பிரசங்க பீடத்திலே என்னுடைய வேதாகமத்தை வைத்து, என்னுடைய பிரசங்கத்தை கேட்கக் காத்திருந்த முகங்களை வெறித்துப் பார்த்தேன். நான் ஜெபத்தோடும் ஆயத்தத்தோடும் தான் வந்திருந்தேன். ஆனால் ஏன் என்னால் பேசமுடியவில்லை?

நீ தகுதியில்லாதவன்! ஒருவனும் உன்னுடைய பேச்சை எப்போதும் கேட்கப்போவதில்லை. அதிலும் குறிப்பாய் அவர்கள் உன்னுடைய கடந்த காலத்தை அறிந்தவர்கள் எனறால், தேவனும் உன்னை பயன்படுத்தப் போவதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக, என்னுடைய இருதயத்திலும் சிந்தையிலும் இந்த வார்த்தைகள் பலவகைகளில் திரும்பத் திரும்ப ஒலித்து, அந்த பொய்களை என்னை நம்பச்செய்தது. அந்த வார்த்தைகள் பொய் என்று எனக்குத் தெரிந்தாலும், அதின் பயத்திலிருந்தும் குற்ற மனசாட்சியிலிருந்தும் என்னால் மீள முடியவில்லை. நான் வேதாகமத்தைத் திறந்தேன். 

நீதிமொழிகள் 30:5க்கு நேராய் என் வேதத்தைத் திருப்பி, அதை வாசிப்பதற்கு முன்பாக, நிம்மதி பெருமூச்சிவிட்டேன். “தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்” என்று வாசித்தேன். வாசித்து என் கண்களை மூடியபோது, ஒரு தெய்வீக சமாதானம் என்னை ஆட்கொண்டது. அந்த கூட்டத்தில் என்னுடைய சாட்சியைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். 

நம்மை செயலிழக்கப்பண்ணும் மக்களின் எதிர்மறையான வார்த்தைகளின் வலிமையை நம்மில் பலர் அனுபவித்துள்ளோம். ஆனால் தேவனுடைய வார்த்தைகளெல்லாம் புடமிடப்பட்டவைகள்; நேர்த்தியானவைகள்; தெளிவாய் ஒலிக்கக்கூடியவைகள். நம்முடைய மதிப்பை அல்லது தேவனுடைய பிள்ளைகள் என்னும் நமது அங்கீகாரத்தை இழக்கச் செய்யும், ஆவியை நொறுக்கும் வார்த்தைகளை நாம் நம்பத் தூண்டப்படும்போது, கர்த்தருடைய புடமிடப்பட்ட வார்த்தைகள், நம் சிந்தையையும் இருதயத்தையும் பாதுகாக்கிறது. அவ்வாறு செய்யும்போது, சங்கீதக்காரனுடைய, “கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்” (சங்கீதம் 119:52) என்னும் வார்த்தைகளை நாமும் உச்சரிக்கமுடியும். நம்முடைய எதிர்மறையான எண்ணங்களை மாற்றி, தேவனைக் குறித்தும், நம்மைக் குறித்தும், மற்றவர்களைக் குறித்தும் நாம் புரிந்துக்கொள்ள நமக்கு வேதாகம் உதவுகிறது.