என்ன விசேஷம்?
நான்கு வயதுள்ள ராஜூவின் மகிழ்ச்சியான முகம், அவன் அணிந்திருந்த தலைக் கவசம் கொண்ட டீ-ஷர்ட்டின் உள்ளிருந்து எட்டிப் பார்த்தது. அத்தலைக் கவசம் ஒரு முதலை தன் கூர்மையான பற்களுடைய வாயைப் பிளந்து, அவன் தலையை விழுங்குவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது! அவனை அவ்வுடையில் பார்த்ததும், அவன் தாயின் உள்ளம் சோர்ந்து போயிற்று. ஏனெனில் நீண்ட நாட்களுக்குப்பின் தாங்கள் சந்திக்கப் போகும் ஒரு குடும்பத்தின் முன் ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்த விரும்பினாள்.
தன் மகனிடம், “ராஜூ இந்த உடை இவ்விசேஷத்திற்கு ஏற்றதல்ல,” எனக் கூறினாள்.
ஆனால் ராஜூவோ, “அப்படி ஒன்றும் இல்லை. இது பொருத்தமான உடைதான்” என்றான்.
“அப்படியா, இந்த உடைக்குப் பொருத்தமான அந்த விசேஷம் என்ன?” என அவள் கேட்டதற்கு, “உங்களுக்கு தெரியுமே, அவ்விசேஷம் நம் வாழ்க்கைதான்” என்றான். இப்படி ஒரு பதிலுக்கு கட்டாயம் அவன் அந்த டீ-ஷர்ட் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
“மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமே அல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லை” (பிர. 3:12) என்கிற வசனத்தின் சத்தியத்தை அம்மகிழ்ச்சிகரமான சிறுவன் ஏற்கனவே அறிந்திருக்கிறான். பிரசங்கியின் புத்தகம்
மனுஷக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட புத்தகமே அன்றி, தேவனுடைய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட புத்தகம் அன்று. இதை அறியாமல் அப்புத்தகத்தை தவறாய் புரிந்துகொண்ட அநேகர் சோர்ந்து போவதும் உண்டு. அப்புத்தகத்தை எழுதிய சாலொமோன் ராஜா, “வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?”
(வச. 9) என்கிறார். ஆனாலும் அப்புத்தகம் முழுவதிலும் நம்பிக்கையின் ஒளி வீசக் காணலாம். “அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்” (வச. 13) என்றும் சாலொமோன் எழுதியுள்ளார்.
நாம் மகிழ்ந்து களிகூரும்படி நமக்கு நன்மையானவற்றை அருளுகிற தேவனையே நாம் சேவிக்கிறோம். அவர் செய்வதெல்லாம் “என்றைக்கும் நிலைக்கும்” (வச. 14). நாம் அவரை ஏற்றுக்கொண்டு அவருடைய அன்பான கட்டளைகளை கைக்கொண்டால், ஒரு நோக்கமுள்ள அர்த்தமுள்ள மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ கிருபையளிப்பார்.
மாம்சத்துக்குரியவன்
ஆங்கிலேய எழுத்தாளர் ஈவ்லின் வாக் (Evelyn Waugh) பிரயோகிக்கும் வார்த்தைகள் அவருடைய குணத்தில் உள்ள குறைகளை உறுதி செய்வது போலிருக்கும். இறுதியாக அந்த நாவலாசிரியர் கிறிஸ்தவனாக மாறினாலும் போராடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் ஒரு பெண் அவரைப் பார்த்து, “நீங்கள் கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு எப்படி உங்களால் இப்படி நடந்துகொள்ள முடிகிறது?” என கேட்டாள். அதற்கு அவர், “ஒரு வேளை நீங்கள் கூறும் அளவிற்கு மோசமானவனாகவே இருக்கலாம். ஆனால் உண்மை என்னவெனில், கிறிஸ்தவம் இல்லையெனில், நான் மனிதனாகவே இருந்திருக்க மாட்டேன்,” என பதிலளித்தார்.
அப்போஸ்தலனாகிய பவுல் விவரித்த உள்ளார்ந்த போராட்டத்தை வாக் போராடி கொண்டிருந்தார். பவுல், “நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை,” எனக் கூறுகிறார் (ரோம. 7:18). மேலும், “நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ...மாம்சத்துக்குரியவனாய் இருக்கிறேன்,” என்றும் கூறினார் (வச. 14). அதையே இன்னும் விவரித்து, “உள்ளான மனுஷனுக்கேற்றப்படி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் அதற்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை காண்கிறேன். இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என கேட்கிறார் (வச. 22-24). பின்பு வெற்றிக்களிப்புடன், “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்,” (வச. 25) என்று தேவன் அளிக்கும் விடுதலையை அறிவிக்கிறார்.
நம்முடைய பாவத்தை உணர்ந்து, நமக்கு இரட்சகர் தேவை என்பதை ஒப்புக்கொண்டு, விசுவாசத்தோடு கிறிஸ்துவண்டை வரும்பொழுது, நாம் அக்கணமே புதிய சிருஷ்டி ஆகிறோம். ஆனால் நம்முடைய மனம் புதிதாவது ஒரு வாழ்நாள் பயணம். அதை சீஷனாகிய யோவான் கண்டுணர்ந்து, “இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்,” எனக் கூறினார் (1 யோவா. 3:2).
பெருகிய அன்பு
காரெனின் (Karen) சபையிலே உள்ள ஒரு பெண்மணிக்கு அமியோடிரேபிக் லேட்டரல் ஸெலேராசிஸ் (Amyotrophic lateral sclerosis) என்னும் வியாதி கண்டறியப்பட்ட பொழுது, எல்லாம் மோசமாக காட்சியளித்தது. இந்த கொடூரமான வியாதி நரம்பு மண்டலத்தையும், சதைகளையும் பாதித்து, இறுதியாக பக்கவாதத்தை விளைவிக்கும். வீட்டிலேயே வைத்து மருத்துவ வசதி அளிக்கும் அளவிற்கு அவர்கள் மருத்துவக் காப்பீடு செய்யவில்லை. ஆனால் அவளுடைய கணவருக்கோ அவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு வர மனமில்லை.
ஒரு நர்ஸாக காரென் தன்னுடைய திறமையை கொண்டு உதவும்படியாக அப்பெண்ணின் வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தாள். ஆனால், தன்னுடைய குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, அப்பெண்ணிற்கும் உதவி செய்வதின் சிரமத்தை விரைவாகவே உணர்ந்தாள். ஆகவே, சபையிலுள்ள மற்றவர்களுக்கு அப்பெண்ணை கவனித்து கொள்ள வேண்டிய வழிமுறைகளை கற்றுத்தர ஆரம்பித்தாள். அவ்வியாதியின் ஏழாண்டு காலக்கட்டத்தில், காரென், 31 தன்னார்வ உதவியாளர்களை பயிற்றுவித்தாள். அவர்கள் அக்குடும்பத்தை அன்பாலும், ஜெபத்தாலும், நடைமுறை உதவிகளினாலும் சூழ்ந்து கொண்டனர்.
“தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூர வேண்டும்” (1 யோவா. 4:21) என்று சீஷனாகிய யோவான் கூறுகிறார். அப்படிப் பட்டதான அன்பை வெளிக்காட்டும் ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாக காரென் விளங்குகிறாள். தன்னுடைய திறமையோடும், இரக்கத்தோடும் கஷ்டப்படுகிற தன்னுடைய தோழிக்காக உதவும்படியாக குடும்பமாகிய சபையை ஒன்றுதிரட்ட நோக்கம் கொண்டாள். தேவையோடு இருந்த ஒருவர் மேலிருந்த அவளுடைய அன்பு, மற்றவர்களும் உதவியில் பங்குகொண்ட பொழுது பெருகியது.
என் வாழ்வின் கதை
நியூயார்க் நகரில் உள்ள ஓர் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலில் உள்ள மாட்டுத்தொழுவத்தில், பிறந்த பச்சிளம் குழந்தையை யாரோ விட்டுவிட்டுச் சென்றனர். நிச்சயமாக கண்டெடுக்கப்படுவான் என்ற நம்பிக்கையில் துணியில் சுற்றி அக்குழந்தையை ஓர் இளம் பெண் மனம் நொந்து விட்டுவிட்டிருக்க வேண்டும். அவளை நாம் எளிதில் நியாயம் தீர்க்கலாம், ஆனால் அக்குழந்தைக்கு வாழ ஓர் வாய்ப்பளிக்கப் பட்டிருப்பதை எண்ணி நன்றி கூறலாம்.
என் வாழ்வில் இச்சம்பவம் வெறும் கதையல்ல. நான் ஒரு தத்தெடுத்து வளர்க்கப்பட்ட குழந்தை. என் பிறப்பை பற்றிய சம்பவங்கள் எனக்கு தெரியாது. ஆனால் நான் ஒரு போதும் கைவிடப்பட்டவனாக உணரவேயில்லை. எனக்கு இரண்டு தாயார். இருவரும் நான் நன்கு வாழவேண்டும் என்று எண்ணினர். ஒரு தாய் எனக்கு உயிர் கொடுத்தார்கள்; மற்றவர் அவரது வாழ்க்கையை எனக்குள் விதைத்தார்கள்.
யாத்திராகமத்தில் இப்படிப்பட்ட ஓர் அன்பான தாயாரை நாம் பார்க்கலாம். இஸ்ரவேலரில் பிறக்கும் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுவிடும் படி பார்வோன் ராஜா கட்டளையிட்டான் (1:22). அதனால் மோசேயுடைய தாயார் அவளால் இயன்ற வரை அக்குழந்தையை ஒளித்து வைத்தாள். ஆனால் மூன்று மாதம் ஆன பின்பு குழந்தையை ஒர் தண்ணீர் புகாத கூடையில் வைத்து நைல் நதியில் விட்டுவிட்டாள். இளவரசியால் அக்குழந்தை மீட்டெடுக்கப்பட்டு, பார்வோனின் அரண்மனையில் வளர்க்கப்பட்டு, பின்னர் யூத மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கும்படியான தேவ திட்டம் நன்றாகவே நிறைவேறியது.
செய்வதறியாது தவிக்கும் ஓர் இளம் தாய் தன் குழந்தை வாழும்படியாக முயற்சித்தால், தேவன் அங்கிருந்து செயல் படத் தொடங்குவார். ஏனெனில் எண்ணி முடியாத மிகவும் ஆச்சரியப்படதக்க வழிகளில் செயல்படுவது தேவனுடைய இயல்பு.
பணம்
என்னுடைய உத்தியோகத்தின் ஆரம்ப நாட்களில் நான் செய்து கொண்டிருந்த வேலையை ஒரு சேவையாகவே கருதினேன். அப்பொழுது நல்ல சம்பள உயர்வுடன் கூடிய ஒரு வேலையை வேறு ஒரு நிறுவணம் எனக்கு வழங்கியது. அந்த வேலையின் மூலம் நிச்சயமாக என்னுடைய குடும்பம் பொருளாதார ரீதியிலே பயன் பெறலாம். ஆனால் ஒரு பிரச்சனை. நான் வேறு வேலை தேடவில்லை, ஏனெனில் நான் செய்து கொண்டிருந்த வேலையை நான் மிகவும் நேசித்தேன். அதையும் தாண்டி அது என் அழைப்பாக உருவாகிக் கொண்டிருந்தது.
ஆனால் பணம்...
எழுபது வயதை கடந்த என் தகப்பனாரை தொலைப்பேசியில் அழைத்து நிலைமையை விவரித்தேன். பக்கவாதத்தினாலும், பல வருடங்களின் மன அழுத்தத்தினாலும் கூர்மையாக இருந்த மூளையின் வேகம் இன்று குறைந்திருந்தாலும், சட்டென்று தெளிவான ஒரு பதில் அவரிடமிருந்து வந்தது. அதாவது, “பணத்தை பற்றி எண்ணாதே. அப்பொழுது நீ என்ன முடிவெடுப்பாய்?”
ஒரு நொடியிலே, என் மனம் ஒரு முடிவுக்கு வந்தது. எனக்கு மிகவும் பிடித்தமான வேலையை விடுவதற்கு பணம் மட்டுமே காரணமாக இருந்திருக்கும்! நன்றி அப்பா!
மலைப் பிரசங்கத்தின் பெரும்பாலான பகுதியை இயேசு பணத்தையும், அதன் மேல் உள்ள நம்முடைய வாஞ்சையை குறித்தும் பிரசங்கித்தார். ஐஸ்வரியத்தை திரட்டுவதைக் குறித்து ஜெபிக்க கற்றுக்கொடுக்காமல், “வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” (மத். 6:11), என்று ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார். பூமியிலே பொக்கிஷங்கள் சேர்த்து வைப்பதைக் குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய படைப்பின் மேல் அவர் எவ்வளவு அக்கறை உள்ளவராய் இருக்கிறார் என்பதை பறவைகள் மற்றும் பூக்கள் மூலம் விவரித்தார் (வச. 19-31). “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (வச. 33) என்று இயேசு கூறினார்.
பணம் முக்கியமானது தான். ஆனால் நம்முடைய முடிவுகளைப் பணம் தீர்மானம் செய்யக் கூடாது. கடினமான நேரங்களும், பெரிய தீர்மானங்களும் நம்முடைய விசுவாசத்திலே நாம் வளருவதற்கான சந்தர்பங்களாகும். நம்முடைய பரம பிதா நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறார்.
வானம் பார்ப்பவன்
வேலை ஸ்தலத்திலும், வீட்டிலும் உள்ள பிரச்சனைகளால் கவலையுற்ற மாட் (Matt), தன்னை ஆசுவாசப்படுத்தக் கொஞ்ச நேரம் வெளியில் சென்று நடந்து விட்டு வர முடிவு செய்தான். மாலை நேரத் தென்றல் வா என்றது. எல்லையற்ற வானம், நீல நிறத்திலிருந்து கருவண்ணமாக மாறிய பொழுது, அடர்ந்த பணிமூட்டம் நிலத்தின் மேல் படர்ந்தது. மின்ன ஆரம்பித்த நட்சத்திரங்கள் கிழக்கிலே உதிக்கும் சந்திரனின் வருகையை அறிவித்துக்கொண்டிருந்தன. அந்தத் தருணத்தை ஆவிக்குரிய ஒரு தருணமாக மாட் உணர்ந்தான். “அவர் அங்கு இருக்கிறார். தேவன் அங்கு இருக்கிறார். மேலும் இக்காரியங்களும் அவரிடம் உள்ளது” என்று எண்ணினான்.
சிலர் இரவிலே வானத்தைப் பார்க்கும்பொழுது, இயற்கையைத் தவிர வேறொன்றையும் காண்பதில்லை. வேறு சிலர் வெகு தூரத்தில் குளிரால் உறைந்துபோன வியாழன் கிரகத்தை (Jupiter) போலவே தேவனையும் பார்க்கின்றனர். ஆனால், “அவர் பூமி உருண்டையின் மேல் வீற்றிருக்கிறவர்” மற்றும் “அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே” (ஏசா. 40:22,26). அவர் அவருடைய படைப்புகள் அனைத்தையும் நன்கு அறிவார்.
நமக்கு சொந்தமான இந்த தேவன், “இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்?” என்று தம்முடைய ஜனத்தைப் பார்த்துக் கேட்கிறார். அவர்களுக்காகப் பரிதவித்த தேவன், “இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ?... சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (வச. 27-29) என்று தம்மை தேடி வருபவர்கள் பெறும் பயனைக் குறித்து அவர்களுக்கு ஞாபகபடுத்துகிறார்.
நம்முடைய சோதனைகளினால் எளிதில் நாம் தேவனை மறந்துவிடுகிறோம். ஒரு மாலை நேரத்தில் நடப்பதினால் நம்முடைய பிரச்சனைகள் மறைந்து விடாது. ஆனால், தேவன் அவருடைய நன்மையான சித்தத்திற்கு நேராகவே நம்மை வழி நடத்துகிறார் என்கின்ற நிச்சயத்தை பெற்றவர்களாய் நாம் இளைப்பாறலாம். “நான் இங்கு தான் இருக்கிறேன். உன்னை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறேன்” என்று கூறுகிறார்.
உணர்வுகளும் அடையாளங்களும்
எனக்குத் தெரிந்த ஒரு வாலிபன் தேவனிடம் எப்போதும் அடையாளங்களைக் கேட்கும் பழக்கத்தில் இருந்தான். அது முற்றிலும் தவறல்ல. ஆனால் அவன் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் சரி என்பதற்கான அடையாளங்களை ஜெபத்தில் தேடினான். உதாரணமாக, அவன் “தேவனே நான் இந்தக் காரியத்தை செய்ய நீங்கள் விரும்பினால், நீங்கள் இந்த அடையாளத்தைக் காட்டும். அப்பொழுது அது தான் தேவ சித்தம் என்று அறிந்து கொள்வேன்” என்று ஜெபிப்பான்.
இது ஓர் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இப்படியே உணர்ச்சிப்பட்டு ஜெபித்து பதில் பெறும் பழக்கம் இருப்பதினால் அவன் முன்பு தான் நேசித்த பெண்ணுடன் மீன்டும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான். ஆனால் அந்த பெண்ணோ இது தேவன் விரும்பும் காரியம் அல்ல என்று திடமாக இருந்துவிட்டாள்.
இயேசுவுடன் வாழ்ந்த மதத் தலைவர்கள்கூட அவரிடம் அற்புத அடையாளங்களை எதிர்பார்த்தனர் (மத். 16:1). நீர் மேசியா என்றால் ஓர் அற்புதத்தினால் அதை நிரூபியும் என்று வழக்காடினர். அவர்கள் தேவனின் வழிக்காட்டுதலை தேடவில்லை; மாறாக, அவருடைய தெய்வீக அதிகாரத்தையே சோதித்தனர். “இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்” (வச. 4) என்று இயேசு கூறினார். தேவனுடைய வழிகாட்டுதலை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் இந்த வாக்கியம் பொருந்தாது. பழைய ஏற்பாட்டில் பிரசங்கிக்கப்பட்ட மேசியாவாகிய கிறிஸ்து, அவர்கள் கண்முன் இருந்த போதும் அதைக் கண்டு கொள்ளாமல் அதைவிட பெரிய அடையாளத்தைக் கேட்டதினால் இயேசு அப்படி கடுமையாக பேசினார்.
ஜெபத்தில் அவருடைய வழிகாட்டுதலை நாம் தேட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (யாக். 1:5). அவருடைய வார்த்தையினாலும் (சங். 119:105), ஆவியானவரின் வழி நடத்துதலினாலும் (யோவா. 14:26) நம்மை வழிநடத்துகிறார். நமக்கு நல்ல போதகர்களையும், ஞானம் நிறைந்த தலைவர்களையும் தந்திருக்கிறார். அது மட்டுமல்ல, இயேசுவே நமக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறார்.
ஆகவே தேவனிடத்தில் தெளிவான பதிலை நாம் தேடுவது நல்லது. ஆனால் நாம் எதிர்ப்பார்ப்பது போலவே அது இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. ஜெபத்தில் முக்கியமாக நேர்வது என்னவென்றால், நாம் தேவனுடைய மெய்யான இயல்பை அறிந்து அவருடன் உறவு கொள்வதே.
பலசாலியான வெற்றிவீரன்
நம்மில் அநேகர் ஒரு நல்ல அரசாங்கம் வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆகவே நாம் நீதியென்றும், நியாயமென்றும் எண்ணும் காரியங்களுக்காக ஓட்டுப் போடுகிறோம், சேவை செய்கிறோம் மற்றும் அதற்காக குரல் கொடுக்கவும் செய்கிறோம். ஆனால் நம்முடைய இருதய நிலையை மாற்றக் கூடிய வல்லமை அரசியல் தீர்வுகளுக்குக் கிடையாது.
இயேசுவை பின்பற்றிய அநேகர், தங்களைக் கடுமையாக, தன் பலத்த கைக்குள் அடக்கி ஆண்ட ரோம சாம்ராஜ்யத்திற்கு பலமான பதிலடி கொடுக்கக்கூடிய மேசியாவையே எதிர்பார்த்திருந்தனர். பேதுருவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆகவேதான், ரோம சேவகர்கள் இயேசுவை கைது செய்ய வந்தபொழுது, பேதுரு தன்னுடைய பட்டயத்தை வீசி பிரதான ஆசாரியனுடைய வேலையாளின் காதை வெட்டி வீசினான்.
ஆனால், பேதுருவின் இந்த ‘ஒரு மனித யுத்தத்தை’ இயேசு தடுத்து, “உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ” (யோவா. 18:11) என்று கூறினார். சில மணி நேரங்கள் கழித்து, “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே” (வச. 36), என பிலாத்துவினிடம் இயேசு கூறுகிறார்.
இப்பூமியில் தேவனுடைய பணியின் தீவிரத்தை நாம் அறிந்துகொள்ளும் பொழுது, தான் மரணத்தை நெருங்கிய அவ்வேளையிலும் கூட, இயேசு காட்டிய சுயக்கட்டுப்பாடு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால் எதிர்காலத்தில் ஒரு நாள் பரலோக சேனையை யுத்தத்திற்குள் கூட்டிச் செல்வார். “அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்” என்று யோவான் எழுதியுள்ளார் (வெளி. 19:11).
ஆனால், அவர் தன்னுடைய கைது, விசாரணை மற்றும் சிலுவை மரணத்தின் கடுமையான வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்த பொழுது, தன்னுடைய பிதாவின் சித்தத்தையே தன் முன் நிறுத்தியிருந்தார். சிலுவையிலே மரணத்தை தழுவினதால், உண்மையாகவே இருதயங்களை மறுரூபமாக்கும் சம்பவங்கள் சங்கிலி போல் ஒன்றன் பின் ஒன்றாக தொடரச் செய்துவிட்டார். இந்த தொடர் செயலில், நம்முடைய பலசாலியான வெற்றிவீரர் மரணத்தையே வென்று விட்டார்.
என்னுடைய சகோதர சகோதரிகள்
சில ஆண்டுகளுக்கு முன்பாக தெற்கு கலிபோர்னியாவில் பொருளாதார நிலை சரியத் தொடங்கிய பொழுது, போதகர் பாப் ஜான்சன், அந்தக்கால கட்டத்திலிருந்த நெருக்கடியான சூழ்நிலைகளை மட்டும் பார்க்காமல் அவற்றின் ஊடாக இருந்த நல்ல வாய்ப்புகளையும் கண்டார். ஆகவே, அவர் அந்த நகரத்தின் மாநகரத் தந்தையைச் (mayor) சந்தித்து, “எங்களுடைய திருச்சபை உங்களுக்கு எந்த விதங்களில் உதவிசெய்ய இயலும்?” என்று கேட்டார். மாநகரத்தந்தை மிகவும் ஆச்சரியப்பட்டார். ஏனெனில், பொதுவாக மக்கள் அவரிடம் உதவிகேட்டுத்தான் வருவார்கள். இப்பொழுது ஒரு போதகர் அவருடைய திருச்சபை மக்கள் அனைவரோடும் கூட உதவிசெய்ய முன்வந்துள்ளார். இது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
மாநகரத்தந்தையும், போதகரும் இணைந்து அந்த நாட்களில் மிகவும் தேவையாக இருந்த காரியங்களை குறித்துப்பேசி அவற்றை எவ்வாறு சந்திக்கலாம் என்று திட்டமிட்டார்கள். அவர்களது ஊரில் மட்டும் 20,000 மூத்த குடிமக்களை அதற்க்கு முந்தின ஆண்டில் ஒரு பார்வையாளர்கூட சென்று பார்க்காத சூழ்நிலை இருந்தது. நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளுக்கு, அவர்களை வளர்க்கத்தக்க குடும்பங்கள் தேவைப்பட்டன. மேலும் அநேக குழந்தைகள் படிப்பில் முன்னேற அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க ஆட்கள் தேவைப்பட்டது.
இந்தத் தேவைகளில் சிலவற்றை அதிக பணம் செலவழிக்காமல் சந்திக்க இயலும். ஆனால் அவை அனைத்திலும் ஈடுபடும் மக்கள் ஆர்வமுடையவர்களாகவும், அவர்களது நேரத்தை செலவழிக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அதைத்தான் திருச்சபை மக்கள் செய்யவேண்டியதிருந்தது.
எதிர்காலத்தைப்பற்றி இயேசு அவருடைய சீஷர்களிடம் கூறினபொழுது, அவரை உண்மையாகப் பின்பற்றுகிறவர்களைப் பார்த்து, “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே,… ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” (மத். 25:34) என்று கூறுவேன் என்றார். அவர்களுக்கு அவர் அளிக்கும் மேற்கூறப்பட்ட வெகுமதிகளைக் குறித்து அவர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்று இயேசு கூறினார். அப்பொழுது அவர் “சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” (மத். 25:40) என்று அவர்களிடம் கூறுவார்.
நாம் நமது நேரத்தை, அன்பை, தேவன் நமக்கு அருளியுள்ள பொருட்களை தாராளமாக கொடுக்கும்பொழுது, தேவனுடைய ராஜ்யத்தின் காரியங்கள் செயல்படுத்தப்படுகின்றன.