உறுதியான விசுவாசம்
ஏரிக்கரையின் வடக்கே உள்ள மணற்குன்றால் வீடுகள் புதை மணலால் புதைந்து விடும் அபாயம் இருக்கிறது. குடியிருப்பவர்கள் வீடுகளைப் பாதுகாக்க மண் மேடுகளை அகற்ற முயற்சி செய்தும் பலன் இல்லை. அவர்கள் வீடுகள் மணலில் புதைந்து போவதைக் கண்ணெதிரே காண நேர்ந்தது. சமீபத்தில் துப்புரவு பணியை மேற்பார்வையிட்ட உள்ளூர் ஷெரிப், இதைத் தடுக்கமுடியாது என்று கூறிவிட்டார். மணற்குன்றுகள் உறுதியான அடித்தளத்திற்கு ஏற்புடைதல்ல என்பதினால், வீட்டின் சொந்தக்காரர்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் பலனில்லை.
இயேசு, மணல் மீது கட்டும் வீடு வீணான முயற்சி என்றார். இயேசு சீஷர்களிடம் கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரித்து, அன்பின் கீழ்ப்படிதல் ஞானத்தை வெளிப்படுத்தும் என்று உறுதியாய் கூறினார் (மத்தேயு 7:15-23). “இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்" (வச. 24). தேவனின் வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, “அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்” (வச. 26).
நம் சூழ்நிலைகள் புதைமணல் போல வேதனைக்குள்ளும் கவலைக்குள்ளும் நம்மை அழுத்தும்போது, நம் நம்பிக்கையை கிறிஸ்து என்னும் கன்மலையின் மீது நாம் வைக்க முற்படலாம். அவர் தமது மாறாத சுபாவங்களால், அசைக்கமுடியாத அஸ்திபாரத்தை நமக்கு தந்து, நம் உறுதியான விசுவாசம் வளர உதவு செய்கிறார்.

முடிவில்லா அன்பு
எப்போதெல்லாம் தாத்தா என்னை கடற்கரைக்கு அழைத்துச் செல்லுகிறாரோ, அப்போதெல்லாம் தன்னுடைய கைக்கடிகாரத்தை கழற்றி வைத்து விடுவார்” என்று பிரியங்கா நினைவுகூர்ந்தாள். “ஏன்? என்று ஒரு நாள் அவரைக் கேட்டேன்.”
“அதற்கு அவர் புன்னகையுடன், ஏனென்றால் உன்னோடு நான் செலவு செய்யும் தருணங்கள் எவ்வளவு முக்கியம் என்று நீ அறிய வேண்டும்; காலம் செல்வது தெரியாமல் நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன்" என்று அவர் பதிலளித்தார்.
இந்த ஞாபகங்களை, பிரியங்கா அவளுடைய தாத்தாவின் இறுதிச் சடங்கின்போது பகிர்ந்தார். இது அவளுடைய மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று. மற்றவர்கள் நமக்காக நேரம் செலவிடும்போது, அதை நாம் எவ்வளவு மதிப்பாய் உணர்கிறோம் என்பதை நான் பிரதிபலித்தபோது, அது தேவனின் அன்பின் அக்கறையை வெளிப்படுத்தும் வேத வசனங்களை நினைவுபடுத்துகிறது.
தேவன் எப்போதும் நம்மோடு நேரம் செலவிடுகிறார். “நீர் உமது கையை திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தி ஆக்குகிறீர். கர்த்தர் தம் வழிகளில் எல்லாம் நீதி உள்ளவரும், தமது கிரியைகளில் எல்லாம் கிருபை உள்ளவருமாய் இருக்கிறார். கர்த்தர் சமீபமாய் இருக்கிறார்” (வச. 16-18) என்று சங்கீதம் 145ல் தாவீது வேண்டுதல் செய்கிறார்.
நம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியும், தேவனுடைய நன்மையும் அக்கறையும் நம்மைத் தாங்கி, நமக்கு சுவாசிக்க காற்றும் உண்ண உணவும் அளிக்கிறது. அவர் அன்பில் நிறைந்தவராய், நுட்பமான விஷயங்களையும் தன்னுடைய கிருபையினால் படைத்தார்.
தேவனுடைய அன்பு ஆழமானது; அவர் அளிக்கும் நன்மையும் கிருபையும் முடிவில்லாதது. அவர் நித்திய வாழ்விற்கு போகும் வாசலைக் காட்டுகிறார். அவருடைய பிரசன்னத்தில் நாம் களிகூருவோம். “நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்; நேரம் போவதே தெரியாமல், நித்திய காலமாய் நான் உன்னோடு இருக்க விரும்புகிறேன்.”

புதிய ஆரம்பத்தின் விளைவு
ஆயுஷ், தன்னுடைய முப்பது வயதில் தனக்கு பிடிக்காத விற்பனைத்துறையில் வேலை செய்யாமல் புதிய துறையில் வேலையைத் தேட முடிவு செய்தார். ரேணு, புத்தாண்டில் தன் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அசோக், தன் கோபத்தை அடுத்த மாதமாவது குறைக்க வேண்டும் என உறுதியாய் தீர்மானித்திருந்தார்.
புதிய மாதத்திலோ, ஆண்டிலோ அல்லது பிறந்த நாளிலோ தாங்கள் மாற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ளும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆராய்ச்சியாளர்கள் இதற்கு புதிய தீர்மான விளைவு என்று அழைக்கின்றனர். காலண்டரில் குறிப்பிட்ட இதுபோன்ற சில விசேஷ நாட்களிலே, மக்கள் பழமையை பின்னுக்குத் தள்ளி பல புதிய தீர்மானங்களை எடுக்க முயற்சிக்கின்றனர் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். நாம் சிறந்த மனிதர்களாய் இருக்க விரும்பி, புதிய துவக்கத்தை விரும்புகிறோம்.
இயேசுவின் மீதுள்ள விசுவாசம் நாம் முன்பைவிட சிறந்தவராய் வாழ நம்மை தூண்டுகிறது (கொலோசெயர் 3:12-14). நம்முடைய பழையவைகளை களைந்து போட்டு (வச. 5-9), நாம் சிறந்த மனிதர்களாக வாழ ஒரு தரிசனத்தைத் தருகிறது. இந்த மாற்றம் தீர்மானங்களாலோ அல்லது பொருத்தனையினாலோ அல்ல; தெய்வீக வல்லமையால் ஏற்படுகிறது. நாம் இயேசுவை விசுவாசிக்கும்போது புதிய மனிதர்களாய் மாறுகிறோம். தேவனுடைய ஆவியானவரின் கிரியை நம்மை முழுமையாக்குகிறது (வச.10; தீத்து 3:5).
இயேசுவின் இரட்சிப்பை பெறுவதே மேன்மையான புதிய துவக்கம். நாட்காட்டியில் விசேஷ பண்டிகை நாட்களை எதிர்நோக்கிக் காத்திருக்கத் தேவையில்லை. உங்கள் புதிய வாழ்க்கையை இப்பொழுதே ஆரம்பிக்கலாம்.

வார்த்தையும் புத்தாண்டும்
மிச்செல்லன் பிலிப்பைன்ஸில் வளர்ந்தபோது பல சவால்களைச் அவள் சந்திக்க நேர்ந்தது. அவர் எப்போதும் வேத வார்த்தைகளை நேசித்து ஆறுதல் அடைந்துகொள்வது வழக்கம். அவர் பல்கலைக்கழகத்தில் பயிலும் போது ஒரு நாள் யோவான் சுவிசேஷத்தின் முதலாம் அதிகாரத்தைப் படிக்கையில் அவளுடைய “கடின இருதயம் கலங்கியது.” அவருடைய உள்ளுணர்வு, “ஆம்! நீ வார்த்தைகளை நேசிக்கிறாய், அதை அறிவாயா? நித்திய வார்த்தை என்று ஒன்று உண்டு. அவர் ஒருவரால் மட்டுமே எப்பொழுதும் இருளை அழிக்க முடியும். அந்த வார்த்தை மாம்சமாகியது. அந்த வார்த்தையினால் உன்னை நேசிக்க முடியும்” என்று அவளிடம் கூறியது.
அவள் வாசித்த யோவான் சுவிசேஷத்தின் துவக்க வரிகளை வாசிப்பவர்களுக்கு, ஆதியாகமத்தின் துவக்க வார்த்தைகள் நினைவுக்கு வரும்: “ஆதியிலே…” (ஆதியாகமம் 1:1). யோவான் தன் சுவிசேஷத்தில், இயேசு தேவனோடு ஆதியிலே இருந்தார் என்பதை மட்டுமல்ல; இயேசுவே தேவன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் (யோவான் 1:1). அந்த ஜீவனுள்ள வார்த்தை மாம்சமாகி, “நமக்குள்ளே வாசம்பண்ணினார்” (வச. 14). மேலும், அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்று கொண்டவர்கள் அவரின் பிள்ளைகளானார்கள் (வச. 12).
மிச்செல்லன் அன்றே தேவனுடைய அன்பைத் தழுவி “தேவனாலே மறுபடியும் பிறந்தார்” (வச. 13). அவளுடைய குடும்பத்தின் தொடர் போதைப் பழக்கத்திலிருந்து தேவனே அவளை மீட்டெடுத்தார். தற்போது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையை பகிர்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவளாய் கிறிஸ்துவின் சுவிசேஷ வார்த்தைகளை அதிகமாய் எழுதுகிறார்.
நாம் கிறிஸ்துவின் விசுவாசிகளாயிருந்தால் நாமும் தேவனுடைய நற்செய்தியையும் அவருடைய அன்பையும் பகிரலாமே. இந்த 2022 ஆம் ஆண்டு துவக்கத்தில், எப்படிப்பட்ட கிருபை நிறைந்த வார்த்தைகளை நாம் பேசப்போகிறோம்?

கிறிஸ்மஸ்க்கு ஒருநாள் நெருக்கத்தில்
“கிறிஸ்மஸ் முடிந்து விட்டது என்பதை என்னால் நம்பமுடியவில்லை” என்று என்னுடைய மகள் மனமுடைந்து கூறினாள்.
அவள் எப்படி உணருகிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது: கிறிஸ்மஸ்க்கு பின்பு மந்தமான ஒரு உணர்வு ஏற்படுகிறது. பரிசுகள் எல்லாம் பிரித்துப் பார்க்கப்படும். வண்ண விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படும். விடுமுறையற்ற ஜனவரி மாதம் வந்துவிடும். பல எதிர்பார்ப்புகளுடன் வரும் அடுத்த கிறிஸ்மஸ் வெகு தூரத்தில் இருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு, கிறிஸ்மஸ் ஏற்பாடுகளை நாங்கள் செய்துகொண்டிருந்தபோது, “காலண்டர் என்ன தேதி வேண்டுமானாலும் காட்டட்டும். ஆனால் நாங்கள் எப்போதுமே கிறிஸ்மஸ்க்கு ஒரு நாள் நெருக்கத்தில் இருக்கிறோம்” என்பதை உணர்ந்தேன். அதை நான் அடிக்கடி சொல்ல பழகிக்கொண்டேன்.
காலத்திற்கு உட்பட்ட நம்முடைய சரீரப் பிரகாரமான கொண்டாட்டத்திற்கு பின் இருக்கும் ஆவிக்குரிய யதார்த்தம் மிகவும் முக்கியமானது: இயேசு இந்த உலகத்திற்கு கொண்டு வந்த இரட்சிப்பு மற்றும் அவர் மீண்டும் வருவார் என்னும் நம்பிக்கை. இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்து காத்திருங்கள் என்று வேதம் அடிக்கடி உற்சாகப்படுத்துகிறது. பிலிப்பியர் 3:15-21ல் சொல்லுவது எனக்கு பிடித்தமானது. பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிற (வச. 19) உலகத்தின் வாழ்க்கைமுறையும் இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் நம்பிக்கையில் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைமுறையும் முரண்படுத்தப்படுகிறது: “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” (வச. 20).
பரலோகத்திலிருக்கிற நம்முடைய குடியிருப்பானது நாம் என்ன நம்புகிறோம் என்பதையும், எப்படி வாழுகிறோம் என்று எல்லாவற்றையும் மாற்றுகிறது. இயேசுவின் வருகைக்கு ஒரு நாள் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்கிற உணர்வு, நம்முடைய நம்பிக்கையை உறுதியாக்குகிறது.