
வான்கோழிகளிடமிருந்து ஓடிப்போதல்
இரண்டு உயரமான காட்டு வான்கோழிகள் வழிப்பாதையில் நின்றிருந்தது. எந்த அளவிற்கு அதின் அருகாமையில் போகமுடியும்? நான் ஆச்சரியப்பட்டேன். என்னுடைய காலை நடைப்பயணத்தை மெதுவாக்கி, அதின் அருகாமையில் நின்றேன். நான் எதிர்பார்த்தபடி நடந்தது. வான்கோழிகள் என்னை நோக்கி நகர்ந்து வந்தது. அதின் நீளமான தலைகள் என் இடுப்பை வருடியது. அதன் அலகுகள் எவ்வளவு கூர்மையானவை? நான் ஓட ஆரம்பித்தேன். அது என்னைத் துரத்திக்கொண்டே வந்தது.
எப்படி எல்லாம் தலைகீழானது? வேட்டையாடப்படும் விலங்கு வேட்டைக்காரனை எப்படித் துரத்தலாம்? அது என்னைப் பார்த்துப் பயப்படவில்லை. அதனிடத்தில் நான் காயப்பட விரும்பாததால், நான் ஓடத் துவங்கினேன்.
தாவீது, பயமுறுத்தும் அளவுக்கு உடல்வாகு கொண்டவனில்லை. அதனால் அவனை தன்னிடம் வரும்படிக்கு கோலியாத் அனுமதித்தான். “என்னிடத்தில் வா; நான் உன் மாமிசத்தை ஆகாயத்துப்பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்” (1 சாமுவேல் 17:44) என்று சொன்னான். ஆனால் தாவீது எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்துகொண்டான். அவன் கோலியாத் இருக்கும் திசை நோக்கி ஓடினான். மதியீனமான செயல் அல்ல; மாறாக, தேவன் மீதான நம்பிக்கையினிமித்தம் அவ்வாறு ஓடுகிறான். “இன்றையதினம்... இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்” என்று உரத்த சத்தமாய் சொன்னான். இந்த சிறுவனின் செய்கையைப் பார்த்து கோலியாத் குழம்பினான். இங்கு என்ன நடக்கிறது? என்று அவன் யோசித்திருக்கக்கூடும். அதற்குள் அந்த கல் அவனுடைய கண்களுக்கு இடையேயான முன்நெற்றியைப் பதம் பார்த்தது.
சிறிய விலங்குகள் மக்களைப் பார்த்தும் மேய்ப்பர்களைப் பார்த்தும் பயந்து ஓடுவது இயல்பு. அதே போல, நாம் நம்முடைய பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளிவதும் இயல்பு. ஏன் இயல்புக்கு உட்பட்டு வாழ எண்ணுகிறீர்கள்? இஸ்ரவேலில் தேவன் இல்லையா? அவருடைய வல்லமையில் எதிர்கொண்டு ஓடுங்கள்.

மெய்யான மாற்றம்
தெற்கு லண்டனின் கூட்டநெரிசலான பகுதியில் பிறந்து வளர்ந்த கிளாட், தன்னுடைய 15ஆம் வயதில் மரிஜூவானா என்னும் போதைப்பொருளையும், 25ஆம் வயதில் ஹெராயீனையும் விற்கும் அளவிற்கு வாழ்ந்தான். அவனுடைய அந்த தொழிலுக்கு ஆதரவாக, இளைஞர்களுக்கு ஆலோசனை கூறும் நபராய் சமுதாயத்திற்கு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான். அவனுடைய மேலாளர் மூலமாய் சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டான். இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான். கிறிஸ்தவ விசுவாசத்தைப் போதிக்கும் வேதபாட வகுப்பைப் படித்து, கிறிஸ்து தன்னுடைய வாழ்க்கையில் வருவதைக் குறித்துப் பயந்தான். அவன் சொல்லும்போது, “அவருடைய மகிமையான பிரசன்னத்தை உணர்ந்தேன். மக்கள் என் வாழ்க்கையில் மாற்றத்தைக் கண்டனர். இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான போதைப் பொருள் தொழிலாளி நான்தான்” என்று கூறினான்.
இயேசு அத்துடன் நிறுத்தவில்லை. கிளாட், கொக்கென் என்னும் போதைப் பொருள்கள் நிரம்பிய பையை நிறுத்துப்பார்க்கும்போது, இது முட்டாள்தனம் என்பதையும் தான் மக்களுக்கு விஷத்தைக் கொடுப்பதாகவும் உணர்ந்தான். போதைப் பொருட்கள் விற்பதை நிறுத்திக் கொண்டு, வேறு வேலை தேடிப் பிழைத்துக்கொள்ளத் தீர்மானித்தான். பரிசுத்த ஆவியானவரின் துணையோடு அவனுடைய மொபைல் போனை அணைத்துவிட்டான். திரும்பவும் அந்த தொழிலுக்குப் போகவில்லை.
இந்த வகையான மாற்றத்தையே எபேசு சபைக்கு பவுல் நிருபம் எழுதும்போது குறிப்பிடுகிறார். “மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு…மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” (எபேசியர் 4:22-24) என்று ஆலோசனை கூறுகிறார். இதற்கு பவுல் பயன்படுத்தும் வினைச்சொல்லானது, நாம் புதிய சாயலை அன்றாடம் தரித்துக்கொள்ளவேண்டும் என்பதைக் குறிக்கிறது.
கிளாடுடைய வாழக்கையில் பரிசுத்த ஆவியானவர் செய்ததுபோல, நம்முடைய புதிய சாயலைத் தரித்து கிறிஸ்துவைப் போல் மாறுவதற்கு அவர் விரும்புகிறார்.

கோபமான இருதயம்
“குயர்நிகா” என்பது பிக்காசோவின் தலைசிறந்த அரசியல் ஓவியம். 1937ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட ஒரு சிறிய ஸ்பானிய பட்டணத்தின் வரைபடம். இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்த ஸ்பானிய புரட்சியின்போது, நாசிச ஜெர்மானிய விமானங்கள் தங்கள் குண்டுகளை இந்த பட்டணத்தில் பரிசோதித்துப் பார்க்க ஸ்பானிய அதிகாரிகளினால் அனுமதிக்கப்பட்டனர். இந்த செய்கை பல உயிர்களைப் பலிவாங்கியது. இந்த அநாகரீகமான யுத்த பயிற்சி உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பிக்காசோவின் இந்த ஓவியம், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உலகத்தைக் கற்பனையாகச் சித்தரித்து, ஒருவர் மற்றவர்களை அழிக்கும் அநாகரீகமான செயல்களைப் பேச்சுப் பொருளாய் மாற்றியது.
அநியாயமாய் இரத்தஞ்சிந்துதல் நடைபெறவில்லை என்று எண்ணுகிறவர்கள், இயேசுவின் வார்த்தைகளை நினைவுகூரவேண்டியுள்ளது. “கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும்... தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்” (மத்தேயு 5:21-22). நிஜத்தில் கொலைசெய்யப்படவில்லை என்றாலும் இருதயத்தில் மற்றவர்களை கொலைசெய்வது சாத்தியம்.
மற்றவர்களை அழிக்கும் அளவிற்கான கோபம் நமக்கு ஏற்படுமானால், நமக்குப் பரிசுத்த ஆவியானவருடைய நிரப்புதலும், கட்டுப்பாடும் அத்தியாவசிய தேவை என்பதை உணரவேண்டும். மாம்சீக எண்ணங்கள் ஆவியின் கனிகளால் மாற்றப்படவேண்டும் (கலாத்தியர் 5:19-23). அதன் பின்பு அன்பும், சந்தோஷமும், சமாதானமும் நம்முடைய உறவுகளில் வெளிப்படும்.

இரக்கத்தை தெரிந்தெடுத்தல்
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், பனிக்கட்டிகளால் ஏற்படும் துர்ச்சம்பவங்களை நகைச்சுவைக்காக ஒளிபரப்பும் 5 நிமிட நிகழ்ச்சி மிக முக்கியமானதாய் கருதப்பட்டது. அதில் தங்கள் வீடுகள் மேலிருக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் மக்கள், வீட்டுக் கூரையின் மேல் ஏறுவதும், வழுக்கி விழுவதுமான காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாய் இடம்பெறும். அந்த நிகழ்வு காண்போருக்குச் சிரிப்பை வரவழைத்தது. மக்கள் தங்களுடைய மதியீனமான செய்கைகளை அதில் வெளிப்படுத்தியபோது, சிரிப்பு சத்தம் அதிகமாகியது.
இதுபோன்ற நகைச்சுவையான வீட்டுச் சம்பவங்களின் காணொலிகளைப் பார்ப்பது தவறல்ல. ஆனால் அது மற்றவர்களுடைய வேதனையிலும் வலியிலும் வேதனைப்படுகிறவர்களாய் அல்லாமல், நம்மைச் சிரிக்கக்கூடியவர்களாய் மாற்றிவிடுகிறது. இஸ்ரவேல் மற்றும் ஏதோம் ஆகிய இரு தேசங்களுக்கு இடையே நிகழ்ந்த அப்படியொரு சம்பவம் ஒபதியா புத்தகத்தில் பதிவாகியுள்ளது. தேவன் இஸ்ரவேலை தண்டிக்கும்போது, அதைக் கண்டு ஏதோம் மகிழ்ந்திருந்தது. அவர்கள் அதைச் சாதகமாய் பயன்படுத்திக்கொண்டு இஸ்ரவேல் தேசத்தை சூறையாடி, அவர்களை தப்பவிடாமல் காட்டிக்கொடுத்து, அவர்களின் எதிரி தேசங்களுக்கு ஆதரவாய் செயல்பட்டனர் (ஒபதியா 1:13-14). “உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பாராமலும்... இருக்கவேண்டியதாயிருந்தது. எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது” (வச.12,15) என்று ஏதோமுக்கு விரோதமான எச்சரிப்பு செய்தியை ஒபதியா அறிவிக்கிறார்.
மற்றவர்கள் வேதனை அனுபவிக்கும்போது, அது அவர்களுடைய செய்கைக்கு உகந்தது என்று தோன்றினாலும், நம்முடைய இறுமாப்புக்குப் பதிலாய் இரக்கத்தையே நாம் தேர்வுசெய்யவேண்டும். மற்றவர்களை நியாயந்தீர்க்கும் அதிகாரம் நமக்கில்லை. தேவனே அதைச் செய்ய முடியும். இவ்வுலக ராஜ்யம் அவருக்குச் சொந்தமானது (வச.21). இரக்கம் மற்றும் நீதி செய்யும் அதிகாரம் அவருக்கே உரியது.
