காவல் நிலையத்திற்குத் திரும்பி வந்த அதிகாரி மிக்லியோ களைப்புடன் சுவரில் சாய்ந்து அமர்ந்தார். குடும்ப வன்முறை சம்மந்தப்பட்ட ஒரு அழைப்பை கவனிக்கச் சென்று வந்ததில் அவரது பாதி வேலை நேரம் கடந்துவிட்டது. அதன் பின்விளைவு ஒரு வாலிபனைக் காவலில் வைக்கும்படியாகவும், ஒரு இளம் பெண்ணை மருத்துவ அவசரப் பிரிவில் சேர்க்கும்படியாகவும் இருந்தது. அதிர்ச்சியில் இருந்த அந்தப் பெண்ணின் தாய் இது எப்படி ஆயிற்று என்று கவலைப்பட வைத்தது. இந்த அழைப்பு இளம் அதிகாரி மிக்லியோவை அதிக நாட்கள் பாதித்தது.

‘நீ என்ன செய்ய முடியும், விக்” என்று அவருடைய சார்ஜென்ட் அனுதாபத்துடன் கூறினார். ஆனால் அவருடைய வார்த்தைகள் வெறுமையாய் ஒலித்தன. சில காவல் அதிகாரிகளுக்கு வேலையை அலுவலகத்திலேயே விட்டுச் செல்ல முடிந்தது. ஆனால் விக் மிக்லியோவினால் அது போல் முடியவில்லை. அதுவும் இது போன்ற கடுமையான வழக்கினை விட முடியவில்லை.

காவல் அதிகாரி மிக்லியோவின் மனம் இயேசுவின் இரக்கத்தைப் பிரதிபலிக்கின்றது. கிறிஸ்துவின் சீஷர்கள் ஒரு கேள்வியோடு வருகிறார்கள், ‘பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான்?” .. இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, ‘நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்” (வச. 3) என்று சீஷர்களிடத்தில் கூறினார். பின்பு அவர் சிறுபிள்ளைகளை புண்படுத்துவோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்தார் (வச. 6). சிறுபிள்ளைகள் இயேசுவிற்கு அதிகப் பிரியமாக இருப்பதால் ‘அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமூகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள்” (வச. 10) என்று அவர் நமக்குச் சொல்லுகிறார்.

சிறுபிள்ளைகள் மேல் அன்பு வைத்த இயேசு நம் மேலும் அன்பு வைத்துள்ளார் என்பது எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது. அதனால்தான் சிறுபிள்ளைகளின் விசுவாசத்தோடு, அவருடைய பிள்ளைகளாகும்படி நம்மையும் அழைக்கிறார்.