வகை  |  odb

வேற்றுமையைக் கொண்டாடுதல்

பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டின் பட்டமளிப்பு விழாவில், 608 மாணவர்கள் அவர்களின் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள தயாரானார்கள். கல்லூரி முதல்வர், மாணவர்களின் தேசங்களின் பெயர்களை வாசித்து அவர்களை வரிசையில் நிற்கும்படி கூறினார். அப்கானிஸ்தான், பொலிவியா, போஸ்னியா... என்று அறுபது நாடுகளின் பெயர்களை முதல்வர் வாசித்தார். அந்தந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், மகிழ்ச்சியோடு வரிசையில் நின்றனர். அறுபது நாடுகள்; ஒரே பல்கலைக்கழகம். 

வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அழகான உதாரணங்கள், ஒற்றுமையில் வாழும் மக்களை எதிர்பார்க்கும் தேவனுடைய இருதயத்தைப் பிரதிபலிக்கிறது. 

சங்கீதம் 133ல் தேவ ஜனத்தின் ஒற்றுமை முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் எருசலேமுக்கு பண்டிகையை ஆசரிக்கப்போகும் இஸ்ரவேலர்களால் பாடப்பெறுகிற சங்கீதம். மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிற வேற்றுமைகள் இருந்தாலும், ஒருமித்து வாசம்செய்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது (வச. 1). சகோதர சிநேகம், பனிக்கும் (வச. 3), ஆசரிப்புக் கூடாரத்தில் ஆசாரியர்களை அபிஷேகம் செய்யும்போது (யாத்திராகமம் 29:7), அவர்களின் தலையிலிருந்து தாடி வழியாக வஸ்திரத்தின் மீது விழும் அபிஷேக தைலத்துக்கும் ஒப்பிடப்பட்டள்ளது (வச. 2). இந்த உருவகங்கள் இணைந்து, ஒற்றுமை என்பது தேவனுடைய அபரிவிதமான ஆசீர்வாதத்தை வழிந்தோடச்செய்யக் கூடியது என்பதை உணர்த்துகிறது.

இனம், தேசம், வயது என்பதில் கிறிஸ்தவ விசுவாசிகளுக்குள் வேற்றுமைகள் இருந்தாலும் ஆவியில் ஓர் ஆழமான ஒற்றுமை இருக்கிறது (எபேசியர் 4:3). இயேசு நம்மை நடத்துகிற அந்த பொதுவான பிணைப்பை நாம் கொண்டாடும்போது, தேவனால் நமக்கு கொடுக்கப்பட்ட வேற்றுமைகளை தழுவி, மெய்யான ஒற்றுமையின் மேன்மையை நாம் அனுபவிக்கக்கூடும். 

நம்முடைய சபை நமக்கு தேவை

தெற்கு பாப்திஸ்து திருச்சபை பிரசங்கியாரின் முதல் மகனாக நான் வளர்ந்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் நான் திருச்சபையில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டேன். அதிகமான ஜூரம் இருந்தால் மட்டும் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டேன். ஆனால் நான் சபைக்கு செல்வதை விரும்பினேன். சில வேளைகளில் ஜூரத்தோடு கூட நான் சபைக்கு சென்றிருக்கிறேன். ஆனால் தற்போது உலகம் மாறிவிட்டது. சபைக்கு வருவோரின் எண்ணிக்கை முன்புபோல் இருப்பதில்லை. உடனே தோன்றுகிற கேள்வி, “ஏன்?” ஆனால் அதற்கான பதில் வித்தியாசப்படுகிறது. கேத்லீன் நோரீஸ் என்னும் ஆசிரியர் இந்த கேள்விக்கு ஒரு போதகரிடத்திலிருந்து பதிலை பெறுகிறார். “நாம் ஏன் திருச்சபைக்கு செல்லுகிறோம்?” என்று கேட்டதற்கு, “நாம் திருச்சபைக்கு செல்வது மற்றவர்களுக்காக் அங்கே யாருக்காவது உங்களின் தேவை ஏற்படலாம்” என்று பதிலளிக்கிறார். 

நாம் ஆலயத்திற்கு செல்வதற்கு அது காரணமாயில்லாமல் இருக்கலாம், ஆனால் அவருடைய இந்த பதில் எபிரெயர் நிருப ஆசிரியரின் பதிலை ஒத்திருக்கிறது. அவர் விசுவாசிகளை தங்கள் விசுவாசத்தில் உறுதியாயிருக்கும்படிக்கு வலியுறுத்தி, “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்” (எபிரெயர் 10:25) இருக்க உற்சாகப்படுத்துகிறார். ஏன்? நாம் சபைக்கு செல்லவில்லையென்றால் ஒருவருக்கொருவர் புத்திசொல்லும் முக்கியமான ஆசீர்வாதத்தை இழந்துவிடுகிறோம் (வச. 25). “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து” செயல்படவேண்டும் (வச. 24). 

சகோதர சகோதரிகளே, மற்றவர்களுக்கு உங்களின் தேவை இருப்பதால் சபை கூடி வருதலை விட்டுவிடாதிருங்கள். அதேபோன்று, அவர்களின் உதவியும் நமக்கு தேவைப்படுகிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. 

பெரிய ஒளி

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு சிறுவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும், 2018ஆம் ஆண்டு, ஒரு மதிய சாகசத்தை விரும்பி, ஒரு குறுகிய குகைக்குள் இறங்கினர். தீடீரென்று உயர்ந்த நீர்மட்டம் அவர்களை இன்னும் குகைக்குள் ஆழ்த்தியது. மீட்புப்பணியாளர்கள், இரண்டரை வாரங்கள் கழித்தே அவர்களை மீட்டனர். மீட்புப்பணியாளர் குழுவினர் தண்ணீருக்குள் மூழ்கி, அவர்களை தேட முயற்சித்தபோது, அவர்கள் அனைவரும் ஒரு பாறையின் மீது அமர்ந்து, ஆறு ஒளிரும் விளக்குகளை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தனர். அவர்கள் மணிக்கணக்காக இருளில் இருந்துகொண்டு, அந்த இருளைக் கிழித்துக்கொண்டு ஒரு ஒளி வரும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். 

ஏசாயா தீர்க்கதரிசி, இருளும் அந்தகாரமும் சூழ்ந்த உலகத்தை விவரிக்கிறார். அதில் ஒன்று வன்முறையிலும் பேராசையிலும் முறியடிக்கப்பட, மற்றொன்று கிளர்ச்சியினாலும் வேதனையினாலும் சிதைந்தது (ஏசாயா 8:22). அழிவைத் தவிர வேறொன்றுமில்லை. நம்பிக்கையின் விளக்கு முழுவதுமாய் அணைவதற்கு முன் மங்கி ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த மங்கிய மனச்சோர்வு முடிவல்ல என்று ஏசாயா வலியுறுத்துகிறார். தேவனுடைய இரக்கத்தினால், “முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை” (9:1). தேவன் தன்னுடைய ஜனத்தை இருளில் அழிவதற்கு அனுமதிப்பதில்லை. தீர்க்கதரிசி ஜனங்களுக்கு நம்பிக்கையை அறிவிக்கிறார். பின்பு, பாவம் தோற்றுவித்த இருளின் ஆதிக்கத்தை முழுவதுமாய் விரட்டுவதற்கு, இயேசுவின் வருகையை முன்னறிவிக்கிறார். 

இயேசு வந்தார். நாம் இப்போது ஏசாயாவின் வார்த்தைகளை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் வாசிக்கிறோம்: “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (வச. 2) என்று ஏசாயா சொல்லுகிறார். 

இருள் எந்த அளவிற்கு அந்தகாரமாயிருக்கிறது என்பது முக்கியமில்லை; நம்முடைய சூழ்நிலை எவ்வளவு சோர்வை ஏற்படுத்துகிறது என்பதும் முக்கியமில்லை; நாம் இருளில் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை. இங்கு இயேசு இருக்கிறார். ஒரு பெரிய ஒளி நம்மை நோக்கி பிரகாசிக்கிறது.

எதிர்ப்பின் மத்தியில் தேவனை நம்புதல்

பிலிப்பைன்ஸில் கிறிஸ்துவைக் குறித்த நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாத கோத்திரத்தில் பிறந்தவள், எஸ்தர். அவளுடைய வியாதியின் மரண போராட்டத்திலிருந்து அவளின் அத்தையின் ஜெபத்தின் மூலம் விடுதலைப்பெற்றதினால் இரட்சிக்கப்பட்டாள். இன்று எதிர்ப்புகள் மற்றும் மரண பயத்தின் மத்தியிலும் அவளுடைய மக்கள் கூட்டத்திற்கு வேதபாட வகுப்பு எடுக்கிறாள். “நான் என்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய வல்லமை, அன்பு, நன்மை, உண்மைத்துவம் என்று அனுபவித்த இயேசுவை மற்றவர்களுக்கு அறிவிக்காமல் இருக்கமுடியாது” என்று அவரை மகிழ்ச்சியோடு பிரஸ்தாபப்படுத்துகிறாள். 

பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபெத்நேகோ என்னும் வைராக்கியமான இஸ்ரவேலர்களைப்போன்று பாடுகளின் மத்தியில் தேவனை ஆராதிக்கிறவர்கள் அதிகம். தானியேல் புத்தகத்தில், நேபுகாத்நேச்சாரின் பொற்சிலையை வணங்கவில்லையென்றால் மரணம் என்றபோதிலும் இவர்கள் அதை வணங்க மறுத்தனர். தங்களுடைய தேவன் இந்த இக்கட்டிலிருந்து தங்களை காக்க வல்லவர், அவர் அவர்களை “விடுவிக்காமற்போனாலும்” அவரை ஆராதிப்பதையே தெரிந்துகொண்டனர் (தானியேல் 3:18). அவர்கள் அக்கினியில் போடப்பட்டபோது, அவர்களின் உபத்திரவத்தில் தேவன் அவர்களோடு சேர்ந்துகொண்டார் (வச. 25). அவர்களின் தலை மயிர் கூட கருகாமல் அவர்கள் பாதுகாக்கப்பட்டதை எண்ணி அங்கிருந்த அனைவரும் வியந்தனர் (வச. 27).

நம்முடைய விசுவாசத்திற்காக நாம் பாடு அனுபவிக்கும்போது, நாம் நம்பினது நடக்காமற்போனாலும், நம்மை பாதுகாக்கவும் பெலப்படுத்தவும் நம்மோடு இருக்கும் தேவனுடைய ஆவிக்கு கிழ்ப்படியும்படிக்கு, பழைய மற்றும் புதிய உதாரணங்கள் நம்மை ஊக்குவிக்கிறது. 

அவமதிப்பிலிருந்து காயம்

வானொலி அதிகமான பயன்பாட்டிலிருந்த காலகட்டத்தில், ஃப்ரெட் ஆலனின் (1894-1956) எதிர்மறையான நகைச்சுவைகள், பொருளாதார வீழ்ச்சியிலும் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டிருந்த எண்ணற்ற மக்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. அவருடைய நகைச்சுவை உணர்வானது, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் வலியில் தோன்றியது. மூன்று வயதாவதற்கு முன்பே தன் தாயை இழந்த இவர், போதைக்கு அடிமையாயிருந்த தகப்பனிடத்திலிருந்து விலகி வாழ்ந்தார். இவர் ஒருமுறை நியூயார்க் நகரத்தின் சாலைநெருக்கடியில் சிக்கிய இளைஞனை மீட்டு, “என்ன ஆச்சு உனக்கு, சிறுவனே? நீ வளர்ந்து பிரச்சனையை சந்திக்க விரும்பவில்லையா?” என்று கூறியுள்ளார். 

இது யோபுவின் வாழ்க்கைக்குக் கச்சிதமாய் பொருந்தும். அவனுடைய ஆரம்ப கால விசுவாசம் மனச்சோர்வுக்கு ஆளாக்கப்பட்டபோது, அவனுடைய நண்பர்கள் அவனுடைய காயத்தில் அவமானத்தைக் கூட்டினர். உபதேசத்தின் அடிப்படையில் விவாதித்து, அவனுடைய தவறை ஒத்துக்கொள்ளும்படிக்கும் (4:7-8), தேவனுடைய சிட்சையிலிருந்து கற்றுக்கொள்ளும்படிக்கும், பிரச்சனைகளின் மத்தியில் நகைக்கும்படியான பெலத்தை பெற்றுக்கொள்ளவும் வலியுறுத்தினர் (5:22). 

யோபுவின் தேற்றரவாளர்கள் தவறாயிருந்தபோதிலும், அவர்களின் வார்த்தைகள் அர்த்தமுள்ளவைகள் (1:6-12). இதுபோன்ற நண்பர்கள் இருந்தால், யாருக்கு எதிரிகள் தேவைப்படுவர்? என்று அவர்கள் பின்நாட்களில் உதாரணமாக்கப்படுவர் என்பதை அவர்கள் அறியவில்லை. யோபு அவர்களின் மீட்பிற்காய் ஜெபிப்பான் என்றோ அல்லது தங்களுக்கு ஜெபம் தேவைப்படும் என்பதையோ கூட அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் (42:7-9). தவறான புரிதலுக்கு உட்பட்டு துன்பங்களை அனுபவித்து, பெரிய மகிழ்ச்சியின் ஆதாரமாக்கப்படப்போகிறவனை குற்றப்படுத்துகிறோம் என்றும் அவர்கள் கற்பனை செய்திருக்கமாட்டார்கள்.