Archives: நவம்பர் 2022

எச்சரிப்பின் சப்தங்கள்

நீங்கள் எப்போதாவது ஒரு விரியன் பாம்பினை அருகில் பார்த்ததுண்டா? அப்படியானால், நீங்கள் அருகில் செல்லும்போது, அதின் சத்தம் மிகவும் உக்கிரமாக இருப்பதை கவனித்திருக்கக்கூடும். ஆபத்துகள் தன்னை நெருங்கும்போது, பாம்புகள் பொதுவாக சத்தமிடும் வீரியத்தை அதிகப்படுத்துகின்றன என்ற ஆராய்ச்சி சொல்லுகிறது. இந்த அதிர்வலைகள், அவைகள் இருக்கவேண்டிய இடத்தைக் காட்டிலும் மிக நெருக்கமாக இருக்கின்றன என்பதை அவைகளுக்கு தெரியப்படுத்துகின்றன. ஒரு ஆராய்ச்சியாளர், “கேட்பவர் தவறான எல்லைக்குள் வந்துவிட்டதாக, தனக்கு ஒரு பாதுகாப்பு விளிம்பை ஏற்படுத்திக்கொள்கிறது" என்று சொல்லுகிறார். 

சண்டையிடும்போது, மற்றவர்களை திட்டும் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கும்போது, அதிக ஓசை எழுப்பக்கூடும். இதுபோன்ற தருணங்களுக்கு உகந்த வகையில் நீதிமொழிகளின் ஆசிரியர் ஞானமான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்: “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” (நீதிமொழிகள் 15:1). மேலும் மென்மையான பதில், “ஜீவவிருட்சம்” என்றும் “அறிவை இறைக்கும்” (வச. 4,7) என்றும் சொல்லுகிறார். 

நாம் யாருடன் சண்டையிடுகிறோமோ, அவர்களிடம் தன்மையாய் பேசுவதற்கான முக்கியமான காரணத்தை இயேசு சொல்லுகிறார்: நாம் அவருடைய பிள்ளை என்பதை வெளிப்படுத்தும் அன்பை பிரதிபலிப்பதின்; மூலமாகவும் (மத்தேயு 5:43-45) மற்றும் நல்லிணக்கத்தைத் தேடுதலின் மூலமாகவும் (18:15) அது சாத்தியமாகும். சச்சரவுகளின் போது நம் குரலை உயர்த்தியோ அல்லது கனவீனமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தேவன் தம்முடைய ஆவியின் மூலம் நம்மை வழிநடத்துவது போல் மற்றவர்களுக்கு நாகரீகம், ஞானம் மற்றும் அன்பைக் காட்டுவோம்.

சூடான உணவு

பார்பிக்யூ கோழி இறைச்சி, பீன்ஸ், பாஸ்தா, ரொட்டி. ஒரு அக்டோபர் மாதத்தில் தன்னுடைய 54ஆம் பிறந்த நாளை கொண்டாடும் ஒரு பெண்மணியிடமிருந்து 54 ஆதரவற்றவர்கள் இந்த உணவை பரிசாகப் பெற்றுக்கொண்டனர். அந்தப் பெண்ணும் அவளுடைய நண்பர்களும், ஒரு உணவகத்தில் தங்கள் விருந்தை வழக்கமாய் அநுசரிக்காமல், சிகாகோவின் தெருக்களில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு உணவை சமைத்து பரிமாற தீர்மானித்தனர். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக, மற்றவர்களையும் அவர்கள் பிறந்த நாளுக்கு அதுபோல காரியங்களை செய்யும்படி ஊக்குவித்தாள். 

இந்த சம்பவம், மத்தேயு 25-ல் இடம்பெற்றள்ள இயேசுவின் வார்த்தைகளை எனக்கு நினைவூட்டுகிறது: “அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” (வச. 40). அவருடைய ஆடுகள் தங்கள் சுதந்திரத்தை அடையும்படிக்கு தன்னுடைய நித்திய இராஜ்யத்திற்குள் அழைக்கப்படும் என்று சொன்ன பிறகே இந்த வார்த்தைகளைச் சொன்னார் (வச. 33-34). அந்த தருணத்தில், அவர்கள் மெய்யான விசுவாசத்தில் அவருக்கு உணவளித்து, உடுத்தியவர்கள் என்பதை ஒப்புக்கொள்வார் (அவரை நம்பாத பெருமையுள்ள மதவாதிகளைப் போலல்லாமல்; பார்க்கவும் 26:3-5). நாங்கள் எப்போது உங்களுக்கு உணவளித்து, உடுத்துவித்தோம் என்று “நீதிமான்கள்” அவரைப் பார்த்துக் கேட்பார்கள் (25:37). “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (வச. 40) என்று பதிலளிப்பார். 

என்னோடு நட!

சில ஆண்டுகளுக்கு முன்பு, “இயேசு என்னுடன் நடக்கிறார்" என்ற பாடலை நற்செய்தி பாடகர் ஒருவர், பாடகர் குழுவுடன் பாடி, பிரபலமாக்கினார். அந்த பாடலின் வரிகளுக்குப் பின்னால் ஒரு அழகான கதை உள்ளது.

ஜாஸ் இசைக்கலைஞர் கர்டிஸ் லுண்டி, அவர் போதை மருந்து மறுவாழ்வு சிகிச்சையில் இணையும்போது, ஒரு பாடகர் குழுவைத் துவங்கினார். தன்னோடு சிகிச்சை பெற்ற சக நோயாளிகளை ஒன்றாக இணைத்து, அவர்களுக்கு ஒரு பழைய பாடலின் மீது இருக்கும் தாகத்தை அடிப்படையாய் வைத்து இந்த புதிய பாடலை அவர்களுக்காக இயற்றினார். “நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காய் பாடினோம்; இந்த போதைப் பழக்கத்திலிருந்து எங்களை முற்றிலும் விடுவிக்கும்படியாய் கிறிஸ்துவிடம் பாடினோம்” என்று அக்குழுவினர் ஒரு உறுப்பினர் ஒருவர் சொன்னார். மற்றொருவர் அந்த பாடலைப் பாடியபோது, அவளுடைய தீராத வலி தணிந்ததை சாட்சியிட்டார். அந்த பாடகர் குழு, தாளில் எழுதப்பட்டிருந்த வெறும் வார்த்தைகளை உச்சரிக்கவில்லை; மாறாக, மீட்கப்பட்ட வாழ்க்கைக்கான ஜெபத்தை ஏறெடுத்தனர். 

இன்றைய வேத வாசிப்பு அவர்களின் அனுபவத்தை நன்றாக விவரிக்கிறது. கிறிஸ்துவின் மூலம், எல்லா ஜனத்திற்கும் இரட்சிப்பை கொடுப்பதற்காக தேவன் வெளிப்பட்டார் (தீத்து 2:11). நித்திய வாழக்;கை என்பது இந்த பரிசின் ஒரு வெளிப்பாடாய் இருக்கையில் (வச. 13), நம்முடைய சுயக்கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கும், உலக ஆசைகளை புறக்கணிப்பதற்கும், அவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு நம்மை மீட்டெடுக்கவும் தேவன் நம்மில் கிரியை செய்கிறார் (வச. 12, 14). அந்த பாடல் குழுவினர் கண்டறிந்தபடி, இயேசு நம் பாவங்களை மட்டும் மன்னிக்கவில்லை, நம்மை அழிவுக்கேதுவான வாழ்க்கை முறைகளிலிருந்தும் விடுவிக்கிறார். 

இயேசு என்னோடு நடக்கிறார். அவர் உங்களுடனும் நடக்கிறார். அவரை தேடுகிற யாவரோடும் அவர் நடக்கிறார். இப்போது இரட்சிப்பை அருளுவதற்கும், எதிர்காலத்தின் நம்பிக்கையை அருளுவதற்கும் அவர் நம்மோடு இருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

 கிறிஸ்துவுடன் ஆழமான நட்பு

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியின் சிற்றாலயத்தில் உள்ள நினைவுச்சின்னம், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “இணைபிரியா நண்பர்களாகிய" ஜான் ஃபின்ச் மற்றும் தாமஸ் பெயின்ஸ் என்ற மருத்துவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இருவரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றாக பணியாற்றியவர்கள் மற்றும் அரசாங்க பயணங்களில் ஒன்றாக பயணித்தவர்கள். 1680 இல் பெயின்ஸ் இறந்தபோது, ஃபின்ச் 36 காலமாக “ஈருடல் ஓருயிராக” இருந்த அவர்களின் நட்புக்காக வருந்தினார். அவர்களுடைய நட்பில் அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு இருந்தது. 

இப்படிப்பட்ட நெருக்கமான நட்பு தாவீது ராஜாவுக்கும் யோனத்தானுக்கும் இருந்தது. அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒருவரையொருவர் நேசித்தனர் (1 சாமுவேல் 20:41), மேலும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையும் செய்தனர் (வ.8–17, 42). அவர்களின் நட்பில் உண்மையாக இருந்தனர் (1 சாமுவேல் 19:1–2; 20:13). தாவீது ராஜாவாவதற்காக, யோனத்தான் தனது உரிமையைத் தியாகம் செய்தார் (20:30-31; பார்க்க 23:15-18). யோனத்தான் மரித்தபோது, அவன் தன்மேல் வைத்திருந்த அன்பு " ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது" என்று தாவீது புலம்பினார் (2 சாமுவேல் 1:26). 

நட்பைத் திருமணத்துடன் ஒப்பிடுவது இன்று நமக்குக் கடினமாயிருக்கலாம், ஆனால் ஃபின்ச் மற்றும் பெயின்ஸ், தாவீது மற்றும் யோனத்தான் போன்ற நட்புகள், நம் சொந்த வாழ்வில் நட்பை அதிக ஆழப்படுத்த ஊக்குவிக்கிறது. இயேசுவும் தம்முடைய மார்பில் சாய தமது நண்பர்களை ஏற்றுக்கொண்டார் (யோவான் 13:23-25). அவர் காட்டும் உண்மை, நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு நாம் ஒன்றாக உருவாக்கும் ஆழமான நட்பின் அடித்தளமாக இருக்கட்டும். 

கிறிஸ்துவுக்கு பூரணமாய் சரணடைதல்

1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார்.

பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.

தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய அவசியமாகலாம்.

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக. 

- ஜாஸ்மின் கோ

இயேசு நம் ராஜா

உலகின் மிக வெப்பம் மிகுந்த மற்றும் வறண்ட நாடுகள் ஒன்றில் எண்ணெய் தோண்டும் போது,குழுக்கள் மிகப்பெரிய நிலத்தடி நீர் அமைப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். எனவே, 1983 ஆம் ஆண்டில், “மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பான நதி திட்டம்” தொடங்கப்பட்டது. அதின் மூலம் தண்ணீர் தேவைப்படும் நகரங்களுக்கு பெரிய குழாய் மூலம் நல்ல தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது. திட்டம் துவக்கப்படுகிற இடத்தில் உள்ள ஒரு பதாகத்தில், “இங்கிருந்து ஜீவத் தண்ணீர் பாய்கிறது” என்று எழுதப்பட்டிருந்தது.

ஏசாயா தீர்க்கதரிசி, வனாந்திரத்தில் பாய்ந்தோடும் நீர்க்கால்களை எதிர்கால நீதியுள்ள ராஜாவை விவரிக்க பயன்படுத்துகிறார் (ஏசாயா 32). ராஜாக்களும் அதிபதிகளும் நீதியோடும் நியாயத்தோடும் அரசாளும்போது, அது “வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” (வச. 2) இருப்பார்கள். சில ஆட்சியாளர்கள் கொடுப்பதற்குப் பதிலாக பறித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இருப்பினும், தேவனை கனம்பண்ணும் தலைவர் மக்களுக்கு தங்குமிடம், அடைக்கலம், புத்துணர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டு வருபவராயிருக்கிறார். “நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்” (வச. 17) என்று ஏசாயா குறிப்பிடுகிறார்.

ஏசாயாவின் நம்பிக்கையான வார்த்தைகள், “கர்த்தர் தாமே.. இறங்கிவருவார்; நாமும்... எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெசலோனிக்கேயர் 4:16-17) என்று இயேசுவில் தன் நிறைவேறுதலைக் கண்டது. “மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பான நதி திட்டம்” மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது. என்றாவது ஒரு நாள் அந்த நீர் தேக்கம் வறண்டு போகும். ஆனால் நம் நீதியுள்ள ராஜா, ஒருபோதும் வறண்டு போகாத புத்துணர்ச்சியையும் ஜீவத் தண்ணீரையும் தருகிறார். 

 

- கேரன் பிம்போ