ஆக்கினையிலிருந்து விடுதலை
ஒரு தம்பதியினர் தங்களுடைய கனரக வாகனத்தில், வட கலிஃபோர்னியாவின் வறண்ட பகுதி வழியே சென்று கொண்டிருந்த போது, அவர்களுடைய வாகனத்தின் டயர் வெடித்து. சக்கரத்தின் உலோகப்பகுதி சாலையின் தளத்தை உரசியதால் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டனர். அதில் ஏற்பட்ட நெருப்பு பொரி, 2018 கார்ஃப்யர் என்று அழைக்கப்படும் மிகப் பெரிய காட்டுத் தீயை ஏற்படுத்தியது. அதில் 230,000 ஏக்கர் பரப்பளவு எரிந்து நாசமானது, 1000த்திற்கும் மேலான வீடுகள் தீக்கிரையாயின, அநேகர் இந்த தீயில் மரித்துப் போயினர்.
அந்த தீ விபத்திலிருந்து தப்பியவர்கள், அத்தீக்குக் காரணமாயிருந்த தம்பதியினர், துக்கத்தால் சோர்ந்திருக்கின்றனர் என்பதைக் கேள்விப் பட்டு, முகநூலில், “விரக்தியும், வெட்கமும் அடைந்த தம்பதியருக்கு, உங்கள் அன்பையும், இரக்கத்தையும் தெரிவியுங்கள்” என்று ஓர் அழைப்பு விடுத்தனர்.. அதில் ஒரு பெண், “இந்த விபத்தில் வீட்டை இழந்த ஒருவராக, நான் இதனை எழுதுகிறேன், எங்கள் குடும்பத்தினரைப் பற்றியும், எங்களைப் போன்று வீட்டையிழந்த மற்றவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்,... விபத்துக்கள் நடக்கும். எங்களுடைய கனிவான செய்திகள் உங்களுடைய மனபாரத்தை இலகுவாக்குமென நம்புகின்றேன், நாம் அனைவரும் இணைந்து, இந்த துயரத்தைக் கடந்து செல்வோம்” என எழுதியிருந்தாள்.
நாம் குற்றவாளியாக்கப்படும் போது, நாம் மீளமுடியாத ஒன்றைச் செய்துவிட்டோம் என்ற பயம், நம்முடைய ஆன்மாவைக் கொன்று விடும். ஆனால், வேதாகமம் “நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்” (1 யோவா. 3:20) எனக் கூறுகிறது. நமக்குள் மறைந்திருக்கும் வெட்கத்தைக்காட்டிலும் தேவன் பெரியவராயிருக்கிறார். நம்முடைய மன வருத்தத்திலிருந்து ஆறுதலடையும் படி, அல்லது நம்மை அரித்துக் கொண்டிருக்கிற வெட்கத்தை எடுத்துப் போடும் படி, தேவன் நம்மை அழைக்கின்றார். அவர் தரும் விடுதலையை பெற்றுக்கொள்ளலாம், “நம்முடைய இருதயத்தை அவர் சமுகத்தில் ஆறுதல் பெறச் செய்யலாம்” (வச. 19).
நாம் இவற்றைச் செய்யாமல் இருந்திருக்கலாமே என மனம் வருந்தும் காரியம் எதுவாக இருந்தாலும், நாம் அவற்றை தேவனிடம் கொண்டு வரும்படி அழைக்கின்றார். இயேசு, நம்மைப் பார்த்து புன்முறுவலோடு, சொல்கின்றார், ”உன்னுடைய இருதயம் விடுதலையைப் பெற்றுக் கொண்டது.”
உண்மையான, ஆழ்ந்த வாஞ்சை
கீச்சொலி கொண்ட ஒரு சுண்டெலி, அதன் பெயர் ரீபிசீபி. இது நார்னியாவின் நடபடிகள் என்ற கதைகளில் வரும் வீரமிக்க கதாபாத்திரம்.
வினோதமான விலங்குகளும், மனிதரும் வாழும் ஒருகற்பனை உலகத்தில், ரீபிசீபி என்பது ஒரு வீரமிக்க சுண்டெலி. அது தன்னுடைய சிறிய வாளை வீசிய வண்ணம், போர்களத்தில் இறங்கியது. அது, பயத்தை புறம்பே தள்ளி விட்டு, ஓர் இருளடைந்த தீவிற்குள் நுழைந்தது. இந்த ரீபிசீபியின் தைரியத்திற்கான காரணம் என்ன? அந்த சுண்டெலியின் மனதிற்குள், எப்படியாவது அஸ்லான் தேசத்தை அடைந்து விட வேண்டும் என்றிருந்த ஆழ்ந்த ஆவல் தான் இதற்கு காரணம். “அது தான் என் இருதயத்தின் வாஞ்சை” என்று கூறியது .ரீபிசீபியின் உண்மையான, ஆழ்ந்த விருப்பம், அதனை அரசனுக்கு நேராக வழி நடத்தியது.
எரிகோவிலிருந்த பர்திமேயு என்ற குருடன், தன்னுடைய வழக்கத்தின் படியே ஓரிடத்தில் உட்கார்ந்து, குவளையிலிருந்த காசுகளை குலுக்கிய வண்ணம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது, அவ்வழியே இயேசுவும், திரள் கூட்டமும் வருவதை அறிந்தான். உடனே அவன், “இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் ‘ என்று கூப்பிடத் தொடங்கினான் (மாற். 10:47). அக்கூட்டத்தினர் அவனை அமைதியாயிருக்குமாறு அதட்டினர், ஆனால் அவனை அமைதிப்படுத்த முடியவில்லை.
மாற்கு சொல்கின்றார், “இயேசு நின்றார்” (வ.49) அந்த கூட்டத்தின் நடுவில் ,இயேசு பர்திமேயுவிற்கு செவிகொடுத்தார். அவனிடம், “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய்?” என்று கேட்டார் (வச. 51).
அவனுடைய பதில் என்னவாயிருக்கும் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும், பர்திமேயு தன்னுடைய ஆழ்ந்த விருப்பத்தை வெளிப்படுத்தும் படி, இயேசு விரும்பினார். அவனுடைய உறுதியான விசுவாசத்தின் மூலம் வெளிப்படும் வல்லமையை அவர் அறிந்திருந்தார். “ஆண்டவரே, நான் பார்வை அடைய வேண்டும்” என்றான் பர்திமேயு. இயேசு அவனை வண்ணங்களையும், அழகையும், நண்பர்களின் முகத்தையும் முதல் முறையாக காணச் செய்து, வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
எல்லா விருப்பங்களும் உடனே சந்திக்கப்படுவதில்லை. இங்கு தேவையானது என்னவென்றால், பர்திமேயு தன்னுடைய உள்ளத்தின் வாஞ்சையை இயேசுவிடம் எடுத்துச் சென்றான். இதை நன்கு கவனித்தோமேயானால், நம்முடைய ஆழ்ந்த விருப்பங்களும் , வாஞ்சைகளும் நம்மை இயேசுவிடம் வழி நடத்திச் செல்லும் என்பதைக் கண்டுகொள்வோம்.
இனி பயமில்லை
எத்தியோப்பியாவில் ஏழு மனிதர்கள் சேர்ந்து, ஒரு பன்னிரண்டு வயது சிறுமியை, காட்டுக்குள் கடத்திச் சென்று, துன்புறுத்தினர். அவளுடைய கூக்குரலைக் கேட்ட ஒரு சிறு சிங்கக் கூட்டம், ஓடி வந்து, கடத்தல் காரர்களைத் துரத்தி விட்டு, அவளைப் பாதுகாத்தது. எத்தியோப்பியா காவல் துறையினர், ஏழு நாட்கள் கழித்து அவளைக் கண்டு பிடித்த போது, மூன்று கருப்பு பிடரி முடியைக் கொண்ட சிங்கங்கள், அவளைக் காவல் காத்துக் கொண்டிருந்தன. காவல் துறையினரைக் கண்ட சிங்கங்கள், அவளை அவர்களுக்கு ஒரு பரிசாக விட்டு விட்டு, ஓடி மறைந்தன. காவல் துறை சார்ஜென்ட் வொண்டிமு, இதனை ஒரு பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.
இந்த இளம்பெண்ணிற்கு ஏற்பட்டதைப் போன்று வன்முறைகளும், தீமைகளும் நம்மையும் மேற்கொள்ளலாம், நம்பிக்கையற்ற நிலையில் பயங்கரத்துக்குள் நம்மை கொண்டு செல்லலாம். முற்காலத்தில், யூத ஜனங்கள் இத்தகைய நிலையில் தான் இருந்தனர். மூர்க்கமான படைகளால் கவிழ்த்துப் போடப்பட்டனர். தப்பிக் கொள்ள ஒரு வழியும் இல்லாதிருந்தது. பயம் அவர்களைக் கவ்விக் கொண்டது. தேவன் தனது மாறாத பிரசன்னத்தை தம் ஜனங்களுக்கு மீண்டும் கொடுத்தார். “இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்” (செப். 3:15) நம்முடைய சொந்த கலகங்களால், நாம் குழப்பங்களை உருவாக்கிக் கொண்டாலும் தேவன் நம்மை மீட்க வருகின்றார்.” உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார், அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்” (வச. 17).
சோதனைகள் நம்மை மேற்கொள்ளும் போதும், என்ன துன்பம் வந்தாலும் யூதா கோத்திரத்துச் சிங்கம், இயேசு நம்மோடிருக்கிறார். (வெளிப்படுத்தல் 5:5) நாம் தனித்து விடப்பட்டாலும் நம்முடைய வல்லமையுள்ள ரட்சகர் நம்மோடிருக்கின்றார். எத்தகைய பயம் நம்மை ஆழ்த்தினாலும் தேவன் நம்மோடிருப்பதாக வாக்களித்துள்ளார்.
கிருபையின் விதைகள்
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நம்தேசசத்தில் ஒரு மனிதன் கடினமாக உழைத்து, வறண்டு, வெடித்துக் கிடந்த, பயனற்ற ஒரு நிலத்தை செழிப்பான இடமாக மாற்றினார். நதியால் சூழப்பட்ட அந்த இடம், நில அரிப்பாலும், சுற்றுச்சூழலின் பாதிப்பாலும், அழிக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்ட அம்மனிதன், அதனை நேசித்து, அதில் மரங்களை நட ஆரம்பித்தான். ஒரு முறை மூங்கில், அடுத்து பருத்தி என மாற்றி மாற்றி பயிரிட்டான். இப்பொழுது, அடர்ந்த காடும், நிறைய காட்டு உயிரினங்களும் 1,300 ஏக்கர் நிலத்தை நிரப்பியுள்ளன. அந்த நிலத்திற்கு கிடைத்த இந்த மறுவாழ்வு தன்னால் நடந்ததல்ல என்று அம்மனிதன் வலியுறுத்திக் கூறுகின்றான். அற்புதமாக வடிவமைக்கப்பட்ட இவ்வுலகில், எத்தனை அற்புதமாக விதைகள் காற்றில் சுமந்து செல்லப்பட்டு, விளை நிலங்களில் விதைக்கப்படுகின்றன, பறவைகளும், விலங்குகளும் விதைத்தலில் பங்கு பெறுகின்றன, மரங்களும், செடிகளும் செழித்து வளர நதிகள் தங்கள் உதவியைச் செய்கின்றன என்று அம்மனிதன் வியந்து கூறுகின்றான்.
படைப்பு நடைபெறும் விதத்தை நம்மால் கிரகிக்கவும், கட்டுப் படுத்தவும் முடியாது. தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்த காரியங்களும் இதே போன்றது என்று இயேசு கூறுகின்றார். “தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து, இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாத விதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது” என்றார். (மாற். 4:26-27) இவ்வுலகிற்கு வாழ்வையும், சுகத்தையும் தேவன் ஈவாகக் கொடுத்துள்ளார், இது நம்முடைய கரத்தின் திறமையினால் கிடைப்பதல்ல. தேவன் நம்மிடம் எதை சொல்கின்றாரோ அதை நாம் செய்யும் போது நம்முடைய வாழ்வு துளிர்க்கும். அவருடைய கிருபையினாலேயே எல்லாம் கிடைக்கின்றன.
ஒருவருடைய இருதயத்தை மாற்றியது நான் தான் என நினைக்கும்படி நமக்குத் தோன்றலாம், அல்லது நம்முடைய உண்மையான முயற்சியால் அது நடைபெற்றது என்று எண்ணலாம், நம்மை பலமுறை சோர்வடையச் செய்யும் அத்தகைய எண்ணம் தேவையில்லை. எல்லாவற்றையும் விளையச் செய்கிறவர் அவரே. எல்லாம் அவருடைய கிருபை.
கதா நாயகர்
ஒரு பிரசித்திபெற்ற வேதாகமப் பயிற்சி கல்லூரியில், ஒரு மாணவன் தன்னுடைய வகுப்பில் பிரசங்கம் செய்தான். அந்த இளம் மாணவன் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தினான். உள்ளான உணர்வோடும், சரளமான பேச்சோடும் தன்னுடைய பிரசங்கத்தை முடித்து, மிகவும் திருப்தியடைந்தவனாய் அமர்ந்தான். அவனுடைய பேராசிரியர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். பின்னர், “இது மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு செயல் படுத்தப்பட்டது. ஆனால், உன்னுடைய செய்தியின் எந்த பகுதியிலும் ஒரு வார்த்தை கூட தேவனைப்பற்றி சொல்லவேயில்லை” என்றார்.
சில வேளைகளில் நாமனைவரும் சந்திக்கின்ற பிரச்சனையையே அந்த பேராசிரியரும் குறிப்பிட்டார். நாம் நம்மையே முக்கியப்படுத்தி பேசுகின்றோம். (நாம் எதைச் செய்கின்றோம், எதைச் சொல்கின்றோம், என்பதையே முக்கியப்படுத்துகின்றோம்) உண்மையில் தேவன் தான் நம் வாழ்வின் கதாநாயகன். என் காரியங்கள் எல்லாவற்றையும் தேவன் பார்த்துக் கொள்வார் என்று சொல்லிக் கொண்டு, நம்முடைய செயல்கள் யாவும் என்னையேச் சார்ந்திருக்கின்றன என்பதாகச் செயல் படுகின்றோம்.
நம் வாழ்வின் காரணரும் நம்மை நடத்தும் மெய்யான வல்லமையும் தேவனே என வேதாகமம் சுட்டிக்காட்டுகின்றது. நம்முடைய விசுவாச செயல்களெல்லாமே “இயேசுவின் நாமத்தினாலும்” அவருடைய வல்லமையினால் மட்டுமே நடைபெறும் (சங். 118:10-11). தேவனே நம்மை இரட்சிக்கின்றார், நம்மை மீட்கின்றார், நம்முடைய தேவைகள் அனைத்தையும் சந்திக்கிறார். “அது கர்த்தராலே ஆயிற்று” (வச. 23).
எனவே நம்முடைய மனப் பாரங்களை விட்டு விடுவோம். நாம் பதட்டப்படவும், ஒப்பிடவும், நம்முடைய ஆவல்களை நிறைவேற்ற நம்மை வருத்திக் கொள்ளவும் வேண்டாம். தேவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர் மீதுள்ள நம்பிக்கையோடு, அவர் காட்டும் வழி நடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து, அதன் வழி நடத்தலேயாகும்.
பின்னோக்கி நடத்தல்
பிரிட்டனைச் சேர்ந்த திரைப் பட குழுவினரின் செய்திப் படக் காட்சிகளைக் கண்டு வியந்து நின்றேன். அதில் ஆறு வயது நிரம்பிய பிளானரி ஓ’கான்னோர் என்ற சிறுமியை, அவளது குடும்பப் பண்ணையில் வைத்து 1932ஆம் ஆண்டு படம் எடுத்திருந்தனர். பிளானரி, பிற்காலத்தில் அமெரிக்க தேசத்தால் பாராட்டு பெற்ற, ஒரு பிரபல எழுத்தாளராகத் திகழ்ந்தார். அவள் இந்த படப் பிடிப்பு குழுவினரின் ஆர்வத்தை ஈர்க்கக் காரணமென்னவெனின், அவள் தன்னுடைய கோழிக் குஞ்சுவிற்கு பின்னோக்கி நடப்பதற்குக் கற்றுக் கொடுத்திருந்தாள். இந்த சாதனை ஒரு புதுமை மட்டுமல்லாமல், சரித்திரத்தில் ஒரு சிறந்த உருவகமாகவும் பார்க்கப் படுகிறது. பிளானரி தன்னுடைய இலக்கிய சிந்தனைகளையும், ஆன்மீக வெளிப்பாடுகளையும் கொண்டு முப்பத்தொன்பது ஆண்டுகளைப் பின்னோக்கி நடப்பதில் செலவிட்டாள். கலாச்சார வழி முறைகளுக்கு முரண்பாடாகச் சிந்தித்து, எழுத்தில் வெளிப்படுத்தினாள். வேதகமத்தை அடிப்படையாகக் கொண்ட அவளுடைய நோக்கங்கள் மக்கள் எதிர்பார்த்த மத எண்ணங்களுக்கு மாறாக அமைந்துள்ளதைக் கண்ட புத்தக வெளியீட்டாளர்களும் வாசகர்களும் திகைத்தனர்.
இயேசுவை உண்மையாகப் பின் பற்றுபவர்களின் வாழ்வு மத சடங்காச்சாரங்களுக்கு எதிராக அமைவதை தவிர்க்க முடியாது. இயேசு தேவ குமாரனாயிருந்தும் தன்னுடைய தெய்வீகத் தன்மையை நாம் எதிர்பார்த்த வகையில் வெளிப் படுத்தவில்லை (2;6) என்பதை பிலிப்பியர் நமக்குக் காட்டுகின்றது. அவர் தன்னுடைய வல்லமையை தன் “சொந்த நலனுக்காக” பயன்படுத்தவேயில்லை. ஆனால் அவர் தன்னை வெறுமையாக்கி, அடிமையின் ரூபத்தை எடுத்துக் கொண்டார். (வச. 6-7). எல்லாப் படைப்புகளுக்கும் காரணராகிய கிறிஸ்து, அன்பினிமித்தம் தன்னை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தார். அவர் கவுரவத்தைப் பற்றிக் கொள்ளவில்லை, மாறாகத் தாழ்மையைத் தழுவிக் கொண்டார். அவர் அதிகாரத்தை வைத்துக் கொள்ளவில்லை. தன்னுடைய அதிகாரத்தை விட்டுக் கொடுத்தார். உலக ஆதிக்கத்தின் வழிக்கு எதிராக இயேசு பின்னோக்கி நடந்தார்.
வேதாகமும் இதனையே வலியுறுத்துகின்றது (வச. 5). இயேசுவைப் போன்று நாமும் ஆதிக்கத்தை விட்டு விட்டு ஊழியம் செய்வோம். நம்மை முக்கியப் படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாகத் தாழ்மையைத் தெரிந்து கொள்வோம். வாங்குவதற்குப் பதிலாகக் கொடுப்போம். இயேசுவின் வல்லமையினால் நாமும் பின்னோக்கி நடப்போம்.
ஒரு துக்கமான கதை
வலியோடு ஏற்படுகின்ற தீமையானது மூடி மறைக்கப்பட்ட நிலையிலிருந்து, வெளியரங்கமாயிருக்கிறது. அது ஆதிக்கத்திலிருக்கிற ஆண்மக்களின் பாலியல் வன்கொடுமை அநேக பெண்களை பாதித்த விஷயம் தான். ஒவ்வொரு முறை தலைப்புச் செய்தியாக இவைகளை வாசிக்கும்போது, இரண்டு ஆண்களின் பாலியல் கொடுமைகள் நிரூபிக்கப்பட்டதைக் கேட்டபொழுது என் இருதயம் துக்கத்தில் மூழ்கியது. திருச்சபைகளும் இவ்வித பிரச்சனைகளால் பாதிக்கப் பட்டுத்தான் இருக்கின்றன. தாவீது இராஜா, இவ்விதமான அவருடைய சொந்த பிரச்சனைகளை சந்தித்தார். ஒரு நாள் மாலை, ஒரு பெண் குளிப்பதை தாவீது கண்டார் (2 சாமு. 11:2). தாவீதுக்கு அவள் தேவைப்பட்டாள். பத்சேபாள், தாவீதின் உண்மையுள்ள வேலைக்காரனின் (உரியா) மனைவியாக இருந்த
போதிலும் தாவீது அவளை எடுத்துக்கொண்டான். பத்சேபாள் தான் கர்ப் பவதியானத்தைக் குறித்து தாவீதுக்கு சொல்லியனுப்பினபோது, தாவீது குழப்பமடைந்தார். இந்த இழிவான துரோகத்தினை, யோவாபை வைத்து உரியாவை போர்முனையில் கொலை செய்ய ஒழுங்கு செய்தான்.
பத்சேபாளுக்கும் உரியாவுக்கும் எதிரான தாவீதின் அதிகார துஷ்பிரயோகமானது மறைக்கப்படவில்லை. இது வெளிப்படையாகத் தெரிந்தது. நாம் பார்க்கும்படியாக சாமுவேல் இதைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தினார். நம்முடைய தீமைகளை நாம் சரியான முறையில் தீர்க்க வேண்டும்.
மேலும், இவ்வகையான கதைகளை நாம் கேட்கும்பொழுது, அவைகள் நம்மை நம்முடைய நாட்களில் ஏற்படும் துஷ்பிரயோகத்தைக் குறித்து நம்மை எச்சரிக்கை செய்யும். 'தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவன்" (அப். 13:22) என்ற பெயர் பெற்ற தாவீது தன் செயல்களுக்கான கணக்கினை ஒப்புவிக்கக் கூடியவராகவும் இருந்தார். நாமும் ஜெபத்தோடு நம் தலைவர்கள் அதிகார துஷ்பிரயோகத்திற்கான கணக்கினை ஒப்படைக்கும்படி செய்யவேண்டும். தேவனுடைய கிருபையால், மீட்பானது கிடைக்கும். நாம் தொடர்ந்து வாசிக்கும்பொழுது, தாவீதின் உண்மையான மனந்திரும்புதலை சந்திக்கிறோம் (2 சாமு. 12:13). நல்லவேளை, கடின இருதயங்களெல்லாம் மரணத்திலிருந்து, ஜீவனுக்குத் திரும்பக்கூடிய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சமாதானம் பண்ணுதல்
இன்று நம் உலகம் இருக்கிற நிலையை விவாகரத்து மிகச்சரியாக எடுத்துக்காட்டுவதாக லுக் அன்ட் ஸீ: எ போர்ட்ரைட் ஆஃப் வென்டல் பெரி என்கிற ஆவணப்படத்தில், அதன் ஆசிரியரான பெரி வலியுறுத்துகிறார். நாம் மற்றவர்களிடமிருந்தும், நம் வரலாற்றிடமிருந்தும், நம் தேசத்திடமிருந்தும் விவாகரத்தான நிலையில்தான் இருக்கிறோம். ஒன்று சேர்ந்து இருக்கவேண்டியவை பிரிந்து நிற்கின்றன. இந்த மோசமான உண்மையைச் சரிசெய்வதற்கு என்ன செய்யலாம் என்று பெரியிடம் கேட்டபோது, “எல்லாவற்றையும் மீண்டும் ஒன்றுசேர்த்துவிட முடியாது. இரண்டு விஷயங்களை எடுத்து, அவற்றைச் சேர்க்கலாம்” என்று சொன்னார். பிரிந்துகிடக்கிற இரண்டு விஷயங்களை எடுத்து, அவற்றை மீண்டும் ஒன்றாகச் சேர்க்கலாம்.
“சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்று இயேசு சொல்கிறார் (மத். 5:9). சமாதானத்தைக் கொண்டுவருவதுதான் ஷலோம். உலகத்தை மீண்டும் சரிசெய்கிற ஒரு நிலையை ஷலோம் சுட்டிக்காட்டுகிறது. ஷலோம் என்றால், “இப்பிரபஞ்சம் செழித்து, ஒன்றுபட்டு, மகிழ்ச்சி
நிறைந்திருப்பதாகும்... அப்படித்தான் எல்லாமே இருக்கவேண்டும்” என்று இறையியல் வல்லுனர் ஒருவர் கூறுகிறார். உடைந்துபோன ஒன்றை எடுத்து, மீண்டும் சரிபடுத்துவதுதான் ஷலோம். இயேசு வழிகாட்டுவதுபோல, காரியங்களைச் சரிசெய்வதற்கு நாம் பிரயாசப்படுவோம். நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்கவும், “பூமிக்கு உப்பாக” இருக்கவும், “உலகத்திற்கு வெளிச்சமாக” இருக்கவும் அவர் நம்மை அழைக்கிறார் (வச. 13-14).
உலகத்தில் சமாதானம் பண்ணுகிறவர்களாக விளங்குவதற்கு அநேக வழிகள் உள்ளன. எந்த வழியாக இருந்தாலும் பிரிவை வெல்லுபவர்களாக இருக்கவேண்டுமே தவிர, பிரிவை உண்டாக்குபவர்களாக இருந்துவிடக்கூடாது. நட்பு முறிந்துபோகவோ, வாழ்வதற்கே திண்டாடிவரும் அக்கம்பக்கத்தார் ஒருவர் முடங்கிப்போவதற்கோ, தைரியமிழப்பதற்கோ தனிமைப்படுவதற்கோ விடமாட்டேன் என்று தேவனுடைய வல்லமையால் நாம் தீர்மானம் எடுக்கவேண்டும். எங்கெல்லாம் பிரிவு நுழைந்திருக்கிறதெனப் பார்ப்போம், பிரிவை அகற்றி மீண்டும் சரிசெய்வதற்கு தேவன் ஞானத்தைத் தருவாரென்கிற நம்பிக்கையோடு அதைச் சரிசெய்ய முயல்வோம்.
தேவனே உயர்ந்து நிற்கிறார்
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வனவிலங்கு பாதுகாவலரான கைல்ஸ் கெல்மேன்சன் தான் கண்ட நம்புவதற்கரிய ஒரு காட்சிபற்றிக் கூறினார். அதாவது, ஆறு சிங்கங்களை எதிர்த்து இரண்டு தேன்வளைக் கரடிகள் (பேட்ஜர்) சண்டையிட்டனவாம். சிங்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தங்களைவிட பத்துமடங்கு பெரிய உருவமுள்ள கொடிய சிங்கங்களிடமிருந்து அவை பின்வாங்கவில்லை. சிங்கங்கள் அவை இரண்டையும் எளிதில் கொன்றுவிட நினைத்திருக்கலாம்; ஆனால் சண்டையின் முடிவில் வீரநடை போட்டு பேட்ஜர்கள் சென்றதை வீடியோ காட்சி காட்டியது.
தாவீது-கோலியாத் சம்பவமும் நம்பமுடியாத ஒரு சம்பவம்தான். அனுபவமற்ற வாலிபனான தாவீது கொடிய பெலிஸ்தனான கோலியாத்துடன் மோதினார். இந்த இளம் வீரனைவிட கோலியாத் உயரமானவன்; பயங்கரமான பெலசாலி; யாரிடமும் இல்லாத ஆயுதம் அவனிடம் இருந்தது; அதாவது வெண்கல கேடகம், கூரான வெண்கல ஈட்டி (1 சாமு. 17:5-6). ஆனால் தாவீது சாதாரண மேய்ப்பன். தன் சகோதரர்களுக்காக அப்பங்களையும் பால்கட்டிகளையும் எடுத்துக்கொண்டு அந்தப் போர்க்களத்திற்குச் சென்றிருந்தார். வசனங்கள் 17-18. ஒரு கவண் மட்டுமே அவரிடம் இருந்தது.
கோலியாத் இஸ்ரவேலரை யுத்தத்திற்கு அழைத்தான். ஆனால் அவனோடு யுத்தம் செய்ய யாரும் தயாராக இல்லை. சவுல் ராஜாவும் “இஸ்ரவேல் அனைவரும் ... கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்” (வச. 11). தாவீது களத்தில் குதித்தபோது எவ்வளவுக்கு அதிர்ந்து போயிருப்பார்கள்! அனுபவசாலிகளான இஸ்ரவேலின் போர்வீரர்களுக்கு இல்லாத தைரியம் தாவீதுக்கு எவ்வாறு வந்தது? அங்கிருந்த அனைவருமே கோலியாத்தைத் தான் பார்த்தார்கள். ஆனால் தாவீது தேவனைப் பார்த்தார். “கர்த்தர் உன்னை (கோலியாத்தை) என் கையில் ஒப்புக்கொடுப்பார்” என்று ஆணித்தரமாகச் சொன்னார். (வச. 46). அங்கே எல்லாமே கோலியாத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அனைவரும் நினைத்தார்கள், ஆனால் தேவன்தாம் அங்கு உயர்ந்து நிற்பதாக தாவீது நம்பினார். கவணில் கல்லை வைத்து அந்த ராட்சதனின் நெற்றியில் அடித்து வீழ்த்தி, தன் விசுவாசம் உண்மையானது என்பதை நிரூபித்தார்.
எல்லாமே “கோலியாத்தின்” (நம் பிரச்சனைகளின்) கட்டுப்பாட்டில் இருப்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். ஆனால் தேவனே உயர்ந்தவர். நம் வாழ்க்கை அவருடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது.