காரெனின் (Karen) சபையிலே உள்ள ஒரு பெண்மணிக்கு அமியோடிரோபிக் லேட்டரல் ஸெலேராசிஸ் (Amyotrophic lateral sclerosis) என்னும் வியாதி கண்டறியப்பட்ட பொழுது, எல்லாம் மோசமாக காட்சியளித்தது. இந்த கொடூரமான வியாதி நரம்பு மண்டலத்தையும், சதைகளையும் பாதித்து, இறுதியாக பக்கவாதத்தை விளைவிக்கும். வீட்டிலேயே வைத்து மருத்துவ வசதி அளிக்கும் அளவிற்கு அவர்கள் மருத்துவக் காப்பீடு செய்யவில்லை. ஆனால் அவளுடைய கணவருக்கோ அவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு வர மனமில்லை.

ஒரு நர்ஸாக காரென் தன்னுடைய திறமையை கொண்டு உதவும்படியாக அப்பெண்ணின் வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தாள். ஆனால், தன்னுடைய குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, அப்பெண்ணிற்கும் உதவி செய்வதின் சிரமத்தை விரைவாகவே உணர்ந்தாள். ஆகவே, சபையிலுள்ள மற்றவர்களுக்கு அப்பெண்ணை கவனித்து கொள்ள வேண்டிய வழிமுறைகளை கற்றுத்தர ஆரம்பித்தாள். அவ்வியாதியின் ஏழாண்டு காலகட்டத்தில், காரென், 31 தன்னார்வ உதவியாளர்களை பயிற்றுவித்தாள். அவர்கள் அக்குடும்பத்தை அன்பாலும், ஜெபத்தாலும், நடைமுறை உதவிகளினாலும் சூழ்ந்து கொண்டனர்.

“தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூர வேண்டும்” (1 யோவா. 4:21) என்று சீஷனாகிய யோவான் கூறுகிறார். அப்படிப் பட்டதான அன்பை வெளிக்காட்டும் ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாக காரென் விளங்குகிறாள். தன்னுடைய திறமையோடும், இரக்கத்தோடும் கஷ்டப்படுகிற தன்னுடைய தோழிக்காக உதவும்படியாக குடும்பமாகிய சபையை ஒன்றுதிரட்ட நோக்கம் கொண்டாள். தேவையோடு இருந்த ஒருவர் மேலிருந்த அவளுடைய அன்பு, மற்றவர்களும் உதவியில் பங்குகொண்ட பொழுது பெருகியது.