எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ரிச்சர்ட் டிஹான்கட்டுரைகள்

சத்தியமும் பொய்யும்

பிரசங்க பீடத்திலே என்னுடைய வேதாகமத்தை வைத்து, என்னுடைய பிரசங்கத்தை கேட்கக் காத்திருந்த முகங்களை வெறித்துப் பார்த்தேன். நான் ஜெபத்தோடும் ஆயத்தத்தோடும் தான் வந்திருந்தேன். ஆனால் ஏன் என்னால் பேசமுடியவில்லை?

நீ தகுதியில்லாதவன்! ஒருவனும் உன்னுடைய பேச்சை எப்போதும் கேட்கப்போவதில்லை. அதிலும் குறிப்பாய் அவர்கள் உன்னுடைய கடந்த காலத்தை அறிந்தவர்கள் எனறால், தேவனும் உன்னை பயன்படுத்தப் போவதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக, என்னுடைய இருதயத்திலும் சிந்தையிலும் இந்த வார்த்தைகள் பலவகைகளில் திரும்பத் திரும்ப ஒலித்து, அந்த பொய்களை என்னை நம்பச்செய்தது. அந்த வார்த்தைகள் பொய் என்று எனக்குத் தெரிந்தாலும், அதின் பயத்திலிருந்தும் குற்ற மனசாட்சியிலிருந்தும் என்னால் மீள முடியவில்லை. நான் வேதாகமத்தைத் திறந்தேன். 

நீதிமொழிகள் 30:5க்கு நேராய் என் வேதத்தைத் திருப்பி, அதை வாசிப்பதற்கு முன்பாக, நிம்மதி பெருமூச்சிவிட்டேன். “தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்” என்று வாசித்தேன். வாசித்து என் கண்களை மூடியபோது, ஒரு தெய்வீக சமாதானம் என்னை ஆட்கொண்டது. அந்த கூட்டத்தில் என்னுடைய சாட்சியைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். 

நம்மை செயலிழக்கப்பண்ணும் மக்களின் எதிர்மறையான வார்த்தைகளின் வலிமையை நம்மில் பலர் அனுபவித்துள்ளோம். ஆனால் தேவனுடைய வார்த்தைகளெல்லாம் புடமிடப்பட்டவைகள்; நேர்த்தியானவைகள்; தெளிவாய் ஒலிக்கக்கூடியவைகள். நம்முடைய மதிப்பை அல்லது தேவனுடைய பிள்ளைகள் என்னும் நமது அங்கீகாரத்தை இழக்கச் செய்யும், ஆவியை நொறுக்கும் வார்த்தைகளை நாம் நம்பத் தூண்டப்படும்போது, கர்த்தருடைய புடமிடப்பட்ட வார்த்தைகள், நம் சிந்தையையும் இருதயத்தையும் பாதுகாக்கிறது. அவ்வாறு செய்யும்போது, சங்கீதக்காரனுடைய, “கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்” (சங்கீதம் 119:52) என்னும் வார்த்தைகளை நாமும் உச்சரிக்கமுடியும். நம்முடைய எதிர்மறையான எண்ணங்களை மாற்றி, தேவனைக் குறித்தும், நம்மைக் குறித்தும், மற்றவர்களைக் குறித்தும் நாம் புரிந்துக்கொள்ள நமக்கு வேதாகம் உதவுகிறது. 

ஊக்குவிப்புக்காக எப்படியாவது முயற்சிப்பது

இஸ்ரவேலரின் தலைமைத்துவத்தை யோசுவா பொறுப்பேற்கவிருந்த தருணத்தில் மோசே அவரை உற்சாகப்படுத்தியதை உபாகமம் 3ல் நாம் வாசிக்கிறோம். மோசேயினுடைய இடத்தை நிரப்புமளவிற்கு தகுதியில்லை என்கிற உணர்வோடும் பயத்தோடும் யோசுவா நிரம்பி இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. எனவே, யோசுவாவை உற்சாகப்படுத்தும்படியாக கர்த்தர் மோசேயிடம் கூறினார்.

ஒரு பெரிதான புதிய சவாலுக்கு நாம் முகம் கொடுக்கும்போது நமக்குத் தூண்தல் தருவதற்கு அவ்வப்போது ஊக்கமளிக்கக்கூடிய ஒரு வார்த்தை நம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. ஆனால், எமது இல்லத்திலோ அல்லது பணியிடத்திலோ எமது அன்றாட பொறுப்புக்களை நிறைவேற்றுகையில் பாராட்டும் மெச்சுதலும்கூட நமக்கு தேவைப்படுகிறது.…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றல்

ஜூம் செயலி பிரேத்யேகமான தகவல்தொடர்பு கருவியாக மாறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு செயல்திட்டத்தைப் பற்றி விவாதிக்கக் காணொளி அழைப்பில் தன்னுடன் இணையுமாறு ஒரு தோழி என்னிடம் கேட்டாள். செய்வதறியாமல் நான் குழப்பமடைந்துள்ளேன் என்று மின்னஞ்சல்கள் வாயிலாக உணர்ந்துகொண்டாள். எனவே காணொளி அழைப்பை எவ்வாறு அமைப்பது என்பதைக் கண்டறிய எனக்கு உதவ ஒரு வாலிபரை அணுகும்படி அவள் பரிந்துரைத்தாள்.

அவளது ஆலோசனை, தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகளின் மதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. இது ரூத் மற்றும் நகோமியின் கதையில் தெளிவாகும் ஒன்று. ரூத் ஒரு விசுவாசமான மருமகளென்று அடிக்கடி புகழப்படுகிறாள்.நகோமியுடன் பெத்லகேமுக்குத் திரும்பிச் செல்ல தன் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தாள் (ரூத் 1:16-17). அவர்கள் நகரை அடைந்தபோது நகோமியின் இளைய மருமகள், “நான் வயல்வெளிக்குப் போய்.. (நமக்காக) கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன்” (2:2) என்றாள். இவள் முதியவளுக்கு உதவினாள், அவள் இளையவளுக்கு போவாஸை திருமணம் செய்ய உதவினாள். நவோமி ரூத்துக்கு கொடுத்த ஆலோசனை, போவாஸை இறந்துபோன திருமண உறவுகளின் ஆஸ்தியை வாங்குவதற்கும், ரூத்தை”மனைவியாக” கொள்ளவும் செயல்படத் தூண்டியது (4:9-10).

இளைய தலைமுறையினருடன் தங்கள் அனுபவமிக்க ஞானத்தைப் பகிர்ந்துகொள்பவர்களின் அறிவுரைகளை நாம் நிச்சயமாக மதிக்கிறோம். ஆனால் ரூத் மற்றும் நகோமி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நம்மை விடச் சிறியவர்களிடமிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது. அன்பான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைமுறை உறவுகளை வளர்க்க முற்படுவோம். அது நம்மையும் மற்றவர்களையும் ஆசீர்வதித்து, நாம் அறிந்திராததை கற்றுக்கொள்ள உதவும்.

 

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம். 

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் “எதேச்சையான பயம்” என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, “இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று” (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: “பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” (வ. 20). “பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்” என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய ஆறுதலை நமக்களிக்கிறார்.