ஜாக்கிரதையாய் இருங்கள்
ஒருவன் தன் சிநேகிதர்களுடன் பனிச்சரிவு எச்சரிக்கை பலகைகள் பதிக்கப்பட்டிருந்த பனிச்சறுக்கு விடுதியின் வாயில் வழியாகச் சென்று பனிச்சறுக்கு விளையாட்டை ஆரம்பித்தார். கீழிறங்கும் இரண்டாவது பயணத்தில், யாரோ ஒருவர், “பனிச்சரிவு!” என்று சப்தமிட, ஆனால் அந்த மனிதன் தப்பிக்க முடியாமல் பனியில் இறந்து போனான். சிலர் அவரை கத்துக்குட்டி என்று விமர்சித்தனர். ஆனால் அவர் கத்துக்குட்டியில்லை. அவர் ஒரு “சான்றளிக்கப்பட்ட பனிச்சரிவு பயிற்சியாளர்.” “அவர் பாதுகாப்பாய் பயணிக்காததினால் தான் மரித்துவிட்டார்" என்று விபத்தில் மரித்தவர்களைக் குறுpத்து பனிச்சறுக்கு வீரர்களும், பனிச்சரிவு பயிற்சியாளர்களும் தவறான காரணங்களைக் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்லத் தயாரானபோது, தம்முடைய ஜனங்கள் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் காத்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். எனவே, அவருடைய அனைத்து “கட்டளைகளையும் நியாயங்களையும்” (உபாகமம் 4:1-2) கைக்கொள்ளும்படிக்கும், அதைக் கைக்கொள்ளாதவர்கள் மீது தேவன் அனுமதித்த நியாயத்தீர்ப்பையும் நினைவுகூரும்படிக்கு அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் தங்களைத் தாங்களே பரிசோதிக்கவும், தங்கள் உள்ளான வாழ்க்கையைக் கண்காணிக்கவும் “சாக்கிரதையாய்" இருக்கவேண்டும் (வச. 10). இது வெளியேயிருந்து வரும் ஆவிக்குரிய ஆபத்துகளிலிருந்தும் உள்ளான பொறுப்பற்ற தன்மையிலிருந்தும் அவர்களை காப்பாற்ற அவர்களுக்கு உதவியாயிருக்கும்.
நம்முடைய பாதுகாப்பைத் தகர்த்து, அக்கறையின்மை மற்றும் சுய வஞ்சனைக்கு ஆளாவது இயல்பு. நாம் வாழ்க்கையில் தோற்காமல் இருக்கும்பொருட்டும், அவருடைய கிருபையினிமித்தம் பாவமன்னிப்பையும் நமக்கு அருளுவாராக. அவருடைய ஆலோசனைகளுக்கு செவிகொடுப்பதினிமித்தமும், நம்முடைய பாதுகாப்பைப் பலப்படுத்தி, நல்ல தீர்மானங்களை எடுப்போம்.

உம்முடைய சத்தத்தைப் பயன்படுத்தி
எட்டு வயதிலிருந்தே, லிசா திக்குவாயுடன் போராடினாள். மக்களோடு பேச வேண்டிய சமுதாய சூழலை துணிச்சலாய் எதிர்கொள்ளத் தயங்கினாள். ஆனால் பேச்சு சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்பு, அது அவளுடைய எதிர்காலத்திற்கு உறுதுணையாயிருந்தது. லிசா மற்றவர்களுக்கு உதவ தனது குரலைப் பயன்படுத்த முடிவு செய்தாள். உணர்வு ரீதியாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் ஆலோசனை வழக்கும் சேவையை அவள் செய்தாள்.
சிறைப்பட்ட இஸ்ரவேலர்களை அவர்களின் சிறையிருப்பிலிருந்து மீட்பதற்கு பேச வேண்டிய அவசியத்தைக் குறித்து மோசே கவலைப்பட்டான். தேவன் மோசேயை, பார்வோனை எதிர்கொள்ளும்படிக்கு கேட்டார். ஆனால், மோசே தான் திக்குவாயன் என்பதினால் அதை ஏற்க மறுத்தான் (யாத்திராகமம் 4:10). தேவன் அவரிடம், “மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்?” என்று தேவன் மோசேக்கு சவால் விட்டு, “நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்” (வச. 11-12) என்று வாக்களித்தார்.
தேவனுடைய இந்த பதிலானது, நம்முடைய பெலவீனங்களிலும் தேவன் கிரியை நடப்பிக்க முடியும் என்று உறுதியளிக்கிறது. இதை நாம் இருதயத்தில் நம்பினாலும், அதின் படி வாழ்வது கடினம். மோசே தனக்கு பதிலாய் வேறு யாரையாவது அனுப்பும்படிக்கு தேவனிடத்தில் கேட்டுக்கொண்டான் (வச. 13). எனவே மோசேயின் சகோதரன் ஆரோனை அவனுடன் வர தேவன் அனுமதித்தார் (வச. 14).
மற்றவர்களுக்கு உதவும்படிக்கு நம்மிடம் குரல் வளம் இருக்கிறது. நாம் பயப்படலாம். நாம் தகுதியற்றவர்களாயிருக்கலாம். நமக்கு சரியான வார்த்தைகள் கிடைக்காமல் இருக்கலாம்.
நம்முடைய சிந்தனைகளை தேவன் அறிவார். அவருடைய சித்தத்தை நிறைவேற்றும்பொருட்டு, மற்றவர்களுக்கு நாம் ஊழியம் செய்வதற்கு ஏதுவான வார்த்தைகளை அவர் அருளுவார்.

தெய்வீக அன்பு
1917 ஆம் ஆண்டில், கலிபோர்னியா தொழிலதிபரான ஃபிரடெரிக் லெஹ்மன், பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டார். அப்போது, “தேவனின்; அன்பு” என்ற பாடலுக்கான வரிகளை எழுதினார். அவரது உத்வேகம் அவரை முதல் இரண்டு சரணங்களை விரைவாக எழுத வழிவகுத்தது, ஆனால் அவர் மூன்றாவது சரணத்தில் சிக்கிக்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சிறைச்சாலையின் சுவர்களில் ஒரு கைதியினால் எழுதப்பட்ட ஒரு கவிதை வரிகளை அவர் நினைவு கூர்ந்தார். தேவனுடைய அன்பின் ஆழமான விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், அந்த கைதி அதை அங்கே கல்லினால் கீறியிருந்தார். லெஹ்மனின் பாடலுடைய அதே ஸ்ருதிக்கு அந்த வரிகள் பொருந்தியது. அவர் அதை தனது பாடலின் மூன்றாவது சரணமாக மாற்றினார்.
சிறைச்சாலையில் இருந்த அந்த கைதியைப் போலவும், லெஹ்மன் என்னும் கவிஞரைப் போலவும் நாமும் கடினமான பின்னடைவை வாழ்க்கையில் சந்திக்க நேரிடும். இதுபோன்ற கடினமான தருணங்களின்போது, “உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்” (சங்கீதம் 57:1) என்னும் சங்கீதக்காரனுடைய வார்த்தைகளை நாம் எதிரொலிக்கலாம். நம்முடைய பிரச்சனைகளின்போது தேவனை நோக்கிக் கூப்பிடுவதும் (வச. 2), சிங்கங்களின் நடுவில் இருக்கும்போது (வச. 4), அவரிடம் முறையிடுவதும் நல்லது. கடந்த நாட்களில் தேவன் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து, “நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்... அதிகாலையில் விழித்துக்கொள்வேன்” (வச. 7–8) என்ற தாவீதின் வரிகளை எதிரொலிப்போம்.
“உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது” (வச. 10) என்று இந்த பாடல் சித்தரிக்கிறது. நம்முடைய தேவைகளின் போது தேவனை சார்ந்துகொள்வோமாகில், அவருடைய அன்பு வானபரியந்தம் உயர்ந்தது என்பதை நினைவில் கொள்வோம்.

சிறிய கருணை
அமண்டா, ஒரு சுற்றித்திரியும் செவிலியராகப் பணிபுரிகிறார். அவர் பல மருத்துவமனைகளில் சுழற்சி முறையில் வேலை செய்யவேண்டியிருக்கும். அடிக்கடி தன்னுடைய பதினொரு வயது மகள் ரூபியை வேலைக்கு அழைத்து வருவாள். ரூபி விளையாட்டுத் தனமாய் அங்கேயிருக்கும் நோயாளிகளிடம், “உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் கொடுத்தால், நீங்கள் விரும்புவது எதுவாயிருக்கும்” என்று கேட்பது வழக்கம். அவர்களுடைய பதிலை தன்னுடைய நோட்டு புத்தகத்தில் பதிவுசெய்து வைப்பாள். ஆச்சரியம் என்னவென்றால், அவர்களின் விருப்பங்கள் சிக்கன், சாக்லேட், வெண்ணை, பழங்கள் போன்ற சிறிய விஷயங்களாகவே இருந்தன. அவர்களின் தேவையை குறித்துக்கொண்ட ரூபி, அவற்றை வாங்குவதற்கு பணம் சேகரிக்கத் துவங்கினாள். அவர்கள் எதிர்பார்த்த பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்களை கட்டித் தழுவி, இது உங்களுக்கு ஆறுதலாயிருக்கிறதா என்று கேட்பாளாம்.
ரூபியைப் போல இரக்கத்தையும் கருணையையும் காட்டும்போது, நம் தேவனைப் பிரதிபலிக்கிறோம். அவர் “கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்” (சங்கீதம் 145:8). ஆகையினால்தான் அப்போஸ்தலனாகிய பவுல், தேவஜனமாகிய நம்மை, “பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு,” (கொலோசெயர் 3:12) ஜீவிக்கும்படிக்கு வலியுறுத்துகிறார். தேவன் நமக்கு அதிக இரக்கம் காண்பித்துள்ளபடியினால், அவருடைய இரக்கத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நாம் இயல்பாகவே தூண்டப்படுகிறோம். நாம் அவ்வாறு செய்யும்போது அது நாளடைவில் நம்முடைய சுபாவமாகவே மாறுகிறது.
மேலும் பவுல், “இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” (கொலோசெயர் 3:14) என்று கூறுகிறார். அனைத்து ஆசீர்வாதங்களும் தேவனிடமிருந்து வந்தவை என்பதை நினைவில் வைத்து, “நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து” (வச. 17), அவரை ஸ்தோத்தரியுங்கள் என்றும் நினைப்பூட்டுகிறார். நாம் மற்றவர்களிடம் இரக்கத்தை செயல்படுத்தும்போது, நம்முடைய ஆவி உயிர்ப்பிக்கப்படுகிறது.

இரண்டுமே உண்மை தான்
ஃபெங் லுலு, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது நிஜமான குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டாள். சீனாவில், அவள் குழந்தையாய் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது, அவள் கடத்தப்பட்டாள். ஒரு பெண்கள் குழுவினரால் அவள் மீட்கப்பட்டு அவளுடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டாள். அவள் கடத்தப்பட்டபோது சிறு பிள்ளையாய் இருந்தபடியால், ஃபெங் லுலுவுக்கு அந்த சம்பவம் நினைவில் இல்லை. அவளுடைய பெற்றோரால் அவளை பராமரிக்க முடியாததால் அவளை விற்றுவிட்டதாக அவள் நம்பினாள். ஆனால் உண்மை என்னவென்று தெரிந்தபின்பு, அவளுடைய பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைத்தது.
யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுடன் மீண்டும் சேர்ந்தபோது, அவரும் பலதரப்பட்ட உணர்வுகளுக்குள் கடந்துபோயிருக்கலாம். அவன் ஒரு இளைஞனாக எகிப்தில் அடிமையாக அவனது சொந்த சகோதரர்களால் விற்கப்பட்டான். தொடர்ந்து பல போராட்டங்களை யோசேப்பு சந்தித்தபோதிலும், தேவன் அவனை அதிகாரத்திற்கு உயர்த்தினார். ஒரு கட்டத்தில், அவனுடைய சகோதரர்கள் தேசத்தில் பஞ்சத்தின் காரணமாக, உணவு வாங்க எகிப்துக்கு வந்தபோது, அவன் யார் என்று அறியாமலேயே அவனிடத்தில் உணவுக்காய் வேண்டி நின்றனர்.
“பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காக” தேவன் யோசேப்பைப் பயன்படுத்தினார் என்று சொல்லுவதின் மூலம் தேவன் அவர்களுடைய தப்பிதங்களை மாற்றினார் (ஆதியாகமம் 45:7). ஆயினும்கூட, யோசேப்பு அவர்கள் தமக்கு செய்த தப்பிதங்களை நினைவுபடுத்திக் காண்பிக்கவில்லை. விற்றுப்போட்டீர்கள் என்று மட்டுமே சொல்லுகிறான் (வச. 5).
நாம் சில வேளைகளில் நமக்கு நேரிடும் கடினமான சூழ்நிலைகளில் உள்ள நேர்மறையான நல்ல காரியங்களை மட்டுமே பொருட்படுத்த முனைகிறோம். அது தோற்றுவிக்கும் உணர்ச்சிபூர்வான விளைவை பொருட்படுத்துவதில்லை. தேவன் அதை மீட்டுக்கொண்டு வந்ததால், தவறை நன்மை என்று புரிந்துகொள்ள வேண்டாம். தப்பிதங்கள் நமக்கு தோற்றுவித்த வேதனையை உணர்ந்துகொண்டே அதிலிருந்து தேவன் நன்மையைக் கொண்டுவர எதிர்நோக்குவோம். இரண்டுமே உண்மைதான்.