தேவனின் எரியும் கொள்ளி
ஐந்து வயது சிறுவன் ஜாக்கிக்கு குரல் கொடுத்துக்கொண்டே, சிறிய குழந்தையைத் தூக்கிக்கொண்டு, ஓரு பணிப்பெண், தீப்பிடித்து எரிகிற வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தாள்.
ஆனால் ஜாக்கி அவள் பின்னால் வரவில்லை. வெளியே இருந்த ஒரு பார்வையாளர், தன் நண்பரின் தோள்மேல் ஏறி நின்று துரிதமாக செயல்பட்டார். மாடி ஜன்னல் வழியாக அவர் ஜாக்கியை பாதுகாப்பாக இறக்கியவுடன், மாடியின் கூரை தீப்பிடித்து கீழே விழுந்தது. “நெருப்பில் இருந்து எடுக்கப்பட்ட கொள்ளிக்கட்டை” என்று ஜாக்கியைப் பற்றி அவன் அம்மா சூசனா குறிப்பிட்டார். அதிக பிரயாணம் செய்து பிரசங்கித்த பிரபலமான ஊழியக்காரர் ஜான் வெஸ்லிதான் (1701-1791) அந்த “கொள்ளிக்கட்டை” என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
கடவுளின் பண்பைக் குறித்து மிக அழகாக எடுத்துச் சொல்லும் சகரியா தீர்க்கதரிசியை மேற்கோள் காட்டியே சூசனா ஜாக்கியை அவ்வாறு கூறினார். தான் கண்ட தரிசனத்தைப் பற்றிக் கூறும் தீர்க்கதரிசி, பிரதான ஆசாரியனாகிய யோசுவாவுக்கு அருகில் சாத்தான் நிற்கும் ஒரு விசாரணைக் காட்சியை விவரிக்கிறார். சாத்தான் யோசுவாவைக் குற்றம் சாட்டுகிறான். ஆனால் கர்த்தர் சாத்தானைக் கடிந்துகொண்டு, “இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா?” என்று கூறுகிறார் (வச. 2). “நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன்” என்று கர்த்தர் யோசுவாவிடம் கூறுகிறார் (வச. 4).
பின்னர் “நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்” (வச. 7) என்று கர்த்தர் யோசுவாவுக்கு ஒரு சவாலையும் ஒரு வாய்ப்பையும் ஒரே நேரத்தில் தருகிறார்.
இயேசுவின்மீது வைக்கும் விசுவாசம் மூலமாக நாம் கடவுளிடம் பெறும் வெகுமதியை இது அழகாக எடுத்துக்காட்டுகிறது. அவர் நம்மை நெருப்பில் இருந்து எடுத்து, நம்மை சுத்தம் செய்து, நாம் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றும்போது, நம்மில் கிரியை செய்கிறார். நெருப்பில் இருந்து எடுக்கப்பட்ட கர்த்தரின் கொள்ளிக்கட்டைகள் என்று நம்மை நாம் கூறலாம்.
அது மீனைக் குறித்ததல்ல
ஆஸ்திரேலியாவின் மேற்கு குயின்ஸ்லாந்து கடற்கரைக்கு அருகில் பலமுறை தென்பட்ட மிகாலூ என்ற ஹம்ப் பேக் வகை திமிங்கிலம்தான் முதல்முறையாக ஆவணப்படுத்தப்பட்ட, உடல் முழுதும் வெள்ளையாக இருக்கும் வெளிரி நோயால் பாதிக்கப்பட்ட திமிங்கிலமாகும். நாற்பது அடிக்கும் மேல் நீளமான உடல் கொண்ட அந்த அரிய திமிங்கிலத்தைக் காப்பதற்காக, ஆஸ்திரேலியா ஒரு தனிச் சட்டத்தை இயற்றியது.
தப்பி ஓடிய ஒரு தீர்க்கதரிசியை விழுங்குவதற்காக கர்த்தர் அனுப்பிய ஒரு பெரிய, அரிய மீனைப்பற்றி நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம் (யோனா 1:17). பெரும்பாலானவர்களுக்கு இந்தக் கதை தெரியும். நியாயத்தீர்ப்பு குறித்த செய்தியை நினிவே மக்களுக்குச் சொல்லுமாறு யோனாவிடம் தேவன் கூறினார். ஆனால் அனைவரையும் – குறிப்பாக எபிரேயர்களை – துன்புறுத்தும் பழக்கம் கொண்ட நினிவே மக்களிடம் பேசுவதை யோனா விரும்பவில்லை. அதனால் அவர் தப்பி ஓடினார். ஆனால் நிலைமை மோசமாகியது. மீனின் வயிற்றில் இருந்த யோனா மனஸ்தாபப்பட்டார். இறுதியில் நினிவே மக்களுக்குப் பிரசங்கித்தார். அவர்களும் மனந்திரும்பினார்கள் (யோனா 3: 5-10).
இது ஒரு நல்ல கதை. ஆனால் இந்தக் கதை அதோடு முடியவில்லை. நினிவே மக்கள் மனஸ்தாபப்பட்டபோது யோனா அதிருப்தி அடைந்தான். “கர்த்தாவே நான் இதைச் சொல்லவில்லையா? நீர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்” என்று விண்ணப்பம் செய்தார் (யோனா 4:2). சாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட யோனாவின் பாவகரமான கோபம் அதிகரித்து, என் பிராணனை எடுத்துக்கொள்ளும் என்று ஜெபிக்கத் தூண்டியது (வச. 3).
யோனாவின் கதை மீனைக் குறித்தது அல்ல. அது மனித சுபாவம் மற்றும் நம்மை நாடும் ஆண்டவருடைய சுபாவம் ஆகியவற்றைக் குறித்தது. “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம் மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” (II பேதுரு 3:9). இரக்கமற்ற நினிவே மக்களிடமும், அதிருப்தி அடையும் தீர்க்கதரிசிகளிடமும், உங்களிடமும், என்னிடமும் தேவன் அன்பாய் இருக்கிறார்.
அதிகாரி மிக்லியோவின் மனம்
காவல் நிலையத்திற்குத் திரும்பி வந்த அதிகாரி மிக்லியோ களைப்புடன் சுவரில் சாய்ந்து அமர்ந்தார். குடும்ப வன்முறை சம்மந்தப்பட்ட ஒரு அழைப்பை கவனிக்கச் சென்று வந்ததில் அவரது பாதி வேலை நேரம் கடந்துவிட்டது. அதன் பின்விளைவு ஒரு வாலிபனைக் காவலில் வைக்கும்படியாகவும், ஒரு இளம் பெண்ணை மருத்துவ அவசரப் பிரிவில் சேர்க்கும்படியாகவும் இருந்தது. அதிர்ச்சியில் இருந்த அந்தப் பெண்ணின் தாய் இது எப்படி ஆயிற்று என்று கவலைப்பட வைத்தது. இந்த அழைப்பு இளம் அதிகாரி மிக்லியோவை அதிக நாட்கள் பாதித்தது.
'நீ என்ன செய்ய முடியும், விக்" என்று அவருடைய சார்ஜென்ட் அனுதாபத்துடன் கூறினார். ஆனால் அவருடைய வார்த்தைகள் வெறுமையாய் ஒலித்தன. சில காவல் அதிகாரிகளுக்கு வேலையை அலுவலகத்திலேயே விட்டுச் செல்ல முடிந்தது. ஆனால் விக் மிக்லியோவினால் அது போல் முடியவில்லை. அதுவும் இது போன்ற கடுமையான வழக்கினை விட முடியவில்லை.
காவல் அதிகாரி மிக்லியோவின் மனம் இயேசுவின் இரக்கத்தைப் பிரதிபலிக்கின்றது. கிறிஸ்துவின் சீஷர்கள் ஒரு கேள்வியோடு வருகிறார்கள், 'பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான்?" .. இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, 'நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்" (வச. 3) என்று சீஷர்களிடத்தில் கூறினார். பின்பு அவர் சிறுபிள்ளைகளை புண்படுத்துவோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்தார் (வச. 6). சிறுபிள்ளைகள் இயேசுவிற்கு அதிகப் பிரியமாக இருப்பதால் 'அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமூகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள்" (வச. 10) என்று அவர் நமக்குச் சொல்லுகிறார்.
சிறுபிள்ளைகள் மேல் அன்பு வைத்த இயேசு நம் மேலும் அன்பு வைத்துள்ளார் என்பது எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது. அதனால்தான் சிறுபிள்ளைகளின் விசுவாசத்தோடு, அவருடைய பிள்ளைகளாகும்படி நம்மையும் அழைக்கிறார்.
அன்பிற்கு அர்பணம்
மதம் மாறி இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நபீல் குரேஷி, தான் விட்டு வந்த மதத்திலுள்ள, தன்னுடைய ஜனங்களை, வாசகர்கள் புரிந்து கொள்ளும்படியாக அநேகப் புத்தகங்களை எழுதியுள்ளார். அவருடைய எண்ணம் மதிக்கத்தகுந்தது. குரேஷியின் உள்ளம் எப்பொழுதும் அவருடைய மக்கள் மீதுள்ள அன்பினை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும்.
இன்னும் இயேசுவின் மீது தன் நம்பிக்கையை வைத்திராத தன்னுடைய அன்பு சகோதரிக்கு, குரேஷி தன்னுடைய ஒரு புத்தகத்தை அர்ப்பணித்தார். அந்த அர்ப்பணம் சுருக்கமாயிருந்தபோதிலும் வல்லமையுள்ளதாயிருந்தது. அதில், “நாங்கள் அனைவரும் இணைந்து இயேசுவை ஆராதிக்கும் நாளைத் தருமாறு தேவனிடம் நான் கெஞ்சுகின்றேன்” என எழுதியிருந்தார்.
ரோமாபுரியிலுள்ள சபைகளுக்குப் பவுல் எழுதிய கடிதத்தை வாசிக்கும் போதும், நாம் இதேப் போன்ற ஓர் உணர்வைக் காண முடிகிறது. “எனக்கு மிகுந்த துக்கமும், இடைவிடாத மன வேதனையும் உண்டாயிருக்கிறது” மேலும், “ மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவை விட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே” (ரோம. 9:1,3) என பவுல் எழுதுகின்றார்.
பவுல் யூத ஜனங்களை மிகவும் நேசித்தார். அவருடைய ஜனங்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்படி தான் தேவனை விட்டு பிரிக்கப்படுவதையும் தேர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றார். அவருடைய ஜனங்கள் இயேசுவைத் தள்ளினதின் மூலம் உண்மையான தேவனைத் தள்ளினார்கள் எனத் தெரிந்து கொண்டார். இதன் மூலம் பவுல் தன்னுடைய வாசகர்கள் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை யாவரோடும் பகிர்ந்துகொள்ளும்படி ஊக்குவிக்கின்றார் (10:14-15).
நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின் மீதுள்ள அன்பின் நிமித்தம், நாம் படும் வேதனைக்காக நாம் ஜெபத்தில் நம்மை அர்ப்பணிப்போம்.
என்னால் செய்ய முடியாது
“என்னால் செய்ய முடியாது!” என மனச்சோர்வடைந்த ஒரு மாணவன் புலம்பினான். அவன் கையில் வைத்திருந்த தாளின் பக்கத்தில் குறைந்த அளவே எழுதப்பட்டிருந்தது. கடினமான கருத்துக்கள், அத்தோடு மன்னிக்க முடியாத காலக்கெடுவும் கொடுக்கப்பட்டிருந்தது. அவனுக்கு அவனுடைய ஆசிரியரின் உதவி வேண்டியதாயிருந்தது.
நாமும் இயேசுவின் மலைப் பிரசங்கத்தை வாசிக்கும் போது இத்தகைய நம்பிக்கையிழந்த சூழலை உணரலாம். “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்” (மத். 5:44). கோபம் கொலைக்குச் சமம் (வச. 21,22). ஒரு ஸ்தரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரம் செய்தாயிற்று (வச. 28). ஒருவேளை நாம் இத்ததைய தரத்தோடு வாழ முடியும் என நினைப்போமாயின், “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்” (வச. 48).
“மலைப் பிரசங்கம் நமக்குள்ளே விரக்தியை உருவாக்குகின்றது” என ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் சொல்கின்றார். ஆனால், அவர் இதனை நல்லதாகக் கண்டார். ஏனெனில், ‘‘நம்முடைய நம்பிக்கையிழந்து, ஒன்றுமில்லாத நிலையில்தான் நாம் இயேசுவிடம் ஏதாவது பெற்றுக் கொள்ள வருவோம்.”
ஓன்றுமில்லாமையில் தான் தேவன் செயல்படுவதைக் காண்கின்றோம். தங்களால் ஒன்றும் கூடாது என்று புரிந்து கொண்டவர்கள் தான் தேவனுடைய கிருபையைப் பெற்றுக் கொள்கின்றனர். “மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்” (1 கொரி. 1:26-27).
தேவனுடைய ஞானத்தில் நம்முடைய போதகர் நமக்கு இரட்கசர். அவரிடத்தில் நம்பிக்கையோடு வரும்போது “அவரே தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும் மீட்புமானார்” (வச. 30). அவரே நமக்கு கிருபையும், அவருக்காக வாழ வல்லமையுமாவார். எனவே தான் அவர், “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்ஜியம் அவர்களுடையது” என்றார் (மத். 5:3).
ஆழங்களின் தேவன்
“நீ ஆழ்கடலுக்குள் செல்லும் போது, ஒவ்வொருமுறையும் ஒரு மாதிரியை எடுத்துவா. ஒவ்வொருமுறையும் ஒரு புதிய படைப்பைக் காண்பாய்” என்று கடல் உயிரின உயிரியலாளர் வார்ட் ஆப்பிள்டன்ஸ் கூறுகின்றார். சமீப காலத்தில் அறிவியலார் 1,451 புதிய வகை கடலடி உயிரினங்களைக் கண்டுபிடித்துள்ளனர். நாம் இதுவரை அங்குள்ளவற்றில் பாதியையாகிலும் தெரிந்துகொள்ளவில்லை.
யோபு 38-40ல் தேவன் தன் படைப்புகளை யோபுவிற்கு நினைப்பூட்டுகின்றார். இந்த மூன்று அதிகாரங்களிலும் தேவன் காலநிலைகளின் அதிசயங்களையும், பரந்து விரிந்த அண்டத்தையும், அதில் வாழும் வகை வகையான உயிரினங்களையும் விவரிக்கின்றார். இந்தக் காரியங்களை நாம் காண முடியும். பின்னர் தேவன் ஓர் அதிகாரம் முழுவதும் வினோதமான லிவியாதானைப் பற்றி விளக்குகின்றார். லிவியாதான் ஒரு வினோத உயிரினம், அது எரியப்படும் அம்புகளையும் தடுக்க வல்லன, (யோபு 41:7,13), அதின் உடல் அசைவு நேர்த்தியாயும் (வச. 12) அதின் பற்கள் பயங்கரமானதாயும் (வச.14) உள்ளன. “அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்படும்… அதின் நாசியிலிருந்து புகை புறப்படும்” (வச. 19-20) “பூமியின் மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை” (வச. 33).
எனவே தேவன் நாம் இதுவரைக் கண்டிராத ஒரு உயிரினத்தைப்பற்றி பேசுகின்றார். ஆனால், இதுதான் யோபு 41ஆம் அதிகாரத்தின் நோக்கமா? இல்லை. யோபு 41 தேவனின் ஆச்சரியமான குணாதிசயங்களைப் பற்றிய நம் புரிந்துகொள்ளலை விரிவாக்குகின்றது. சங்கீதக்காரன் இதையே விரிவாக, “பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும்… அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கலங்களும் உண்டு (சங். 104:25-26) என விளக்குகின்றார். யோபுவில் கொடுக்கப்பட்டுள்ள பயங்கரமான விளக்கத்திலிருந்து எல்லா உயிரினங்களையும் விட மிக பயங்கரமான இந்த படைப்பு விளையாடும் இடத்தையும் கொடுத்துள்ளார் என தெரிந்துகொள்கிறோம். அதுதான் லிவியாதானின் விளையாட்டு.
நம்முடைய வாழ்நாளில் நாம் இந்த சமுத்திரத்தை ஆராய்கின்றோம். நமக்கு ஒரு நித்திய ஸ்தலமுள்ளது. அங்கு நாம் நம்முடைய, பிரமிக்கத்தக்க, விநோதமான தேவனின் விளையாட்டுகளை ஆராய்வோம்.
சொந்தமானது
ஓவ்வொரு சனிக்கிழமை இரவு நேரங்களிலும் செல்வது போன்று, அன்றும் இரவு வெகுநேரம் வெளியில் இருந்தேன். இருபது வயதான நான் தேவனை விட்டு, என்னால் முடிந்தமட்டும் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால், திடீரென, வினோதமாக, என்னுடைய தந்தை பாதிரியாராகப் பணிபுரியும் தேவாலயத்திற்குக் கட்டாயமாகச் செல்லும்படி தூண்டப்பட்டேன். நான் எனது சாயம்போன ஜீன்ஸ் பேன்டையும், பழசான மேல் சட்டையையும் கட்டப்படாத, உயரமான ஷூக்களையும் அணிந்து கொண்டு அந்தப் பட்டணத்தின் வழியே காரில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.
என்னுடைய தந்தையின் அன்றைய பிரசங்கத்தை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. ஆனால், என்னை அவர் பார்த்தபோது, அவருக்கிருந்த மகிழ்ச்சியை என்னால் மறக்கமுடியவில்லை. அவருடைய கரத்தை என் தோளின் மீது போட்டு அணைத்து, என்னை அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் அறிமுகப்படுத்தினார். “இவன் என்னுடைய மகன்” என்று பெருமையாகத் தெரிவித்தார். இத்தனை ஆண்டுகளாக என் மீதிருந்த தேவனுடைய அன்பின் வெளிப்பாடாக அவருடைய மகிழ்ச்சி இருந்தது.
தேவன் ஓர் அன்பான தந்தை என்ற கருத்து வேதாகமம் முழுமையிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஏசாயா 44ல் ஒரு கோர்வையான எச்சரிப்புகளுக்கிடையே, தீர்க்கதரிசி தேவனுடைய குடும்ப அன்பினை தெரிவிக்கின்றார். “என்னுடைய தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்து கொண்ட இஸ்ரவேலே” என அழைக்கின்றார். “உன் சந்ததியின் மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்” (வச. 3) என்கின்றார். தங்களுடைய குடும்ப பெருமையை இந்த வம்சாவழியினர் எப்படி வெளிப்படுத்துகின்றனர் என்பதை ஏசாயா நன்கு தெரிந்து கொண்டார். “ஒருவன் நான் கர்த்தருடையவன் என்பான்”, “ஒருவன் நான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப் போட்டு இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக் கொள்வான்” (வச. 5).
நான் என்னுடைய வளர்ப்புத் தந்தைக்குச் சொந்தமானவன் போல, தன்னிஷ்டம் போலத் திரிகின்ற இஸ்ரவேலரும் தேவனுக்குச் சொந்தமானவர்கள். நான் என்ன செய்துவிட்டிருந்தாலும் அது என் தந்தை என்மீது வைத்திருக்கின்ற அன்பிலிருந்து என்னைப் பிரிக்கவில்லை. என்னுடைய பரலோகத் தந்தை என்மீது வைத்திருக்கின்ற அன்பில் ஒரு துளியை என் தந்தை எனக்குத் தந்தார்.
உண்மையோடு
பல ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு தேசத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வில் கலந்து கொண்டேன். வெவ்வேறு கலாச்சாரங்கள் இணைவது அழகானது தான், ஆனால், இந்த வைபவத்தில் கிறிஸ்தவ பாரம்பரியம், அநேக தெய்வங்களை வணங்கும் நம்பிக்கையுடைய சடங்காச்சாரங்களோடு கலந்ததைக் கண்டேன்.
தீர்க்கதரிசி செப்பனியா, உண்மையான தேவன் மீதுள்ள நம்பிக்கை, மற்ற மதங்களோடு கலப்பதைக் கண்டிக்கின்றார். யூத ஜனங்கள் உண்மையான தேவனை ஆராதிப்பவர்கள், ஆனால், மல்காமின் என்ற பிற தெய்வத்தையும் சார்ந்து வாழ்ந்தனர் (செப்பனியா 1:5) செப்பனியா அவர்கள் கைக்கொள்ளுகின்ற, தேவன் இல்லை என்கின்ற கலாச்சாரத்தையும் (வச. 6,12) கண்டிக்கின்றார். அதன் விளைவாக தேவன் யூத ஜனங்களை அவர்களுடைய தேசத்திலிருந்து துரத்திவிட்டார்.
ஆனாலும், தேவன் தன் ஜனங்கள் மீது செலுத்தும் அன்பினை விட்டுவிடவில்லை. அவருடைய எண்ணமெல்லாம், அந்த ஜனங்கள் தன்னிடம் திரும்ப வேண்டும் என்பதே. எனவே “தாழ்மையைத் தேடுங்கள்” (2:3) என்கின்றார். அப்பொழுது தேவன் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைப் பேசி, மீண்டும் அவர்களைச் சேர்த்துக் கொள்வதாகக் கூறுகின்றார். “அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக் கொள்வேன். உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்புவேன்” (3:20) என்கின்றார்.
நான் சென்றிருந்த திருமணத்தில் நடந்த சமய இணைப்பை கண்டிப்பது எளிது. ஆனால், உண்மையில் நாம் அனைவரும் தேவனுடைய உண்மையை நம்முடைய கலாச்சார ஊகங்களோடு எளிதாக இணைத்து விடுகின்றோம். தேவனுடைய உண்மையான வார்த்தைகளுக்கு எதிரான நம்பிக்கைகளை நாம் சோதித்து அறியும்படி பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் நமக்குத் தேவை. பரிசுத்த ஆவியானவரின் உதவியால் தான் நாம் உண்மையினை உறுதியாகவும், உண்மையோடும் தொழுதுகொள்ளும் போது தேவன் நம்மை அன்போடு அரவணைத்துக் கொள்வார் (யோவா. 4:23-24).
தோன்றுவது போல் அல்ல
தொலைபேசியில் என்னுடைய மனைவி ‘‘கவனியுங்கள், இங்கு நமது பண்ணையில் ஒரு குரங்கு இருக்கிறது” என்றாள். அவள் தொலைபேசியைக் கையில் வைத்திருக்கும் போதே அதன் உறுமலை என்னால் கேட்க முடிந்தது. அது குரங்கின் சத்தம் தான். இது சாதாரணமாக நடக்கக்கூடியதல்ல. ஏனெனில் காட்டுக்குரங்குகள் நாங்களிருக்கும் இடத்திலிருந்து 2000 மைல்களுக்கப்பால் தான் உள்ளன.
பின்னர் என்னுடைய மாமனார் அதன் உண்மையை வெளிப்படுத்தினார். அது ஒரு கூண்டிலடைக்கப்பட்ட ஆந்தையின் குரல். குரங்கின் ஒலியைப் போன்ற தோற்றம். ஆனால் உண்மையல்ல.
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் அரசாட்சியின் போது, அசீரியா ராஜாவாகிய சனகெரிப்பின் படைகள் எருசலேமின் அரண்களைச் சுற்றி முற்றிகையிட்டன. அசீரியர்கள் வெற்றி அவர்களுக்கேயென எண்ணினர். ஆனால் உண்மையில் வேறு விதமாய் நடந்தது. அசீரியர்களின் சேனைத் தலைவன் நயமான வார்த்தைகளைப் பேசி, தான் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுவதைப் போல நடித்தான். ஆனால் தேவனுடைய கரம் இஸ்ரவேல் ஜனங்களைப் பாதுகாத்தது.
‘‘இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்க வந்தேனோ?” என அசீரியரின் சேனைத் தலைவன் கேட்கின்றான் (2 இரா. 18:25). அவன் எருசலேமின் ஜனங்களை அடிபணியுமாறு, அவர்களை சம்மதிக்கச் செய்ய முயற்சிக்கின்றான். மேலும் அவன் ‘‘நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்” (வ.32) எனவும் கூறுகின்றான்.
இது ஒருவேளை தேவன் கூறுவது போன்று அவர்களுக்குத் தோன்றலாம். ஆனால் ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரவேல் ஜனங்களிடம் தேவனுடைய உண்மையான வார்த்தைகளைச் சொல்கின்றார். அவன் (சனகெரிப்) இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின் மேல் அம்பு எய்வதுமில்லை; மேலும், ‘‘நான் இந்த நகரத்தை இரட்சிக்கும் படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன்” (19:32-34, 37:35) என்ற கர்த்தருடைய வார்த்தைகளை ஏசாயா சொன்னார். அன்று இராத்திரியில் ‘‘கர்த்தருடைய தூதன் அசீரியர்களைச் சங்கரித்தான் (வச. 35).
தேவனுடைய வல்லமையை மறுத்து நமக்கு நல்ல நளினமான போதனைகளைத் தருகின்ற மக்களை நாம் நாளுக்கு நாள் சந்திக்கின்றோம். அது தேவனுடைய வார்த்தையல்ல. தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் நம்மிடம் பேசுவார். தேவன் நம்மை அவருடைய ஆவியினால் வழி நடத்துவார் அவரைப் பின்பற்றுபவர்கள் மீது அவருடைய கரம் இருக்கும். அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.