடைய கிருபை எங்கும் உள்ளது.
