வளருவதற்கான அழைப்பு
கடற்குடுவை என்பது விசித்திரமான ஒரு கடல்வாழ் உயிரினம். பாறைகள் மற்றும் கடற் சிப்பிகள் மேல் ஒட்டியிருக்கும் இது, அசைவது போன்ற மென்மையான பிளாஸ்டிக் குழாய் போல் தெரிகிறது. பாய்ந்து செல்லும் நீரிலிருந்து அதன் ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்டு, அது முன் இருந்த இளமை துடிப்பை விட்டுவிட்டு, ஒரு செயலற்ற வாழ்க்கையை வாழ்கிறது.
இந்த கடற்குடுவை உயிரினம், ஒரு பழமையான முதுகுத் தண்டு மற்றும் மூளையுடன் ஒரு தலைப்பிரட்டைப் போல் தன் வாழ்க்கையைத் தொடங்கி, தன் உணவைக் கண்டுபிடிக்கிறது. தன் இளம்பிரயாத்தில், அது கடலை ஆராய்வதில் தனது நாட்களைக் கழிக்கிறது. ஆனால் முதிர்ச்சியடையும் போது ஏதோ நடக்கிறது. அது ஒரு பாறையில் குடியேறி, அது ஆராய்வதையும் வளர்வதையும் நிறுத்திக்கொள்கிறது. ஒரு பயங்கரமான திருப்பத்தில், அது அதன் சொந்த மூளையை உண்டு, ஜீரணிக்கின்றது.
முதுகெலும்பில்லாத, சிந்திக்கமுடியாத, ஒளிர்கிற மின்னோட்டத்துடன் செயலற்ற முறையில் நிற்கிறது. இந்த கடற்குடுவை விதியைப் பின்பற்ற வேண்டாம் என்று அப்போஸ்தலர் பேதுரு நம்மை ஊக்குவிக்கிறார். தேவனுடைய சுபாவங்களை தரித்துக்கொள்வதே நமக்கான முதிர்ச்சி (2 பேதுரு 1:4). நீங்களும் நானும் வளர அழைக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்துவைப் பற்றிய நமது அறிவில் மனரீதியாக வளருதல் (3:18); ஆவிக்குரிய ரீதியில் நன்மை, விடாமுயற்சி மற்றும் சுயக்கட்டுப்பாடு போன்ற பண்புகளில் வளருதல் (1:5-7); மற்றும் நடைமுறையில் புதிய வழிகளை ஆராய்வதன் மூலம் நேசித்தல், விருந்தோம்பல் வழங்குதல் மற்றும் நமது பரிசுகள் மூலம் மற்றவர்களுக்கு சேவை செய்தல் (1 பேதுரு 4:7-11) ஆகியவற்றில் வளர அழைக்கப்பட்டிருக்கிறோம். இத்தகைய வளர்ச்சி, வீணரும் கனியற்றதுமான வாழ்க்கையை வாழ்வதிலிருந்து நம்மைத் தடுக்கும் என்று பேதுரு கூறுகிறார் (2 பேதுரு 1:8).
வளர்வதற்கான இந்த அழைப்பு, எழுபது வயது முதியவருக்கு எவ்வளவு இன்றியமையாததோ அதேபோன்று இளம் வயதினருக்கும் அவசியம். தேவனின் தன்மை கடல் போல் பரந்தது. நாம் சில அடிகள் கூட நீந்தவில்லை. அவரது முடிவில்லாத தன்மையை ஆராயுங்கள். புதிய ஆவிக்குரிய சாகசங்களை மேற்கொள்ளுங்கள். படியுங்கள், சேவை செய்யுங்கள், துணிந்து முயற்சி செய்யுங்கள், வளருங்கள்.
தெய்வீக மென்மை
ஒரு தொழிலதிபர் தன்னுடைய கல்லூரி நாட்களில் தான் வாழ்க்கையில் நம்பக்கையிழந்தவராகவும், உதவியற்றவராகவும் அடிக்கடி உணர்ந்ததாக பேச நான் கேட்டிருக்கிறேன். ஆனால் அவரின் இந்த மனச்சோர்வினை அவர் மருந்துவரிடம் பகிர்ந்துகொள்ளாமல், தற்கொலை செய்வதைக் குறித்த புத்தகத்தை தன் நூலக முகவரிக்கு அவர் ஆர்டர் செய்து, தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கான தேதியைக் குறித்தார்.
வாழ்க்கையில் நம்பிக்கையிழந்தவர்களையும் திக்கற்றவர்களையும் தேவன் நேசிக்கிறார். வேதாகம கதாப்பாத்திரங்களை கடினமான சூழ்நிலைகளில் தேவன் நடத்திவந்த விதங்களை அடிப்படையாய் வைத்து இதை உறுதிசெய்யமுடியும். யோனா சாவை விரும்பியபோது தேவன் அவரிடம் மென்மையாக இடைபட்டார் (யோனா 4:3-10). எலியா தன் ஜீவனை எடுத்துக்கொள்ளும்படிக்கு தேவனிடத்தில் விண்ணப்பித்தபோது (1 இராஜாக்கள் 19:4), தேவன் அவருக்குப் புத்துணர்ச்சி அளிக்க அப்பத்தையும் தண்ணீரையும் கொடுத்து (வச. 5-9), அவரிடம் மெல்லிய சத்தத்தில் பேசுகிறார் (வச. 11-13). அவர் தனிமையில் இல்லை என்பதை அவருக்கு உணர்த்துகிறார் (வச. 18). மனம் தளர்ந்தவர்களின் நடைமுறை தேவைகளை சந்திப்பதின் மூலம் தேவன் கனிவாய் அவர்களை அணுகுகிறார்.
தற்கொலையைக் குறித்த புத்தகம் நூலகத்தை வந்துசேர்ந்தது என்ற தகவல் அவருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தவறுதலாய் அந்த செய்தி அவருடைய பெற்றோர்களை சென்றடைந்தது. அவருடைய தாயார் மனமுறிவோடு அன்று அவருக்கு போன் செய்து பேசியபோது தான், இந்த தற்கொலை எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்திருக்கக்கூடும் என்பது அவருக்கு தெரிந்தது. அந்த செய்தி தவறுதலாய் அவருடைய பெற்றோருக்கு போகவில்லையெனில், இன்று அவர் உயிரோடு இருந்திருக்கமாட்டார்.
இவர் காப்பாற்றப்பட்டது ஏதேச்சையாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ நிகழ்ந்த சம்பவம் அல்ல. மாறாக, நம்முடைய ஆகாரமோ, தண்ணீரோ, அல்லது முகவரி தவறுதலோ, இதுபோன்ற விசித்திரமான தலையீடுகள் நம்மை காப்பாற்றும்போது, நாம் தேவனுடைய மென்மையான தழுவுதலை எதிர்கொள்கிறோம்.
தாராள குணமும் மகிழ்ச்சியும்
தாராள மனப்பான்மைக்கும் மகிழ்ச்சிக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். தங்கள் பணத்தையும் நேரத்தையும் மற்றவர்களுக்கு கொடுப்பவர்கள், அப்படி செய்யாதவர்களை விட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒரு உளவியலாளர், “கொடுப்பதை ஒரு மனிதாபிமான கடமையாக நினைப்பதை விட்டுவிட்டு, அதை மகிழ்ச்சியின் ஆதாரமாக கருதத் தொடங்குவோம்” என்று கூறுகிறார்.
கொடுப்பது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது உண்மையென்றாலும், நம்முடைய மகிழ்ச்சியை இலக்காய் வைத்து நாம் கொடுக்கிறோமா? என்று கேள்வியெழும்புகிறது. நம்மை மகிழ்விக்கக்கூடியவர்களிடத்தில் மட்டும் நம்முடைய தயாள குணத்தை பிரதிபலித்தால், நமது உதவி தேவைப்படும் கடினமான சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு என்ன செய்வது?
கொடுக்கும் இந்த குணாதிசயத்தை வேதம் இன்னொரு கோணத்தில் மகிழ்ச்சியோடு தொடர்புபடுத்துகிறது. தேவாலயத்தைக் கட்டுவதற்குத் தன் சொந்தச் செல்வத்தைக் கொடுத்த பிறகு, தாவீது ராஜா இஸ்ரவேலரையும் நன்கொடை அளிக்க வலியுறுத்தினான் (1 நாளாகமம் 29:1-5). ஜனங்கள் தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த கற்கள் என்று மகிழ்ச்சியுடன் கொடுக்க முன்வந்தனர் (வச. 6-8). ஆனால் அவர்களின் மகிழ்ச்சி என்ன என்பதை கவனியுங்கள்: “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்" (வச. 9). நம்முடைய சுய மகிழ்ச்சிக்காய் கொடுக்கும்படிக்கு வேதம் ஒருபோதும் நமக்கு கட்டளையிடவில்லை. ஆனால் ஒரு தேவையைப் பூர்த்திசெய்ய மனப்பூர்வமாகவும் முழுமனதுடன் கொடுக்க உற்சாகப்படுத்துகிறது. மகிழ்ச்சி அதைத் தொடர்கிறது.
நிர்வாகத் தேவைகளை விட சுவிசேஷ தேவைக்காய் நிதி திரட்டுவது எளிது என்பது மிஷனரிகளுக்கு தெரியும். ஏனென்றால் ஊழியப்பணிக்காக கொடுப்பதற்கு கிறிஸ்தவர்கள் பொதுவாக முன்வருவார்கள். மற்றவர்களின் தேவைகளுக்கும் நாம் தாராளமாய் செயல்படவேண்டும். ஏனென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய இயேசு தன்னுடைய ஜீவனையே கொடுத்தார் (2 கொரிந்தியர் 8:9).
முடிவில்...
அநேக ஆவிக்குரிய கூட்டங்களுக்கு தலைமையேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. தனிமையான இடத்தில் ஜெபித்தும், என் ஜீவியத்தை சுயபரிசோதனை செய்வதும் ஆழமாய் எனக்குதவியது. நிகழ்ச்சியின்போது, பங்கேற்பாளர்களிடம் சிலசமயம் ஒரு சுயபரிசோதனை ஆய்வு நடத்துவதுண்டு. அதாவது, “நீங்கள் மரித்துவிட்டீர்கள், உங்கள் கண்ணீர் அஞ்சலி விளம்பரம் பத்திரிக்கையில் பிரசுரமாகிவிட்டது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அவ்விளம்பரம் எவ்வாறிருக்க விரும்புவீர்கள்?” என்று கேட்பதுண்டு. அதின் பலனாக சிலர் தங்கள் வாழ்வை சிறப்பாய் முடிக்கும்பொருட்டு, வாழ்வின் முன்னுரிமைகளை மாற்றிக்கொண்டதுமுண்டு.
2 தீமோத்தேயு 4ஆம் அதிகாரம் அப்போஸ்தலன் பவுல் இறுதியாக எழுதிய வார்த்தைகளை பதிவுசெய்துள்ளது. பவுல் அறுபதைத்தான் கடந்திருந்தார், இதற்கு முன்னமே மரணத்தை சந்தித்திருந்தார். இருப்பினும், இப்போது தாம் மரணத்தை நெருங்குவதை அவர் உணருகிறார் (2 தீமோத்தேயு 4:6). இனி மிஷனரி பயணம் கிடையாது, திருச்சபைகளுக்கு நிருபம் எழுதப்போவதும் கிடையாது. அவர் தன் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (வச.7) என்கிறார். அவர் குறைவுள்ளவராயிருப்பினும் (1 தீமோத்தேயு 1:15-16), எந்தளவிற்கு தேவனுக்கும், சுவிசேஷத்திற்கும் தான் உண்மையாய் வாழ்ந்துள்ளார் என்பதை நினைவுகூருகிறார். பின்னர், சீக்கிரமே அவர் இரத்தசாட்சியாய் மரித்ததாக பாரம்பரியம் கூறுகிறது.
நம் இறுதி நாட்களைக் குறித்து சிந்திப்பது, நம்முடைய தற்போதைய வாழ்விற்கு தெளிவை உண்டாக்கும் ஒரு வழி. பவுலின் வார்த்தைகள் பின்பற்றுவதற்கு ஏற்ற நல்ல ஒரு மாதிரி. நல்ல போராட்டத்தைப் போராடுங்கள். ஓட்டத்தை முடியுங்கள். விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், நம் ஜீவியத் தேவைக்காகவும், ஆவிக்குரிய போராட்டங்களை மேற்கொள்ளவும், ஓட்டத்தை நேர்த்தியாய் முடிக்கவும், கர்த்தரை சார்ந்துகொண்டு அவருடைய வழிகளில் உறுதியாய் நின்றிருக்கிறோமா என்பதே கடைசியில் பொருட்படுத்தப்படும்.
மீண்டும் பாடுங்கள்
ஆஸ்திரேலியாவின் பிரபல ரீஜண்ட் தேனுண்ணி பறவையினம் ஆபத்திலுள்ளது. அதின் இன்னிசைக்குரல் குருகுகிறது. முன்னர் அதிகளவில் இருந்தவை, தற்போது வெறும் முன்னூறு பறவைகளே மீந்துள்ளனவாம். கற்றுத்தர கூடியவைகள் சிலமட்டுமே உள்ள நிலையில், ஆண்பறவைகள் தங்கள் தனித்துவமான பாடலை மறந்து, தங்கள் துணையை ஈர்க்க தவறுகின்றன.
அதிர்ஷ்டவசமாக சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் இந்த தேனுண்ணிகளை மீட்க ஒரு திட்டம் வகுத்துள்ளனர். அவைகளுக்காக தாங்கள் பாடுவதே அந்தத் திட்டம். அதாவது, பிற தேனுண்ணிகள் பாடுவதை ஒலிப்பதிவு செய்து அவைகளைக் கேட்கச்செய்தால், தங்கள் ஆழ்மனதில் உள்ள பாடலை மீண்டும் கற்கின்றன. ஆண் பறவைகள் இசைமெட்டோடு பாடுகையில் தங்கள் ஜோடிகளை மீண்டும் ஈர்க்கும். அவ்வாறு செய்வதின் மூலம் இனவிருத்தி உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
தீர்க்கதரிசி செப்பனியா, உபத்திரவத்திலிருந்த ஜனங்களிடம் பேசுகிறார். தங்களுக்குள் மிகவும் சீர்கெட்டுபோனதால், தேவனுடைய நியாயத்தீர்ப்பு வருவதாக உரைக்கிறார் (செப்பனியா 3:1–8). பிற்காலத்தில், கைப்பற்றப்பட்டு சிறையிருப்புக்குள் செல்வதின் மூலம் இது நிறைவேறுகையில், ஜனங்களும் தங்கள் பாடலை மறந்தனர் (சங்கீதம் 137:4). ஆனால் செப்பனியா, நியாயத்தீர்ப்புக்கு பின்னான காலகட்டத்தை முன்னமே பார்க்கிறார். நாடுகடத்தப்பட்ட இந்த ஜனங்களிடம் தேவன் வந்து, அவர்கள் பாவங்களை மன்னித்து, அவர்களுக்காக பாடுகிறார், “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (செப்பனியா 3:17). அதின் முடிவாக, ஜனங்களின் ஆத்மார்த்தமான பாடல் மீட்டெடுக்கப்படும் (வச. 14).
நம்முடைய கீழ்படியாமையாலோ, வாழ்வின் சோதனைகளாலோ நாமும் நம் மனதிற்கினிய பாடலை இழந்திருக்கலாம். ஆனால் நமக்காக மன்னிப்பின் பாடல்களையும், அன்பின் பாடல்களையும் ஒரு குரல் பாடுகிறது. நாமும் அவருடைய இசையை கவனித்துக்கேட்டு அவரோடு சேர்ந்து பாடுவோமாக.
ஆட எழுவோம்
இந்த காணொளி அதிகம் பகிரப்பட்டது. ஒரு அழகான மூத்தபெண்மணி சக்கரநாற்காலியில் அமர்ந்திருக்கிறார், ஒரு காலத்தில் பாலே நடனத்தில் புகழ்பெற்றவராய் திகழ்ந்த இந்த மார்த்தா, தற்போதோ மூளையை பாதிக்கும் அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டார். அவரிம் ஸ்வான் லேக் (swan lake) எனும் இசையை இசைக்கையில் மட்டும், ஆச்சரியமானது நடக்கும். அந்த இசை வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கயில், அவருடைய பலவீனமான கரங்கள் மெல்ல உயர ஆரம்பிக்கிறது. முதல் எக்காள இசை துவங்கும்போது, தன் சக்கரநாற்காலியிலிருந்து, அவர் செய்கை காட்டத் துவங்குகிறார். அவருடைய மனமும், உடலும் செயலிழந்துக் கொண்டிருந்தாலும், அவருடைய திறமை இன்னும் அப்படியே இருக்கிறது.
அந்த காணொளியைப் பார்த்த மாத்திரத்தில் 1கொரிந்தியர் 15ஆம் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பவுலின் உயிர்த்தெழுதல் போதனைக்கு நேராய் என் சிந்தை திரும்புகிறது. ஒரு விதை எவ்வாறு பூமியிலிருந்து துளிர்விட்டு எழும்புகிறதோ, அதேபோன்று விசுவாசிக்கிறவர்களின் சரீரம் இந்த பூமியில் அழிவுள்ளதாய், கனவீனமுள்ளதாய், பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும்;. ஆனால் அழிவில்லாததாய், மகிமையுள்ளதாய், பலமுள்ளதாய் எழுந்திருக்கும் என்று கூறுகிறார் (வச.42-44)). ஒரு விதைக்கும், தாவரத்திற்கும் இடையே ஒரு உடல் சார்ந்த இணைப்பு இருப்பது போல, நம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், நம்முடைய ஆளத்துவமும், தாலந்துகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அப்படியே செழிப்பாய் இருக்கும்.
ஸ்வான் லேக் என்னும் அந்த இசை மீட்டப்படும்போது, தான் ஒரு காலத்தில் எப்படியிருந்தோம் என்று தன்னுடைய முன்னிலைமையை நினைத்து மார்த்தா சோர்வடைந்தாள். ஆனால், ஒரு மனிதர் அவளருகே வந்து, அவளுடைய கரங்களை பற்றினார். நமக்கும் அப்படியே சம்பவிக்கும். எக்காளங்கள் தொனிக்க (வச. 52), ஒரு கரம் நம்மை பற்றிப்பிடிக்கும். இதுவரை இல்லாத வகையில் நேர்த்தியான ஒரு நடனத்தை நாமும் அப்போது ஆடுவோம்.
நேசப்பாடல்
அது ஒரு சனிக்கிழமை மாலைநேரம். அமைதியான ஆற்றங்கரை பூங்கா. உடற்பயிற்சி செய்ய ஓடுகிறார்கள்; மீன்பிடிக்கும் தூண்டில்கள் மும்முரமாய் சுழன்றன, மீன்களுக்காகவும், மிச்சம் மீதிக்காகவும், பறவைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன, நானும் எனது மனைவியும் அமர்ந்துகொண்டு ஒரு தம்பதியினரை பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்கள் கருத்த நிறமுடைய நாற்பது வயதை நெருங்கியவர்கள். அந்த பெண் அவரையே உற்று நோக்கிக்கொண்டிருக்க, தன்னைச் சுற்றிலும் மக்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு துளியும் இல்லாமல், அவரைப் பார்த்து அந்த ஆண் ஒரு காதல் பாடலை தன் சொந்த மொழியில் மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தார்; அதை, தென்றல் ரம்மியமாக எங்களிடம் கொண்டு சேர்த்தது.
அந்த மகிழ்ச்சியான செயல் செப்பனியா புத்தகத்தை எனக்கு நினைவூட்டியது. ஆரம்பத்தில் ஏன் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். செப்பனியாவின் நாட்களில், இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய விக்கிரகங்களுக்கு முன்பாக விழுந்து பணிந்தனர் (1:4-5); தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும் வீண்பெருமைக்காரர்களாகவும், வஞ்சகர்களாகவும் இருந்தனர் (3:4). புத்தகத்தின் பெரும்பாலான இடங்களில் இஸ்ரவேல் மீது மட்டும் வரப்போகிற நியாயத்தீர்ப்பாக இல்லாமல், உலகம் முழுமைக்கும் ஏற்படப்போகிற நியாயத்தீர்ப்பை அறிவிக்கிறது (வச. 8).
ஆனால் செப்பனியா வேறொன்றைப் பார்க்கிறார். அந்த மப்பும் மந்தாரமுமான நாளிலிருந்து தேவனை முழுமனதுடன் நேசிக்கிற ஒரு கூட்டம் எழும்புகிறது (வச. 9-13). இந்த கூட்டத்திற்கு, தன் மணவாட்டியை நேசிக்கும் நேசராய் தேவன் வெளிப்படுகிறார்: “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (வச. 17).
சிருஷ்டிகர், பிதா, பராக்கிரமசாலி, நியாயாதிபதி. என வேதாகமம் தேவனுக்கு பல தலைப்புகளைக் கொடுக்கிறது. ஆனால் நம்மில் எத்தனைபேர், தன் உதட்டில் நேசகீதத்தை முணுமுணுக்கும் ஒரு பாடகராய் தேவனைப் பார்த்திருக்கிறோம்?
கதவை தவிர்க்கவும்
அந்த எலியின் மூக்கை ஏதோ ஒன்று சுண்டி இழுத்தது. ஏதோ ஒன்று மிக ருசிகரமான உணவு அருகிலேயே இருந்தது. திடமாக அந்த மணம், பறவைகள் உண்ணும் ருசிகரமான விதைகள் நிறைந்த தீவனத்தொட்டிக்கு நேரே இட்டுச்சென்றது. அந்த எலி சங்கிலியின் வழியே கீழே இறங்கி தீவனத்தை நோக்கி வந்தது, கதவின் இடுக்கின் உள்ளே நுழைந்து இரவெல்லாம் தின்று கொண்டே இருந்தது. காலையில்தான் தான் சிக்கியிருந்த ஆபத்தை உணர்ந்தது. இப்பொழுது பறவைகள் அந்த தீவனத்தொட்டியின் வழியே அதை கொத்த துவங்கின. ஆனால் விதைகளை தெவிட்ட தெவிட்ட அதிகம் தின்ற காரணத்தினால், அது பெருத்துப் போய் தப்பிக்க இயலாமல் மாட்டிக்கொண்டது.
கதவுகள் நம்மை மிகவும் அற்புதமான இடங்களுக்கு நேரே நடத்தும், அல்லது ஆபத்தான இடங்களுக்கும் நடத்தும். நீதிமொழிகள் 5ல், பாலியல் சோதனைகளை தவிர்க்கும்படியான சாலமோனின் அறிவுரைகளிலும், கதவு பிரதான அம்சமாய் இருக்கிறது. பாலியல் பாவம் கவர்ந்து இழுக்கக் கூடிய ஒன்றாய் இருப்பினும், அதைப் பின்தொடர்ந்தால், ஆபத்து காத்திருக்கிறது (5:3-6) என்று அவர் கூறுகிறார். அதைவிட்டு தூரமாய் தள்ளி இருப்பதே சிறந்தது; ஏனெனில், அந்த கதவின் வழியாக நீங்கள் நடந்தால், நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள், உங்களுடைய மரியாதையை இழந்து, உங்கள் செல்வமெல்லாம் அன்னியர்களால் பிடுங்கிக் கொள்ளப்படும் (வ.7-11) மாறாக, நம்முடைய வாழ்க்கை துணைகளோடு இன்பமாய் இருப்பதையே சாலமோன் அறிவுறுத்துகிறார் (வ.15-20). அவருடைய அறிவுரை இதற்காக மட்டுமல்லாமல் மற்ற பாவங்களுக்கும் பொருந்தும். பெருந்திண்டியின் சோதனையோ, அல்லது அதிகமாக செலவழிக்கும் சோதனையோ, அல்லது வேறு எதுவாயிருந்தாலும், நாம் சிக்கிக் கொள்ளக் கூடிய கதவை தவிர்ப்பதற்கு தேவன் நமக்கு உதவுவார்.
அந்த வீட்டின் எஜமான், தனது பறவைகளின் தீவனத் தொட்டியில் சிக்கிக்கொண்ட எலியை கண்டு, அதை தனது தோட்டத்தில் விடுவிக்கும் போது, அந்த எலி மிகுந்த சந்தோஷமாய் இருந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக, தேவனுடைய கரமும் நாம் சிக்கிக்கொள்ளும் போது நம்மை விடுவிக்க ஆயத்தமாக உள்ளது. ஆனால் எல்லாவற்றிற்கும் முன்னராகவே, நாம் சிக்கிக்கொள்ளும் கதவை நாம் தவிர்க்க தேவனின் பெலத்தை கேட்டு பெற்றுக்கொள்வோம்.
ஞானமுள்ள அறிவுரை
ஏப்ரல் 2019 அன்று பாரிசில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்தின் கூரை தீப்பிடித்து, அதின் பண்டைய கால மர உத்திரமும், கூரையில் செய்யப்பட்டிருந்த ஈயமும் இணைந்து அடுப்பைப் போல எரிந்து, அதிக சூட்டின் நிமித்தம் நிற்க கூடாமல் விழுந்தது. தேவாலயத்தின் உச்சி கோபுரம் பயங்கரமாக விழுந்த பின்னர், இப்பொழுது அதின் மணி கூண்டுகளுக்கு நேராக நெருப்பின் கவனம் திரும்பியது. எஃகினால் செய்யப்பட்ட ராட்சத மணிகளின் மரச்சட்டங்கள் எரிந்துவிட்டால், அவைகள் நிலைகுலைந்து இரு மணி கூண்டுகளையும் கீழே விழத்தள்ளி, தேவாலயத்தை தரைமட்டமாக்கி விடும்.
தன்னுடைய தீயணைப்பு வீரர்களின் பாதுகாப்பிற்காக அவர்களை திரும்பப் பெற்றுக்கொண்ட பாரிஸ் நகரத் தீயணைப்புத் துறையின் படைத்தலைவர் ஜெனரல் கல்லெட், அடுத்து என்ன செய்வதென்ற யோசனையிலிருந்தார். அப்பொழுது ரெமி என்ற தீயணைப்பு வீரர் தயக்கத்தோடு அவரை அணுகி, "மரியாதைக்குரிய தலைவர் அவர்களே, நான் கோபுரங்களின் வெளிப்புறமாக மேலே நீர் குழாய்களின் மூலம் தண்ணீரை பீச்சி அடிக்கலாம் என்று ஆலோசனை சொல்லுகிறேன்" என்றார், ஆனால் கட்டிடத்தின் உறுதியற்ற தன்மையை கருத்தில் கொண்டு படைத்தலைவர் இந்த யோசனையை நிராகரித்தார். இருந்தபோதிலும் ரெமி தொடர்ந்து அவரோடு தன் கருத்தை வலியுறுத்தினார். சீக்கிரத்தில் படைத்தலைவர் கல்லெட் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டி இருந்தது, இளைய தீயணைப்பு வீரரின் அறிவுரையை பின்பற்றுதல் அல்லது தேவாலயம் இடிவதற்கு அதை விட்டுவிடுதல்.
ஆலோசனையை பின்பற்றுவதை குறித்து வேதம் அதிகமாக பேசுகிறது. சில சமயங்களில், வாலிபர் முதியோருக்கு கொடுக்கும் மரியாதையை இப்படி குறிப்பிடுவதாக இருந்தாலும் (நீதிமொழிகள் 6:20-23), பெரும்பாலும் அப்படி இல்லை. நீதிமொழிகள் சொல்கிறது, "ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்."(12:15) "நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்."(24:6.) மேலும், "மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்" (12:15) என்று. ஞானமுள்ளவர்கள் ஆலோசனைகளுக்கு செவிகொடுப்பர், அதை கொடுப்பவர் எவ்வயதினராயினும், எந்த பதவியிலிருப்பவராயினும் அதை பொருட்படுத்த மாட்டார்கள்.
ஜெனரல் கல்லெட், ரெமிக்கு செவிகொடுத்தார். எரிந்துகொண்டிருந்த மணிகூண்டுகளின் சட்டங்களில் தண்ணீர் பீச்சியடிக்கப்பட, சிறுது நேரத்திலேயே தேவாலயம் காப்பாற்றப்பட்டது. இன்றைக்கு உங்களுடைய எந்த பிரச்சனைக்கு தேவாலோசனை தேவை? சிலசமயம் தேவன் தாழ்மை உள்ளவர்களை இளையவர்களின் வாய்வார்த்தைகளை கொண்டும் நடத்துகிறார்.