செயலில் இரக்கம்
பெஞ்சுகளை உருவாக்குவது ஜேம்ஸ் வாரனின் வேலை அல்ல. இருப்பினும், டென்வரில் பேருந்திற்காக காத்திருந்த ஒரு பெண் மண்ணில் அமர்ந்திருப்பதைக் கவனித்தபோது, பெஞ்சை செய்ய ஆரம்பித்தான். மக்கள் கீழே அமர்ந்திருப்பது கண்ணியமற்றது என்று வாரன் கவலைப்பட்டான். எனவே, இருபத்தெட்டு வயதான அவன், சில பழைய மரங்களைக் கண்டுபிடித்து, ஒரு பெஞ்சைக் கட்டி, பேருந்து நிறுத்தத்தில் வைத்தான். அது விரைவில் பழகிவிட்டது. தனது நகரத்தில் உள்ள ஒன்பதாயிரம் பேருந்து நிறுத்தங்களில் இருக்கைகள் இல்லாததை உணர்ந்த அவன், மற்றொரு பெஞ்சை உருவாக்கினான், பின்னர் அதுபோன்று பல இருக்கைகளை உருவாக்கி, அதில் “கனிவோடு இருங்கள்” என்று பொறித்து வைக்க ஆரம்பித்தான். அவனது இலக்கு? “என்னால் முடிந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கை முறையை சற்று மேம்படுத்த எண்ணினேன்” என்று பதிலளித்தானாம்.
அந்த செயலையே “இரக்கம்” என்றும் சொல்லலாம். இயேசு நடைமுறைப்படுத்தியபடி, இரக்கம் என்பது மிகவும் வலுவான ஒரு உணர்வு, அது மற்றொருவரின் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க நம்மை வழிநடத்துகிறது. அவிசுவாசமான ஜனங்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தபோது, “அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகி” (மாற்கு 6:34) அவர்களுக்கு உபதேசித்தார். அங்கிருந்த வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கியதினிமித்தம் அவர் அந்த இரக்கத்தை செயல்படுத்தத் துவங்கினார் (மத்தேயு 14:14).
நாமும் “உருக்கமான இரக்கத்தை” தரித்துக்கொள்வோம் (கொலோசெயர் 3:12) என்று பவுல் வலியுறுத்துகிறார். அதன் பயன்கள்? “அது என்னுடைய சக்கரத்தில் காற்றை நிரப்புவதுபோல் என்னை நிரப்புகிறது” என்ற வாரன் சொல்லுகிறார்.
நம்மை சுற்றியிருப்பவர்கள் அனைவருக்கும் தேவைகள் இருக்கிறது. அதை தேவன் நம் கவனத்திற்கு கொண்டுவருகிறார். அந்த தேவைகள் நம்முடைய இரக்கத்தை செயல்படுத்தவும் கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்தவும் தூண்டுகிறது.

அனைத்து பதில்கள்
டேல் எர்ன்ஹார்ட் ஜூனியர் தனது தந்தை இறந்துவிட்டார் என்பதை புரிந்து கொண்ட மோசமான தருணத்தை விவரிக்கிறார். மோட்டார் பந்தய ஜாம்பவான் டேல் எர்ன்ஹார்ட் சீனியர், டேடோனா-500 என்ற மோட்டார் பந்தயத்தின் முடிவில் ஒரு பயங்கரமான விபத்தில் கொல்லப்பட்டார். டேல் எர்ன்ஹார்ட் ஜூனியரும் அந்த பந்தயத்தில் பங்குபெற்றிருந்தார். “என்னால் மீண்டும் அதை சாதிக்கமுடியாது” என்ற சத்தம் இளைய எர்ன்ஹார்டடிடமிருந்து வந்தது. “இது அதிர்ச்சி மற்றும் துக்கம் மற்றும் பயத்தின் மணி.” ஆனால் அதற்கு பின்னர், “இனி இதை நான் தனித்து மேற்கொள்ளப்போகிறேன்” என்பதே தனிமையான உண்மை.
“அப்பா கூட இருப்பது என்பது ஒரு தேர்வுக்கு மறைமுகமாய் எடுத்துச் செல்லும் பிட் தாளைப் போன்றது” என்று எர்ன்ஹார்ட் ஜூனியர் ஒப்பிடுகிறார். “அப்பா கூட இருப்பது என்பது அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிந்திருப்பது போன்று” என்று உருவகப்படுத்துகிறார்.
இயேசுவின் சீஷர்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலைப் பெற்றுக்கொள்ள இயேசுவைப் பார்த்தனர். இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முன் தினம், சீஷர்களை தான் தனியே விடுவதில்லை என்று இயேசு அவர்களுக்கு வாக்களிக்கிறார். “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (யோவான் 14:16-17) என்று வாக்களிக்கிறார்.
தம்மை நம்பும் அனைவருக்கும் இயேசு, “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்” (வச. 23) என்று சொல்லுகிறார்.
கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புகிறவர்களோடு, “எல்லாவற்றையும்” போதித்து அருளுகிற ஆவியானவர் உடனிருந்து, இயேசு கற்றுக்கொடுத்த யாவையும் அவர்களுக்கு உணர்த்துகிறார் (வச. 26). நம்மிடத்தில் அனைத்து பதில்களும் இல்லை. ஆனால் நம்மிலிருக்கும் ஆவியானவர் அனைத்து பதில்களையும் அறிந்திருக்கிறார்.

அழகான மறுசீரமைப்பு
மகோடோ ஃபுஜிமுரா என்னும் புகழ்பெற்ற கலைஞரின் பிரபல புத்தகமான “கலை ூ விசுவாசம்: இறையியல் ஆக்கம்” (யுசவ ூ குயiவா: யு வுhநழடழபல ழக ஆயமiபெ) என்ற புத்தகத்தில், ஜப்பானியர்களின் தொன்மையான கிண்ட்சுகி மண்பாண்டக்கலையைக் குறித்து விவரிக்கிறார். அதில், கலைஞர் உடைந்த மட்பாண்டங்களை (முதலில் தேநீர் பாத்திரங்கள்) எடுத்து, துண்டுகளை மீண்டும் அரக்குடன் சேர்த்து, விரிசல்களில் தங்கத்தை இழைக்கிறார். “இந்த கிண்ட்சுகி பாத்திரங்கள் உடைந்த பாத்திரங்களை சரிசெய்வதோடல்லாது, அது முன்பிருந்த அழகைக்காட்டிலும் அதிக அழகாய் மாற்றுகிறது” என்று சொல்லுகிறார். நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு போர்வீரனின் உடைந்துபோன விருப்பமான கோப்பையை அழகாக மீட்டெடுத்த முயற்சியிலிருந்து இந்த கலை தோன்றியது. பின்னர் இது மிகவும் மதிப்புமிக்க விரும்பமான கலையாக மாறியது.
இந்த வகையான மறுசீரமைப்பை கலைநயத்துடன் தேவன் உலகத்தில் செயல்படுத்துவதை ஏசாயா விவரிக்கிறார். நாம் நமது கிளர்ச்சியால் உடைந்து, நமது சுயநலத்தால் சிதைந்தாலும், தேவன் “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்” (65:17) என்று வாக்குப்பண்ணுகிறார். அவர் பழைய உலகத்தை பழுதுபார்ப்பது மட்டுமல்லாமல், அதை முற்றிலும் புதியதாக மாற்றவும், நமது உடைந்த வாழ்க்கையை எடுத்து, புதிய அழகுடன் மின்னும் உலகத்தை வடிவமைக்கவும் திட்டமிடுகிறார். மேலும் அந்த புதிய வாழ்க்கையில் “முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு,” “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை” (வச. 16-17). இந்த புதிய சிருஷ்டிப்பின் மூலம் தேவன் நம்முடைய தவறுகளை மூடிமறைக்கப்போவதில்லை; மாறாக, அசிங்கமான விஷயங்களை அழகாகவும், செத்த காரியங்களை மீண்டும் சுவாசிக்கசெய்யும் படைப்பாற்றலையும் கட்டவிழ்ப்பார்.
நம்முடைய சிதைந்துபோன வாழ்க்கையைக் குறித்த நாம் கவலைப்பட தேவையில்லை. தேவன் தன்னுடைய அழகான மறுசீரமைத்தலை செயல்படுத்துகிறார்.

தேவன் நம் பாவத்தை மூடுகிறார்
1950களில் ஒரு ஒற்றைத் தாய் தனது குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேலை தேட வேண்டியிருந்தபோது, அவருக்கு தட்டச்சு வேலை கிடைத்தது. ஒரே பிரச்சினை என்னவென்றால், அவள் நேர்த்தியாய் தட்டச்சு செய்பவள் அல்ல; தொடர்ந்து தவறுகளைச் செய்தாள். அவள் தனது பிழைகளை மறைப்பதற்கான வழிகளைத் தேடினாள். இறுதியில் தட்டச்சுப் பிழைகளை மறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வெள்ளைத் திருத்த திரவமான, திரவக் காகிதம் என்று அழைக்கப்படும் ஒன்றை கண்டுபிடித்தாள். அது காய்ந்ததும், பிழைகள் இல்லாதது போல் வெண்மையான பின்பு, மீண்டும் அதின் மீது புதிதாய் தட்டச்சு செய்யமுடியும்.
நம்முடைய பாவத்தை சமாளிக்க நேர்த்தியான சக்திவாய்ந்த வழியை இயேசு நமக்கு கொடுக்கிறார். மூடிமறைத்தல் இல்லை, அது முழுமையான மன்னிப்பு. இதற்கு ஒரு நல்ல உதாரணம் யோவான் 8 ஆம் அதிகாரத்தின் தொடக்கத்தில் விபச்சார பாவத்தில் சிக்கிய ஒரு ஸ்திரீயின் சம்பவத்திலிருந்து காட்டப்படுகிறது (வச. 3-4). அந்த ஸ்திரீக்கும் அவள் செய்த பாவங்களுக்கும் இயேசு ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அங்கிருந்த நியாயதிபதிகள் விரும்பினர். அவள் கல்லெறியப்பட வேண்டும் என்று நியாயப்பிரமாணம் கூறுகிறது. ஆனால் இயேசு நியாயப்பிரமாணம் என்ன சொல்லுகிறது என்பதைக் குறித்து சற்றும் யோசிக்கவில்லை. மாறாக, எல்லாரும் பாவம் செய்தவர்கள் தான் என்று (ரோமர் 3:23ஐப் பார்க்கவும்), உங்களில் பாவமில்லாதவன் அந்த ஸ்திரீயின் மீது கல்லெறியக்கடவன் (யோவான் 8:7) என்று சொல்லுகிறார். ஒரு கல்லும் எறியப்படவில்லை.
இயேசு அவளுக்கு ஒரு புதிய துவக்கத்தை ஏற்படுத்தினார். அவளை அவர் குற்றவாளியாய் தீர்க்கவில்லை என்று சொல்லி, “இனிப் பாவஞ்செய்யாதே” (வச. 11) என்று சொல்லுகிறார். அவளுடைய பாவ வாழ்க்கைக்கான் தீர்வையும், இனி அவள் பாவம் செய்யாமல் வாழும் வாழ்க்கைக்கான புதிய துவக்கத்தையும் இயேசு அருளுகிறார். அவருடைய கிருபையினாலே அந்த வாய்ப்பை தேவன் நமக்கும் அருளுகிறார்.

நம் காலில் நாமே சுடுதல்
2021 ஆம் ஆண்டில், வரலாற்றில் இதுவரை அம்பு எய்தவர்களைவிட அதிக தொலைவில் அம்பு எய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் ஒரு பொறியாளர் 2,028 அடி சாதனையை இலக்காகக் கொண்டார். ஒரு உப்புத் தட்டில் படுத்துக்கொண்டு, அவர் பிரத்யேகமாய் வடிவமைத்த கால் வில்லின் நாண்களை இழுத்து, ஒரு மைலுக்கும் (5,280 அடி) புதிய சாதனைத் தூரம் இருக்கும் என்று அவர் நம்பும் அளவிற்கு அம்பை ஏவத் தயார் செய்தார். ஆழமாக மூச்சை இழுத்து அம்பை எய்தார். அது ஒரு மைல் கூட பயணிக்கவில்லை. உண்மையில், அது ஒரு அடிக்கும் குறைவாகவே பயணித்தது. அவரது காலில் பட்டு, கணிசமான சேதத்தை ஏற்படுத்தியது. ஐயோ!
சில சமயங்களில் தவறான லட்சியத்துடன் நம்முடைய காலில் நாமே காயத்தை ஏற்படுத்திக்கொள்கிறோம். யாக்கோபுக்கும் யோவானுக்கும் நல்லதை லட்சியமாக தேடுவது என்றால் என்ன என்று தெரியும். ஆனால் தவறான காரணங்களுக்காக. “உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும்” (மாற்கு 10:37) என்று இயேசுவிடம் கேட்டார்கள். அவர்களுக்கு இயேசு “இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள்” (மத்தேயு 19:28) என்று பதிலளிப்பதின் மூலம் அவர்கள் ஏன் இந்த கேள்வியை கேட்டார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பிரச்சனை என்ன? அவர்கள் கிறிஸ்துவின் மகிமையில் தங்களுடைய சுயநலமான பதவியின் ஸ்தானத்தை ஸ்தாபிக்க முயற்சித்தனர். மேலும் இயேசு அவர்களிடம் நீங்கள் கேட்கிறது இன்னதென்று உங்களுக்கு தெரியவில்லை என்றும் (மாற்கு 10:38), “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்” (வச. 43) என்றும் சொல்லுகிறார்.
நான் கிறிஸ்துவுக்காய் நன்மையும் மேன்மையுமான காரியங்களை செய்வதற்கு பிரயாசப்படும்போது, இயேசு செய்ததுபோல மற்றவர்களுக்கு மனத்தாழ்மையோடு சேவை செய்யும் ஞானத்தையும் வழிநடத்துதலையும் நாடமுடியும்.