ஆஸ்திரேலியாவின் மேற்கு குயின்ஸ்லாந்து கடற்கரைக்கு அருகில் பலமுறை தென்பட்ட மிகாலூ என்ற ஹம்ப் பேக் வகை திமிங்கிலம்தான் முதல்முறையாக ஆவணப்படுத்தப்பட்ட, உடல் முழுதும் வெள்ளையாக இருக்கும் வெளிரி நோயால் பாதிக்கப்பட்ட திமிங்கிலமாகும். நாற்பது அடிக்கும் மேல் நீளமான உடல் கொண்ட அந்த அரிய திமிங்கிலத்தைக் காப்பதற்காக, ஆஸ்திரேலியா ஒரு தனிச் சட்டத்தை இயற்றியது.

தப்பி ஓடிய ஒரு தீர்க்கதரிசியை விழுங்குவதற்காக கர்த்தர் அனுப்பிய ஒரு பெரிய, அரிய மீனைப்பற்றி நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம் (யோனா 1:17). பெரும்பாலானவர்களுக்கு இந்தக் கதை தெரியும். நியாயத்தீர்ப்பு குறித்த செய்தியை நினிவே மக்களுக்குச் சொல்லுமாறு யோனாவிடம் தேவன் கூறினார். ஆனால் அனைவரையும் – குறிப்பாக எபிரேயர்களை – துன்புறுத்தும் பழக்கம் கொண்ட நினிவே மக்களிடம் பேசுவதை யோனா விரும்பவில்லை. அதனால் அவர் தப்பி ஓடினார். ஆனால் நிலைமை மோசமாகியது. மீனின் வயிற்றில் இருந்த யோனா மனஸ்தாபப்பட்டார். இறுதியில் நினிவே மக்களுக்குப் பிரசங்கித்தார். அவர்களும் மனந்திரும்பினார்கள் (யோனா 3: 5-10).

இது ஒரு நல்ல கதை. ஆனால் இந்தக் கதை அதோடு முடியவில்லை. நினிவே மக்கள் மனஸ்தாபப்பட்டபோது யோனா அதிருப்தி அடைந்தான். “கர்த்தாவே நான் இதைச் சொல்லவில்லையா? நீர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்” என்று விண்ணப்பம் செய்தார் (யோனா 4:2). சாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட யோனாவின் பாவகரமான கோபம் அதிகரித்து, என் பிராணனை எடுத்துக்கொள்ளும் என்று ஜெபிக்கத் தூண்டியது (வச. 3).

யோனாவின் கதை மீனைக் குறித்தது அல்ல. அது மனித சுபாவம் மற்றும் நம்மை நாடும் ஆண்டவருடைய சுபாவம் ஆகியவற்றைக் குறித்தது. “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம் மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” (II பேதுரு 3:9). இரக்கமற்ற நினிவே மக்களிடமும், அதிருப்தி அடையும் தீர்க்கதரிசிகளிடமும், உங்களிடமும், என்னிடமும் தேவன் அன்பாய் இருக்கிறார்.