வகை  |  odb

தேவனுடைய நன்மைகளைத் தொடர்ந்து..

எனது கல்லூரி நாட்களில், பெண்கள் துணிக்கடையில் நான் பகுதி நேர வேலை பார்த்தேன். அங்கு பொருட்கள் வாங்க வந்த சிலரை சந்தேகப்பட்ட கடையின் பெண் பாதுகாவலர் ஒருவர், அவர்கள் கடையில் பொருட்களை திருடியிருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டு பின் தொடர்ந்தார். அந்த கடையின் உரிமையாளருடைய பார்வையில் சந்தேகிக்கக்கூடியவர்கள் என்று சிலர் இருக்கிறார்கள். அவருடைய பார்வையில் நல்லவர்களாய் தெரிந்தவர்களை விட்டுவிட்டனர். சில கடைகளில் சந்தேகப்பட்டு, என்னையே பின்தொடர்ந்திருக்கின்றனர். அதினுடைய நுணுக்கங்களை இப்பொழுதும் நான் அறிந்துள்ளதால் அது ஒரு  சுவாரஸ்யமான அனுபவத்தையே கொடுத்தது.

இதற்கு நேர்மாறாக, தாவீது, தன்னை இரண்டு தெய்வீக ஆசீர்வாதம் பின்பற்றுவதாக அறிவித்தார். அவை கர்த்தரின் நன்மையும் கிருபையுமே. இந்த இரண்டு வரங்களும் எப்போதும் மெய்யான அன்போடு அவருடன் இருக்கும். “காக்கும் இரண்டு தூதர்கள்" என்று சுவிசேஷகர் சார்லஸ் ஸ்பர்ஜன் குறிப்பிடும் கர்த்தருடைய தூதர்கள், இருண்ட நாட்களிலும் பிரகாசமான நாட்களிலும் தேவனை விசுவாசிப்பவர்களின் கூடவே இருப்பார்கள். மந்தமான குளிர்கால நாட்களிலும் பிரகாசமான கோடைகால நாட்களிலும், அவருடைய நன்மை நம் தேவைகளை பூர்த்தி செய்கிறது. அவருடைய கிருபை நம் பாவங்களை மூடுகிறது.

ஒரு காலத்தில் மேய்ப்பனாக இருந்த தாவீது, கர்த்தருடைய நன்மையும் கிருபையையும் இணைக்கப்பட்டதின் நோக்கத்தை அறிந்திருந்தார். பயம், கவலை, சோதனை, சந்தேகம் போன்றவைகளும் நம்மைத் தொடரக்கூடியது. நிச்சயமாகவே தாவீதுக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் கர்த்தருடைய நன்மையும் கிருபையையும் எப்போதும் நம்மை தொடர்ந்து பிடிக்கிறது என்று அவர் நம்பினார்.

தாவீது, “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங்கீதம் 23:6) என்று மகிழ்ந்து களிகூறினார். இவைகளே நம்மைத் தொடர்ந்து வரக்கூடிய ஆச்சரியமான பரிசு. 

 

முழு உலகமும் பாடும்போது

1970களின் பிரபலமான விளம்பரம் ஒன்று ஒரு தலைமுறையையே ஊக்குவித்தது. கோகோ கோலாவின் “தி ரியல் திங்” விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் இசைக் குழுவினரால் உருவாக்கப்பட்டு, இறுதியில் ஒரு முழு நீளப் பாடலாக உருவெடுத்தது. அது உலகெங்கிலும் இருந்த இசை அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்தது. ஆனால் ரோம் நகருக்கு வெளியே, ஒரு மலை உச்சியில் இளைஞர்கள் பாடிய அந்த பாடலின் தொலைக்காட்சி ஒளிபரப்பினை பலர் மறந்திருக்கமாட்டார்கள். தேனீக்களின் தரிசனம், பழங்களை ஈனும் மரங்கள், பாடலாசிரியரின் விருப்பத்தை உலகெங்கிலும் பறைசாற்றுவதற்கு அன்போடும், ஒற்றுமையுடனும் அப்பாடலை நாம் எதிரொலித்தோம். 

அப்போஸ்தலனாகிய யோவான், அந்த இலட்சியக் கனவைப் போன்ற ஒன்றை விவரிக்கிறார். அது மிகப் பெரியது. “அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்” (வெளி. 5:13) பாடிய ஒரு பாடலை அவர் கற்பனை செய்தார். இந்த பாடலில் விசித்திரமாக எதுவும் இல்லை. ஆனால் நமக்கான பெரிய விலைக்கிரயத்தைக் கொடுத்தவருக்காய் பாடப்பட்டது. யுத்தம், மரணம் மற்றும் பாதிப்புகள் என்று நம் கண் முன்னே நிழலாடும் காரியங்களிலிருந்து அவருடைய அன்பின் தியாகம் நம்மை மேற்கொள்கிறது. 

ஆயினும் ஆட்டுக்குட்டியானவர்  நம் பாவத்தைச் சுமந்து, மரணத்தை ஜெயித்து, மரண பயத்தைப் போக்கவும், வானத்தையும் பூமியையும் முழு இணக்கத்துடன் பாட கற்றுக்கொடுக்கவும் எதிர்பார்த்தார்.

 

திறவுகோல்

“தி ஹ்யூமன் கண்டிஷன்” (The Human Condition) என்னும் பிரபலமான தன்னுடைய புத்தகத்தில், தாமஸ் கீட்டிங் இந்த மறக்கமுடியாத கதையை பகிர்கிறார். ஒரு குருவானவர், தனது வீட்டின் சாவியைத் தொலைத்துவிட்டு, புல் வெளியில் தேடிக்கொண்டு இருந்தராம். அவரது சீடர்கள் அவர்த் தேடுவதைக் கண்டதும், அவர்களும் தேடினார்களாம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக, புத்திசாலித்தனமான சீடர்களில் ஒருவர், “குருவே, சாவியை எங்கே தொலைத்தீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்க, அதற்கு குருவானவர், “அதை நான் வீட்டில் தொலைத்தேன்” என்று சொன்னாராம். “அப்படியானால் நாம் ஏன் அதை இங்கே தேடுகிறோம்?" என்று கேட்டாராம். அதற்கு அவர், “அதை விட இங்கு தான் வெளிச்சம் அதிகமாக இருக்கிறது” என்று பதிலளித்தாராம். 

“தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிக்கும் நெருக்கமான உறவு என்னும் சாவியை நாம் தொலைத்துவிட்டோம். அந்த அனுபவம் இல்லாமல், நம்மால் எதுவும் செய்ய முடியாது. அது நம்மோடிருந்தால் அனைத்தும் நேர்த்தியாய் இருக்கும்" என்று கீட்டிங் நிறைவுசெய்கிறார்.

வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளில் தேவன் நம்மோடிருந்தார் என்பதை சுலபமாய் மறந்துவிடுகிறோம். ஆனால் எல்லா தவறுகளையும் நாம் தவிர்க்கும்போது, உண்மையான நன்மையை நமக்கு தருவதற்கு அவர் ஆயத்தமாய் இருக்கிறார். மத்தேயு 11இல், தேவன் தம்முடைய வழிகளை “ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து,”; “பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால்” (வச. 25) இயேசு பிதாவை துதிக்கிறார். பின்னர் அவர், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே!" (வச. 28) இளைப்பாறுதலுக்காய் தம்மிடம் வரும்படி அழைக்கிறார்.

சிறு குழந்தைகளைப் போலவே, “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்” (வச. 29) என்று சொன்ன நம்முடைய குருவிடத்திலிருந்து மெய்யான இளைப்பாறுதலை நாம் பெற்றுக்கொள்ள முடியும். நம்மை நித்திய வீட்டிற்கு அழைத்துச்செல்ல அவர் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறார். 

 

தோட்டத்தின் தேவன்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நந்திதாவும் அவரது கணவர் விஷாலும் அதிக சம்பளம் வாங்கக்கூடிய, மன அழுத்தம் நிறைந்த சாப்ட்வேர் வேலைகளை விட்டுவிட்டு, எளிமையான, மன அழுத்தமில்லாத விவசாய வாழ்க்கையைத் தழுவுவதற்கான தீர்மானத்தை எடுத்தனர். அவர்கள் தேவனுடனும், தங்கள் ஒருவரோடொருவருடனும் நேரத்தை செலவிட எண்ணி, அமைதியான மலை நகரத்திற்கு சென்றனர். தோட்டத்திற்கு திரும்பும் வழியான, இயற்கையால் சூழப்பட்ட அமைதியான வாழ்க்கை முறையை அனுபவித்தனர்.

ஏதேன், ஆதியிலே தேவன் நமக்காக படைத்த பரதீசு. இந்தத் தோட்டத்தில், ஆதாமும் ஏவாளும், சாத்தானுக்கு செவிகொடுக்கும் முன்புவரை தேவனை வழக்கமாய் சந்திக்க நேரிட்டது (ஆதியாகமம் 3:6-7 பார்க்கவும்). ஆனால் அந்த நாள் முற்றிலும் வித்தியாசமானது. “பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்" (வச. 8).

அவர்கள் என்ன செய்தார்கள் என்று தேவன் கேட்டபோது, ஆதாமும் ஏவாளும் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தினர். அவர்கள் மறுத்தாலும், தேவன் அவர்களை அங்கே விடவில்லை. அவர் “ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்” (வச. 21). இது நம்முடைய பாவங்களுக்கான இயேசுவின் மரணத்தை அடையாளப்படுத்துகிறது. 

தேவன் நமக்கு ஏதேனுக்குத் திரும்பும் வழியைக் காண்பிக்கவில்லை. அவருடனான முறிந்த உறவை மீட்டெடுக்க அவர் நமக்கு ஒரு வழியைக் கொடுத்தார். நாம் தோட்டத்திற்கு திரும்ப முடியாது. ஆனால் நாம் தோட்டத்தின் தேவனிடம் திரும்பலாம்.

பயண ஒளி

ஜேம்ஸ், இருசக்கர வாகனத்தில் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் 2011-கிமீ சாகச பயணம் மேற்கொண்டார். அவருடைய 1496வது கி.மீட்டரில், எனது நண்பர் அவரை சந்தித்தார். அப்போது ஜேம்ஸின் முகாமிடும் பொருட்களை யாரோ திருடிச் சென்றதை அறிந்ததும், எனது நண்பர் தன்னுடைய போர்வையையும் ஸ்வெட்டரையும் கொடுக்க முன்வந்தார். ஆனால் ஜேம்ஸ் அதை மறுத்துவிட்டார். ஏனென்றால், அவர் தெற்கு நோக்கி பயணிக்கும்போது, தட்பவெப்பநிலையின் காரணமாக, அவர் தன்னுடைய பொருட்களை குறைக்கவேண்டியிருக்கும் என்று அவர் கூறினாராம். மேலும் அவர் தனது இலக்கின் முடிவை நெருங்க நெருங்க, அவர் மிகவும் சோர்வடைந்தவராய் இருப்பதினால், அவர் சுமந்து செல்லும் எடையை குறைத்தே ஆகவேண்டியிருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். 

ஜேம்ஸின் உணர்தல் புத்திசாலித்தனமாக இருந்தது. எபிரெயர் நிருப ஆசிரியரின் கூற்றை இது பிரதிபலிக்கிறது. வாழ்க்கையில் நமது பயணத்தைத் தொடரும்போது, “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு" (12:1), தொடர்ந்து முன்னேற, நாம் குறைவான பொருட்களை கொண்டுசெல்ல வேண்டியது அவசியமாயிருக்கிறது. 

கிறிஸ்தவர்களாக, இந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு விடாமுயற்சி தேவை (வச. 1). நம்முடைய ஓட்டத்தை தடைசெய்யும் மன்னிக்க முடியாத சுபாவம், அற்பத்தனம், மற்ற பல பாவங்களிலிருந்து விடுபடுவதே, நம்முடைய சமூகமான பயணத்தை உறுதிசெய்யும் காரியங்கள். 

இயேசுவின் உதவியின்றி, நாம் இலகுவாகப் பயணித்து, இந்தப் பந்தயத்தை நேர்த்தியாய் நிறைவுசெய்ய முடியாது. நாம் “இளைப்புள்ளவர்களாய்... ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு” (வச. 2-3) “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி” ஓடக்கடவோம்.