
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்
“அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று எனக்கு தெரியும், ஆனால் நான் உனக்கு சொல்லுகிறேன்” என்ற வாக்கியத்தை என்னுடைய அம்மா ஆயிரம் முறை சொல்லிவிட்டார்கள். தவறான நண்பர்களின் சகவாசத்தை அவ்வாறு சொல்வது வழக்கம். அந்த மந்தையை பின்பற்ற வேண்டாம் என்று அவர் எனக்கு போதிக்க முயற்சித்தார். நான் இன்னும் சிறுவனில்லை. ஆனால் மந்தையின் மனநிலை இன்னும் உயிருடன் இருக்கிறது. “உங்களை சுற்றிலும் நேர்மறையான நபர்களையே தேர்ந்தெடுங்கள்” என்பதே தற்போது பரவலாய் சொல்லப்படும் ஆலோசனை. ஆனால் அதைக் கேட்கும்போது, “இது கிறிஸ்துவின் வழியா” என்று எண்ணத் தோன்றுகிறது.
“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்...” என்று மத்தேயு 5ஆம் அதிகாரத்தில் இயேசு பலமுறை சொல்லுகிறார். இந்த உலகம் நமக்கு தொடர்ந்து என்ன சொல்லிக்கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் நாம் வித்தியாசமானவர்களாய் வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதினால் “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்... உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்” (வச. 44). புதிய ஏற்பாட்டின் பிற்பகுதியில், பவுல் அப்போஸ்தலர் “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில்” (ரோமர் 5:10) தேவன் நம்மை நேசித்தார் என்று அதற்கான நியாயமான காரணத்தை முன்வைக்கிறார். “நான் செய்வதுபோல் செய்யாமல், நான் சொல்லுவதை செய்யுங்கள்” என்று சொல்லுகிறவர்களைப் போலல்லாமல், இயேசு செய்வதையே சொன்னார். அவர் நம்மை நேசித்து தம்முடைய ஜீவனை நமக்காய் கொடுத்தார்.
இயேசு கிறிஸ்து நல்லவர்களை மட்டும் தன்னிடம் அனுமதித்திருந்தால் என்னவாகியிருக்கும்? நாம் எங்கே இருந்திருப்போம்? தகுதி பார்த்து தெரிந்துகொள்ளாத அவருடைய அன்பிற்காய் தேவனுக்கு நன்றி. தேவன் உலகத்தின் மீது அன்புகூர்ந்தார். அதைப்போல நாமும் செய்ய அவர் நம்மை பெலப்படுத்துவார்.

இருதயப் பிரச்சனை
“சகோதரர். டிம், நீங்கள் அதைப் பார்த்தீர்களா?” எனது நண்பர், கானா நாட்டு போதகர், ஒரு மண் குடிசையில் சாய்ந்திருந்த செதுக்கப்பட்ட ஒரு பொருளின் மீது தனது டார்ச் லைட்டை ஒளிரச் செய்து என்னிடத்தில் அப்படி கேட்டார். அமைதியாக, “அந்த சிலை தான் இவர்களுடைய விக்கிரகம்” என்றார். ஒவ்வொரு செவ்வாய் மாலையும், பாஸ்டர். சாம் இந்த தொலைதூர கிராமத்தில் சத்தியத்தை பகிர்ந்துகொள்ள இந்த புதர்வழியாய் பயணம் செய்வது வழக்கம்.
எசேக்கியேல் புத்தகத்தில், யூதேய ஜனங்கள் எவ்விதம் விக்கிரக ஆராதனையில் சிக்குண்டார்கள் என்று நாம் பார்க்கமுடியும். எருசலேமின் தலைவர்கள் எசேக்கியேல் தீர்க்கதரிசியை பார்க்க வந்தபோது, “இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி(யுள்ளனர்)” (14:3) என்று தேவன் எசேக்கியேலுக்கு வெளிப்படுத்துகிறார். மரத்தினாலும் மண்ணினாலும் செய்யப்பட்ட விக்கிரகங்கள் அவருடைய பிரச்சனை அல்ல. அது அவர்களுடைய இருதயத்தின் பிரச்சனை என்பதை எசேக்கியேல் அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். நாம் அனைவரும் அந்த பிரச்சனையினால் பாதிக்கப்படுகிறோம்.
அலிஸ்டர் பெக் என்னும் வேதாகம ஆசிரியர், “தேவனைத் தவிர்த்து நம்முடைய சமாதானத்திற்காகவும், சுய அங்கீகாரத்திற்காகவும், திருப்திக்காகவும் அல்லது நம்முடைய விருப்பத்திற்காகவும் நாம் எதையெல்லாம் தேடுகிறோமோ” அதுவே விக்கிரகம் என்று குறிப்பிடுகிறார். நம்முடைய பார்வைக்கு நல்லதாய் தெரிகிற காரியங்கள் கூட விக்கிரகமாய் மாறலாம். ஜீவனுள்ள தேவனை விட்டுவிட்டு நம்முடைய சுயமதிப்பையும் விருப்பத்தையும் எங்கு தேடினாலும் அது விக்கிரக ஆராதனையே.
“திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள்” (வச. 6) என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆனால் அதைச் செய்வதற்கு இஸ்ரவேல் தகுதியற்றது என்பதை நிரூபித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக தேவனிடத்தில் அதற்கான தீர்வு இருந்தது. கிறிஸ்துவின் வருகையையும் பரிசுத்த ஆவியானவருடைய வரங்களையும் சிந்தையில் வைத்து, “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையி(டுவேன்)” (36:36). என்று வாக்குபண்ணுகிறார். இதை நாம் தனியாய் சாதிப்பது சாத்தியமில்லை.

ஒருபோதும் தாமதிக்காதே
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு ஊருக்கு பார்வையாளராய் சென்ற என்னுடைய அமெரிக்க போதகர், காலை 10 மணி ஞாயிறு ஆராதனைக்கு வந்துசேருவதாக உறுதியளித்திருந்தார். ஆலயம் வெறுமையாயிருந்தது. அவர் காத்திருந்தார். ஒரு மணி நேரம் கடந்தது. இரண்டு மணி நேரம் கடந்தது. கடைசியாக, 12:30 மணிக்கு திருச்சபையின் போதகர் உள்ளே வர, அவரைத் தொடர்ந்து பாடல் குழுவினரும், திருச்சபை அங்கத்தினர்களும் உள்ளே பொறுமையாக வந்தனர். ஆராதனை துவங்கியது. “காலம் நிறைவேறினபோது ஆவியானவர் நம்மை அழைத்தார், தேவன் தாமதிக்கவில்லை” என்று என்னுடைய போதகர் பின்பாக எங்களிடம் அந்த சம்பவத்தைக் குறித்து சொன்னார். அந்த இடத்தின் கலாச்சாரம் வித்தியாசமானது என்பதை என்னுடைய போதகர் புரிந்துகொண்டார்.
காலம் என்பது கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் வித்தியாசப்படலாம், ஆனால் தேவனுடைய குறித்த நேரம் என்பது வேதத்தில் பரவலாய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லாசரு வியாதிப்பட்டு மரித்தபின்பு, இயேசு நான்கு நாட்கள் கழித்து வருகிறார். லாசருவின் சகோதரியைப் பார்த்து ஏன் என்று விசாரிக்கிறார். மார்த்தாள் இயேசுவிடம் “ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்” (யோவான் 11:21) என்று கூறுகிறாள். ஏன் தேவன் நம்முடைய அவசரத்திற்கு செயல்பட்டு காரியங்களை சரிசெய்வதில்லை என்று நாமும் அப்படி யோசிக்கலாம். அவருடைய பதிலுக்காகவும் வல்லமையான கிரியைக்காகவும் காத்திருப்பதே நல்லது.
இறையியல் நிபுணரான ஹொவர்ட் துர்மேன், “பிதாவே, நாங்கள் காத்திருக்கிறோம், உம்முடைய பெலன் எங்களுடைய பெலனாகும் வரை, உம்முடைய இருதயம் எங்களுடைய இருதயமாகும் வரை, உம்முடைய மன்னிப்பு எங்களுடைய மன்னிப்பாகும் வரை, நாங்கள் காத்திருக்கிறோம் தேவனே, நாங்கள் காத்திருக்கிறோம்” என்று எழுதுகிறார். கடைசியில் லாசருவுக்கு தேவன் அற்புதத்தினால் பதிலளித்ததுபோல, நாமும் பதிலைப்பெறும்போது, தாமதத்தின் அர்த்தத்தை சரியாய் விளங்கிக்கொள்ளக் கூடும்.

திருப்தியாயிரு
டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் கொடூரமான படுகொலை 1960களில் அமெரிக்க சட்ட உரிமைகள் இயக்கத்தின் முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால் அவர் கொலைசெய்யப்பட்டு சரியாய் நான்கு நாட்கள் கழித்து, விதவையாக்கப்பட்ட அவருடைய மனைவி கொரேட்டா ஸ்காட் கிங் தன்னுடைய கணவருடைய ஸ்தானத்தில் நின்று ஒரு அமைதியான எதிர்ப்பு அணிவகுப்பை நடத்தினார். கொரேட்டா நீதியை நிலைநாட்டுவதில் பேரார்வம் கொண்டிருந்தார். பல விஷயங்களில் சாதனையாளராகவும் திகழ்ந்தார்.
இயேசு, “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” (மத்தேயு 5:6) என்று சொல்லுகிறார். தேவன் ஒரு நாள் பூமியில் வந்து அநீதிகளை தகர்த்து நீதியை நிலைப்படுத்துவார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதுவரை கொரேட்டாவைப் போன்று கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி பூமியில் நீதியை நிலைப்படுத்த முயற்சிப்போம். ஏசாயா 58 ஆம் அதிகாரம், தேவன் தன் ஜனங்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார் என்பதை பட்டியலிடுகிறது: “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும்.. நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும்.. பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்” (வச. 6-7). ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காய் பிரயாசப்படுவது நம்முடைய தேவபக்தியை வெளிப்படுத்துகிற ஒரு விதம். ஏசாயா, தேவ ஜனம் நீதியைத் தேடுவதை விடியற்கால வெளிச்சத்துடன் ஒப்பிட்டு, அது சுகவாழ்வை கொண்டுவரும் என்று கூறுகிறார் (வச. 8).
இன்று தேவன், அவருடைய நீதியைக் குறித்த நம்முடைய பசிதாகத்தை பிரதிபலிக்க உதவிசெய்வாராக. அவருடைய வழியில் நாம் நீதியை தேடும்போது, அதில் நாம் திருப்தியடைவோம் என்று வேதம் சொல்லுகிறது.
