எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ரிச்சர்ட் டிஹான்கட்டுரைகள்

சத்தியமும் பொய்யும்

பிரசங்க பீடத்திலே என்னுடைய வேதாகமத்தை வைத்து, என்னுடைய பிரசங்கத்தை கேட்கக் காத்திருந்த முகங்களை வெறித்துப் பார்த்தேன். நான் ஜெபத்தோடும் ஆயத்தத்தோடும் தான் வந்திருந்தேன். ஆனால் ஏன் என்னால் பேசமுடியவில்லை?

நீ தகுதியில்லாதவன்! ஒருவனும் உன்னுடைய பேச்சை எப்போதும் கேட்கப்போவதில்லை. அதிலும் குறிப்பாய் அவர்கள் உன்னுடைய கடந்த காலத்தை அறிந்தவர்கள் எனறால், தேவனும் உன்னை பயன்படுத்தப் போவதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக, என்னுடைய இருதயத்திலும் சிந்தையிலும் இந்த வார்த்தைகள் பலவகைகளில் திரும்பத் திரும்ப ஒலித்து, அந்த பொய்களை என்னை நம்பச்செய்தது. அந்த வார்த்தைகள் பொய் என்று எனக்குத் தெரிந்தாலும், அதின் பயத்திலிருந்தும் குற்ற மனசாட்சியிலிருந்தும் என்னால் மீள முடியவில்லை. நான் வேதாகமத்தைத் திறந்தேன். 

நீதிமொழிகள் 30:5க்கு நேராய் என் வேதத்தைத் திருப்பி, அதை வாசிப்பதற்கு முன்பாக, நிம்மதி பெருமூச்சிவிட்டேன். “தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்” என்று வாசித்தேன். வாசித்து என் கண்களை மூடியபோது, ஒரு தெய்வீக சமாதானம் என்னை ஆட்கொண்டது. அந்த கூட்டத்தில் என்னுடைய சாட்சியைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். 

நம்மை செயலிழக்கப்பண்ணும் மக்களின் எதிர்மறையான வார்த்தைகளின் வலிமையை நம்மில் பலர் அனுபவித்துள்ளோம். ஆனால் தேவனுடைய வார்த்தைகளெல்லாம் புடமிடப்பட்டவைகள்; நேர்த்தியானவைகள்; தெளிவாய் ஒலிக்கக்கூடியவைகள். நம்முடைய மதிப்பை அல்லது தேவனுடைய பிள்ளைகள் என்னும் நமது அங்கீகாரத்தை இழக்கச் செய்யும், ஆவியை நொறுக்கும் வார்த்தைகளை நாம் நம்பத் தூண்டப்படும்போது, கர்த்தருடைய புடமிடப்பட்ட வார்த்தைகள், நம் சிந்தையையும் இருதயத்தையும் பாதுகாக்கிறது. அவ்வாறு செய்யும்போது, சங்கீதக்காரனுடைய, “கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்” (சங்கீதம் 119:52) என்னும் வார்த்தைகளை நாமும் உச்சரிக்கமுடியும். நம்முடைய எதிர்மறையான எண்ணங்களை மாற்றி, தேவனைக் குறித்தும், நம்மைக் குறித்தும், மற்றவர்களைக் குறித்தும் நாம் புரிந்துக்கொள்ள நமக்கு வேதாகம் உதவுகிறது. 

ஊக்குவிப்புக்காக எப்படியாவது முயற்சிப்பது

இஸ்ரவேலரின் தலைமைத்துவத்தை யோசுவா பொறுப்பேற்கவிருந்த தருணத்தில் மோசே அவரை உற்சாகப்படுத்தியதை உபாகமம் 3ல் நாம் வாசிக்கிறோம். மோசேயினுடைய இடத்தை நிரப்புமளவிற்கு தகுதியில்லை என்கிற உணர்வோடும் பயத்தோடும் யோசுவா நிரம்பி இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. எனவே, யோசுவாவை உற்சாகப்படுத்தும்படியாக கர்த்தர் மோசேயிடம் கூறினார்.

ஒரு பெரிதான புதிய சவாலுக்கு நாம் முகம் கொடுக்கும்போது நமக்குத் தூண்தல் தருவதற்கு அவ்வப்போது ஊக்கமளிக்கக்கூடிய ஒரு வார்த்தை நம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. ஆனால், எமது இல்லத்திலோ அல்லது பணியிடத்திலோ எமது அன்றாட பொறுப்புக்களை நிறைவேற்றுகையில் பாராட்டும் மெச்சுதலும்கூட நமக்கு தேவைப்படுகிறது.…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனுடைய குடும்பத்தில் ஒட்டவைக்கப்பட்டது

சில ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தையுடன் அவருக்கு பிரியமான சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, அவர் வளர்ந்த குடும்பப் பண்ணைக்குச் சென்றோம். விசித்திரமான மரங்களின் கூட்டத்தை நான் கவனித்தேன். அவர் சிறுவனாக இருந்தபோது குறும்புசெய்தபோது, ஒரு பழ மரத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு கிளையை எடுத்து, வேறு வகையான பழ மரத்தில் பிளவுகளை உருவாக்கி, பெரியவர்கள் செய்வது போல் தளர்வான கிளையை தண்டுடன் கட்டுவார் என்று என் அப்பா சொன்னார். அந்த மரங்கள் எதிர்பார்த்ததை விட வித்தியாசமான பழங்களைத் தரத் தொடங்கும் வரை அவருடைய குறும்புகள் கவனிக்கப்படாமல் இருந்திருக்கிறது.

என் அப்பா தாவரங்களுக்கு செய்யும் செயல்முறையை விவரித்தது போல், தேவனுடைய குடும்பத்தில் நாம் ஒட்டப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றிய ஒரு சித்திரம் எனக்கு கிடைத்தது. என் மறைந்த தந்தை பரலோகத்தில் இருப்பதை நான் அறிவேன். ஏனென்றால் அவர் இயேசுவின் மீது வைத்த விசுவாசத்தின் மூலம் தேவனுடைய குடும்பத்தில் இணைக்கப்பட்டார்.

இறுதியில் பரலோகத்திலும் இருப்போம் உறுதியை நாம் பெறலாம். புறஜாதிகள் அல்லது யூதரல்லாதவர்கள் தம்முடன் சமரசம் செய்துகொள்ள தேவன் ஒரு வழியை உருவாக்கினார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமில் உள்ள விசுவாசிகளுக்கு விளக்கினார்: “காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்...” (ரோமர் 11:17). நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்கும் போது, நாம் அவருடன் இணைக்கப்பட்டு, தேவனுடைய குடும்பத்தின் ஒரு அங்கமாக மாறுகிறோம். “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்” (யோவான் 15:5).

ஒட்டவைக்கப்பட்ட மரங்களைப் போலவே, கிறிஸ்துவில் நாம் நம்பிக்கை வைக்கும்போது, நாம் ஒரு புருசிருஷ்டியாக மாறி, அதிக பலனைக் கொடுக்கிறோம். 

.

கிறிஸ்துவில் கட்டப்பட்டது

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், டெல்லியில் உள்ள செங்கோட்டை, மைசூரில் உள்ள அரச அரண்மனை, மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில்கள் அனைத்தும் புகழ்பெற்ற பெயர்களைக் கொண்டுள்ளன. சிலவைகள் பளிங்குக் கற்களால் ஆனவை; சிலவைகள் சிவப்புக் கல்லால் ஆனவை; சிலவைகள் பாறைகளால் வெட்டப்பட்டவை; மற்றவை தங்கத்தால் பதிக்கப்பட்டவைகள். ஆனால் அவை அனைத்திற்கும் பொதுவான ஒன்று உள்ளது. அவை அனைத்தும் கட்டிடங்கள்.

கட்டடம் என்பது விசுவாசிகளைக் குறிக்க வேதம் பயன்படுத்தும் முக்கியமான உருவகங்களில் ஒன்று. “நீங்கள்... தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 3:9) என்று பவுல் அப்போஸ்தலர் எழுதுகிறார். விசுவாசிகளுக்கு வேறு பெயர்களும் உள்ளன: “மந்தை” (அப்போஸ்தலர் 20:28), “கிறிஸ்துவின் சரீரம்” (1 கொரிந்தியர் 12:27), “சகோதர சகோதரிகள்” (1 தெசலோனிக்கேயர் 2:14) மற்றும் பல.

கட்டிட உருவகம் 1 பேதுரு 2:5 இல் மீண்டும் மீண்டும் வருகிறது. பேதுரு திருச்சபையைப் பார்த்து, “ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும்... கட்டப்பட்டுவருகிறீர்கள்” என்று குறிப்பிடுகிறார். மேலும் 6ஆம் வசனத்தில் ஏசாயா 28:16 மேற்கோள் காண்பிக்கிறார், “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன்.” இயேசுவே அவருடைய கட்டிடத்தின் அஸ்திபாரம்.

திருச்சபையைக் கட்டுவது நமது வேலை என்ற உணர்வு நமக்கு இருக்கலாம். ஆனால் “நான் என் சபையைக் கட்டுவேன்” என்று இயேசு சொல்லுகிறார் (மத்தேயு 16:18). நாம் நம்மை “அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு” (1 பேதுரு 2:9) தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். அந்தத் துதிகளை நாம் அறிவிக்கும்போது, அவருடைய நற்செயல்களைச் செய்யும்போது நாம் அவருடைய கரங்களில் கருவிகளாக மாறுகிறோம். 

 

ஸ்னாப்டீல் நகர்

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் தங்களுக்கு உதவிய இனைய நிறுவனத்தை கவுரவிக்கும் வகையில் “ஸ்னாப்டீல் டாட் காம் நகர்” என பெயர் மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளது. 2011க்கு முன், கிராம மக்கள் தினமும் பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்தனர். ஆனால் இனைய நிறுவனத்திற்கு நன்றி, அவர்கள் இப்போது கைப்பம்புகள் மூலம் எளிதில் கிடைக்கக்கூடிய சுத்தமான தண்ணீரை பெறுகின்றனர். அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒரு ஊழியரால் இது சாத்தியமானது என்று தலைமை நிர்வாக அதிகாரி குணால் பால் கூறினார். இந்த ஊழியர் கிராம மக்களின் துயரத்தை மாநகராட்சியுடன் பகிர்ந்து கொண்டார், மேலும் அவரது எளிய செய்தி நூற்றுக்கணக்கான வாழ்க்கையில் மகிழ்ச்சியான மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஒரு தீர்க்கதரிசியின் புரட்சிகரமான செயல்களை வேதாகமம் பதிவு செய்கிறது. இந்த தீர்க்கதரிசி கொடூரமான ராஜா ஆகாபிடம் தேவனின் செய்தியைத் தைரியமாகத் தெரிவித்தார். ராஜாவுக்கு அவர் சொன்ன செய்தி இனிமையானதல்ல, ஆனால் அது சத்தியம் மற்றும் அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அதைப் பேசினார்(வ.42). அதே காலகட்டத்தில் வாழ்ந்து தீர்க்கதரிசனம் உரைத்த எலியா போன்ற பிற தீர்க்கதரிசிகளும் உள்ளனர். அவர்களின் பெயர்களும் செயல்களும் நன்கு அறியப்பட்டாலும், இந்த தீர்க்கதரிசி பெயரிடப்படவில்லை. அப்படியிருந்தும், தேவன் தனக்குக் கொடுத்த பணியை அவர் நிறைவேற்றினார்.

ஸ்னாப்டீல் நகரைச் சேர்ந்த ஊழியரைப் போலவே, இந்த பெயர் தெரியாத தீர்க்கதரிசிக்குச் சூழ்நிலை சவாலாக இருந்தபோதும் உண்மையைப் பேசினார். அங்கீகாரம் கோருவது சாதாரணமாக இருக்கும் ஒரு உலகில், அமைதியாகவும் அடக்கமாகவும் நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தேவனுக்குக் கீழ்ப்படிய முயல்வோம். தேவனின் பிள்ளைகளாகிய நாம் நமது உறவுகள், பேச்சு மற்றும் செயல்கள் மூலம் அவருடைய செய்தியைத் தெரிவிக்கும்போது, நாமும் மாற்றத்தின் கருவியாக இருக்க முடியும். பெயர் இல்லாவிட்டாலும் நாம் அறியப்படாதவர்கள் அல்ல. ஏனென்றால், தேவன் நம் செயல்களைப் பார்க்கிறார், எவரும் அறியாதபோதும் நாம் என்ன செய்கிறோம் என்பதை அவர் அறிவார் (எபிரெயர் 6:10).