எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

வின் கோலியர்கட்டுரைகள்

கதா நாயகர்

ஒரு பிரசித்திபெற்ற வேதாகமப் பயிற்சி கல்லூரியில், ஒரு மாணவன் தன்னுடைய வகுப்பில் பிரசங்கம் செய்தான். அந்த இளம் மாணவன் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தினான். உள்ளான உணர்வோடும், சரளமான பேச்சோடும் தன்னுடைய பிரசங்கத்தை முடித்து, மிகவும் திருப்தியடைந்தவனாய் அமர்ந்தான். அவனுடைய பேராசிரியர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். பின்னர், “இது மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு செயல் படுத்தப்பட்டது. ஆனால், உன்னுடைய செய்தியின் எந்த பகுதியிலும் ஒரு வார்த்தை கூட தேவனைப்பற்றி சொல்லவேயில்லை” என்றார்.

சில வேளைகளில் நாமனைவரும் சந்திக்கின்ற பிரச்சனையையே அந்த பேராசிரியரும் குறிப்பிட்டார். நாம் நம்மையே முக்கியப்படுத்தி பேசுகின்றோம். (நாம் எதைச் செய்கின்றோம், எதைச் சொல்கின்றோம், என்பதையே முக்கியப்படுத்துகின்றோம்) உண்மையில் தேவன் தான் நம் வாழ்வின் கதாநாயகன். என் காரியங்கள் எல்லாவற்றையும் தேவன் பார்த்துக் கொள்வார் என்று சொல்லிக் கொண்டு, நம்முடைய செயல்கள் யாவும் என்னையேச் சார்ந்திருக்கின்றன என்பதாகச் செயல் படுகின்றோம்.

நம் வாழ்வின் காரணரும் நம்மை நடத்தும் மெய்யான வல்லமையும் தேவனே என வேதாகமம் சுட்டிக்காட்டுகின்றது. நம்முடைய விசுவாச செயல்களெல்லாமே “இயேசுவின் நாமத்தினாலும்” அவருடைய வல்லமையினால் மட்டுமே நடைபெறும் (சங். 118:10-11). தேவனே நம்மை இரட்சிக்கின்றார், நம்மை மீட்கின்றார், நம்முடைய தேவைகள் அனைத்தையும் சந்திக்கிறார். “அது கர்த்தராலே ஆயிற்று” (வச. 23).

எனவே நம்முடைய மனப் பாரங்களை விட்டு விடுவோம். நாம் பதட்டப்படவும், ஒப்பிடவும், நம்முடைய ஆவல்களை நிறைவேற்ற நம்மை வருத்திக் கொள்ளவும் வேண்டாம். தேவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர் மீதுள்ள நம்பிக்கையோடு, அவர் காட்டும் வழி நடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து, அதன் வழி நடத்தலேயாகும்.

பின்னோக்கி நடத்தல்

பிரிட்டனைச் சேர்ந்த திரைப் பட குழுவினரின் செய்திப் படக் காட்சிகளைக் கண்டு வியந்து நின்றேன். அதில் ஆறு வயது நிரம்பிய பிளானரி ஓ’கான்னோர்  என்ற சிறுமியை, அவளது குடும்பப் பண்ணையில் வைத்து 1932ஆம் ஆண்டு படம் எடுத்திருந்தனர். பிளானரி, பிற்காலத்தில் அமெரிக்க தேசத்தால் பாராட்டு பெற்ற, ஒரு பிரபல எழுத்தாளராகத் திகழ்ந்தார். அவள் இந்த படப் பிடிப்பு குழுவினரின் ஆர்வத்தை ஈர்க்கக் காரணமென்னவெனின், அவள் தன்னுடைய கோழிக் குஞ்சுவிற்கு பின்னோக்கி நடப்பதற்குக் கற்றுக் கொடுத்திருந்தாள். இந்த சாதனை ஒரு புதுமை மட்டுமல்லாமல், சரித்திரத்தில் ஒரு சிறந்த உருவகமாகவும் பார்க்கப் படுகிறது. பிளானரி தன்னுடைய இலக்கிய சிந்தனைகளையும், ஆன்மீக வெளிப்பாடுகளையும் கொண்டு முப்பத்தொன்பது ஆண்டுகளைப் பின்னோக்கி நடப்பதில் செலவிட்டாள். கலாச்சார வழி முறைகளுக்கு முரண்பாடாகச் சிந்தித்து, எழுத்தில் வெளிப்படுத்தினாள். வேதகமத்தை அடிப்படையாகக் கொண்ட அவளுடைய நோக்கங்கள் மக்கள் எதிர்பார்த்த மத எண்ணங்களுக்கு மாறாக அமைந்துள்ளதைக் கண்ட புத்தக வெளியீட்டாளர்களும் வாசகர்களும் திகைத்தனர்.

இயேசுவை உண்மையாகப் பின் பற்றுபவர்களின் வாழ்வு மத சடங்காச்சாரங்களுக்கு எதிராக அமைவதை தவிர்க்க முடியாது. இயேசு தேவ குமாரனாயிருந்தும் தன்னுடைய தெய்வீகத் தன்மையை நாம் எதிர்பார்த்த வகையில் வெளிப் படுத்தவில்லை (2;6) என்பதை பிலிப்பியர் நமக்குக் காட்டுகின்றது. அவர் தன்னுடைய வல்லமையை தன் “சொந்த நலனுக்காக” பயன்படுத்தவேயில்லை. ஆனால் அவர் தன்னை வெறுமையாக்கி, அடிமையின் ரூபத்தை எடுத்துக் கொண்டார். (வச. 6-7). எல்லாப் படைப்புகளுக்கும் காரணராகிய கிறிஸ்து, அன்பினிமித்தம் தன்னை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தார். அவர் கவுரவத்தைப் பற்றிக் கொள்ளவில்லை, மாறாகத் தாழ்மையைத் தழுவிக் கொண்டார். அவர் அதிகாரத்தை வைத்துக் கொள்ளவில்லை. தன்னுடைய அதிகாரத்தை விட்டுக் கொடுத்தார். உலக ஆதிக்கத்தின் வழிக்கு எதிராக இயேசு பின்னோக்கி நடந்தார்.

வேதாகமும் இதனையே வலியுறுத்துகின்றது (வச. 5). இயேசுவைப்  போன்று நாமும் ஆதிக்கத்தை விட்டு விட்டு ஊழியம் செய்வோம். நம்மை முக்கியப் படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாகத் தாழ்மையைத் தெரிந்து கொள்வோம். வாங்குவதற்குப் பதிலாகக் கொடுப்போம். இயேசுவின் வல்லமையினால் நாமும் பின்னோக்கி நடப்போம்.

ஒரு துக்கமான கதை

வலியோடு ஏற்படுகின்ற தீமையானது மூடி மறைக்கப்பட்ட நிலையிலிருந்து, வெளியரங்கமாயிருக்கிறது. அது ஆதிக்கத்திலிருக்கிற ஆண்மக்களின் பாலியல் வன்கொடுமை அநேக பெண்களை பாதித்த விஷயம் தான். ஒவ்வொரு முறை தலைப்புச் செய்தியாக இவைகளை வாசிக்கும்போது, இரண்டு ஆண்களின் பாலியல் கொடுமைகள் நிரூபிக்கப்பட்டதைக் கேட்டபொழுது என் இருதயம் துக்கத்தில் மூழ்கியது. திருச்சபைகளும் இவ்வித பிரச்சனைகளால் பாதிக்கப் பட்டுத்தான் இருக்கின்றன. தாவீது இராஜா, இவ்விதமான அவருடைய சொந்த பிரச்சனைகளை சந்தித்தார். ஒரு நாள் மாலை, ஒரு பெண் குளிப்பதை தாவீது கண்டார் (2 சாமு. 11:2). தாவீதுக்கு அவள் தேவைப்பட்டாள். பத்சேபாள், தாவீதின் உண்மையுள்ள வேலைக்காரனின் (உரியா) மனைவியாக இருந்த

போதிலும் தாவீது அவளை எடுத்துக்கொண்டான். பத்சேபாள் தான் கர்ப் பவதியானத்தைக் குறித்து தாவீதுக்கு சொல்லியனுப்பினபோது, தாவீது குழப்பமடைந்தார். இந்த இழிவான துரோகத்தினை, யோவாபை வைத்து உரியாவை போர்முனையில் கொலை செய்ய ஒழுங்கு செய்தான்.

பத்சேபாளுக்கும் உரியாவுக்கும் எதிரான தாவீதின் அதிகார துஷ்பிரயோகமானது மறைக்கப்படவில்லை. இது வெளிப்படையாகத் தெரிந்தது. நாம் பார்க்கும்படியாக சாமுவேல் இதைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தினார். நம்முடைய தீமைகளை நாம் சரியான முறையில் தீர்க்க வேண்டும்.

மேலும், இவ்வகையான கதைகளை நாம் கேட்கும்பொழுது, அவைகள் நம்மை நம்முடைய நாட்களில் ஏற்படும் துஷ்பிரயோகத்தைக் குறித்து நம்மை எச்சரிக்கை செய்யும். 'தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவன்" (அப். 13:22) என்ற பெயர் பெற்ற தாவீது தன் செயல்களுக்கான கணக்கினை ஒப்புவிக்கக் கூடியவராகவும் இருந்தார். நாமும் ஜெபத்தோடு நம் தலைவர்கள் அதிகார துஷ்பிரயோகத்திற்கான கணக்கினை ஒப்படைக்கும்படி செய்யவேண்டும். தேவனுடைய கிருபையால், மீட்பானது கிடைக்கும். நாம் தொடர்ந்து வாசிக்கும்பொழுது, தாவீதின் உண்மையான மனந்திரும்புதலை சந்திக்கிறோம் (2 சாமு. 12:13). நல்லவேளை, கடின இருதயங்களெல்லாம் மரணத்திலிருந்து, ஜீவனுக்குத் திரும்பக்கூடிய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சமாதானம் பண்ணுதல்

இன்று நம் உலகம் இருக்கிற நிலையை விவாகரத்து மிகச்சரியாக எடுத்துக்காட்டுவதாக லுக் அன்ட் ஸீ: எ போர்ட்ரைட் ஆஃப் வென்டல் பெரி என்கிற ஆவணப்படத்தில், அதன் ஆசிரியரான பெரி வலியுறுத்துகிறார். நாம் மற்றவர்களிடமிருந்தும், நம் வரலாற்றிடமிருந்தும், நம் தேசத்திடமிருந்தும் விவாகரத்தான நிலையில்தான் இருக்கிறோம். ஒன்று சேர்ந்து இருக்கவேண்டியவை பிரிந்து நிற்கின்றன. இந்த மோசமான உண்மையைச் சரிசெய்வதற்கு என்ன செய்யலாம் என்று பெரியிடம் கேட்டபோது, “எல்லாவற்றையும் மீண்டும் ஒன்றுசேர்த்துவிட முடியாது. இரண்டு விஷயங்களை எடுத்து, அவற்றைச் சேர்க்கலாம்” என்று சொன்னார். பிரிந்துகிடக்கிற இரண்டு விஷயங்களை எடுத்து, அவற்றை மீண்டும் ஒன்றாகச் சேர்க்கலாம்.

“சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்று இயேசு சொல்கிறார் (மத். 5:9). சமாதானத்தைக் கொண்டுவருவதுதான் ஷலோம். உலகத்தை மீண்டும் சரிசெய்கிற ஒரு நிலையை ஷலோம் சுட்டிக்காட்டுகிறது. ஷலோம் என்றால், “இப்பிரபஞ்சம் செழித்து, ஒன்றுபட்டு, மகிழ்ச்சி
நிறைந்திருப்பதாகும்... அப்படித்தான் எல்லாமே இருக்கவேண்டும்” என்று இறையியல் வல்லுனர் ஒருவர் கூறுகிறார். உடைந்துபோன ஒன்றை எடுத்து, மீண்டும் சரிபடுத்துவதுதான் ஷலோம். இயேசு வழிகாட்டுவதுபோல, காரியங்களைச் சரிசெய்வதற்கு நாம் பிரயாசப்படுவோம். நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்கவும், “பூமிக்கு உப்பாக” இருக்கவும், “உலகத்திற்கு வெளிச்சமாக” இருக்கவும் அவர் நம்மை அழைக்கிறார் (வச. 13-14).

உலகத்தில் சமாதானம் பண்ணுகிறவர்களாக விளங்குவதற்கு அநேக வழிகள் உள்ளன. எந்த வழியாக இருந்தாலும் பிரிவை வெல்லுபவர்களாக இருக்கவேண்டுமே தவிர, பிரிவை உண்டாக்குபவர்களாக இருந்துவிடக்கூடாது. நட்பு முறிந்துபோகவோ, வாழ்வதற்கே திண்டாடிவரும் அக்கம்பக்கத்தார் ஒருவர் முடங்கிப்போவதற்கோ, தைரியமிழப்பதற்கோ தனிமைப்படுவதற்கோ விடமாட்டேன் என்று தேவனுடைய வல்லமையால் நாம் தீர்மானம் எடுக்கவேண்டும். எங்கெல்லாம் பிரிவு நுழைந்திருக்கிறதெனப் பார்ப்போம், பிரிவை அகற்றி மீண்டும் சரிசெய்வதற்கு தேவன் ஞானத்தைத் தருவாரென்கிற நம்பிக்கையோடு அதைச் சரிசெய்ய முயல்வோம்.

தேவனே உயர்ந்து நிற்கிறார்

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வனவிலங்கு பாதுகாவலரான கைல்ஸ் கெல்மேன்சன் தான் கண்ட நம்புவதற்கரிய ஒரு காட்சிபற்றிக் கூறினார். அதாவது, ஆறு சிங்கங்களை எதிர்த்து இரண்டு தேன்வளைக் கரடிகள் (பேட்ஜர்) சண்டையிட்டனவாம். சிங்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தங்களைவிட பத்துமடங்கு பெரிய உருவமுள்ள கொடிய சிங்கங்களிடமிருந்து அவை பின்வாங்கவில்லை. சிங்கங்கள் அவை இரண்டையும் எளிதில் கொன்றுவிட நினைத்திருக்கலாம்; ஆனால் சண்டையின் முடிவில் வீரநடை போட்டு பேட்ஜர்கள் சென்றதை வீடியோ காட்சி காட்டியது.

தாவீது-கோலியாத் சம்பவமும் நம்பமுடியாத ஒரு சம்பவம்தான். அனுபவமற்ற வாலிபனான தாவீது கொடிய பெலிஸ்தனான கோலியாத்துடன் மோதினார். இந்த இளம் வீரனைவிட கோலியாத் உயரமானவன்; பயங்கரமான பெலசாலி; யாரிடமும் இல்லாத ஆயுதம் அவனிடம் இருந்தது; அதாவது வெண்கல கேடகம், கூரான வெண்கல ஈட்டி (1 சாமு. 17:5-6). ஆனால் தாவீது சாதாரண மேய்ப்பன். தன் சகோதரர்களுக்காக அப்பங்களையும் பால்கட்டிகளையும் எடுத்துக்கொண்டு அந்தப் போர்க்களத்திற்குச் சென்றிருந்தார். வசனங்கள் 17-18. ஒரு கவண் மட்டுமே அவரிடம் இருந்தது.

கோலியாத் இஸ்ரவேலரை யுத்தத்திற்கு அழைத்தான். ஆனால் அவனோடு யுத்தம் செய்ய யாரும் தயாராக இல்லை. சவுல் ராஜாவும் “இஸ்ரவேல் அனைவரும் ... கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்” (வச. 11). தாவீது களத்தில் குதித்தபோது எவ்வளவுக்கு அதிர்ந்து போயிருப்பார்கள்! அனுபவசாலிகளான இஸ்ரவேலின் போர்வீரர்களுக்கு இல்லாத தைரியம் தாவீதுக்கு எவ்வாறு வந்தது? அங்கிருந்த அனைவருமே கோலியாத்தைத் தான் பார்த்தார்கள். ஆனால் தாவீது தேவனைப் பார்த்தார். “கர்த்தர் உன்னை (கோலியாத்தை) என் கையில் ஒப்புக்கொடுப்பார்” என்று ஆணித்தரமாகச் சொன்னார். (வச. 46). அங்கே எல்லாமே கோலியாத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அனைவரும் நினைத்தார்கள், ஆனால் தேவன்தாம் அங்கு உயர்ந்து நிற்பதாக தாவீது நம்பினார். கவணில் கல்லை வைத்து அந்த ராட்சதனின் நெற்றியில் அடித்து வீழ்த்தி, தன் விசுவாசம் உண்மையானது என்பதை நிரூபித்தார்.

எல்லாமே “கோலியாத்தின்” (நம் பிரச்சனைகளின்) கட்டுப்பாட்டில் இருப்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். ஆனால் தேவனே உயர்ந்தவர். நம் வாழ்க்கை அவருடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

துன்பங்களை நீக்குவார்

பயங்கர கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்தார் மேரி அன் ஃபிரான்கோ. விபத்திலிருந்து உயிர்பிழைத்தாலும் கண்பார்வை முற்றிலும் பறிபோனது. “அதன்பிறகு இருளைத் தவிர வேறு எதையும் நான் பார்க்கவில்லை” என்று ஃபிரான்கோ சொன்னார். இருபத்தோரு வருடங்களுக்கு பிறகு, ஒரு சமயம் அவர் கீழே விழுந்ததில் அவருடைய முதுகில் அடிபட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் (கண் சம்பந்தமாக எந்தச் சிகிச்சையும் செய்யவில்லை.) அற்புதம் என்ன வென்றால், அவருடைய கண்பார்வை திரும்பக் கிடைத்தது! கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் கடந்த நிலையில், முதன்முதலாக அப்போதுதான் தன் மகளுடைய முகத்தை அவர் பார்த்தார். ஃபிரான்கோவுக்கு எவ்வாறு பார்வை திரும்பக்கிடைத்தது என்பதற்கு விஞ்ஞான ரீதியில் பதிலில்லை என்கிறார் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர். இறுதியாக இருள் அகன்று, வெளிச்சத்தையும் அழகையும் அவரால் கண்டு ரசிக்கமுடிந்தது.

அறியாமை மற்றும் தீமையின் ஒரு மேகம் இந்த உலகத்தை மூடியுள்ளது; நாம் யாருமே தேவ அன்பைக் காணமுடியாதபடி அது செய்கிறது. ஏசா 25:7. இதை வேத வசனங்களும் சொல்லுகின்றன; நம்முடைய அனுபவத்திலும் காண்கிறோம். சுயநலம், பேராசை, சுயநிறைவு சிந்தை, அதிகாரம் மற்றும் புகழுக்கான பேராசை போன்றவை நம் பார்வையை மங்கச் செய்கின்றன; சத்தியமானவரும் மாறாதவருமான, “அதிசயமானவைகளைச் செய்த” தேவனை தெளிவாகப்பார்க்க முடியாதபடி செய்கின்றன. வசனம் 1.

'மூடியிருக்கிற மூடல்" என்கிற வார்த்தைகள் பொதுமொழிபெயர்ப்பில் 'துன்பத்துகில்" என்று உள்ளது. தனியே விடப்பட்டால் நாம் அந்தகாரத்தையும் குழப்பத்தையும் விரக்தியையும் மட்டுமே அனுபவிக்கிறோம். எதிலோ சிக்கிக்கொண்ட உணர்வும்தான் பெரும்பாலும் நம்மில் தடுமாற்றமும், காணப்படுகிறது; நமக்கு முன்னிருக்கும் பாதையை நாம் பார்க்கமுடிவதில்லை. தேவனுக்கு ஸ்தோத்திரம், தேவன் இறுதியாக 'சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலை... அகற்றிப் போடுவார்" என்று ஏசாயா சொல்கிறார் (வச. 7).

தேவன் நம்பிக்கையற்றவர்களாக நம்மை விடமாட்டார். நம் பார்வையை மறைக்கிற எதையும் அவருடைய பேரன்பு அகற்றி, நன்மையான வாழ்க்கையும் பரிபூரண கிருபையும் நமக்கிருப்பதைக் காண்பித்து, ஆச்சரியமூட்டுவார்.

தைரியமாயிருக்க அழைப்பு

உபவாசத்தின் உட்கருத்து

எதிர்பாராத வெற்றியாளர்கள்

2018ல் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் மிகவும் எதிர்பாரததும், அனைவரையும் வாயடைத்து நிற்கச்செய்த காரியம் என்னவெனில், செக்கோஸ்லோவேக்கியா நாட்டைச் சேர்ந்த உலக வீராங்கனை எஸ்தர் லீடெக்கா மிகவும் வித்தியாசமான ஒரு விளையாட்டில் வெற்றி பெற்றாள். அது பனிச் சறுக்கல்! அதில் அவள் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றாள். யாராலும் செய்ய முடியதென கருதியிருந்த ஒரு போட்டியில், பனிக்சறுக்கலில் 26வது வீராங்கனையாக களமிறங்கிய அவள், நம்ப முடியாத அளவு முன்னிலைப் பெற்றாள்.

லீடெக்கா பெண்களுக்கான சூப்பர்-ஜி சறுக்கலுக்கும் வியத்தகு வகையில் தேர்வு செய்யப்பட்டாள். இந்த விளையாட்டு கீழ் நோக்கிய சறுக்கலையும், தடை சறுக்கலையும் உள்ளடக்கியது. இதில் அவள் தான் கடனாக வாங்கிய சறுக்குப் பலகைகளோடு .01 வினாடி முன்னிலையில் வெற்றி பெற்றாள். அங்கிருந்த செய்தியாளர்களும், பிற வீரர்களும் வேறு சில பிரசித்தி பெற்ற பனிசறுக்கர்களையே வெற்றிபெற  எதிர்பார்த்திருக்க லீடெக்கா அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தாள்.

உலகம் எதிர்பார்ப்பது இப்படித்தான். வெற்றி பெறுபவர்களே மேலும் வெற்றி பெறுவர் என்றும், மற்றவர்கள் தோற்றுவிடுவர் என்று தான் உலகம் எதிர்பார்க்கும், இயேசு, “ஐசுரியவான் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது அரிதென்று… (மத். 19:23) சொன்ன போது, அவருடைய சீடர்களுக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது. இயேசு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றுகின்றார். ஐசுரியவான் (வெற்றி பெற்றவன்) எப்படி ஒரு தடைக் கல்லாக இருக்க முடியும்? நாம் பெற்றிருப்பவற்றின் மீது நம்பிக்கையை வைக்கும் போது, நம்மால் எதைச் செய்யமுடியுமோ அல்லது நாம் எப்படியிருக்கின்றோமோ அதன் மீது நம்பிக்கையை வைக்கும் போது தேவன் மீது நம்பிக்கையை வைப்பது கடினமானது மட்டுமல்ல, இயலாததாகவும் மாறி விடுகின்றது.

தேவனுடைய இராஜ்ஜியம் நம்முடைய சட்ட திட்டங்களின்படி செயல்படுவதல்ல. “முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள்” (வச. 30). நீ முதலிலோ அல்லது கடைசியிலோ எங்கிருந்தாலும், தேவனுடைய கிருபையினாலேயே நாம் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்கின்றோம் என்பதே உண்மை அது, தகுதியற்ற நமக்கு தேவனால் அருளப்பட்ட கிருபை.

அநியாயத்தின் பாரத்தை சுமத்தல்

குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு, 38 வருடங்களுக்குப் பின், 2018 ஜனவரி 30 ஆம் நாள் மால்கம் அலெக்சாண்டர் சிறைச்சாலையை விட்டு சுதந்திர மனிதனாக வெளியே நடந்தார். டி.என்.எ சாட்சிகள் அலெக்சாண்டரை குற்றவாளியல்லவென்று காண்பிக்க, தொடர்ந்து தான் குற்றமற்றவன் என்பதைத் தெரிவித்துக் கொண்டிருந்த அலெக்சாண்டரின் வாக்குகளின் மத்தியில் வெளியான அனைத்து நீதிமன்ற செயல்களும் அவருக்கு எதிராக அநீதியாக தீர்ப்பிட்டன. குற்றவாளியின் சார்பாக செயல்பட்ட திறமையற்ற அரசு வழக்கறிஞர்கள், ஜோடிக்கப்பட்ட சாட்சிகள், சந்தேகத்தைக் கொண்டுவரும் விசாரனை யுக்திகள் அனைத்தும் சேர்ந்து ஓர் அப்பாவி மனிதனை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் சிறையிலடைத்தது. கடைசியாக விடுதலைப்பெற்று வெளிவந்த போது, அலெக்சாண்டர் அளவிடமுடியாத கருணையைக் காண்பித்தார். 'நீ கோபத்தோடிருக்கக்கூடாது. இன்னும் கோபத்தோடிருக்க போதிய காலமில்லை" என கூறிக்கொண்டார்.

அலெக்சாண்டரின் வார்த்தைகள் ஆழ்ந்த கருணையின் வார்த்தைகள். அநீதி அவருடைய முப்பதெட்டு ஆண்டு வாழ்க்கையை அழித்துவிட்டது. அவருடைய பாரம்பரியத்தை கொன்றுவிட்டது. அப்படியாயின் நாம் கோபத்தோடும், வெறியோடுமல்லவா இருக்கவேண்டும். அலெக்சாண்டர் தன்மீது திணிக்கப்பட்ட குற்றங்களை சுமந்து, உள்ளம் உடைக்கப்பட்டவராக அநேக ஆண்டுகளைக் கழிக்க நேரிட்ட போதிலும், அவர் தீமையினால் மேற்கொள்ளப்படவில்லை. தன்னுடைய முழு பெலத்தையும் பழிவாங்கும்படி செலவிடாமல், பேதுரு கூறிய நிலையை வெளிப்படுத்துகின்றார். 'தீமைக்கு தீமையையும் உதாசீனத்துக்கு உதாசீனத்தையும் சரிக்கட்டாமல்" என்பதை செயலில் காட்டினார் (1 பேது. 3:9).

வேதாகமம் இன்னும் ஒருபடி மேலேயே கூறுகின்றது. பழிவாங்கலுக்குப் பதிலாக ஆசீர்வதியுங்கள் (வச. 9) எனக் கூறுகின்றது. நமக்கு அநீதியாக தீங்கிழைத்தவர்களுக்கு மன்னிப்பையும், நல்வாழ்விற்கான நம்பிக்கையையும் கொடுக்கவேண்டும். அவர்களின் தீய செயல்களை காரணம் காட்டாமல், நம்முடைய குற்றங்களை இயேசு சிலுவையில் சுமந்ததாலேயே நாம் தேவ இரக்கத்தைப் பெற்றுள்ளோம். நாமும் அந்த இரக்கத்தைப் பிறருக்குக் காட்டுவோம். நமக்கு அநீதியிழைத்தவருக்கும் காட்டுவோம்.