ஒரு சபையை சார்ந்த உதவியாளர்கள் ஒரு சாயங்கால வேளையில் ஒன்று கூடி, குறைந்த வருமானம் உள்ள மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று உணவு பொருட்களை வழங்கினர். அப்படி உணவை பெற்றுக்கொண்ட ஒரு பெண் மிகவும் சந்தோஷமடைந்தாள். அவளுடைய வெறுமையான அலமாரியை திறந்து காட்டி, அந்த உதவியாளர்களே அவளுடைய ஜெபத்திறகான பதில் என்று கூறி நன்றி தெரிவித்தாள்.

உதவியாளர்கள் சபைக்குத் திரும்பிய போது, அவர்களில் ஒரு பெண் அழ ஆரம்பித்தாள். “நான் சிறு பிள்ளையாக இருந்த பொழுது, அந்தப் பெண்மணி தான் என்னுடைய ஞாயிறு பள்ளி ஆசிரியை. அவர் இந்த சபையில் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருந்தது எங்களுக்கு தெரியவில்லையே!” என்று மனம் வருந்தினார்.

இந்த அன்பான உதவியாளர்கள் தங்களால் முடிந்த வகையில் பிறருடைய பாரங்களை சுமக்க முயன்றனர். இதைத் தான் பவுல் கலாத்தியர் 6:2ல் கூறியிருக்கிறார். ஆனால் எப்படியோ அவர்கள் அந்தப் பெண்மணியின் நிலையை அறியாமல் இருந்தனர். ஒவ்வொரு வாரமும் அப்பெண், சபைக்கு வந்தபோதும், அவள் யாரிடமும் தன்னிலையைச் சொல்லவில்லை. நம்மை சுற்றியுள்ள மக்களின் நிலையை அறிந்து கொள்வதைக் குறித்து, இந்த சம்பவம் நமக்கு நினைவுபடுத்துகின்றது. “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம் (கலா. 6:10) என்று பவுல் கூறுகிறார்.

ஒன்றாய்க் கூடி ஆராதிக்கும் மக்களின் பெரும் பாக்கியம் என்னவென்றால் ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்பதே. இப்படி செய்யும் போது கிறிஸ்துவின் சரீரமாகிய சபையினர் கஷ்டத்தில் இருக்கும்பொழுது, ஒருவர்கூட உதவி செய்ய ஆளில்லாமல் தவிக்க வேண்டியது இல்லை. சபையில் ஒருவரை ஒருவர் நாம் சந்தித்து, பேசி, பழகி, அறிந்து அவர்கள் துன்பத்தில் உதவும் பொழுது, “அவர்களுக்கு பிரச்சனையா? அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாதே” என்று சொல்வது இல்லாமல் போகும்.