
இயேசுவுக்காக மற்றவர்களை சந்தித்தல்
பத்தாண்டுகளுக்கு முன்பு அவர்கள் இயேசுவின் நாமத்தை அறியவில்லை. பிலிப்பைன்ஸின் மைண்டானோவ் மலைப்பகுதியில் வசித்த பேண்வோன் என்ற மக்கள் கூட்டம் வெளியுலகத்தோடு அதிக தொடர்பில் இருந்ததில்லை. கரடுமுரடான அந்த மலைப்பாதையின் வழியாய் பயணித்து, அவர்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை கொண்டுசேர்ப்பதற்கே இரண்டு நாட்கள் ஆகும். உலகம் அவர்களை கண்டுகொள்ளவில்லை.
ஆனால் மிஷனரி குழுவினர் அவர்களை கண்டுபிடித்தனர். ஹெலிகாப்டரின் உதவியோடு அந்த இடத்திற்கு போக வர துவங்கினர். இது பேண்வோன் மக்களுக்கு தேவையான வாழ்வாதாரங்களையும், மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ளவும், உலகம் மிகவும் பெரியது என்று பார்க்கவும் அவர்களுக்கு உதவியது. அது அவர்களுக்கு இயேசுவையும் அறிமுகப்படுத்தியது. ஆவி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அந்த மக்கள், இப்போது தங்களுடைய பாடல்களுக்கு புதிய வார்த்தைகளை ஏற்படுத்தி ஒன்றான மெய்தேவனை ஆராதிக்கிறார்கள். மிஷன் ஊழியம் ஒரு அழகான தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
இயேசு பரமேறிச் செல்லும்போது தன்னுடைய சீஷர்களுக்கு இந்த கட்டளையைக் கொடுக்கிறார்: “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து..” (மத்தேயு 28:19). அந்த கட்டளை இன்றும் செயல்பாட்டில் இருக்கிறது.
சந்திக்கப்படாத மக்கள் கூட்டங்கள் எங்கோ மலைப்பகுதிகளில் வாழ்கிறவர்கள் மட்டுமல்ல. அவர்கள் நம் மத்தியிலும் வாழுகிறார்கள். பேண்வோன் மக்கள் கூட்டத்தை சந்திப்பதற்கு அனுகூலமான வழியும், பொருளாதாரமும் தேவைப்பட்டது. அதுபோல நம்முடைய சந்திக்கப்படாத மக்களை சந்திப்பதற்கு சாதகமான வழியை கண்டுபிடிப்போம். அது நீங்கள் கண்டுகொள்ளாத உங்களுடைய அருகாமையில் வசிக்கும் உங்களுக்கு தொடர்பில்லாத நபர்களாகக் கூட இருக்கலாம். மற்றவர்களை இயேசுவுக்காக ஆதாயப்படுத்த தேவன் உங்களை எப்படி பயன்படுத்தலாம்?

மணியை அடி
முப்பது முறை கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பின், ரீமா புற்றுநோயிலிருந்து விடுபட்டார். அந்த மருத்துவமனை வழக்கப்படி, புற்றுநோயிலிருந்து விடுபட்டவர்கள் அங்கிருக்கும் “புற்றுநோயில்லா மணி” என்ற ஒன்றை ஒலிக்கச் செய்து, தன்னுடைய சிகிச்சையின் முடிவையும், தன்னுடை பூரண சுகத்தையும் தெரிவிக்கவேண்டும். சுகம்பெற்ற ரீமா, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்பொருட்டு மிகுந்த ஆர்வத்துடனும் அந்த மணியை தாங்கியிருந்த கயிறு அறுந்துவிழும் வரைக்கும் அந்த மணியை அடித்து தன் மிகுந்த மகிழ்ச்சியைப் பிரதிபலித்தார்.
ரீமாவின் இந்த சம்பவம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், தேவனின் மகத்துவமான கிரியைகளை பார்க்கும்படிக்கு இஸ்ரவேலர்களுக்கு அழைப்பு விடுக்கும் சங்கீதக்காரனின் எண்ணத்தையும் பார்க்க உதவியது. தேவன் அவர்களின் சத்துருக்களை விரட்டியடித்து தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியை தன்னுடைய ஜனமாய் ஏற்றுக்கொண்டதற்காக அவர்களை, “கைகொட்டி,” “கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள்” என்று உற்சாகப்படுத்துகிறார் (சங்கீதம் 47:1,6).
நம்முடைய வாழ்க்கையில் சரீரப்பிரகாரமான, பொருளாதார அல்லது உறவு ரீதியான குழப்பங்களுக்கு தேவன் எல்லா நேரத்திலும் உடனடியாய் தீர்வு கொடுப்பதில்லை. அதுபோன்ற சூழ்நிலைகளிலும், அவர் “தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்” என்பதினால் அவர் துதிகளுக்கு பாத்திரரே (வச. 8). நாம் விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் தேவன் நமக்கு சுகத்தைக் கொடுத்தால், அது அளவில்லாத ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அப்போது நாம் மணியை அடித்து கொண்டாடவேண்டும் என்று அவசியமில்லை; ஆனால் ரீமா கொண்டாடியதுபோல தேவன் செய்த நன்மையைக் குறித்து நம்முடைய அளவில்லாத மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கலாம்.

காலங்களை மீட்டெடுத்தல்
பருவகாலத்தைமீட்பதற்கான வழியை கண்டுபிடிக்க லெய்சா விரும்பினாள். ஆகையினால் அவள் கண்காட்சியில் பார்த்த பெரும்பாலான அலங்காரங்கள் பயங்கரமான மற்றும் கொடூரமான வழிகளில் மரணத்தை கொண்டாடுவதாக காணப்பட்டது.
அந்த மரண இருளை சுலபமான வழியில் எதிர்கொள்ள எண்ணிய லெய்சா, ஒரு பூசணிக்காயை எடுத்து அதில் அழியாத எழுதுகோலினால் எழுத ஆரம்பித்தாள். “சூரியஒளி” என்று முதலில் எழுதினாள். பார்வையாளர்கள் தொடர்ந்து அதில் எழுத ஆரம்பித்தனர். சிலர் விசித்திரமான காரியங்களையும் அதில் எழுதினர்: உதாரணத்திற்கு “கிறுக்குதல்” போன்ற வார்த்தைகள். சிலர் நடைமுறைக் காரியங்களையும் எழுதினர்: “அழகான வீடு,” “ஓடும் கார்.” மரித்த தங்களுடைய நேசத்திற்குரிய நபர்களின் பெயர்களையும் எழுதி சிலர் தங்கள் வருத்தத்தையும் தெரிவித்திருந்தனர். அந்த பூசணிக்காயைச் சுற்றி மக்களின் நன்றியுணர்வு என்னும் சங்கிலி தொடர ஆரம்பித்தது.
நாம் எளிதில் பார்வையிடக்கூடிய வாழ்க்கையின் காரியங்களைக் குறித்து சங்கீதம் 104 தேவனுக்கு நன்றி சொல்லுகிறது. “அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்” என்று சங்கீதக்காரன் பாடுகிறார் (வச. 10). “பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்” (வச. 14). இருளையும் நன்மையாகவும் நோக்கத்தோடும் சிருஷ்டித்ததாக அறிவிக்கிறார். “நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும் ; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்” (வச. 20). அதற்கு பின்பாக, “சூரியன் உதிக்கையில்... அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்” (வச. 22-23). கடைசியாக இவைகள் எல்லாவற்றிற்காகவும், “நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்” (வச. 33) என்று முடிக்கிறார்.
மரணத்தை எவ்வாறு கையாளுவது என்பதை அறியாத இந்த உலகத்தில், சின்ன சின்ன விஷயங்களுக்காக நாம் சிருஷ்டிகருக்கு நன்றி சொல்லி பழகும்போது ஒரு நம்பிக்கையை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

புதிய அழைப்பு
ஒரு அடாவடி இளைஞர் கும்பலின் தலைவன் கேசியும் அவனுடைய கூட்டமும் வீடுகள், கார்கள், கடைகள் என்று கொள்ளையடிப்பதையும் மற்ற அடாவடி கும்பலுடன் சண்டையிடுவதையுமே வாடிக்கையாய் கொண்டிருந்தனர். அதின் விளைவாய் கேசி கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான். அங்கே சிறைக் கலவரத்தின்போது கத்திகளை விநியோகித்த நபராய் மாறினான்.
சில நாட்களுக்கு பின் தனி சிறையில் அடைக்கப்பட்டான். ஓரு நாள் அவனுடைய அறையில் கனவு காணும்போது, அதில் அவனுடைய வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களையும், இயேசு சிலுவையிலறையப்படுதலையும், அத்துடன் இயேசு இவனைப் பார்த்து “இதை உனக்காகவே செய்தேன்” என்று சொல்லுவதாகவும் கண்டான். கண்டமாத்திரத்தில், தரையில் முகங்குப்புற விழுந்து, தன் பாவத்தை அறிக்கையிட்டு அழ ஆரம்பித்தான். பின்பாக ஒருநாள் அதை அங்கிருந்த சிற்றாலய ஊழியரிடம் சொல்ல, அவர் அவனுக்கு இயேசுவைக் குறித்து சொல்லி, வேதாகமத்தை பரிசாகக் கொடுத்தார். “அது தான் என்னுடைய விசுவாச பயணத்தின் துவக்கம்” என்று கேசி சொல்லுகிறான். அவனுடைய தனிமையான சிறையிலிருந்து மீண்டும் பிரதான சிறைக்கு மாற்றப்பட்டான். அங்கே அவனுடைய விசுவாசத்தினிமித்தம் தவறாக நடத்தப்பட்டாலும், அங்குள்ள மற்ற கைதிகளுக்கு இயேசுவைக் குறித்து சொல்லுவதின் மூலம் தான் புதிய அழைப்பைப் பெற்றுக்கொண்டதாக மகிழ்ச்சியடைந்தான்.
தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய நிருபத்தில், வாழ்க்கையை மாற்றும் கிறிஸ்துவின் வல்லமையைக் குறித்து பேசுகிறார்: பாவ வாழ்க்கையிலிருந்த நம்மை தேவன் அழைத்து கிறிஸ்துவை பின்பற்றவும் அவருக்கே ஊழியம் செய்யும்படியாகவும் ஏற்படுத்துகிறார் (2 தீமோத்தேயு 1:9). அவரை நாம் விசுவாசித்து ஏற்றுக்கொண்டால், கிறிஸ்துவின் அன்பின் ஜீவனுள்ள சாட்சிகளாய் நாம் மாறுகிறோம். உபத்திரவத்தின் மத்தியிலும் சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார் (வச.8). கேசியைப் போலவே நம்முடைய புதிய அழைப்பின் ஜீவியத்தை வாழுவோம்.
