லேவியராகமம் கூட
அன்றைய வேத ஆராய்ச்சியின் தலைப்பு 'லேவியராகமம்'. நான் என் குழுவினரிடம், "லேவியராகமத்தின் பல பகுதிகளை வாசிக்கத் தவிர்த்துள்ளேன், நான் தோல் நோய்களைப் பற்றி மீண்டும் படிக்க விரும்பவில்லை" என்று காரணத்தையும் ஒப்புக்கொண்டு கூறினேன். என் நண்பர் டேவ், "அந்தப் பத்தியின் காரணமாக இயேசுவை விசுவாசித்த ஒருவரை எனக்குத் தெரியும்" என்றார். மேலும், "அவா் ஒரு நாத்திகர் ஆனால் மருத்துவரும்கூட, வேதாகமத்தை முற்றிலுமாக நிராகரிப்பதற்கு முன், தானே அதைப் படிப்பது நல்லது என்று அவர் முடிவு செய்தார். லேவியராகமத்தில் தோல் நோய்கள் பற்றிய பகுதி அவரை மிகவும் கவர்ந்தது" என்றார்.
அதில், தோல் தொற்று நோய் மற்றும் தொற்றாத தோல் புண்களைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டிருந்தது (13:1–46). மற்றும் அவற்றிற்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை பற்றிய ஆச்சரியமான விவரங்களைக் கொண்டிருந்தது (14:8–9). அன்றைய நாட்களின் மருத்துவ அறிவை மிஞ்சும் அளவுக்கு இது உள்ளதை அறிந்துகொண்டார். ஆனால் அது லேவியராகமத்தில்தான் இருந்தது. மோசேக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்தார். மோசே உண்மையிலேயே தேவனிடமிருந்து தான் இந்த விபரங்களைப் பெற்றார் என்று கருதினார். இறுதியில் அவர் இயேசுவின் விசுவாசியானார்.
வேதாகமத்தின் சில பகுதிகள் உங்களைச் சங்கடப்படுத்தியிருக்கலாம். நானும் அதை அனுபவித்துள்ளேன். ஆனால் அப்படிக் கொல்லப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. இஸ்ரவேலர்கள் தேவனுக்காகவும், தேவனோடும் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிந்துகொள்ளும்படி லேவியராகமம் எழுதப்பட்டது. தேவனாகிய கர்த்தருக்கும் அவருடைய மக்களுக்கும் இடையிலான இந்த உறவைப் பற்றி அறியும்போது, நாம் இன்னும் அதிகமாகத் தேவனைப் பற்றி அறிகிறோம்.
"வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக" (2 தீமோத்தேயு 3:16) என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார் . ஆகவே வேதாகமத்தை, குறிப்பாக லேவியராகமத்தைக் கூட நாம் தொடர்ந்து படிக்கலாம்.
கண்ணியத்தை விரிவுபடுத்துதல்
மேகியின் இளம் நண்பர் தேவாலயத்திற்கு அணிந்து வந்த உடை அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் யாரும் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டியதில்லை காரணம் அவள் ஒரு பாலியல் தொழிலாளி, அங்கே அசௌகரியத்துடன் தனது இருக்கையை மாற்றினாள். மாறி மாறி அவளது மிகக் குட்டையான கீழாடையை இழுத்து, தன் கைகளினால் சங்கடத்துடன் தன்னைச் சுற்றிக் கொண்டாள்.
அவள் உடுத்தியிருக்கிற உடை மீதில் உள்ள கவனத்தைத் திசை திருப்ப "ஓ, குளிர்கிறதா?" என்று மேகி கேட்டபின். "இதோ! என் சால்வையை எடுத்துக்கொள் என்றாள்." மேகி பலரைத் தேவாலயத்திற்கு வருமாறு அழைப்பதன் மூலமும், அவர்கள் சங்கோச்சப்படாமல் ஆலயத்தில் ஆராதிக்க உதவுவதின் மூலமும் அநேகரை கிறிஸ்துவுக்குள் நடத்தியிருக்கிறார். நற்செய்தியானது அவளது அற்புதமான முறைகள் மூலம் மேலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அனைவரையும் கண்ணியமாக நடத்தினாள்.
விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும், பரிசேயரும் இயேசுவிடம் கொண்டுவந்து, அவா் முன் அவளை நடுவே நிறுத்தி குற்றச்சாட்டினாா்கள். ஆனால் கிறிஸ்து குற்றம் சாட்டுபவர்களை அங்கிருந்து அனுப்பும் வரை தன் கவனத்தை அவள் மீது வைக்கவில்லை. அவர்கள் போனதும் அவளைத் திட்டியிருக்கலாம். மாறாக, " இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்." (யோவான் 8:10). பிந்தைய கேள்விக்கான பதில், நிச்சயமாக இல்லை. எனவே இயேசு அவளுக்கு ஒரு சுருக்கமாகச் சுவிசேஷமாகக் கூறியது: "....நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே." (வ. 11) என்ற அழைப்பாகும்.
மக்கள் மீதான உண்மையான அன்பின் வல்லமையை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். உண்மையான அன்பு, தீர்ப்பிடாமல் கண்ணியத்தையும் மன்னிப்பையும் வழங்குகிறது.
வெள்ளைப்போலத்தின் அர்த்தம்
இன்று சாஸ்திரிகள் இயேசுவை தரிசித்த நாள். “நாங்கள் மூவரும் கிழக்கத்திய ராஜாக்கள்” என்று மூன்று சாஸ்திரிகளும் இயேசுவின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்மஸ் கேரள் பாடல் ஒன்று விவரிக்கிறது. ஆனால் அவர்கள் மூவரும் ராஜாக்கள் இல்லை. அவர்கள் கிழக்கிலிருந்து வந்தவர்களும் இல்லை. அவர்கள் மூன்றுபேராகவும் இருக்க வாய்ப்பில்லை.
இருப்பினும், மூன்று பரிசுகள் இருந்தன. அந்த கேரள் பாடல், அவை ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. சாஸ்திரிகள் பெத்லெகேமுக்கு வந்தபோது, “அவர்கள்... தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்” (மத்தேயு 2:11). இந்த பரிசுகள் இயேசுவின் ஊழியத்தை விவரிக்கிறது. பொன், ராஜாவாக அவரது பாத்திரத்தை பிரதிபலிக்கிறது. பலிபீடத்தில் எரிக்கப்படும் தூபத்துடன் கலந்த தூபவர்க்கம் அவரது தெய்வத்துவத்தைக் குறிக்கிறது. இறந்த உடல்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்படும் வெள்ளைப்போலம், நமக்கு இடைநிறுத்தம் தருகிறது.
கேரள் பாடலின் நான்காவது வரி, “வெள்ளைப்போலம் என்னுடையது; அது கசப்பான வாசனை திரவியம். இருளில் சூழ்ந்த ஒரு வாழ்க்கையை அது சுவாசிக்கிறது. துக்கம், பெருமூச்சு, இரத்தஞ்சிந்துதல், மரணம் என்ற கல்லறையில் வைத்து மூட்டப்பட்டது” என்று இடம்பெறுகிறது. நாம் கதையில் அத்தகைய காட்சியை எழுத மாட்டோம், ஆனால் தேவன் அதைச் செய்தார். இயேசுவின் மரணம் நமது இரட்சிப்பின் மையமானது. ஏரோது, இயேசு குழந்தையாக இருக்கும்போதே அவரைக் கொல்ல முயன்றான் (வச. 13).
கேரள் பாடலின் கடைசி சரணம் மூன்று கருப்பொருள்களை ஒன்றாக இணைக்கிறது: “இதோ மகிமையயின் ராஜா எழுந்தருளியிருக்கிறார். ராஜா, தேவன் மற்றும் தியாகம்.” இது கிறிஸ்மஸின் கதையை நிறைவு செய்கிறது. நமது பதிலை எதிர்பார்க்கச்செய்கிறது” “அல்லேலூயா, அல்லேலூயா என்று வானம் பூமியெங்கும் ஒலிக்கிறது.”
குமாரனும் உயிர்த்தெழுந்தார்
எர்னஸ்ட் ஹெமிங்வேயின் முதல் நாவல், சமீபத்தில் முதலாம் உலகப் போரைச் சந்தித்த கடும் குடிபழக்கத்திற்கு ஆளான நண்பர்களைப் பற்றியது. அவர்கள் சமீபத்தில் நடந்த போரின் வடுக்களை எதோ ஒரு விதத்தில் மறக்க எண்ணி, விருந்துகள், சாகச நிகழ்வுகள் மற்றும் தூக்கத்தின் மூலம் ஆகியவற்றில் நேரம் செலவழிப்பவர்கள். வலியை மறப்பதற்கு மதுபானம் எப்போதும் இருக்கிறது. ஆனால் யாரும் மகிழ்ச்சியாயில்லை.
ஹெமிங்வேயின் “தி சன் ஆல்சோ ரைசஸ்” என்ற புத்தகத்திற்கான தலைப்பு பிரசங்கி புத்தகத்தின் பக்கங்களில் இருந்து வந்தது (1:5). பிரசங்கியில், சாலெமோன் ராஜா தன்னை “பிரசங்கி" என்று குறிப்பிடுகிறார் (வச. 1). “எல்லாம் மாயை” (வச. 2) என்று அவர் கவனித்து, “மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?” (வச. 3) என்று கேட்கிறார். மேலும் சாலெமோன், சூரியன் எவ்வாறு உதயமாகிறது மற்றும் மறைகிறது, காற்று அங்குமிங்குமாக வீசுகிறது, ஆறுகள் முடிவில்லாமல் ஒருபோதும் திருப்தியடையாத கடலில் பாய்கின்றன (வவ. 5-7) என்ற பார்க்கிறார். ஆனால் எல்லாம் மறந்துபோய்விடுகிறது (வச. 11).
ஹெமிங்வே மற்றும் பிரசங்கி, இருவரும் இந்த வாழ்க்கைக்காக மட்டுமே வாழ்வதன் அப்பட்டமான பயனற்ற தன்மையுடன் நம்மை எதிர்கொள்கிறார்கள். இருப்பினும், சாலெமோன் தனது புத்தகத்தில் தெய்வீகத்தின் பிரகாசமான குறிப்புகளை விதைக்கிறார். மெய்யான நம்பிக்கை என்று ஒன்று இருக்கிறது. பிரசங்கி நாம் இருக்கும் நிலையை மாத்திரமல்லாமல், தேவன் யார் என்பதையும் நமக்கு அறிவிக்கிறார். “தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும்” (3:14) என்று நம்முடைய நம்பிக்கையின் அஸ்திபாராமாய் சாலேமோன் தேவனை அடையாளப்படுத்துகிறார். ஏனென்றால், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்குப் ஈவாகக் கொடுத்திருக்கிறார்.
நாம் தேவனில்லாமல், முடிவேயில்லாத, திருப்பதியடையாத ஒரு கடலில் நீந்திக்கொண்டேயிருக்கிறோம். அவருடைய உயிர்த்தெழுந்த குமாரனாகிய இயேசுவின் மூலம் நாம் நம்முடைய வாழ்வில் அர்த்தத்தையும் நோக்கத்தையும் கண்டறிகிறோம்.
இயேசுவுக்கு ஒப்புவித்தல்
1951 ஆம் ஆண்டில், ஜோசப் ஸ்டாலினின் மருத்துவர், அவரது உடல்நிலையைப் பாதுகாப்பதற்காக அவரது பணிச்சுமையைக் குறைக்குமாறு அறிவுறுத்தினார். சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியாளர், அந்த மருத்துவர் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி அவரை கைது செய்தார். பொய்களால் பலரை ஒடுக்கிய கொடுங்கோலன் உண்மையைக் கடைப்பிடிக்க முடியவில்லை. மேலும் அவர் வழக்கம்போல, உண்மையைச் சொல்கிறவர்களை பணியை விட்டு அகற்றினார். ஆனால் உண்மை கடைசியில் வென்றது. ஸ்டாலின் 1953இல் இறந்தார்.
எரேமியா தீர்க்கதரிசி, தனது துணிகரமான தீர்க்கதரிசனங்களுக்காக கைது செய்யப்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டார் (எரேமியா 38:1-6; 40:1). அவர் எருசலேமுக்கு என்ன சம்பவிக்கும் என்பதை யூதாவின் ராஜாவிடம் கூறினார். “நான் உம்மிடத்தில் சொல்லுகிற கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடும். அப்பொழுது... உம்முடைய ஆத்துமா பிழைக்கும்” (எரேமியா 38:20) என்று அவர் சிதேக்கியா ராஜாவிடம் கூறினார் (38:20). நகரைச் சூழ்ந்திருக்கும் இராணுவத்திடம் சரணடையத் தவறினால், அது நிலைமையை மோசமாக்கும். “உம்முடைய எல்லா ஸ்திரீகளையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டுபோவார்கள். நீரும் அவர்கள் கைக்கு தப்பிப்போகாமல்...” (வச. 23) என்று எரேமியா எச்சரிக்கிறார்.
அந்த உண்மையைச் செயல்படுத்த சிதேக்கியா தவறிவிட்டார். இறுதியில் பாபிலோனியர்கள் யூதேயாவின் ராஜாவைப் பிடித்து, அவனது குமாரர்கள் அனைவரையும் கொன்று, நகரத்தை தீக்கிரையாக்கினர் (அதி. 39).
ஒரு வகையில், ஒவ்வொரு மனிதனும் சிதேக்கியாவின் இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறான். பாவம் மற்றும் தவறான தீர்மானங்கள் என்ற நமது சொந்த வாழ்வின் சுவர்களுக்குள் நாம் சிக்கிக் கொள்கிறோம். பெரும்பாலும், நம்மைப் பற்றிய உண்மையைச் சொல்பவர்களைத் தவிர்ப்பதன் மூலம் விஷயங்களை மோசமாக்குகிறோம். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று சொன்னவரின் சித்தத்திற்கு நாம் சரணடைவது மட்டுமே நம்முடைய அடிப்படை தேவை.
அதிர்ஷ்ட காலணிகள்
மிகவும் தாமதமாக, டாம் தனது போர் காலணியின் அடியில் குளிர்ந்த உணர்வை அடைந்தார். பாய்ந்தோடிய அட்ரினலின் என்னும் எரிபொருளின் தாக்கத்திலிருந்து விலகிச்சென்றார். பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொடிய வெடிகுண்டு வெடிக்கவில்லை. பின்னர், வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து 36 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை கண்டெடுத்தனர். டாம் அவருடைய அந்த காலணி கிழியும் வரை அணிந்திருந்தார். அவர் அதை தன்னுடைய அதிருஷ்ட காலணி என்று சொல்லிக்கொள்கிறார்.
அவருடைய உயிரைக் காப்பதற்கு அந்த காலணி பயன்பட்டதினால் உணர்ச்சிவசப்பட்டு டாம் அந்த காலணிகளை அணிந்திருக்கலாம். ஆனால் பொருட்களை “அதிர்ஷ்டம்” என்று கருதுவதற்கு அல்லது “ஆசீர்வதிக்கப்பட்டவைகள்” என்ற ஆன்மீக முத்திரையைக் கொடுக்க மக்கள் அடிக்கடி ஆசைப்படுகின்றனர். நாம் ஒரு பொருளையோ அல்லது அடையாளத்தையோ தேவனுடைய ஆசீர்வாதத்தின் ஆதாரமாக வைக்கும்போது அங்கே அபாயம் நிகழுகிறது.
இஸ்ரவேலர்கள் இந்த பாடத்தை தங்களுடைய வாழக்கையின் கடினமான தருணத்தில் கற்றுக்கொண்டனர். பெலிஸ்தியப் படை அவர்களை யுத்தத்தில் வீழ்த்தியது. ஏன் தோல்வியடைந்தோம் என்று யோசிக்கும்வேளையில், நாம் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச்செல்லலாம் என்று யாரோ ஒருவர் ஆலோசனை சொல்கின்றனர் (1 சாமுவேல் 4:3). அது நல்ல யோசனையாகத் தோன்றியது (வச. 6–9). எல்லாவற்றிற்கும் மேலாக, உடன்படிக்கைப் பெட்டி பரிசுத்தமான ஒன்றாகக் கருதப்பட்டது.
ஆனால் இஸ்ரவேலர்களின் புரிதல் தவறானது. உடன்படிக்கைப் பெட்டியைக்கொண்டு அவர்களால் எதையும் திருப்பிக்கொண்டுவரமுடியவில்லை. தங்களுடைய விசுவாசத்தை தேவன் மீது வைப்பதற்கு பதிலாக ஒரு பொருளின் மீது வைத்ததினால் யுத்தத்தில் இஸ்ரவேலர்கள் மோசமான தோல்வியை சந்திக்க நேரிட்டது. பெலிஸ்தர்கள் பேழையையும் கைப்பற்றி கொண்டுபோய்விட்டனர் (வச. 10-11).
தேவன் நம்முடைய வாழ்க்கையின் செய்த நன்மைகளை நினைப்பூட்டும் நினைவுச்சின்னங்கள் நமக்கு அவசியப்படலாம். ஆனால் அவைகள் ஒருபோதும் ஆசீர்வாதத்தின் ஆதாரமாக இருப்பதில்லை. தேவன் மாத்திரமே ஆசீர்வாதத்தின் ஆதாரம்.
இயேசுவைப் பின்பற்றுவது மதிப்பு
ரோனிட் ஒரு ஆன்மீக குடும்பத்திலிருந்து வந்தவள். ஆனால் கிறிஸ்தவர் அல்ல. ஆன்மீக விஷயங்களைப் பற்றிய அவர்களின் விவாதங்கள் வறண்டதாகவும் கல்விசார்ந்ததாகவும் இருந்தன. “நான் எல்லா பிரார்த்தனைகளையும் தொடர்ந்து ஜெபித்தேன், ஆனால் நான் கடவுளிடமிருந்து எந்த சத்தத்தையும் கேட்டதில்லை" என்று அவர் கூறினாள்.
அவள் வேதாகமத்தைப் படிக்க ஆரம்பித்தாள். மெதுவாக, சீராக, அவள் இயேசுவை மேசியா என்று நம்பினாள். அந்த தருணத்தை, “என் இதயத்தில் ஒரு தெளிவான குரல் கேட்டது – ‘நீ கேட்டது போதும்; நீ பார்த்தது போதும; நம்ப வேண்டிய நேரம் இது’” என்று ரோனிட் விவரிக்கிறார். ஆனால் ரோனிட் ஒரு சிக்கலை எதிர்கொண்டார். அது அவளுடைய தந்தையின் எதிர்ப்பு. “ஒரு மலை வெடித்தது போல் என் அப்பா பதிலளித்தார்," என்று அந்த நிகழ்வை அவள் நினைவு கூர்ந்தாள்.
இயேசு இந்த உலகத்தில் நடந்துவந்துபோது, ஜனத்திரள் அவளை பின்பற்றியது (லூக்கா 14:25). அவர்கள் எதை எதிர்பார்த்து அவரை பின்பற்றினார்கள் என்பது தெரியாது, ஆனால் அவர் சீஷர்களை தேடினார். ஆனால் அது கிரயம் செலுத்தப்படவேண்டியது. இயேசு சொல்லும்போது, “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” (வச. 26) என்று சொல்லுகிறார். அவர் கோபுரம் கட்டும் ஒரு உவமையைச் சொல்லுகிறார். “அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு... கணக்குப் பாராமலிருப்பானோ?” (வச. 28) என்று கேட்கிறார். நாம் உண்மையில் குடும்பத்தை வெறுக்க வேண்டும் என்பது இயேசுவின் கருத்து அல்ல; மாறாக, எல்லாவற்றிலும் நாம் அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். “அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” (வச. 33) என்று வலியுறுத்துகிறார்.
ரோனிட் தனது குடும்பத்தை ஆழமாக நேசிக்கிறார், ஆனால் “எவ்வளவு விலையானாலும், அது மதிப்புக்குரியது என்று நான் நினைத்தேன்” என்று சொல்லுகிறாள். இயேசு உங்களை வழிநடத்தும்போது அவரைப் பின்பற்ற நீங்கள் எதை விட்டுக்கொடுக்க வேண்டும்?
நான் எம்மாத்திரம்?
கிசோம்போ தனது வாழ்க்கையின் பெரிய கேள்விகளைப் பற்றி யோசித்து, எரிகிற நெருப்பு ஜூவாலையின் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். நான் என்ன சாதித்தேன்? என்று யோசித்தான். “அதிகமில்லை” என்று பதில் விரைவாக வந்தது. அவன் பிறந்த மண்ணுக்குத் திரும்பினான், மழைக்காடுகளில் தனது தந்தை தொடங்கிய பள்ளியில் பணியாற்றினான். இரண்டு உள்நாட்டுப் போர்களில் இருந்து தப்பிய தனது தந்தையின் சக்திவாய்ந்த கதையையும் எழுத முயன்றான். இதையெல்லாம் செய்ய நான் எம்மாத்திரம்? என்று யோசித்தான்.
கிசோம்போவின் தவறான எண்ணம் மோசேயை நமக்கு நினைப்பூட்டுகிறது. தேவன் மோசேக்கு ஒரு வேலையைக் கொடுக்கிறார்: “நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்” (யாத்திராகமம் 3:10). அதற்கு மோசே, “நான் எம்மாத்திரம?;” (வச. 11) என்கிறான்.
அதற்கு பின்பாக மோசேயிடத்திலிருந்த வந்த பெலவீனமான சாக்குபோக்குகளைத் தொடர்ந்து தேவன் அவனிடத்தில், “உன் கையிலிருக்கிறது என்ன என்றார்” அதற்கு அவன் “ஒரு கோல் என்றான்” (வச. 4). தேவனுடைய பெலத்தினால் மோசே பார்வோனை சந்திக்கக்கூடும். அவனுடைய கையில் தேவன் எகிப்தியர்களின் தெய்வமான பாம்பை கொடுத்தனுப்பினார். ஒரே மெய்யான தேவனுக்கு முன்பாக எகிப்திய விக்கிரகங்களுக்கு வல்லமையில்லை.
கிசோம்போவும் மோசேயைப் போல் யோசித்து, கர்த்தருடைய வார்த்தையை உணர்ந்தான்: நீ என்னையும் என்னுடைய வார்த்தையையும் உடையவனாயிருக்கிறாய்.” அவனுடைய தகப்பனாருடைய வாழ்க்கைக் கதையைக் குறித்து அவன் எழுதினால் தேவனுடைய வல்லமையைக் குறித்து அநேகர் அறிந்துகொள்ளக்கூடும் என்று அவனுடைய நண்பர்களும் அவனை உற்சாகப்படுத்தினர். அவன் தனிமையாய் இல்லை.
நம்முடைய சொந்த முயற்சிகள் போதுமானதல்ல. ஆனால் “நான் உன்னோடே இருப்பேன்” (3:12) என்று நாம் ஆராதிக்கிற தேவன் சொல்லுகிறார்.
அனைத்து பதில்கள்
டேல் எர்ன்ஹார்ட் ஜூனியர் தனது தந்தை இறந்துவிட்டார் என்பதை புரிந்து கொண்ட மோசமான தருணத்தை விவரிக்கிறார். மோட்டார் பந்தய ஜாம்பவான் டேல் எர்ன்ஹார்ட் சீனியர், டேடோனா-500 என்ற மோட்டார் பந்தயத்தின் முடிவில் ஒரு பயங்கரமான விபத்தில் கொல்லப்பட்டார். டேல் எர்ன்ஹார்ட் ஜூனியரும் அந்த பந்தயத்தில் பங்குபெற்றிருந்தார். “என்னால் மீண்டும் அதை சாதிக்கமுடியாது” என்ற சத்தம் இளைய எர்ன்ஹார்டடிடமிருந்து வந்தது. “இது அதிர்ச்சி மற்றும் துக்கம் மற்றும் பயத்தின் மணி.” ஆனால் அதற்கு பின்னர், “இனி இதை நான் தனித்து மேற்கொள்ளப்போகிறேன்” என்பதே தனிமையான உண்மை.
“அப்பா கூட இருப்பது என்பது ஒரு தேர்வுக்கு மறைமுகமாய் எடுத்துச் செல்லும் பிட் தாளைப் போன்றது” என்று எர்ன்ஹார்ட் ஜூனியர் ஒப்பிடுகிறார். “அப்பா கூட இருப்பது என்பது அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிந்திருப்பது போன்று” என்று உருவகப்படுத்துகிறார்.
இயேசுவின் சீஷர்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலைப் பெற்றுக்கொள்ள இயேசுவைப் பார்த்தனர். இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முன் தினம், சீஷர்களை தான் தனியே விடுவதில்லை என்று இயேசு அவர்களுக்கு வாக்களிக்கிறார். “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (யோவான் 14:16-17) என்று வாக்களிக்கிறார்.
தம்மை நம்பும் அனைவருக்கும் இயேசு, “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்” (வச. 23) என்று சொல்லுகிறார்.
கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புகிறவர்களோடு, “எல்லாவற்றையும்” போதித்து அருளுகிற ஆவியானவர் உடனிருந்து, இயேசு கற்றுக்கொடுத்த யாவையும் அவர்களுக்கு உணர்த்துகிறார் (வச. 26). நம்மிடத்தில் அனைத்து பதில்களும் இல்லை. ஆனால் நம்மிலிருக்கும் ஆவியானவர் அனைத்து பதில்களையும் அறிந்திருக்கிறார்.