தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், பனிக்கட்டிகளால் ஏற்படும் துர்ச்சம்பவங்களை நகைச்சுவைக்காக ஒளிபரப்பும் 5 நிமிட நிகழ்ச்சி மிக முக்கியமானதாய் கருதப்பட்டது. அதில் தங்கள் வீடுகள் மேலிருக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் மக்கள், வீட்டுக் கூரையின் மேல் ஏறுவதும், வழுக்கி விழுவதுமான காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாய் இடம்பெறும். அந்த நிகழ்வு காண்போருக்குச் சிரிப்பை வரவழைத்தது. மக்கள் தங்களுடைய மதியீனமான செய்கைகளை அதில் வெளிப்படுத்தியபோது, சிரிப்பு சத்தம் அதிகமாகியது.
இதுபோன்ற நகைச்சுவையான வீட்டுச் சம்பவங்களின் காணொலிகளைப் பார்ப்பது தவறல்ல. ஆனால் அது மற்றவர்களுடைய வேதனையிலும் வலியிலும் வேதனைப்படுகிறவர்களாய் அல்லாமல், நம்மைச் சிரிக்கக்கூடியவர்களாய் மாற்றிவிடுகிறது. இஸ்ரவேல் மற்றும் ஏதோம் ஆகிய இரு தேசங்களுக்கு இடையே நிகழ்ந்த அப்படியொரு சம்பவம் ஒபதியா புத்தகத்தில் பதிவாகியுள்ளது. தேவன் இஸ்ரவேலை தண்டிக்கும்போது, அதைக் கண்டு ஏதோம் மகிழ்ந்திருந்தது. அவர்கள் அதைச் சாதகமாய் பயன்படுத்திக்கொண்டு இஸ்ரவேல் தேசத்தை சூறையாடி, அவர்களை தப்பவிடாமல் காட்டிக்கொடுத்து, அவர்களின் எதிரி தேசங்களுக்கு ஆதரவாய் செயல்பட்டனர் (ஒபதியா 1:13-14). “உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பாராமலும்… இருக்கவேண்டியதாயிருந்தது. எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது” (வச.12,15) என்று ஏதோமுக்கு விரோதமான எச்சரிப்பு செய்தியை ஒபதியா அறிவிக்கிறார்.
மற்றவர்கள் வேதனை அனுபவிக்கும்போது, அது அவர்களுடைய செய்கைக்கு உகந்தது என்று தோன்றினாலும், நம்முடைய இறுமாப்புக்குப் பதிலாய் இரக்கத்தையே நாம் தேர்வுசெய்யவேண்டும். மற்றவர்களை நியாயந்தீர்க்கும் அதிகாரம் நமக்கில்லை. தேவனே அதைச் செய்ய முடியும். இவ்வுலக ராஜ்யம் அவருக்குச் சொந்தமானது (வச.21). இரக்கம் மற்றும் நீதி செய்யும் அதிகாரம் அவருக்கே உரியது.