வகை  |  odb

தேவனுக்கு தெரியும்

ஒரு ஓவிய கண்காட்சியில் வரையப்பட்டிருந்த ஒரு பெரிய ஓவியத்தை ஒரு தம்பதியினர் பார்வையிட்டனர். அதின் அருகில் பெயிண்ட் கேன்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர்கள், அந்த ஓவியம் இன்னும் வரைந்து முடிக்கப்படவில்லை என்றும், பார்வையாளர்கள் தான் அதை நிறைவுசெய்யவேண்டும் என்று எண்ணி, தங்களுடைய பங்கிற்கு சில வர்ணங்களை பூசிவிட்டு கடந்து சென்றனர். ஆனால் அந்த ஓவியம் சமீபத்தில் வரையப்பட்டது என்பதை பிரதிபலிப்பதற்காய், ஓவியர்கள் அவற்றை அங்கே விட்டுச் சென்றிருந்தனர். அந்த சம்பவத்தின் காணொலிகளை பரிசோத்தி பின்னரே, நிர்வாகத்தினர் தங்கள் தவறை உணர்ந்தனர். 

யோர்தானின் கிழக்கே வாழ்ந்த இஸ்ரவேலர்கள் நதிக்கு அருகில் ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டியபோது, தவறான புரிதலை உருவாக்கினர். தேவனை ஆராதிப்பதற்கு ஆசரிப்புக் கூடாரம் மட்டுமே என்றிருந்த நிலையில், மேற்கத்திய கோத்திரத்தார்கள் இதை தேவனுக்கு எதிரான முரட்டாட்டமாய் கருதினர் (யோசுவா 22:16).

கிழக்கத்திய கோத்திரத்தார், தேவனின் பலிபீடத்தின் மாதிரியை மட்டுமே உருவாக்க நினைத்த எண்ணத்தை விளக்கும் வரை பதட்டம் அதிகரித்தது. தங்கள் சந்ததியினர் அதைக் காணவும், தங்களின் முற்பிதாக்களுடனும் தொடர்பு வைத்துக்கொள்ளும் எண்ணத்திலும் அதை அரங்கேற்றினர் (வச. 28-29). “தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்” (வச. 22) என்று கூச்சலிட்டனர். அவர்கள் சொன்னதை மற்றவர்களும் காது கொடுத்து கேட்டு, அங்கே நடப்பதைக் கண்டு, தேவனைத் துதித்துவிட்டு வீடு திரும்பினர்.

“கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்” (1 நாளாகமம் 28:9). ஒவ்வொருவரின் நோக்கங்களும் அவருக்கு தெளிவாக தெரியும். குழப்பமான சூழ்நிலைகளை சரிசெய்ய உதவுமாறு நாம் அவரிடம் கேட்டால், அதை தெளிவுபடுத்தும் வாய்ப்பையும், நமக்கு விரோதமான செய்கைகளை மன்னிக்கும் கிருபையையும் அவர் நமக்கு அருளுவார். நாம் மற்றவர்களுடன் ஒற்றுமையாய் வாழும் எண்ணத்தோடு, அவரிடத்திற்கு திரும்புவோம். 

வளருவதற்கான அழைப்பு

கடற்குடுவை என்பது விசித்திரமான ஒரு கடல்வாழ் உயிரினம். பாறைகள் மற்றும் கடற் சிப்பிகள் மேல் ஒட்டியிருக்கும் இது, அசைவது போன்ற மென்மையான பிளாஸ்டிக் குழாய் போல் தெரிகிறது. பாய்ந்து செல்லும் நீரிலிருந்து அதன் ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்டு, அது முன் இருந்த இளமை துடிப்பை விட்டுவிட்டு, ஒரு செயலற்ற வாழ்க்கையை வாழ்கிறது.

இந்த கடற்குடுவை உயிரினம், ஒரு பழமையான முதுகுத் தண்டு மற்றும் மூளையுடன் ஒரு தலைப்பிரட்டைப் போல் தன் வாழ்க்கையைத் தொடங்கி, தன் உணவைக் கண்டுபிடிக்கிறது. தன் இளம்பிரயாத்தில், அது கடலை ஆராய்வதில் தனது நாட்களைக் கழிக்கிறது. ஆனால் முதிர்ச்சியடையும் போது ஏதோ நடக்கிறது. அது ஒரு பாறையில் குடியேறி, அது ஆராய்வதையும் வளர்வதையும் நிறுத்திக்கொள்கிறது. ஒரு பயங்கரமான திருப்பத்தில், அது அதன் சொந்த மூளையை உண்டு, ஜீரணிக்கின்றது.

முதுகெலும்பில்லாத, சிந்திக்கமுடியாத, ஒளிர்கிற மின்னோட்டத்துடன் செயலற்ற முறையில் நிற்கிறது. இந்த கடற்குடுவை விதியைப் பின்பற்ற வேண்டாம் என்று அப்போஸ்தலர் பேதுரு நம்மை ஊக்குவிக்கிறார். தேவனுடைய சுபாவங்களை தரித்துக்கொள்வதே நமக்கான முதிர்ச்சி (2 பேதுரு 1:4). நீங்களும் நானும் வளர அழைக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்துவைப் பற்றிய நமது அறிவில் மனரீதியாக வளருதல் (3:18); ஆவிக்குரிய ரீதியில் நன்மை, விடாமுயற்சி மற்றும் சுயக்கட்டுப்பாடு போன்ற பண்புகளில் வளருதல் (1:5-7); மற்றும் நடைமுறையில் புதிய வழிகளை ஆராய்வதன் மூலம் நேசித்தல், விருந்தோம்பல் வழங்குதல் மற்றும் நமது பரிசுகள் மூலம் மற்றவர்களுக்கு சேவை செய்தல் (1 பேதுரு 4:7-11) ஆகியவற்றில் வளர அழைக்கப்பட்டிருக்கிறோம். இத்தகைய வளர்ச்சி, வீணரும் கனியற்றதுமான வாழ்க்கையை வாழ்வதிலிருந்து நம்மைத் தடுக்கும் என்று பேதுரு கூறுகிறார் (2 பேதுரு 1:8).

வளர்வதற்கான இந்த அழைப்பு, எழுபது வயது முதியவருக்கு எவ்வளவு இன்றியமையாததோ அதேபோன்று இளம் வயதினருக்கும் அவசியம். தேவனின் தன்மை கடல் போல் பரந்தது. நாம் சில அடிகள் கூட நீந்தவில்லை. அவரது முடிவில்லாத தன்மையை ஆராயுங்கள். புதிய ஆவிக்குரிய சாகசங்களை மேற்கொள்ளுங்கள். படியுங்கள், சேவை செய்யுங்கள், துணிந்து முயற்சி செய்யுங்கள், வளருங்கள்.

குணமடைந்ததைப் போல வாழுங்கள்

இந்தியாவில் இருந்த இரண்டு சகோதரிகள் பார்வையற்றவர்கள். அவர்களின் தந்தை கடின உழைப்பாளியாக இருந்தார். ஆனால் அவர்களுக்கு பார்வையை அளிக்கும் அறுவை சிகிச்சையை செய்ய அவருக்கு வசதியில்லை. பின்னர் குறுகிய கால மருத்துவ பணிக்காக ஒரு டாக்டர்கள் குழு அவர்களின் பகுதிக்கு வந்தனர். அவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் விளைவாக,  காலையில், செவிலியர்கள் தங்கள் கண் கட்டுகளை அவிழ்க்கும்போது, பார்வையற்ற அந்த பெண்கள் மகிழ்ச்சியோடு சிரித்தனர். அதில் ஒருவள், “அம்மா, நான் பார்க்கிறேன்! என்னால் பார்க்க முடிகிறது!” என்று ஆனந்த கூச்சலிட்டாள். 

பிறப்பிலிருந்தே முடவனாக இருந்த ஒருவன், தேவாலய வாசலில் தனது வழக்கமான இடத்தில் அமர்ந்து பிச்சை கேட்டான். பேதுரு தன்னிடம் பணம் ஏதுமில்லை, ஆனால் அவரிடம் அதைவிட சிறந்த ஒன்று இருந்ததாய் கூறினார். “நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட” (அப்போஸ்தலர் 3:6) என்று சொன்னார். அந்த மனிதன் “குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூடத் தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்” (வச. 8).

பார்வை பெற்ற அந்த சகோதரிகளும், சுகம் பெற்ற அந்த முடவனும், தங்கள் நன்றியுணர்வை வெளிப்படையாய் பிரதிபலித்தனர். அந்த சகோதரிகள் ஆச்சரியத்தில் வியப்படைந்தனர். அந்த முடவன் துல்லி குதித்து நடந்தான். 

உங்கள் சொந்த திறன்களைக் கருத்தில்கொள்ளுங்கள். நீங்கள் அற்புதவிதமாக குணமடைந்திருந்தால், இந்த திறன்களை நீங்கள் எப்படி ஆச்சரியமாய் அனுபவித்திருப்பீர்கள்? அவற்றை எப்படி வித்தியாசமாகப் பயன்படுத்தியிருப்பீர்கள்? இப்போது இதை கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் இயேசுவை நம்பினதினால், அவர் உங்களை ஆவிக்குரிய ரீதியில் குணமாக்கியுள்ளார். அவர் உங்கள் பாவங்களிலிருந்து உங்களை மீட்டெடுத்தார். 

நம்மை உருவாக்கி காப்பாற்றியவருக்கு நன்றி செலுத்துவோம். அவர் நமக்கு வழங்கிய அனைத்தையும் அவருக்கு அர்ப்பணிப்போம்.

 

தேவன் உன்னை காண்கிறார்

தகப்பனால் கைவிடப்பட்ட குடும்பத்தில், இரண்டு பிள்ளைகளுக்கு தாயாயிருக்கும் எனது தோழி அல்மாவுக்கு அதிகாலைகள் வேதனையாக இருக்கும். அவள், “எல்லாம் அமைதியாக இருக்கும்போது, கவலைகள் மேலெழுகின்றன. நான் வீட்டு வேலைகளைச் செய்யும்போது, எங்களின் பொருளாதாரக் கவலைகள் மற்றும் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் படிப்புகளைப் பற்றி யோசிப்பேன்” என்று சொல்லுவாள். 

கணவன் அவளைக் கைவிட்டபோது, தன் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை அல்மா சுமந்தாள். “இது கடினம், ஆனால் தேவன் என்னையும் என் குடும்பத்தையும் காண்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் எனக்கு இரண்டு வேலைகளைச் செய்ய பலத்தைத் தருகிறார்; எங்கள் தேவைகளை சந்திக்கிறார், மேலும் ஒவ்வொரு நாளும் அவருடைய வழிகாட்டுதலின் படி என் குழந்தைகளை நடக்க உதவிசெய்கிறார்” என்று அவள் சொல்கிறாள். 

எகிப்திய அடிமைப் பெண்ணான ஆகார், தேவனால் பார்க்கப்படுவதின் அர்த்தம் என்னவென்று புரிந்துகொண்டாள். அவள் ஆபிரகாமால் கர்ப்பமான பிறகு, அவள் சாராளை வெறுக்க ஆரம்பித்தாள் (ஆதியாகமம் 16:4). சாராளும் அவளை தவறாக நடத்தினாள். இதனால் ஆகார் வனாந்திரத்திற்கு தப்பி ஓடினாள். ஆகார் தனக்கும், தனக்கு பிறக்கப்பபோகிற பிள்ளைக்குமான எதிர்காலம் இருண்டிருப்பதைக் கண்டு தனிமையாக உணர்ந்தாள். 

ஆனால் வனாந்திரத்தில் “கர்த்தருடைய தூதன்” (வச. 7) அவளைச் சந்தித்து, “கர்த்தர் உன் துயரத்தைக் கேட்டிருக்கிறார்” (வச. 11) என்று கூறினார். தேவதூதன், ஆகாருக்கு என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டினார். மேலும் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று அவர் அவளுக்கு உறுதியளித்தார். அவளிடமிருந்து நாம் தேவனின் பெயர்களில் ஒன்றான – எல்ரோயீ “என்னைக் காண்கின்ற தேவன்” (வச. 13) என்ற நாமத்தைப் பெற்றுக்கொண்டோம். 

ஆகாரைப் போலவே, நீங்களும் வாழ்க்கையின் கடினமான பயணத்தில் தொலைக்கப்பட்டவர்களாய் தனிமையை உணரலாம். ஆனால் வறண்ட நிலத்திலும் தேவன் உங்களைப் பார்க்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவரை அணுகி, அவர் உங்களை வழிநடத்துவார் என்று நம்புங்கள்.