வகை  |  odb

பழிவாங்காத பாதை

ஒரு விவசாயி தன்னுடைய வாகனத்தில் ஏறி தன்னுடைய வயல் நிலத்தை பார்வையிட புறப்பட்டார். தன் நிலத்தின் ஓரத்தில் வந்தவுடன் அவருக்கு இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. ஏனென்றால், தன்னுடைய பண்ணையின் ஒதுக்குப்புறத்தில் யாரோ மீண்டும் சட்டவிரோதமாய் குப்பையை கொட்டியிருந்தனர். அந்த குப்பைகளை தன்னுடைய வாகனத்தில் ஏற்றிய அவர், அதில் ஒரு கடித உறையை கண்டுபிடித்தார். அந்த முகவரிக்கு நேராய் சென்று அந்த வீட்டின் தோட்டத்தில், அந்த குப்பைகளையும் அதோடு சேர்த்து தன்னுடைய குப்பைகளையும் அதில் கொட்டிவிட்டு வந்தார். 

பழிவாங்குதல் இனிமையானது என்று யாரோ சொன்னார்கள். ஆனால் அது சரியானதா? 1 சாமுவேல் 24இல் தாவீதும் அவனுடைய மனிதர்களும் தங்களை கொலைசெய்ய தேடும் சவுலிடத்திலிருந்து தப்பிக்க குகைக்குள் ஒளிந்துக்கொண்டனர். அதே குகையில் சவுல் வரும்போது தாவீதின் மனிதர்கள், தாவீது சவுலை பழிவாங்குவதற்கான சரியான வாய்ப்பாய் அதை கருதினர் (வச. 3-4). ஆனால் தாவீது அதை செய்யவில்லை. “என் ஆண்டவன் மேல் என் கையைப்போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக” (வச. 6) என்று அவன் கூறுகிறான். தாவீது தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சவுல் அறிந்ததும், “நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான்” என்று உணர்ச்சிவசப்படுகிறான் (வச. 17-18). 

நாமோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களோ அநீதியை சந்திக்கும்போது, அதற்கு பழிவாங்குவதற்கான சரியான தருணம் நமக்கு வாய்க்கலாம். அந்த விவசாயி அதை தவறாய் பயன்படுத்தியதுபோல நாம் பயன்படுத்தப்போகிறோமா? அல்லது தாவீதைப் போன்று பழிவாங்குவதற்கு பதிலாக நீதியை பிரதிபலிக்கப்போகிறோமா? 

தவறான புரிந்துகொள்ளுதல் இல்லை

நம்முடைய வீடுகளில் உள்ள ஸ்மார்ட் சாதனங்களில் பதிக்கப்பட்டிருக்கும் அலெக்ஸா மற்றும் சிரி போன்ற குரல் உதவி கருவிகள் சில நேரங்களில் நாம் சொல்வதை தவறாக புரிந்துக்கொள்ளுகிறது. ஒரு ஆறு வயதுக் குழந்தை தன் குடும்பத்தில் புதிதாக வாங்கப்பட்ட இந்தக் கருவியிடம் குக்கிஸ்களைப் பற்றியும் பொம்மை வீட்டைப் பற்றியும் பேசினாள். சற்று நேரத்திற்குப் பிறகு, ஏழு பவுண்ட் குக்கிஸ்களும், 170 டாலர் மதிப்புக்கொண்ட பொம்மை வீடும் தங்கள் வீடு நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக அவள் தாய்க்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. லண்டனில் ஒரு பேசும் கிளி, தன்னுடைய உரிமையாளர் ஆன்லைனில் எதுவும் வாங்கவில்லை என்றாலும், அவருக்குத் தெரியாமல், தங்கப்பரிசுகள் உள்ள டப்பாக்களின் ஒரு பொட்டலத்தை ஆர்டர் செய்திருந்தது. ஒரு நபர் இந்தக் கருவியிடம் “வாழும் அரையின் விளக்குகளை இயக்க” சொன்னபோது “புட்டிங் அரை இங்கு இல்லை” என்று பதிலளித்தது.

தேவனிடம் நாம் பேசும்போது அத்தகைய தவறான புரிதல் அவரிடமில்லை. நாம் செய்யும் செயலைவிட நம்முடைய இருதயத்தை அவர் நன்கு அறிந்தபடியால் அவர் ஒருபோதும் குழப்பமடைவதில்லை. ஆவியானவர் நம்முடைய இருதயங்களை ஆராய்ந்துப்பார்த்து, தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளுகிறார். தேவன் நம்மை முதிர்ச்சியுள்ளவர்களாக்குவதற்கும், அவருடைய குமாரனைப் போல நாம் மாறுவதற்கும், தமது நல்ல நோக்கத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கிறார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாவிலுள்ள தேவாலயங்களுக்கு கூறினார் (ரோமர் 8:28). ஆவியானவரும் நம்முடைய பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றப்படி வேண்டிக்கொள்வது இன்னதென்று அறியாதிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் (வச. 26-27).

உங்களை தேவனிடம் வெளிப்படுத்துவதற்கு சங்கடமாக இருக்கிறதா? என்ன, எப்படி ஜெபிக்க வேண்டும் என்று புரியவில்லையா? இருதயத்தில் இருந்து முடிந்ததைச் சொல்லுங்கள். ஆவியானவர் உங்களைப் புரிந்துக்கொண்டு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவார்.

புயலின் மத்தயில் நடத்துதல்

ஸ்காட்லாந்து மிஷ்னரி அலெக்ஸாண்டர் டஃப், 1830ஆம் ஆண்டு இந்தியாவிற்கு முதல் சுற்றுப்பயணம் வந்தபோது, தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட புயலினால் அவர் பயணம்செய்த கப்பல் சேதத்திற்குள்ளாக்கப்பட்டது. அவரும் அவரோடு சேர்ந்து கப்பலில் பயணித்த சகபயணிகளும் அருகில் இருந்த ஒரு சிறிய தீவில் கரையொதுங்கினர். கொஞ்ச நேரத்தில் அலெக்ஸாண்டர் டஃப்க்கு சொந்தமான வேதாகமத்தின் பிரதி ஒன்று கரையொதுங்கியதைக் கண்டெடுத்தனர். அது காய்ந்த பின், டஃப் சங்கீதம் 107ஐ எடுத்து வாசித்து, சகபயணிகளை தைரியப்படுத்தினார். கடைசியாக அவர் மீட்கப்பட்டு, மேலும் ஒரு கப்பற்சேதத்தை சந்தித்த பின்னரே இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்.

கர்த்தர் இஸ்ரவேலர்களை மீட்டுக்கொண்ட வழிகளைக் குறித்து சங்கீதம் 107 வரிசைப்படுத்துகிறது. டஃப்பும் அவருடைய சகபயணிகளும் சந்தேகமேயில்லாமல், “கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள் ; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்” (வச. 29-30) என்ற வார்த்தையில் ஆறுதலடைந்திருக்கவேண்டும். இஸ்ரவேலர்களைப் போல “கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து” (வச. 31) இவர்களும் நன்றி சொல்லியிருப்பர்.  

சங்கீதம் 107க்கு இணையான ஒரு சம்பவத்தை புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கமுடியும் (மத்தேயு 8:23-27;  மாற்கு 4:35-41). பெருங்காற்று அடிக்கும்போது இயேசுவும் அவருடைய சீஷர்களும் படகில் இருக்கின்றனர். சீஷர்கள் பயத்தில் நடுங்கினர். அவர்களோடு மாம்சத்தில் இருந்த ஆண்டவர் காற்றை அமர்த்துகிறார். நம்முடைய இரட்சகரும் வல்லமையுள்ள தேவனும் புயலின் மத்தியிலும் நம்முடைய அழுகையின் கூக்குரலைக் கேட்டு நம்மை தேற்றுவார் என்று நம்மை தைரியப்படுத்திக்கொள்ளலாம்!

குழப்பத்தில் சமாதானம்

ஏதோ பட்டாசு வெடித்ததுபோன்ற ஒரு சத்தம் ஜோஹன்னேயை தூக்கத்திலிருந்து எழுப்பியது. கண்ணாடி உடைந்து சிதறியது. தனிமையில் இருந்த அவள் எழுந்து என்ன நடக்கிறது என்று பார்க்க முயன்றாள். இருள் சூழ்ந்த அந்த தெரு வெறுமையாயிருந்தது. வீட்டிற்கு ஒன்றும் நேரிடவில்லை. அதன்பின் உடைந்து நொறுங்கியிருந்த கண்ணாடியைப் பார்த்தாள். 

எரிவாயு குழாயின் அருகாமையில் விசாரணையாளர்கள் ஒரு துப்பாக்கி குண்டை கண்டெடுத்தனர். அது அந்த குழாயில் பட்டிருந்தால் இந்நேரத்திற்கு அவள் உயிரோடிருந்திருக்கமாட்டாள். பின்பாக, அது பக்கத்து கட்டடத்திலிருந்து விழிவிலகி வந்த குண்டு என்று கண்டறிந்தும், ஜோஹன்னே வீட்டில் தனியாக இருக்க பயந்தாள். அவள் சமாதானத்திற்காய் ஜெபித்தாள். உடைந்த அந்த கண்ணாடி சீரமைக்கப்பட்டபின் அவளுடைய இருதயம் ஆறுதலடைந்தது. 

இக்கட்டான சூழ்நிலைகளில் தேவனை நோக்கும்படிக்கு சங்கீதம் 121 அறிவுறுத்துகிறது. “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து” (வச. 2) நமக்கு ஒத்தாசை வருவதால் நாம் சமாதானமும் ஆறுதலும் அடைகிறோம். உலகத்தை உண்டாக்கிய ஆண்டவர் நமக்கு உதவிசெய்து காக்கிறவராயிருக்கிறார் (வச. 3). நாம் தூங்கினாலும் அவர் தூங்குவதில்லை (வச. 4). அவர் இரவும் பகலும் நம்மை பாதுகாக்கிறார் (வச. 6). அவர் என்றைக்கும் நம்மை காக்கிறவர் (வச. 8). 

நாம் எந்த சூழ்நிலையிலிருந்தும் தேவன் நம்மை பார்க்கிறார். அவரிடமாய் நாம் திரும்புவதற்கு அவர் காத்திருக்கிறார். அப்படி செய்தால், நம்முடைய சூழ்நிலைகள் எல்லாம் ஒரேயடியாய் மாறிவிடாது. ஆனால் அவற்றின் மத்தியில் வாக்குப்பண்ணப்பட்ட சமாதானத்தை நாம் அனுபவிக்கமுடியும். 

நினைவுகூர்ந்து மகிழ்ந்திரு

அமெரிக்காவின் தெற்கு விர்ஜீனியா மாகாணத்தில் டிசம்பர் 6, 1907இல் ஏற்பட்ட வெடி விபத்து, நிலக்கரி சுரங்க வரலாற்றில் மிகவும் மோசமான ஒன்று. இந்த விபத்தில் 360பேர் பலியாயினர். இந்த கோர விபத்து, 250 பெண்களை விதவைகளாகவும் 1000 பிள்ளைகளை தகப்பனில்லாதவர்களாகவும் மாற்றியது. இந்த நினைவுநாளையே அமெரிக்க சரித்திர நிபுணர்கள் தகப்பனார்கள் தினமாய் கொண்டாடத்துவங்கினர். பெரிய இழப்பிலிருந்து நினைவுகூருதல் நிகழ்ந்தது. அது பின் மகிழ்ச்சியான தருணமாய் மாறியது. 

மனிதர்கள் தங்கள் சிருஷ்டிகரை சிலுவையில் அறைந்த அவலம் மனித சரித்திரத்தின் பெரிய சோகம். இந்த இருண்ட நிகழ்வு நினைவுகூருதலையும் மகிழ்ச்சியினையும் தோற்றுவித்தது. சிலுவைக்கு போவதற்கு முன் தினம் இரவில், இஸ்ரவேலின் பஸ்காவை ஆசரித்த இயேசு தன்னுடைய நினைவு நாளையே ஆசரித்தார். லூக்காவின் பதிவு அதை இப்படியாய் விவரிக்கிறது. “பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது;  என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்” (லூக்கா 22:19). 

இன்றுவரை ஒவ்வொருமுறையும் கர்த்தருடைய பந்தியை நாம் ஆசரிக்கும்போதும் நமக்காக அவருடைய விரிசலில்லாத அன்பை நாம் கனப்படுத்துகிறோம். நம்மை மீட்டதற்கான விலைக்கிரயத்தையும் அவருடைய தியாகம் நமக்குக் கொடுத்த வாழ்க்கையையும் நினைவுகூருகிறோம். சார்லஸ் வெஸ்லி தன்னுடைய பாடல் ஒன்றில் “ஆச்சரியமான அன்பு! எனக்காய் என் தேவனே நீர் மரித்தது எப்படி!” என்று பாடியுள்ளார்.