மேரி ஸ்லெஸர், 1800களின் பிற்பகுதியில் ஆப்பிரிக்க நாடான கலாபருக்கு (தற்போதைய நைஜீரியா) கப்பலில் சென்றபோது, மறைந்த டேவிட் லிவிங்ஸ்டோனின் மிஷனரிப் பணியைத் தொடர ஆர்வமாக இருந்தார். ஆனால் சக மிஷனரிகளின் பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் பணியே அவளுக்குக் கொடுக்கப்பட்ட முதல் ஊழியம். அவள் அதை எதிர்பார்க்காததால் சோர்ந்துபோனார். ஆகையால் அவள் ஒரு துணிச்சலான காரியத்தை செய்ய முன்வந்தாள். அவள் ஊழியம் செய்யும் மக்கள் வாழும் இடத்திற்கே குடியேறினாள். அவர்களுடைய மொழியை கற்றுக்கொண்டு, அவர்களுடைய வாழ்க்கைமுறையை தத்தெடுத்துக்கொண்டு, அவர்களின் உணவையே உண்ண நேரிட்டது. ஆதரவற்ற எண்ணற்ற குழந்தைகளை பராமரித்தாள். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக, அந்த மக்களுக்கு அவள் நம்பிக்கையையும் நற்செய்தியையும் பிரஸ்தாபப்படுத்தினாள்.

நம்மை சுற்றிவாழும் மக்களின் தேவைகளை சந்தித்தலின் முக்கியத்துவத்தை பவுல் அப்போஸ்தலர் நன்கு அறிந்திருந்தார். 1 கொரிந்தியர் 12:4-5இல், “வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே” என்று குறிப்பிடுகிறார். ஆகையால் மக்களின் தேவையை அறிந்து அவர் ஊழியம் செய்தார். ஒரு கட்டத்தில், பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன் (9:22) என்று சொல்லுகிறார். 

நான் அறிந்த ஒரு தேவாலயம் சமீபத்தில், ஊனமுற்றவர்களும் இலகுவாய் ஆராதிக்கும்படியாக “அனைத்து திறன்” ஊழியம் ஒன்றைத் துவங்கியது. இது சுவிசேஷத்தை சமுதாயத்திற்கு இலகுவாய் கொண்டுசெல்லும் பவுல் அப்போஸ்தலரின் அணுகுமுறைக்கு ஒத்தது.

நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு முன்பாக நம்முடைய விசுவாசத்தை வெளிப்படுத்தும்போது, புதுப்புது வழிகளில் அவர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்த தேவன் நம்மை வழிநடத்துவார்.