ஜெயமும் தியாகமும்
ஒரு கோடை விடுமுறை வகுப்பில், என் மகன் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மலையில் ஏற விரும்பிய ஒரு சிறுவனை குறித்து புத்தகம் ஒன்றில் படித்தான். அச்சிறுவனுடைய பெரும்பாலான நேரம் இந்த இலட்சியத்திற்கு பயிற்சியெடுக்கவே செலவானது. இறுதியில் அவனுக்கான நேரம் கைகூடிவரும்போது, காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை. மலையேற்றத்தில் ஒரு இடத்தில அவனுடைய குழுவிலிருந்த ஒருவன் நோய்வாய்ப்பட, தன் இலக்கை அடைவதற்கு பதிலாக அவனோடு தங்கியிருக்க தீர்மானிக்கிறான்.
வகுப்பறையில், என் மகனின் ஆசிரியர், "இக்கதையின் முக்கிய கதாபாத்திரம் அந்த மலையை ஏறாததால் அச்சிறுவன் தோற்றுவிட்டானா?" என கேட்டார். ஒரு மாணவன் "ஆம் ஏனெனில் தோல்வி என்பது அவனுடைய இரத்தத்திலேயே ஊறியுள்ளது" என்றான். ஆனால் இன்னொரு பிள்ளை இதை மறுத்தது. அச்சிறுவன் தோற்கவில்லை ஏனெனில் அவன் முக்கியமான ஒன்றை மற்றவருக்கு உதவுவதற்காக விட்டுக்கொடுத்தான் என்று காரணம் சொன்னான்.
நாம் நம்முடைய திட்டங்களை ஒதுக்கிவிட்டு மற்றவர்களுக்காக அக்கறை கொள்ளும்போது, நாம் இயேசுவை போல நடக்கிறோம். எங்கும் பயணித்து தேவனுடைய சத்தியத்தை பகிர்ந்துகொள்ள இயேசு சொந்த வீடு, நிரந்தர வருமானம் மற்றும் சமுதாய அங்கீகாரம் ஆகியவற்றை தியாகம் செய்தார். இறுதியாக, நம்மை பாவத்திலிருந்து விடுவித்து தேவனுடைய அன்பை காண்பிக்க தன் ஜீவனையே விட்டுக்கொடுத்தார் (1 யோவான் 3:16)
உலக பிரகாரமான ஜெயமும், தேவனுடைய பார்வையில் உள்ள ஜெயமும் அதிக வித்தியாசம் கொண்டவைகள். பிற்படுத்தப்பட்டோரையும், காயப்பட்டோரையும் மீட்க நம்மை உந்தித்தள்ளும் மனஉருக்கத்தை அவர் அதிகமாக மதிப்பீடுகிறார் (வ.17). ஜனங்களை காப்பாற்றும் தீர்மானங்களை அவர் அங்கீகரிக்கிறார். தேவனுடைய உதவியோடு, நாம் நமது மதிப்பீடுகளை அவருடைய மதிப்பீடுகளோடு இசையும்படிச் செய்து அவரையும், மற்றவர்களையும் நேசிக்க நம்மையே ஒப்புக்கொடுப்பதே எல்லாவற்றையும் பார்க்கிலும் மிக குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

நமக்கு தேவையானதை பெறுதல்
ஆரோன் பர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமநிலை உடைக்கும் வாக்கெடுப்பின் முடிவிற்காக கவலையோடு காத்திருந்தார். 1800ல் தாமஸ் ஜெபர்ஸனுடனான அதிபருக்கான தேர்தல் போட்டியில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில், தன்னையே அதிபராக தேர்வுக்குழு அறிவிக்கும் என்று ஆரோன் பர் நம்ப காரணமிருந்தது. எனினும் அவர் தோற்றார், கசப்பு அவரை ஆழமாய் ஊடுருவியது. அலெக்சாண்டர் ஹாமில்டன் தன்னை அதிபர் வேட்பாளராக ஆதரிக்காத காரணத்தால் அவருக்கு எதிராக மனக்கசப்பை வளர்த்துக்கொண்ட பர், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள்ளாகவே ஹாமில்டனை துப்பாக்கிச்சண்டையில் சுட்டுக்கொன்றார். இந்த கொலையால் வென்குண்டெழுந்த முழு தேசமும் அவருக்கு விரோதமாக திரும்ப, பர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட முதியவராக மரித்தார்.
அரசியல் விளையாட்டுக்கள் சரித்திரத்தில் கொடுமையான பங்காற்றியுள்ளன. தாவீது ராஜா மரிக்கும் தருவாயில் இருக்கையில், அவருடைய குமாரன் அதோனியா என்பவன் தாவீதின் தளபதியையும், மிக முக்கியமான ஆசாரியனையும் தன்னை ராஜாவாக்கும்படி தனக்கென்று பணியமர்த்திக்கொண்டான் (1 இராஜாக்கள் 1:5-8). ஆனால் தாவீது சாலொமோனையே ராஜாவாக தெரிந்து கொண்டார் (வ.17). தீர்க்கதரிசியான நாத்தானின் உதவியோடு இந்த கிளர்ச்சி முறியடிக்கப்படுகிறது (வ.11-53). அதோனியா சற்று ஓய்ந்தாலும், மீண்டும் இரண்டாம் முறை அரியணை ஏற திட்டம் தீட்டினான், எனவே சாலொமோன் அவனை கொல்ல வேண்டியிருந்தது (1 இராஜாக்கள் 2:13-25).
நம் மனுஷீக சுபாவமே நமக்கு உரிமை இல்லாதவைகளை சொந்தமாக்கிக்கொள்ள தூண்டுகிறது! நம் எவ்வளவுதான் கடினமாய் அதிகாரம், கவுரவம் அல்லது சொத்துக்களை அடைய முயன்றாலும் அது ஒரு போதும் நமக்கு நிறைவை தராது. அது எப்போதுமே நமக்கு பற்றாக்குறையாய் தான் இருக்கும். ஆனால் இயேசுவோ நம்மை போலல்லாமல் "மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." (பிலிப்பியர் 2:8)
இதற்கு முரணாக, சுயநலமாக நம்முடைய சொந்த விருப்பங்களையே நாம் தொடர்ந்தால் நம்முடைய ஆழமான, உண்மையான ஏக்கங்கள் தீராது. முடிவுகள் அனைத்தையும் தேவனுடைய கரங்களில் விட்டுவிடுவதே சமாதானதிற்கும், சந்தோஷத்திற்குமான ஒரே வழி.

இனிமையான நித்திரை
என் தோழி இரவில் விழித்துக்கொள்ளும் போது, அவள் "என் இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன்" என்ற பாடலின் வரிகளை நினைத்துக்கொள்வாள். அதை அவள் "நடு இரவின் பாடல்" என்றழைப்பாள் ஏனெனில் அவள் தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், அவரை நேசிக்க அவள் கொண்டிருந்த அநேக காரணங்களையும் அவளுக்கு அந்த பாடல் நினைவூட்டியது.
வாழ்க்கையில் தூக்கம் என்பது ஒரு அவசியமான, ஆனால் சிலசமயங்களில் மழுப்பலான பகுதியாகவும் உள்ளது. சிலநேரம் நம் வாழ்வில் அறிக்கையிடாத பாவங்களை நம் சிந்தைக்கு கொண்டுவரும் பரிசுத்த ஆவியானவரின் சத்தத்தை உணர்வோம், அல்லது நம் வேலை, நம் உறவுகள், நம் பொருளாதாரம், நம் ஆரோக்கியம், அல்லது நம் பிள்ளைகள் போன்றவற்றை நினைத்து கவலைப்பட ஆரம்பிப்போம். உடனே நிச்சயமற்ற, கவலை நிறைந்த ஒரு எதிர்காலம் நம் எண்ணங்களில் வட்டமிட துவங்கும். நாம் சுதாகரித்து நேரம் கடந்திருக்கும் என்றெண்ணி கடிகாரத்தை பார்ப்போம் ஆனால் படுத்து சில நிமிடங்களே ஆகியிருக்கும்.
நீதிமொழிகள் 3:19-24 ல், நாம் தேவனுடைய ஞானம், புத்தி மற்றும் நல் ஆலோசனை ஆகியவற்றை காத்துக்கொள்ளும்போது நித்திரையின் நற்பலன்களையும் நாம் பெறுவோமென்று சாலொமோன் ராஜா நம்மை அறிவுறுத்துகிறார். உண்மையில் அவர், "அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும்...நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்."(வ) என்பதில் உரிமை பாராட்டினார்.
ஒருவேளை நம் அனைவருக்குமே ஒரு "நடு இரவின் பாடலோ", ஜெபமோ, அல்லது வேத வசனமோ மெல்லிய குரலில் ஒலித்து நம்மை நம்முடைய குழப்பமான சிந்தனைகளிலிருந்து மீட்டு தேவனையும், அவரது குணாதிசயத்தையும் உற்றுக்கவனிக்கும் சிந்தனைக்கு கொண்டுசெல்ல தேவைப்படுகிறது. சுத்தமான மனசாட்சியும், தேவனின் உண்மைத்தன்மைக்கு நன்றி நிறைந்த இதயமும், அன்புமே நமக்கு இனிமையான நித்திரையை கொண்டுவரும்.

நம் சௌகரியத்திற்கல்ல
அபிஷ்வாஸ் தனது மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அவனது பாதையில் திசைதிரும்பிய ஒரு கார், அவனை எதிர்வரும் வாகனத்தின் மீது மோதச் செய்தது. இரு வாரங்கள் கழித்து ஒரு சிகிச்சை மையத்தில் கண்விழித்த போதுதான், அவனுடைய மோசமான நிலை புரிந்தது. அதிலும் மோசமாக, தண்டுவடம் காயப்பட்டதால் அவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தான். அபிஷ்வாஸ், தான் குணமாக ஜெபித்தான், ஆனால் அது அவனுக்கு கிடைக்கவில்லை. மாறாக, "இந்த வாழ்வின் நோக்கமே நாம் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாவதுதான். துரதிருஷ்டவசமாக அது நமக்கு எல்லாமே நன்மையும், இன்பமுமாய் இருக்கும்பட்சத்தில் சாத்தியமாகாமல் , நம் வாழ்க்கை கடினமாகும்போதும், ஒவ்வொரு நாளையும் கடக்கவே ஜெபத்தின் மூலமாக தேவனை சார்ந்துகொள்வது கட்டாயமாகும்போதும் தான் அது சாத்தியமாகும்" என்பதை தேவன் தனக்கு உருக்கமாக கற்றுக்கொடுத்ததாக விசுவாசிக்கிறான்.
தேவனோடுகூட சரியான உறவிலிருப்பதால் உண்டாகும் இரு நன்மைகளை குறித்து அப்போஸ்தலன் பவுல் விளக்குகிறார் அவை: உபத்திரவத்தில் பொறுமை மற்றும் உபத்திரவத்தை குறித்து மேன்மைபாராட்டுவது (ரோமர் 5:3-4) இவ்விரு நன்மைகளும் ஏதோ மனவலிமை பெற்று துன்பத்தை சகிக்கவோ அல்லது துன்பத்தில் இன்பம் காணவோ நம்மை அழைக்கவில்லை. மாறாக, தேவன் மீது கொண்ட அசையாத நம்பிக்கைக்கு நம்மை அழைக்கிறது. கிறிஸ்துவுடன் கூடிய உபத்திரவம், "பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது" (வ.3). இவை அனைத்துமே நம் தகப்பன் நம்மை கைவிடமாட்டார் மாறாக நம்மோடு அக்கினியிலும் கூட நடப்பார், நமது எதிர்காலத்திலும் நடத்துவார் என்ற விசுவாசத்திலிருந்து வழிகின்றன.
தேவன் நமது உபத்திரவங்களில் நம்மை சந்தித்து அவருக்குள் நாம் வளர உதவுகிறார். துன்பங்களை அவருடைய தண்டனைகளாக பார்ப்பதை விடுத்து அவைகளை கொண்டு நம்மை அவர் மெருகேற்றும் வழிமுறைகளை கண்டுகொண்டு நமது குணாதிசயங்களை வளர்த்து "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறதை" (வ.5) அனுபவிப்போமாக.

படைப்பின் வியப்பு
அலாஸ்க்காவில் நடைபயணம் மேற்கொண்டிருந்த டிம், இதுவரை பார்த்திராத ஒன்றை அன்று சந்தித்தான். டிம், தொழில்ரீதியாகவும் கூட பனிப்பாறைகளை குறித்து படித்திருந்தாலும், அவைகளின் மேல் அதிகளவிலான பாசி உருண்டைகள் (ஒருவித செடி) படர்ந்திருப்பது அவனுக்கு முற்றிலும் புதியது. பல ஆண்டுகள் இந்த பிரகாசிக்கும் பச்சை நிற உருண்டைகளை கவனமாக ஆராய்ந்த பின், டிம்மும் அவன் சகாக்களும், இவ்வகையான பனிப்பாறை பாசியானது, மரங்களில் காணப்படும் பாசி உருண்டைகளை போல ஒன்றோடொன்று இணைக்கப்படாமல் இருப்பதையும், இன்னும் ஆச்சரியமாக இவை ஒரு மந்தையைப்போலவும், கூட்டமாகவும் ஒற்றுமையாக நகர்வதை கண்டுபிடித்தனர். முதலில், டிம்மும் அவன் சகாக்களும் இவைகள் காற்றினால் நகர்கின்றனவோ அல்லது மலையில் கீழ்நோக்கி சறுக்கி விழுகின்றனவோ என்று சந்தேகித்தனர் ஆனால் அவர்களின் ஆராய்ச்சி அத்தகைய யூகங்களை பொய்யாக்கியது.
அந்த பாசி உருளைகள் எவ்வாறு நகர்கின்றன என்று இன்னும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. இத்தகைய மர்மங்கள் தேவனுடைய படைப்பாற்றலின் மகுடங்கள். அவருடைய சிருஷ்டிப்பின் பணியில், தேவன் நிலத்தை மரங்களும், செடிகளும் முளைக்கும் "தாவரங்களின் விளைச்சலுக்காக" நியமித்தார் (ஆதியாகமம் 1:11). "பனிப்பாறை எலிகள்" என்ற இவ்வகை பாசிகளையும் அவரே வடிமைத்தார். அவைகளுக்கு ஏற்ற சூழலை அளிக்கும் பனிப்பாறைகளை நாம் நேரில் பார்க்கும்வரை, நம்மில் அநேகர் இதை பார்த்திருக்க முடியாது.
1950களில் கன்டுபிடிக்கப்பட்ட முதற்கொண்டு இந்த "பனிப்பாறை எலிகள்", தங்கள் தெளிவற்ற பச்சை படிவத்தினால் விஞ்ஞானிகளுக்கு களிப்பூட்டி வருகின்றன. தேவன், தான் படைத்த தாவரங்களை பார்த்து "அது நல்லது என்று கண்டார்." (வ.12), நாம் தேவனின் தாவரவியல் வடிவமைப்புகளால் சூழப்பட்டுள்ளோம் அவை ஒவ்வொன்றும் அவரின் படிப்பின் வல்லமைகளை நிரூபித்து, அவரை தொழுதுகொள்ள நம்மை அழைக்கிறது. அவர் படைத்த ஒவ்வொரு மரத்தின்பேரிலும், செடியின்பேரிலும் நாம் மகிழலாம் ஏனெனில் அவைகள் நல்லது.