வகை  |  odb

விடாமுயற்சியின் வல்லமை

1917 ஆம் ஆண்டில், ஒரு இளம் பெண் தையல்காரர் நியூயார்க் நகரத்தின் மிகவும் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு பள்ளி ஒன்றில் சேர்க்கை கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைந்தார். ஆனால் ஆன்கோன் என்னும் அவள், வகுப்புகளுக்கு பதிவுசெய்ய வந்தபோது, அந்த பள்ளியின் இயக்குனர் அவளை வரவேற்கவில்லை என்று கூறிவிட்டார். மேலும் “நேரடியாய் சொல்லவேண்டுமானால், நீங்கள் ஒரு கருப்பினத்தை சேர்ந்த பெண் என்பது எங்களுக்கு தெரியாது” என்று கூறி வெளிப்படையாய் நிராகரித்தார். ஆனால் அவள் வெளியேற மறுத்து “தயவுசெய்து என்னை இங்கேயே இருக்க விடுங்கள்” என்று மனதிற்குள் ஜெபித்தாள். அவளது விடாமுயற்சியைக் கண்டு, பள்ளியின் இயக்குனர் அவள் சேர்ந்துகொள்வதற்கு அனுமதித்தார். ஆனால் வெள்ளையர்களுக்கு மட்டுமேயான வகுப்பறையிலிருந்து பின் கதவைத் திறந்து அவளைப் பிரித்து தனித்து உட்காரச்செய்து வகுப்பை கவனிக்கச் செய்தார்.

ஆனின் திறமையினால், அந்த பள்ளியில் ஆறு மாதங்களுக்கு முன்பே பட்டம் பெற்று வெளியேறினார். மேலும் அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி ஜாக்குலின் கென்னடி உட்பட உயர் சமூக வாடிக்கையாளர்களை தன் திறமையினால் வெகுவாய் கவர்ந்தார். அவர்களுடைய உலகப் புகழ்பெற்ற திருமண ஆடையையும் இவரே வடிவமைத்தார். அவருடைய தையல் ஸ்டுடியோவுக்கு மேலே ஒரு குழாய் வெடித்து, முதலில் வடிவமைக்கப்பட்ட ஆடையை சிதைத்தபின்பு தேவனுடைய உதவியை நாடிய அவள் மீண்டும் நேர்த்தியாய் இரண்டாம் ஆடையை வடிவமைத்தார்.

அந்த விடாமுயற்சி சக்தி வாய்ந்தது. குறிப்பாய் ஜெபத்தில் விடாமுயற்சியுடன் செயல்படுவது அவசியம். விடாமுயற்சியுடன் செயல்பட்ட விதவையைக் குறித்து இயேசுவின் உவமையில், அவள் அநீதியனான நீதிபதியிடம் நீதிகேட்டு போராடுகிறாள். முதலில், அவன் அவளை மறுத்தான். ஆனால் “இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால்... இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும்” (லூக்கா 18:5) என்று சொன்னான்.

அதேபோன்று, “தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?” (வச. 7). அவர் நிச்சயமாய் செய்வார் (வச. 8) என்று இயேசு சொல்லுகிறார். அவருடைய ஊக்கப்படுத்தலோடு, விடாமுயற்சியுடன் தொடர்ந்து ஜெபத்தில் மன்றாடுவோம். தேவன் தன்னுடைய குறித்த நேரத்தில், நேர்த்தியான வழியில் பதில் செய்வார்.

இயேசு நம் சகோதரர்

ப்ரிட்ஜர் வாக்கருக்கு ஆறு வயது இருக்கும்போது ஒரு வெறிநாய் அவரது தங்கையை கடிக்கும் நோக்கத்துடன் சீறிப்பாய்ந்தது. பிரிட்ஜர் அவளுக்கு முன்னால் குதித்து, நாயின் கொடூரமான தாக்குதலிலிருந்து அவளைக் காப்பாற்றினார். அதினிமித்தம் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிட்ஜரின் முகத்தில் தொண்ணூறு தையல்கள் போடப்பட்டது. ஆனால் பிரிட்ஜரிடம் அவருடைய துணிச்சலைக் குறித்து கேட்டபோது “யாராவது இறக்க நேரிட்டால், அது நானாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று சொன்னாராம். அதிர்ஷ்டவசமாக, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பிரிட்ஜரின் முகம் குணமடைய உதவியுள்ளனர். அவர் தன்னுடைய தங்கையை கட்டிப்பிடித்தவாறு எடுத்த சமீபத்திய புகைப்படமானது அவருடைய உறுதியான சகோதர அன்பை இன்னும் வெளிப்படுத்துகிறது.

நம்முடைய குடும்பத்தின் உறுப்பினர்கள் நம்மை பராமரித்துக்கொள்வது இயல்பு. உண்மையான சகோதரர்கள் நாம் பிரச்சனையில் இருக்கும்போது நமக்கு தோள்கொடுப்பார்கள்; நாம் பயப்படும்போதோ அல்லது தனிமையில் இருக்கும்போதோ நமக்கு துணைநிற்பார்கள். ஆனால் நம்முடைய சகோதரர்கள் பூரணமானவர்கள் அல்ல, சிலவேளைகளில் அவர்களும் நம்மை காயப்படுத்த நேரிடலாம். நமக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவர் நம்மோடு எப்போதும் இருக்கும் இயேசு. எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் சொல்லுவதுபோல, கிறிஸ்து தன்னை தாழ்த்தி “மாம்சத்தையும் இரத்தத்தையும்” உடையவராகி (வச. 14) மாம்ச குடும்பத்தின் அங்கத்தினராய் மாறி, “எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு  ஒப்பாகவேண்டியதாயிருந்தது” (வச. 17). அதினால் இயேசு நம்முடைய மெய்யான சகோதரராய் மாறினார். நம்மையும் சகோதரர் மற்றும்  சகோதரி என்று அழைக்கிறார் (வச. 11). 

இயேசுவை நாம் இரட்சகர், சிநேகிதர், ராஜா என்று அழைக்கிறோம். அவை அனைத்தும் உண்மையே. இயேசு நம்முடைய சகோதரனாய், மனுஷனுக்குரிய பயங்கள், சோதனைகள், சோர்வுகள், துக்கங்கள் என்று அனைத்தின் பாதை வழியாகவே கடந்துசென்றார். நம்முடைய சகோதரர் எப்போதும் நம் பட்சத்தில் நிற்கிறார்.

தனிமை, ஆனால் மறக்கப்படவில்லை!

நீங்கள் அவர்களின் கதைகளைக் கேட்கும்போது, கைதியாக இருப்பதில் மிகவும் கடினமான காரியம் தனிமைப்படுத்தபடுதல் என்பதை புரிந்துகொள்வீர்கள். சிறைக் கம்பிகளுக்கு உள்ளே அடைபட்டிருக்கும் கைதிகள் ஆண்டுக்கு இரண்டுமுறை மாத்திரமே அவர்களின் சிநேகிதரையோ அல்லது பிரியமானவர்களையோ பார்க்க அனுமதிக்கப்படுவர் என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. தனிமை என்பது ஒரு நிலையான உண்மை.

யோசேப்பு தவறாய் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசத்தை அனுபவித்தது மிகவும் வேதனையளிக்கக்கூடிய அனுபவமாய் நான் எண்ணுகிறேன். அங்கே நம்பிக்கையின் ஒளி உதித்தது. பார்வோனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனுடைய சொப்பனத்தை சரியாய் வியாக்கியானம் செய்யும்பொருட்டு தேவன் யோசேப்பைப் பயன்படுத்தினார். யோசேப்பு அவனிடம் பார்வோன் தன்னை விடுவிக்கும்பொருட்டு தன்னைக் குறித்து பார்வோனிடம் அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டான் (ஆதியாகமம் 40:14). “ஆனாலும் பானபத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்” (வச. 23). யோசேப்பு மேலும் இரண்டு வருடங்கள் காத்திருக்கவேண்டியதாயிற்று. அந்தக் காத்திருப்பு நாட்களில், அவனுடைய சூழ்நிலைகள் மாறும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாதபோதிலும், யோசேப்பு தனிமையில் இல்லை; தேவன் அவனோடிருந்தார். இறுதியில், பார்வோனின் வேலைக்காரன் அவனுடைய வாக்குறுதியை நினைவு கூர்ந்தான். யோசேப்பு இன்னுமொரு சொப்பனத்திற்கு விளக்கமளித்த பின்பே விடுவிக்கப்படுகிறான் (41:9-14).

நாம் மறக்கப்பட்டதாக உணரும்போதும், தனிமையின் சோகம் நம்மை ஆழ்த்தும்போதும், “நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15) என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை நாம் உறுதியாய் பற்றிக்கொள்வோம்.

வித்தியாசமான செய்கை

மேரி ஸ்லெஸர், 1800களின் பிற்பகுதியில் ஆப்பிரிக்க நாடான கலாபருக்கு (தற்போதைய நைஜீரியா) கப்பலில் சென்றபோது, மறைந்த டேவிட் லிவிங்ஸ்டோனின் மிஷனரிப் பணியைத் தொடர ஆர்வமாக இருந்தார். ஆனால் சக மிஷனரிகளின் பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் பணியே அவளுக்குக் கொடுக்கப்பட்ட முதல் ஊழியம். அவள் அதை எதிர்பார்க்காததால் சோர்ந்துபோனார். ஆகையால் அவள் ஒரு துணிச்சலான காரியத்தை செய்ய முன்வந்தாள். அவள் ஊழியம் செய்யும் மக்கள் வாழும் இடத்திற்கே குடியேறினாள். அவர்களுடைய மொழியை கற்றுக்கொண்டு, அவர்களுடைய வாழ்க்கைமுறையை தத்தெடுத்துக்கொண்டு, அவர்களின் உணவையே உண்ண நேரிட்டது. ஆதரவற்ற எண்ணற்ற குழந்தைகளை பராமரித்தாள். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக, அந்த மக்களுக்கு அவள் நம்பிக்கையையும் நற்செய்தியையும் பிரஸ்தாபப்படுத்தினாள்.

நம்மை சுற்றிவாழும் மக்களின் தேவைகளை சந்தித்தலின் முக்கியத்துவத்தை பவுல் அப்போஸ்தலர் நன்கு அறிந்திருந்தார். 1 கொரிந்தியர் 12:4-5இல், “வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே” என்று குறிப்பிடுகிறார். ஆகையால் மக்களின் தேவையை அறிந்து அவர் ஊழியம் செய்தார். ஒரு கட்டத்தில், பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன் (9:22) என்று சொல்லுகிறார். 

நான் அறிந்த ஒரு தேவாலயம் சமீபத்தில், ஊனமுற்றவர்களும் இலகுவாய் ஆராதிக்கும்படியாக “அனைத்து திறன்” ஊழியம் ஒன்றைத் துவங்கியது. இது சுவிசேஷத்தை சமுதாயத்திற்கு இலகுவாய் கொண்டுசெல்லும் பவுல் அப்போஸ்தலரின் அணுகுமுறைக்கு ஒத்தது.

நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு முன்பாக நம்முடைய விசுவாசத்தை வெளிப்படுத்தும்போது, புதுப்புது வழிகளில் அவர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்த தேவன் நம்மை வழிநடத்துவார்.

சதாகாலமும் உண்மையுள்ள தேவன்

சேவியர், தொடக்கப் பள்ளி மாணவனாக இருந்தபோது, நான் அவனைப் பள்ளிக்குக் கூட்டிவந்து கூட்டிச் செல்வது வழக்கம். ஒரு நாள், திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கவில்லை. நான் அவனை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக செல்வதற்கு தாமதமாகிவிட்டது. நான் காரை நிறுத்திவிட்டு, ஜெபித்துக்கொண்டே அவனுடைய வகுப்பறையை நோக்கி ஓடும்போது, அவன் ஆசிரியையின் அருகாமையில் அமர்ந்துகொண்டு அவனுடைய பையை இறுக்கி பிடித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். “மிஜோ, என்னை மன்னித்துவிடு; நீ நன்றாய் இருக்கிறாயா?” என்று கேட்க, அவன் பெருமூச்சுடன், “நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் ஏன் தாமதமாய் வந்தீர்கள்?” என்று என்னை கடிந்துகொண்டான். நான் என் மகனை அதிகமாய் நேசிக்கிறேன், ஆகிலும் அவனை சில விஷயங்களில் சலிப்படையச் செய்திருக்கிறேன். அவன் ஒரு நாளில் தேவனோடும் சலிப்படைய நேரிடும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆகையால் தேவன் ஒருபோதும் தான் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றாமல் போவதில்லை என்னும் சத்தியத்தை அவனுக்கு விளங்கச்செய்வதற்கு தொடர்ந்து பிரயாசப்படுகிறேன்.

சங்கீதம் 33, தேவனின் நம்பத்தன்மையை மகிழ்ச்சியான துதிகளுடன் கொண்டாட நம்மை ஊக்குவிக்கிறது (வச. 1-3). ஏனெனில் “கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது” (வச. 4). தேவன் படைத்த உலகத்தை அவரது வல்லமை மற்றும் நம்பகத்தன்மையின் உறுதியான சான்றாகப் பயன்படுத்தி (வச. 5-7), பூமியெங்கும் இருக்கும் மக்களுக்கு சங்கீதக்காரன் அழைப்பு விடுக்கிறார் (வச. 8).

திட்டங்கள் தோல்வியடையும்போதோ அல்லது மக்கள் நம்மை தாழ்மைபடுத்தினாலே நாம் தேவனிடத்தில் சலிப்படைய நேரிடுகிறது. ஆயினும் தேவன் உண்மையுள்ளவர் என்பதை நாம் நம்பலாம். ஏனெனில், “கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாக” (வச. 11) நிற்கக்கூடியது. காரியங்கள் நமக்கு சாதகமாய் நடக்காவிட்டாலும் நாம் தேவனை துதிக்க பழகலாம். ஏனெனில் நம்முடைய அன்பான சிருஷ்டிகர் எல்லோரையும் எல்லாவற்றையும் தாங்கிப் பாதுகாக்கிறார். தேவன் சதாகாலமும் உண்மையுள்ளவர்.