நம்பிக்கையோடு சகித்தல்
நான்கு வயதான சாலமனுக்கு தசைநார் சிதைவு என்னும் தசை சிதைவு நோய் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஒரு வருடம் கழித்து, மருத்துவர்கள் குடும்பத்துடன் சக்கர நாற்காலிகளைப் பற்றி விவாதித்தனர். ஆனால் சாலமன் அதை பயன்படுத்த விரும்பவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தான். குடும்பத்தினரும் நண்பர்களும் அவனுக்காக ஜெபம் செய்தனர். அவனை முடிந்தவரை சக்கர நாற்காலியிலிருந்து வெளியே வைத்திருக்க எண்ணி, பயிற்சி பெற்ற நாய் ஒன்றினை உதவிக்கு வைப்பதற்கு நிதி திரட்டினார்கள். கேல்லி என்ற தன்னுடைய நாயினை பயிற்றுவித்த டெய்ல்ஸ் ஃபார் லைஃப் என்ற அந்த நிறுவனம், தற்போது சாலமனுக்காக ஒரு நாயை பயிற்றுவிக்கிறது.
சாலமன் தற்போது அவனுடைய சிகிச்சையை ஏற்றுக்கொண்டாலும், சில கடினமான நாட்களைக் கடக்கும்போது, தேவனைத் துதித்து பாடிக்கொண்டேயிருப்பான். சாலமன் தனது அம்மாவைக் கட்டிப்பிடித்து, “பரலோகத்தில் தசைநார் சிதைவு இல்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொன்னான்.
வியாதியின் விளைவுகள் இந்த தற்காலிக பூமியில் வசிக்கும் அனைவரையும் பாதிக்கின்றன. இருப்பினும், சாலமனைப் போலவே, அந்த தவிர்க்க முடியாத கடினமான நாட்களில் நம்முடைய தீர்மானத்தை பலப்படுத்தக்கூடிய நிலையான நம்பிக்கை நமக்கு இருக்கிறது. “புதிய வானமும் புதிய பூமியும்” (வெளிப்படுத்துதல் 21:1) என்ற வாக்குறுதியை தேவன் நமக்குத் தந்திருக்கிறார். நம்முடைய சிருஷ்டிகரும் பாதுகாவலருமாகிய தேவன் நம்மோடு வாசம்பண்ணுவார் (வச. 3). நம் கண்களிலிருந்து வரும் “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” (வச. 4). காத்திருத்தல் “மிகவும் கடினமாக” அல்லது “மிகவும் நீளமானதாக” உணரும்போது, தேவன் வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர் என்பதினால் நாம் இளைப்பாறுதலை உளமாற அனுபவிக்கலாம்.

நம்பிக்கைகளும் ஏக்கங்களும்
நான் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்ற நாட்களில், அமெரிக்காவின் நன்றிசெலுத்தும் விடுமுறை நாளானது வேறொரு வியாக்கிழமைக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த வாரத்தின் இறுதியில் நான் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்தினாலும், அந்த குறிப்பிட்ட நாளில் என்னுடைய குடும்பத்தினருடனும் சிநேகிதர்களுடனும் இருக்கமுடியவில்லையே என ஏங்கினேன். ஆனாலும் என் ஏக்கங்கள் எனக்கு மட்டும் உரியது இல்லை என்பதை புரிந்துகொண்டேன். விசேஷமான தருணங்களிலும் விடுமுறை நாட்களிலும் நமக்குப் பிரியமானவர்களுடன் இருக்க நாம் அனைவரும் ஏங்குகிறோம். நாம் கொண்டாடும் போது கூட, நம்முடன் இல்லாத ஒருவரை நாம் இழக்க நேரிடலாம் அல்லது நமது உடைந்த குடும்பம் நிம்மதியாக இருக்க ஜெபிக்கலாம்.
இதுபோன்ற சமயங்களில், வேதத்தின் ஞானத்தைப் பற்றி ஜெபிப்பதும் சிந்திப்பதும் எனக்கு உதவியது. அதில் சாலெமோனின் நீதிமொழியும் உள்ளடங்கும்: “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்” (நீதிமொழிகள் 13:12). இந்த வார்த்தையில், சாலெமோன் “தாமதிக்கிற நம்பிக்கை" ஏற்படுத்தக்கூடிய விளைவை குறிப்பிடுகிறார். அதிக ஏக்கமான ஒன்றை தாமதப்படுத்துவது, கவலை மற்றும் வேதனையை விளைவிக்கும். ஆனால் அது கிடைக்கும்போது, அது ஜீவ விருட்சம் போலிருக்கும் என்று குறிப்பிடுகிறார். அது நம்மை புத்துணர்ச்சியுடனும், துடிப்புடனும் உணர அனுமதிக்கிறது.
நம்முடைய சில நம்பிக்கைகள் மற்றும் ஆசைகள் உடனடியாக நிறைவேறாமல் போகலாம். சிலவைகளை நம்முடைய மரணத்திற்கு பின்பும் தேவன் நிறைவேற்றலாம். நம்முடைய ஏக்கம் எதுவாக இருந்தாலும், அவர் நம்மை இடைவிடாமல் நேசிக்கிறார் என்பதை அறிந்து, நாம் அவரை விசுவாசிக்கலாம். அத்துடன் ஒருநாள் நம்முடைய அன்புக்குகந்தவர்களோடு அவருடைய பரம விருந்தில் பங்கேற்போம் (வெளி. 19:6-9, பார்க்க).

நம்முடைய எதிர்காலத்திற்காய் தேவனை நம்புதல்
2010 ஆம் ஆண்டில், லஸ்லோ ஹன்யெஸ், பிட்காயினுடன் முதல் கொள்முதல் செய்தார் (ஒரு டிஜிட்டல் நாணயம் பின்னர் ஒவ்வொன்றும் ஒரு பைசாவின் ஒரு பகுதி மதிப்புடையது). இரண்டு பீட்;ஸா உணவுக்கு 10,000 பிட்காயின்கள் செலுத்தப்பட்டது (25டாலர் - அப்போது சுமார் ரூ.1,125). 2021 ஆம் ஆண்டின் மிக உயர்ந்த மதிப்பில், பிட்காயின்களின் முந்தின மதிப்பை விட (சுமார் ரூ.3,900 கோடி) அதிகமாக இருந்திருக்கும். மதிப்பு உயரும் முன், அவர் பீட்சாக்களுக்கு நாணயங்களுடன் பணம் செலுத்தி, மொத்தம் 100,000 பிட்காயின்களை செலவு செய்தார். அவர் அந்த பிட்காயின்களை செலவு செய்யாமல் வைத்திருந்தால், அவற்றின் மதிப்பு அவரை அறுபத்தெட்டு மடங்கு கோடீஸ்வரராக்கி, அவரை “உலகின் பணக்காரர்கள்” பட்டியலில் இடம்பெறச் செய்திருக்கும். எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் முன்னமே அறிந்திருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
லஸ்லோ நிச்சயமாக அதை அறிந்திருக்க முடியாது. எதிர்காலத்தை யாராலும் முன்கூட்டியே கணிக்கமுடியாது. எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்து அதைக் கட்டுப்படுத்த நாம் முயற்சிக்கும்போது, “நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்” (10:14) என்று பிரசங்கி எச்சரிக்கிறார். மற்றொரு நபரின் வாழ்க்கையைக் குறித்து, அல்லது எதிர்காலத்தைப் பற்றிய சில நுண்ணிய வெளிப்பாடு தம்மிடம் இருப்பதாக சிலர் எண்ணிக்கொண்டு தங்களையே ஏமாற்றிக்கொள்கின்றனர். ஆனால் பிரசங்கியோ, “தனக்குப் பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?” (வச. 14) என்று கேட்கிறார். யாருமேயில்லை!
வேதம், ஞானியையும் மதியீனனையும் வேறுபடுத்துகிறது. இருவருக்கும் இடையே உள்ள பல வேறுபாடுகளில் ஒன்று, எதிர்காலத்தைப் பற்றிய மனத்தாழ்மை (நீதிமொழிகள் 27:1). தீர்மானம் எடுக்கும்போது, தேவன் மட்டுமே அனைத்தையும் அறிவார் என்னும் மனநிலையிலேயே ஞானி ஒரு தீர்மானத்தை எடுக்கிறான். ஆனால் மதியீனர்கள் தங்களுக்கு சொந்தமில்லாத அறிவை நாடுகிறார்கள். நம்முடைய எதிர்காலம் அறிந்த ஒரே தேவனை நாம் விசுவாசிக்கும் ஞானத்தை தேவனிடத்தில் நாடுவோம்.

ஆக்கப்பூர்வமான விசுவாசம்
2021 ஜூன் மாதம், மாலை நேரத்தில் ஒரு சமூகத்தில் சூறாவளி புயல் வீசியது. அது அங்கிருந்த ஒரு குடும்பத்தினரின் கொட்டகையை அழித்தது. அது 1800ஆம் ஆண்டிலிருந்து அவர்களின் குடும்ப சொத்தாக இருந்ததினால், அதின் அழிவு அவர்களுக்கு சோகத்தை வருவித்தது. ஜானும் அவருடைய மனைவியும் அடுத்த நாள் காலை தேவாலயத்திற்குச் செல்லும் வழியில், காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் அந்த சேதத்தைப் பார்த்து, எப்படி அவர்களுக்கு உதவ முன்வரலாம் என்று யோசித்தனர். ஏற்பட்டிருக்கிற அந்த சேதாரத்திலிருந்து முதலில் அவைகள் சுத்தம்செய்யப்பட வேண்டும் என்பதை உணர்ந்தனர். உடனே தங்கள் காரை ஒரு ஓரமாய் நிறுத்திவிட்டு, உடை மாற்றிக்கொண்டு, புயல் காற்றின் மூலமாய் அந்த வீட்டில் ஏற்பட்ட சேதாராத்தை சுத்தம் செய்ய துவங்கினர். அந்த குடும்பத்தினருக்கு உதவிசெய்ததின் மூலம், அவர்களுடைய விசுவாசத்தை ஆக்கபூர்வமான விசுவாசமாய் மாற்றினர்.
“கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது” (யாக்கோபு 2:26) என்று யாக்கோபு சொல்லுகிறார். அதற்கு ஆபிரகாமின் உதாரணத்தை காண்பிக்கிறார். அவர் எங்கு செல்கிறார் என்று தெரியாதபோது கீழ்ப்படிதலுடன் தேவனைப் பின்தொடர்ந்தார் (வச. 23; பார்க்க ஆதியாகமம் 12:1-4; 15:6; எபிரெயர் 11:8). எரிகோ பட்டணத்தை வேவு பார்க்க வந்த வேவுக்காரர்களை தன் வீட்டில் மறைத்து வைத்து, இஸ்ரவேல் தேவன் மீது தனக்கிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்திய ராகாபையும் யாக்கோபு உதாரணப்படுத்துகிறார் (யாக்கோபு 2:25; பார்க்க, யோசுவா 2; 6:17).
“ஒருவன் தனக்கு விசவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன?” (யாக்கோபு 2:14). “விசுவாசமே வேர், நற்கிரியைகளே பலன்; இரண்டும் நம்மிடம் இருக்கும்படிக்கு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று மேத்யூ ஹென்றி குறிப்பிடுகிறார். நம்முடைய நற்கிரியைகள் தேவனுக்கு தேவையில்லை; ஆனால் நம்முடைய விசுவாசம் நற்கிரியைகளின் மூலமாகவே நிரூபிக்கப்படுகிறது.

பின்னோக்கி வாசித்தல்
ஒரு நல்ல நாவல் புத்தகத்தின் கடைசி அத்தியாத்தை முதலில் வாசிப்பது என்பது, அக்கதையின் சுவாரஸ்யத்தை உடைக்கும் தவறான ஒரு முயற்சி. ஆனால் அக்கதை எப்படி முடியும் என்பதை சிலர் தெரிந்துகொண்ட பிறகும், அதை சுவாரஸ்யம் குறையாமல் வாசிக்கும் சிலர் இருக்கின்றனர்.
வேதாகமத்தை பின்னோக்கி வாசிப்பது எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை எழுத்தாளர் ரிச்சர்ட் ஹேஸ் குறிப்பிடுகிறார். வேதாகம வார்த்தைகளும் சம்பவங்களும் எவ்விதம் எதிர்காலத்தை சார்ந்திருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி, வேதாகமத்தை முன்னும் பின்னும் வாசிப்பதற்கான காரணத்தை பேராசிரியர் ஹேஸ் தருகிறார்.
உடைக்கப்பட்ட ஆலயத்தை மூன்று நாட்களுக்குள் எடுப்பித்து கட்டுவேன் என்று இயேசு சொன்ன காரியங்களை, அவருடைய உயிர்த்தெழுதலுக்கு பின்னரே சீஷர்கள் விளங்கிக்கொண்டனர் என்று ஹேஸ் குறிப்பிடுகிறார். அப்போஸ்தலனாகிய யோவான், “அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்” (யோவான் 2:21) என்று சொல்லுகிறார். அதுவரை பஸ்கா பண்டிகை அநுசரிப்பதின் காரணத்தை அறியாதவர்கள், அப்போதுதான் அறிந்துகொண்டனர் (மத்தேயு 26:17-29). ஒரு பண்டைய ராஜாவின் ஆழமான உணர்வுகளுக்கு இயேசு எவ்வாறு முழு அர்த்தத்தை அளித்தார் என்பதை பின்னோக்கிப் பார்த்தால் மட்டுமே அவர்களால் புரிந்துகொள்ள முடியும் (சங்கீதம் 69:9; யோவான் 2:16-17). தேவனுடைய மெய்யான ஆலயத்தினை (இயேசு) குறித்து பின்னாலிருந்து வாசித்தால் மட்டுமே, இஸ்ரவேல் மார்க்கத்தின் சடங்காச்சாரங்கள் மற்றும் மேசியா குறித்ததான நம்பிக்கையில் சீஷர்கள் தெளிவு காண முடியும்.
இப்போது, இதே வேதாகமத்தை முன்னும் பின்னுமாக வாசிப்பதன் மூலம் மட்டுமே, இயேசுவில் நம்முடைய தேவைகளை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.