
ஒரு குரங்கு, ஒரு கழுதை மற்றும் நான்
இரயில்களை சரியான தண்டவாளத்திற்கு மாற்றுவது எப்படி என்று ஜாக் அறிந்திருந்தான். ஒன்பது வருட அனுபவத்தில், தென்னாப்பிரிக்காவின் உய்டென்ஹேஜ் நிலையத்திற்கு வரும் ரயில்கள், அவை செல்ல வேண்டிய திசையை பேரொலி மூலம் சுட்டிக்காட்டியதால், அவன் தண்டவாள மாற்றுக் கருவியைச் சரியாக இயக்குவான்.
ஜாக் மனிதனல்ல ஒரு பபூன் குரங்கு. அவனை ரயில்வே சிக்னல்மேன் ஜேம்ஸ் வைட் பராமரித்து வந்தார். ஜாக்கும் தன் பங்கிற்கு அவருக்கு உதவியது. ஓடும் ரயில் பெட்டிகளுக்கு இடையே விழுந்ததில் வைட் தனது இரண்டு கால்களையும் இழந்தார். வீட்டுவேலைகளில் அவருக்கு உதவ ஜாக் பயிற்றுவிக்கப்பட்டான். விரைவில் ஜாக் அவருக்கு வேலையில் உதவினான், உள்வரும் ரயில்களின் சமிக்ஞைகளுக்கு ஏற்ப அதன் தடங்களுக்கு ஏற்ற நெம்புகோல்களை இழுப்பதன் மூலம் எவ்வாறு தடம் மாற்றவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டது.
வியக்கத்தக்க விதத்தில் ஒருவருக்கு உதவிய மற்றொரு மிருகத்தைப் பற்றி வேதம் சொல்கிறது, அது பிலேயாமின் கழுதை. பிலேயாம் ஒரு புறஜாதி தீர்க்கதரிசி, இஸ்ரவேலுக்குத் தீங்கு செய்ய எண்ணிய ஒரு ராஜாவுக்குச் சேவையாற்றினான். ராஜாவுக்கு உதவியாக பிலேயாம் கழுதையின் மேல் ஏறிச் சென்றபோது, “கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்” அது பிலேயாமிடம் பேசியது (எண் 22:28). கழுதையின் பேச்சு, கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறக்கும் விதத்தின் ஒரு பகுதியாக இருந்தது (v. 31), உடனடி ஆபத்தைப் பற்றி எச்சரித்து, தேவஜனங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் அவனைத் தடுத்தது.
ஒரு ரயில்வே பபூன்? பேசும் கழுதை? ஏன் கூடாது? தேவன் இந்த அற்புதமான விலங்குகளை நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினால், அவர் உங்களையும் என்னையும் பயன்படுத்துவார் என்பதில் சந்தேகமேயில்லை. அவரையே நோக்கிப்பார்த்து அவருடைய பலத்தை நாடினால், நாம் நினைத்ததை விட அதிகமாகச் சாதிக்க முடியும்.

தேவையை பார்த்தல்
என் அப்பாவின் கடைசி சில நாட்களில், ஒரு செவிலியர் அவருடைய அறைக்கு வந்து, அவருக்கு முகச்சவரம் செய்ய வேண்டுமா என்று கேட்டார். செவிலியர் மெதுவாக அவர் முகத்தைச் சவரம் செய்கையில், “இவர் தலைமுறையைச் சேர்ந்த வயதானவர்கள் தினமும் சுத்தமாகச் சவரம் செய்ய விரும்புகிறார்கள்” என்று விளக்கினார். ஒருவருக்கு இரக்கம், கண்ணியம் மற்றும் மரியாதையைக் காட்ட வேண்டிய தேவையை உள்ளுணர்ந்து அந்த செவிலியர் செயலாற்றினார். அவர் அளித்த பரிவான கவனிப்பு என் இன்னொரு தோழியை எனக்கு நினைவூட்டியது, அவள் வயதான தாயின் நகங்களுக்கு இன்னும் நகப்பூச்சு பூசுகிறாள், ஏனென்றால் தான் அழகாயிருப்பது அந்த அம்மாவுக்கு முக்கியம்.
அப்போஸ்தலர் 9, தொற்காள் (தபீத்தாள் என்றும் அழைக்கப்படுபவர்) என்ற சீஷியை பற்றி நமக்குக் கூறுகிறது, அவர் ஏழைகளுக்கு கையால் செய்யப்பட்ட ஆடைகளை வழங்குவதன் மூலம் கருணை காட்டினார் (வ. 36,39). அவர் இறந்தபோது, அவரது அறை நண்பர்களால் நிரம்பியது, அவர்கள் மற்றவர்களுக்கு உதவ விரும்பும் இந்த அன்பான பெண்ணைக் கண்ணீருடன் துக்கித்தனர்.
ஆனால் தொற்காளின் கதை அங்கு முடிவடையவில்லை. பேதுருவை அவள் உடல் கிடத்தப்பட்ட இடத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, அவன் மண்டியிட்டு ஜெபம் செய்தான். தேவனின் வல்லமையால், "தபீத்தாளே, எழுந்திரு" (வ. 40) என்று கூறி அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். ஆச்சரியமாக, தொற்காள் கண்களைத் திறந்து காலூன்றி நின்றாள். அவள் உயிருடன் இருப்பதை அவளுடைய நண்பர்கள் உணர்ந்தபோது, நகரம் முழுவதும் வார்த்தைகள் விரைவாகப் பரவின, மேலும் "அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்" (வ. 42).
தொற்காள் தன் வாழ்க்கையின் அடுத்த நாளை எப்படிக் கழித்தாள்? ஒருவேளை அவள் முன்பு இருந்ததைப் போலவே; மக்களின் தேவைகளைப் பார்த்து அவற்றை பூர்த்திசெய்திருப்பாள்.

இது ஓர் அடையாளமா?
அந்த வேலைவாய்ப்பு நன்றாக இருந்தது, பீட்டருக்குத் தேவையானதும் அதுவே. பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு அந்த இளம் குடும்பத்தின் வேலைசெய்யும் இந்த ஒரே நபராக வேலைக்காகத் தீவிரமாக ஜெபித்தார். "நிச்சயமாக இது உன் ஜெபங்களுக்கான தேவனின் பதில்" என்று அவரது நண்பர்கள் குறிப்பிட்டனர்.
இருப்பினும், வருங்கால முதலாளியைப் பற்றிப் படித்தறிந்த பின்னர் , பீட்டர் சங்கடமாக உணர்ந்தார். அந்த நிறுவனம் சந்தேகத்திற்கிடமான வணிகங்களில் முதலீடு செய்திருந்தது மற்றும் ஊழல் குற்றச்சாட்டப்பட்டிருந்தது. வேதனையாக இருப்பினும் இறுதியில் பீட்டர் அந்த வாய்ப்பை நிராகரித்தார். "நான் சரியானதைச் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புவதாக நம்புகிறேன், அவர் என் தேவையைச் சந்திப்பார் என்று நம்பினால் போதும்" என்று என்னிடம் பகிர்ந்தார்.
தாவீது சவுலை ஒரு குகையில் சந்தித்த செய்தி பீட்டருக்கு நினைவுக்கு வந்தது. தாவீதை கொல்ல துடித்த மனிதனைக் கொல்ல அவருக்குச் சரியான வாய்ப்பாக தோன்றியது, ஆனால் தாவீது மறுத்தார். “கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு கர்த்தர் என்னைக் காப்பாராக” (1சாமுவேல் 24:6) என்று காரணம் சொன்னார். சம்பவங்களைக் குறித்த தன் சொந்த கண்ணோட்டத்திற்கும், தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சரியானதைச் செய்வதற்கும் இடையேயான வித்தியாசத்தை தாவீது கவனமாகப் பகுத்தறிந்தார்.
சில சூழ்நிலைகளில் எப்போதும் "அடையாளங்களை" தேடுவதற்குப் பதிலாக, நமக்கு முன்னால் என்ன இருக்கிறது என்பதைப் பகுத்தறிவதற்கான ஞானம் மற்றும் வழிகாட்டுதலுக்காகத் தேவனையும் அவருடைய சத்தியத்தையும் கண்ணோக்குவோம். அவருடைய பார்வையில் சரியானதைச் செய்ய அவர் நமக்கு உதவுவார்.


