எனக்குத் தெரிந்த ஒரு வாலிபன் தேவனிடம் எப்போதும் அடையாளங்களைக் கேட்கும் பழக்கத்தில் இருந்தான். அது முற்றிலும் தவறல்ல. ஆனால் அவன் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் சரி என்பதற்கான அடையாளங்களை ஜெபத்தில் தேடினான். உதாரணமாக, அவன் “தேவனே நான் இந்தக் காரியத்தை செய்ய நீங்கள் விரும்பினால், நீங்கள் இந்த அடையாளத்தைக் காட்டும். அப்பொழுது அது தான் தேவ சித்தம் என்று அறிந்து கொள்வேன்” என்று ஜெபிப்பான்.

இது ஓர் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இப்படியே உணர்ச்சிப்பட்டு ஜெபித்து பதில் பெறும் பழக்கம் இருப்பதினால் அவன் முன்பு தான் நேசித்த பெண்ணுடன் மீன்டும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான். ஆனால் அந்த பெண்ணோ இது தேவன் விரும்பும் காரியம் அல்ல என்று திடமாக இருந்துவிட்டாள்.

இயேசுவுடன் வாழ்ந்த மதத் தலைவர்கள்கூட அவரிடம் அற்புத அடையாளங்களை எதிர்பார்த்தனர் (மத். 16:1). நீர் மேசியா என்றால் ஓர் அற்புதத்தினால் அதை நிரூபியும் என்று வழக்காடினர். அவர்கள் தேவனின் வழிக்காட்டுதலை தேடவில்லை; மாறாக, அவருடைய தெய்வீக அதிகாரத்தையே சோதித்தனர். “இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்” (வச. 4) என்று இயேசு கூறினார். தேவனுடைய வழிகாட்டுதலை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் இந்த வாக்கியம் பொருந்தாது. பழைய ஏற்பாட்டில் பிரசங்கிக்கப்பட்ட மேசியாவாகிய கிறிஸ்து, அவர்கள் கண்முன் இருந்த போதும் அதைக் கண்டு கொள்ளாமல் அதைவிட பெரிய அடையாளத்தைக் கேட்டதினால் இயேசு அப்படி கடுமையாக பேசினார்.

ஜெபத்தில் அவருடைய வழிகாட்டுதலை நாம் தேட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (யாக். 1:5). அவருடைய வார்த்தையினாலும் (சங். 119:105), ஆவியானவரின் வழி நடத்துதலினாலும் (யோவா. 14:26) நம்மை வழிநடத்துகிறார். நமக்கு நல்ல போதகர்களையும், ஞானம் நிறைந்த தலைவர்களையும் தந்திருக்கிறார். அது மட்டுமல்ல, இயேசுவே நமக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறார்.

ஆகவே தேவனிடத்தில் தெளிவான பதிலை நாம் தேடுவது நல்லது. ஆனால் நாம் எதிர்ப்பார்ப்பது போலவே அது இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. ஜெபத்தில் முக்கியமாக நேர்வது என்னவென்றால், நாம் தேவனுடைய மெய்யான இயல்பை அறிந்து அவருடன் உறவு கொள்வதே.