தேவன் நம்மை சுமக்கிறார்
சென்னைப் பட்டணத்தில் 2015ஆம் ஆண்டு, வரலாற்றில் இதுவரை இடம்பெறாத பெருவெள்ளம் வந்து பலரை பாதிப்பிற்குள்ளாக்கியது. வீட்டில் இனி தங்கியிருப்பது சாத்தியமல்ல என்று எண்ணிய அவர், தன் சிறு குழந்தையுடன் வெளியேறினார். அவர் பார்வையற்றவர் என்றபோதிலும் தன் மகனைக் காப்பாற்றியாக வேண்டும். தன் மகனை தன் தோள்மீது மென்மையாய் அமரச்செய்து, ஆழமான அந்த தண்ணீரில் பாதுகாப்பை நோக்கி நடக்கிறார்.
இத்தனை இடர்களையும் தாண்டி தன்னுடைய பிள்ளையைக் காப்பாற்ற ஒரு மாம்ச தகப்பன் என்னும்போது, நம்முடைய பரம தகப்பன் அவருடைய பிள்ளைகளின் மீது எந்த அளவிற்கு அக்கறை எடுத்துக்கொள்வார்! பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்கள் விசுவாசத்தில் தடுமாற்றமடைந்த நேரத்திலும் தேவன் அவர்களை எப்படி நடத்தி வந்தார் என்பதை மோசே நினைவுகூருகிறார். தேவன் அவர்களை எப்படி மீட்டார் என்றும் வனாந்திரத்தில் அவர்களை எப்படி போஷித்தார் என்றும், எதிரிகளோடு யுத்தம்செய்து அவர்களை மேகஸ்தம்பத்தினாலும் அக்கினி ஸ்தம்பத்தினாலும் எப்படி வழிநடத்தினார் என்றும் இஸ்ரவேலர்களுக்கு நினைவுபடுத்துகிறார். அவர்களுக்கு தேவன் எப்படி ஆதரவாய் செயல்பட்டார் என்று எடுத்துரைத்த மோசே, “ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல” (உபாகமம் 1:31) அவர்களை வழிநடத்தி வந்தார் என்று சொல்லுகிறார்.
இஸ்ரவேலர்களின் வனாந்திரப் பயணம் சாதாரணமானது அல்ல; விசுவாசத்திற்கு அடிக்கடி சவாலாய் அமைந்தது. ஆனால் தேவனுடைய பாதுகாப்பிற்கும் வழிநடத்துதலுக்கும் அது தெளிவான ஆதாரம். ஒரு தகப்பன் துணிச்சலோடும் உறுதியோடும் தன் மகனை மென்மையாய் தோளில் சுமப்பதுபோல தேவன் இஸ்ரவேலைச் சுமந்தார். நம்முடைய விசுவாசத்தைச் சோதிக்கும் சவால்களை சந்திக்கும்போது அதிலிருந்து நம்மைத் தூக்கிச்செல்லும் ஆண்டவர் இருக்கிறார் என்பதை நினைவுகூருவோம்.

மிகச்சிறந்த சிம்பொனி இசை
உலகின் புகழ்பெற்ற 150 இசைக்கலைஞர்களிடம் அவர்கள் கேட்டதிலேயே மிகச்சிறந்த 20 சிம்பொனி இசைகளை வரிசைப்படுத்தும் படி ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை கேட்டது. பீத்தோவனின் பெயர் எல்லாவற்றிலும் முதன்மையான இடத்தைத் தக்கவைத்தது. அரசியல் ரீதியாக உலகம் அமைதியிழந்து காணப்பட்ட தருணத்தில் தான் “ஹீரோயிக்” என்னும் பீத்தோவனின் பிரம்மாண்டமான படைப்பு வெளியாகியது. மேலும் அந்த தருணத்தில்தான் பீத்தோவனின் கேட்கும் திறனும் குறையத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. மனிதாபிமானம், துணிச்சலான வாழ்க்கைப் போராட்டம் ஆகியவைகளை பிரதிபலித்த இந்த இசையில் உணர்வுகள் பொங்கியது. உச்சகட்ட மகிழ்ச்சி, சோகம், வெற்றிக்களிப்பு என்று உணர்வுகளின் ஊடாய் பயணித்த பீத்தோவனின் மூன்றாம் மாபெரும் சிம்பொனி இசை, மனிதனுடைய ஆவிக்கு கிடைத்த பரிசு.
பவுலின் முதலாம் கொரிந்திய நிருபமும் இதே காரணங்களுக்காக நம் கவனத்தை ஈர்க்கிறது. ஒரு இசையாய் அல்லாமல், வார்த்தைகளாகிய அவைகள், ஆசீர்வாதத்துடன் துவங்கி (1:4-9), ஆத்துமாவை உடைக்கும் சோகத்தினூடாய் கடந்து (11:13-22), வரம்பெற்ற தேவ மனிதர்கள் அவைகளை சகமனிதர்களுக்காகவும், தேவ நாம மகிமைக்காகவும் பயன்படுத்தத் தூண்டும் ஆலோசனையோடு நிறைவடைகிறது (12:6-7).
நம்முடைய ஆவி உயிர்ப்பிக்கப்படுதலே தேவனுடைய ஆவிக்கு நாம் கொடுக்கும் காணிக்கை. கிறிஸ்துவின் விவரிக்கமுடியாத அன்பை உணருவதற்கு பவுல் நம்மை உற்சாகப்படுத்த, நாம் பிதாவாகிய தேவனால் அழைக்கப்பட்டு, குமாரனால் வழிநடத்தப்பட்டு, அவருடைய ஆவியினாலே ஏவப்படுகிறோம் என்பதை காண உதவுகிறார். ஏதோ ஒரு சத்தத்தை பிறப்பிப்பதற்கு அல்ல, மாறாக, உலகின் மாபெரும் சிம்பொனி படைப்பை நம்மிலிருந்து பிறப்பிக்கும் பொருட்டு அது நம்மை தூண்டுகிறது.

தேவனுடைய உதவியை நாடுதல்
அமெரிக்காவின் ஒரு சிறிய ஊரிலிருந்து உருவாகிய வெட்டுக்கிளிகள், 1800 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தேசத்தின் பயிர்களை நாசம் செய்தது. விவசாயிகள், வெட்டுக்கிளிகளை பிடிப்பதற்கு தாரை ஊற்றியும், அதின் முட்டைகளை அடியோடு அழிக்க தங்கள் வயல்களை எரிக்கவும் செய்தனர். பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கித்தவித்த மக்கள், தேவனுடைய உதவியை நாடும்பொருட்டு, மாநிலந்தழுவிய ஜெப நாளை ஒழுங்குசெய்ய தீர்மானித்தனர். ஏப்ரல் 26ஐ ஜெப நாளாக ஜனாதிபதி அறிவித்தார்.
எல்லோரும் சேர்ந்து ஜெபித்த பின், தட்பவெப்பநிலை சீராக, முட்டைகளிலிருந்து வெட்டுக்கிளிகள் மீண்டும் உயிர்பெறத் துவங்கியது. ஆனால் ஆச்சரியமூட்டும் வகையில் நான்கு நாட்களில் ஏற்பட்ட தட்பவெப்பநிலை அந்த வெட்டுக்கிளிகளை அடியோடு அழித்தது. மக்கள் மீண்டும் சோளம், கோதுமை போன்ற தானியங்களை அறுவடை செய்யத் துவங்கினர்.
யோசபாத் ராஜாவின் நாட்களில் மக்களைப் பாதுகாத்ததற்கு ஜெபமே ஆதாரமாயிருக்கிறது. பெரிய இராணுவம் நம்மை நோக்கி வருகிறது என்பதைக் கேள்விப்பட்ட ராஜா, தேவ ஜனத்தை ஜெபிக்கும்படியாகவும் உபவாசிக்கும்படியாகவும் கேட்கிறார். தேவன் தங்களுடைய கடந்த காலத்தில் தங்களை எப்படி காத்துவந்தார் என்பதை மக்கள் நினைவுகூறுகின்றனர். இந்த அழிவு நமக்கு நேரிடும் என்றால், “எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால்” தேவன் நம் ஜெபத்தைக் கேட்டு நம்மை இரட்சிப்பார் என்பதை அறிவோம் என்று யோசபாத் அறிவிக்கிறார் (2 நாளாகமம் 20:9).
எதிரிகளின் கைகளிலிருந்து தேவன் தன்னுடைய ஜனத்தை மீட்டுக்கொண்டார். நம்முடைய இக்கட்டில் அவரை நோக்கி கதரும்போது அவர் நம் ஜெபத்தைக் கேட்கிறார். உங்களுடைய தேவைகள் எதுவாயினும், உறவு விரிசலோ அல்லது அச்சுறுத்தும் எந்த பிரச்சனையோ, ஜெபத்தில் தேவனிடத்தில் முறையிடுங்கள்; அவரால் கூடாதது ஒன்றுமில்லை.

நம்பத்தகுந்த கிறிஸ்தவம்
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ ஸ்தாபனத்தில் குறிப்பிட்ட ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். அங்கிருந்து, ஒழுங்கு விதிமுறைகள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டது. அதில் மதுபானம், புகையிலை, சிலவகையான பொழுதுபோக்கு ஆகியவைகள் தடைசெய்யப்பட்டிருந்தது. “நம்முடைய ஊழியர்களிடமிருந்து இவற்றை எதிர்பார்க்கிறோம்” என்று அதில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. அவைகளில் எனக்கும் உடன்பாடு இல்லை என்பதினால் அதை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு கடினமாய் தெரியவில்லை. ஆனால் என்னுடைய விவாத பார்வையில் ஏன் அந்த தடைசெய்யப்பட்ட பட்டியலில் ஆனவம், உணர்வற்ற தன்மை, முரட்டுத்தனம், ஆவிக்குரிய மாறுபாடு, விமர்சனம் போன்ற காரியங்கள் தடைசெய்யப்படவில்லை என்று எண்ணத்தோன்றியது.
இயேசுவை பின்பற்றுவதை விதிமுறைப் பட்டியலைக் கொண்டு தீர்மானிக்கமுடியாது. அது அளவிடமுடியாத வாழ்க்கையின் மிக நுட்பமான ஒரு குணாதிசயம். ஆனால் அது “அழகானது” என்று மட்டும் கூறமுடியும்.
மத்தேயு 5:3-10இல் பதிவாகியுள்ள மலைப் பிரசங்கம் அந்த அழகை விவரிக்கிறது. இயேசுவின் ஆவியை உடையவர்கள் தாழ்மையும் வலிமையும் கொண்டவர்கள். மற்றவர்களுடைய உபத்திரவத்தைப் பொருட்படுத்துவார்கள். சாந்தகுணம் மற்றும் இரக்கமுள்ளவர்கள். தங்களால் நன்மையான காரியம் செய்யவும் மற்றவர்களும் பிறருக்கு நன்மை செய்ய விரும்புகிறவர்கள், துன்பப்பட்டு தோற்றுப்போனவர்களின் மீது இரக்கம் காட்டுவார்கள். இயேசுவை நேசிப்பதையே பிரதானமாய் வைத்து செயல்படுவர். சமாதானமாயிருப்பார்கள், தன் சமாதானத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வர். தனக்கு தீமைசெய்கிறவர்களிடமும் தயவுகாட்டுவார்கள். அவர்கள் “பாக்கியவான்கள்,” அதாவது, மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்று அர்த்தம்.
இந்த வகையான வாழ்க்கைமுறை மற்றவர்களுடைய கவனத்தை ஈர்த்து, அவர்களை இயேசுவை நாடி வரச்செய்கிறது.

வெளிப்பட்ட தேவ வல்லமை
அது ஒரு மின்னல் புயல். எனது ஆறு வயது மகளும் நானும் அமர்ந்துகொண்டு கண்ணாடி கதவின் வழியாக பளிச்சென்று மின்னிய அந்த மின்னல் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். “ஓ!... தேவன் எவ்வளவு பெரியவர்” என்று என்னுடைய மகள் சொல்லிக்கொண்டேயிருந்தாள். நானும் அதையேதான் யோசித்தேன். நாங்கள் எவ்வளவு சிறியவர்கள், தேவன் எவ்வளவு பெரியவர் என்று எங்களுக்கு தெளிவாய் தெரிந்தது. யோபு புத்தகத்தில், “வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?” என்னும் கேள்வி எனக்கு நினைவுக்கு வருகிறது (யோபு 38:24).
தேவனுடைய வல்லமையைக் குறித்து யோபுக்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது (வச. 34-41). அவனுடைய வாழ்க்கை சிதைந்துபோனது. அவனுடைய பிள்ளைகள் மரிந்துபோனார்கள். அவன் உடைக்கப்பட்டான். வியாதிப்பட்டான். அவனுடைய நண்பர்கள் அவனிடத்தில் கரிசணையோடு இல்லை. அவனுடைய மனைவி அவனுடைய விசுவாசத்தை விட்டுவிட ஊக்குவித்தாள் (2:9). கடைசியில் யோபு தேவனைப் பார்த்து “ஏன்” என்று கேள்வியெழுப்புகிறான் (அதி. 24). தேவன் பெருங்காற்றிலிருந்து அவனுக்கு பதில்கொடுக்கிறார் (அதி. 38).
உலகத்தில் காணக்கூடிய அனைத்து காரியங்களிலும் தேவனுடைய ஆளுகையை தேவன் யோபுக்கு நினைவுபடுத்துகிறார் (அதி. 38). யோபு தேற்றப்பட்டு, “என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது” (42:5) என்று பதிலளிக்கிறான். வேறுவிதமாய் சொன்னால், “இப்போது புரிந்துகொண்டேன், தேவனே! நீர் என்னுடைய வட்டத்திற்குள் பொருந்துகிறவரல்ல” என்று ஒத்துக்கொண்டான்.
வாழ்க்கை சிதறடிக்கப்படும்போது, நாம் செய்ய வேண்டிய மிக ஆறுதலான காரியம் என்னவெனில், கீழே அமர்ந்து மின்னல் மின்னுவதைப் பாருங்கள். இந்த உலகத்தை உண்டாக்கிய ஆண்டவர் எவ்வளவு பெரியவர் என்று உங்களை தேற்றிக்கொள்ளுங்கள். தேவனுடைய மகத்துவத்தையும் பராக்கிரமத்தையும் வெளிப்படுத்துகிற பாடல்களை தேர்ந்தெடுத்துப் பாடுவதின் மூலமும் அந்த விசுவாசத்தை நீங்கள் கட்ட முயற்சிக்கலாம்.