பயப்படாதிருங்கள்
மிதுன் தன்னுடைய டெட்டி பொம்மையை எப்போதும் கட்டிப்பிடித்து தூங்கும் ஒரு சிறு பிள்ளை. அவன் போகுமிடமெல்லாம் அதைக் கொண்டு செல்வான். அவனுக்கு அது தேவையான ஆறுதலாயிருந்தது. அவனுடைய சகோதரி மேகாவிற்கு அது பிடிக்கவில்லை. ஆகையால் அவனுடைய அந்த பொம்மையை அவள் அடிக்கடி ஒளித்துவைத்துவிடுவாள். அந்த பொம்மையை சார்ந்து வாழுவது தவறு என்பது மிதுனுக்கு தெரிந்தாலும், அவன் அதை எப்போதும் தன்னோடே வைத்து பழகிவிட்டான்.
“கிறிஸ்மஸ் என்றால் என்ன?” என்ற தலைப்பில் திருச்சபையில் சிறுவர்களுக்கான கிறிஸ்மஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் மிதுன் ஒரு காட்சியில் முன்வந்து, லூக்கா 2:8-14ஐ மனப்பாடமாய் சொல்லவேண்டும். அதிலும் “பயப்படாதிருங்கள்” என்ற வார்த்தையை சொல்லும்போது, அவன் பயப்படும்போதெல்லாம் தன்னோடு வைத்திருந்த அந்த டெட்டி பொம்மையை கீழே வைத்துவிட்டு வந்து சொன்னான்.
நாம் பயப்படத்தேவையில்லை என்பதை கிறிஸ்மஸின் எந்த நிகழ்வு நமக்கு நினைவுபடுத்துகிறது? மேய்ப்பர்களுக்கு தரிசனமான தூதன், “பயப்படாதிருங்கள்... இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக்கா 2:10-11) என்று கூறுகிறார்.
இயேசுவே நம்மோடிருக்கும் தேவன் (மத்தேயு 1:23). மெய்யான தேற்றரவாளனாகிய ஆவியானவர் மூலமாய் அவர் நமக்கு பிரசன்னமாகியிருக்கிறார் (யோவான் 14:16). ஆகையால் நாம் பயப்படத் தேவையில்லை. நம்முடைய பாதுகாப்பு கம்பளங்களை உதறிவிட்டு, அவர் மீது நம்பிக்கையாயிருப்போம்.

ஜெபத்தில் நினைவுகூரப்பட்டது
ஆப்பிரிக்காவின் அந்த பெரிய திருச்சபையின் போதகர் முழங்கால் படியிட்டு தேவனிடத்தில் ஜெபித்தார். “எங்களை நினைத்தருளும்” என்று அவர் கதற, “கர்த்தாவே எங்களை நினைத்தருளும்” என்று கூடியிருந்த அனைவரும் கதறினார்கள். அந்த காட்சியை யூடியூபில் பார்த்த நான் ஆச்சரியப்பட்டு கண்ணீர் சிந்தினேன். அந்த ஜெபம் சில மாதங்களுக்கு முன்பாக பதிவுசெய்யப்பட்ட ஒன்று. ஆனாலும் என்னுடைய சிறுவயதில் என்னுடைய போதகர் “கர்த்தாவே எங்களை நினைத்தருளும்” என்று அதே ஜெபத்தை ஏறெடுத்ததை அது எனக்கு நினைவுபடுத்தியது.
ஒரு சிறுபிள்ளையாய் அந்த ஜெபத்தைக் கேட்ட நான், தேவன் சிலவேளைகளில் நம்மை மறந்துவிடுவார் என்று தவறாய் எண்ணிக்கொண்டேன். ஆனால் தேவன் எல்லாம் அறிந்தவர் (சங்கீதம் 147:5; 1 யோவான் 3:20), அவர் எப்போதும் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார் (சங்கீதம் 33:13-15), எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மை நேசிக்கிறார் (எபேசியர் 3:17-19).
நினைவுகூருதல் என்பதற்கு பயன்படுத்தப்படும் எபிரெய வார்த்தையான “ஸாகர்” என்ற வார்த்தையானது, தேவன் நம்மை நினைவுகூரும்போது அவர் நமக்காக செயல்படுகிறார் என்று பொருள்படுகிறது. ஒருவரின் சார்பில் நின்று செயல்படுதல் என்றும் அர்த்தம் கொடுக்கிறது. “தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது” (ஆதியாகமம் 8:1). மலடியாயிருந்த ராகேலை தேவன் நினைத்தருளியபோது, “அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனை” பெற்றாள் (30:22-23).
நம்மை நினைத்தருளும்படிக்கு தேவனிடத்தில் கேட்பது மேன்மையான ஒரு விண்ணப்பம். அவர் எப்படி பதிலளிக்கவேண்டும் என்று அவரே தீர்மானிப்பார். நம்முடைய தாழ்மையான விண்ணப்பம் நிச்சயமாய் தேவனை அசைக்கும் என்று அறிந்து நாம் ஜெபிக்கலாம்.


சிறப்பாய் செய்தாய்!
என்னுடைய நண்பர் விஜயனின் கால்பந்து பயிற்றுவிக்கிற பள்ளி, மாநில போட்டியில் கடும் போராட்டத்திற்கு பின் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. அவர்களின் போட்டி அணியினை கடந்த இரண்டு ஆண்டுகளாய் யாராலும் வெற்றிகொள்ள முடியவில்லை. நான் விஜயனை ஆறுதல்படுத்த ஒரு செய்தியை அனுப்பினேன். பதிலுக்கு அவர் “குழந்தைகள் மிகவும் போராடினார்கள்” என்று அனுப்பினார்.
எந்த பயிற்சியாளரும் போட்டிக்கு பின்பு விளையாட்டு வீரர்களை அவமானப்படுத்துவதில்லை. அவர்களுடைய தவறான தீர்மானத்திற்காகவும், அவர்கள் நழுவவிட்ட வாய்ப்பையும் சொல்லி அவர்களைத் திட்டுவதில்லை. அவர்களின் பலமான செய்கைகளைக் குறித்து அவர்களை பாராட்டவே செய்கின்றனர்.
அதேபோன்று கிறிஸ்துவின் விசுவாசிகள் யாவரும் அவரிடத்திலிருந்து கடினமான வார்த்தைகளை கேட்க விரும்புவதில்லை. கிறிஸ்து வரும் நாளில் நாம் அவருக்கு முன்பாக நிற்போம். அவர் நம்மை கனவீனப்படுத்துவதில்லை. அவரைப் பின்பற்றும்போது நாம் என்ன செய்தோம் என்பதையே அவர் பார்க்கிறார் (2 கொரி. 5:10; எபேசியர் 6:8). “நீ போராடினாய்! சிறப்பாய் செய்தாய்” என்று அவர் நம்மை பாராட்டுவார் என்று நம்புகிறேன். பவுல் அப்போஸ்தலர், “நல்ல போராட்டத்தைப் போராடினேன்” என்று கிறிஸ்துவினால் வரவேற்கப்படுவதற்கு காத்திருந்தார் (2 தீமோ. 4:7-8).
வாழ்க்கை என்பது நம்முடைய அழிவை எதிர்நோக்கும் கடுமையான எதிரியுடனான இடைவிடாத போராட்டம். இயேசுவைப்போல மாறுவதற்கும் மற்றவர்களை நேசிப்பதற்கும் நாம் ஏறெடுக்கும் எல்லா முயற்சியையும் அடைவதற்கு அவன் தடைசெய்வான். சில நல்ல வெற்றிகளையும், பல மனமுறியும் தோல்விகளையும் நாம் சந்திக்க நேரிடலாம். ஆனால் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு நித்திய ஆக்கினைத் தீர்ப்பில்லை (ரோமர் 8:1). தேவனுடைய குமாரனுடைய சார்பில் நாம் நிற்கும்போது, நாம் ஒவ்வொருவரும் தேவனால் புகழப்படுதலை அனுபவிக்கக்கூடும் (1 கொரி. 4:5).
அழகாய் உடைக்கப்பட்டது
நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த, இஸ்ரவேல் தேசத்தில் எங்களின் அகழ்வாராய்ச்சி பணி நடந்துகொண்டிருந்த அந்த குறிப்பிட்ட இடத்திற்கு கடைசியாய் எங்கள் பஸ் வந்து சேர்ந்தது. அந்த இடத்தின் மேற்பார்வையாளர், அந்த ஸ்தலத்தில் நாம் எதைக் கண்டறிந்தாலும் அவைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு யார் கையும் படாமல் இருந்தவைகள் என்று எங்களுக்குச் சொன்னார். அங்கு கண்டெடுக்கப்பட்ட உடைந்த மண்பாண்டங்களைப் பார்க்கும்போது நாங்கள் சரித்திரத்தை கையில் தொடுவதுபோல் உணர்ந்தோம். அதன் பின்பு அந்த உடைந்த மண்பாண்டங்களை, பணி செய்யும் இடத்திற்கு கொண்டுபோய் அவைகளை ஒன்றிணைக்க முயற்சித்தோம்.
அவர்களின் பணி மிகத் தெளிவான ஒன்று. அந்த பணியாளர்கள் ஒருங்கமைத்த அந்த உடைந்த மண்பாண்டங்கள், உடைந்துபோனதை நேர்த்தியாய் ஒன்றுசேர்க்க விரும்பும் தேவனுடைய சிந்தையை அழகாய் பிரதிபலித்தது. சங்கீதம் 31:12ல் தாவீது, “செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்” என்கிறார். இந்த சங்கீதத்தை அவர் எந்த சூழ்நிலையில் எழுதினார் என்னும் தகவல் இல்லையென்றாலும், அவர் புலம்புவதை வைத்து அவருடைய வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலையை அறியமுடிகிறது. இந்த சங்கீதம், தாவீது மேற்கொண்ட அபாயம், சத்துருக்கள் மற்றும் விரக்தியினால் முற்றிலும் உடைக்கப்பட்டதை விவரிக்கிறது.
அவர் எங்கு உதவிக்காக நாடினார்? 16ஆம் வசனத்தில் தாவீது தேவனிடத்தில், “செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்” என்று கதறுகிறார்.
அந்த சூழ்நிலையில் தாவீதின் நம்பிக்கையாய் நின்ற தேவன், இன்றும் உடைந்துபோனவைகளை ஒன்றிணைக்க போதுமானவராயிருக்கிறார். நாம் அவரை நோக்கிக் கூப்பிடவும், அவரை முழுமையாய் நம்பவும் வேண்டும் என்பதையே அவர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.

தேவ பிள்ளைகள்
எஸ்தர் தன்னுடைய ஊனமுற்ற மகளுடன் துணிக்கடைக்கு சென்றாள். பில் கவுண்டரின் வரிசையில் நிற்கும்போது, அவர்களுக்கு பின்னால் நின்றிருந்த ஒரு நபர், அந்த பிள்ளை ஊனமாயிருப்பதைக் கண்டு மௌனமாய் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
இதுபோன்ற நபர்களின் இந்த காயப்படுத்தும் செய்கைகள் எஸ்தருக்கு புதியதல்ல. அவளுடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களாலேயே பலவேளைகளில் மனம் உடைந்து போயிருக்கிறாள். இவைகள் அனைத்தும் அவளை ஒரு தாய்மைக்கு சற்று குறைவாய் எண்ணத் தூண்டியது. தன் மகளை தன்னிடமாய் அணைத்து, அக்கடையில் பணத்தைக் கட்டிவிட்டு, தன்னுடைய காருக்குச் சென்றாள்.
காரில் அமர்ந்துகொண்டு, தன்னுடைய மகளின் நிமித்தம் நிந்திக்கிறவர்களை மன்னிக்கக்கூடிய இருதயத்தைத் தரும்படிக்கு தேவனிடம் கேட்டாள். அவள் ஒரு தாயாய் தன்னை தகுதியற்றவளாய் எண்ணும் அந்த எண்ணத்தை மேற்கொள்ளும்படி தேவனிடம் விண்ணப்பித்தாள். மேலும் தேவனுக்கு பிரியமான பிள்ளை என்றும் அவளுடைய மெய்யான அங்கீகாரத்தை சார்ந்துகொள்வதற்கும் உதவும்படிக்கு கேட்டாள்.
இயேசுவின் விசுவாசிகள் அனைவரும் “விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே” என்னும் அவர்களின் அழகான வேற்றுமைகளோடு சம மதிப்புமிக்கவர்கள் என்று பவுல் கூறுகிறார். நாம் அனைவரும் இணைந்து செயலாற்றுவதற்கு உள்ளாக இணைக்கப்பட்டிருக்கிறோம் (கலாத்தியர் 3:26-29). தேவன் நம்மை விடுவிக்கும்பொருட்டு தன்னுடைய குமாரனை அனுப்பியபோது, அவர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் சிந்தின இரத்தத்தினால் நாம் ஒரே குடும்பமாக்கப்பட்டுள்ளோம் (4:4-7). நாம் தேவனுடைய சாயலைத் தரித்தவர்கள். மற்றவர்களுடைய கருத்துக்கள், எதிர்பார்ப்புகள், பாரபட்சங்கள் ஆகியவைகள் நம்முடைய தரத்தைத் தீர்மானிப்பதில்லை.
நாம் யார்? நாம் தேவனுடைய பிள்ளைகள்.