பிரபல ஆங்கில பிரசங்கியார், சார்லஸ் ஸ்பர்ஜன் (1834-1892) தன்னுடைய வாழ்க்கையை “முழு மூச்சில்” வாழ்ந்துள்ளார். தன் 19ஆம் வயதில் போதகரானார். வெகுவிரைவிலேயே பெரிய நற்செய்திக் கூட்டத்தில் பிரசங்கித்தார். தன்னுடைய எல்லா பிரசங்கங்களையும் தானே தொகுத்து, அவைகளை 63 பதிப்புகளாய் வெளியிட்டார். அத்துடன் பல்வேறு விளக்கவுரைகள், ஜெபத்தைக் குறித்த புத்தகங்கள் மற்றும் பல படைப்புகளையும் கொடுத்துள்ளார். வாரத்திற்கு ஆறு புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருடைய ஒரு குறிப்பிட்ட பிரசங்கத்தில், “ஒன்றும் செய்யாமலிருப்பதே பாவத்திலும் பெரிய பாவம், அது பலரையும் பாதிக்கிறது… கொடூரமான செயலற்ற தன்மை! தேவனே எங்களை பாதுகாப்பீராக!” என்று எச்சரிக்கிறார்.

சார்லஸ் ஸ்பர்ஜன் புத்தி கூர்மையோடு வாழ்ந்திருக்கிறார். அப்படியென்றால், “அதிக ஜாக்கிரதையுள்ளவராய்” (1 பேதுரு 1:5) கிருபையில் வளர்ந்து தேவனுக்காய் வாழ்ந்திருக்கிறார் என்று அர்த்தம். நாம் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாயிருந்தால், “அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்… இச்சையடக்கத்தையும்… பொறுமையையும்… தேவபக்தியையும்” நம்மில் ஏற்படுத்தி கிறிஸ்துவைப் போல் வளரும் வாஞ்சையையும் அதற்கான வாய்ப்பையும் தேவன் ஏற்படுத்தித் தருகிறார். 

வாழ்க்கையின் நோக்கம், திறமைகள், ஆற்றல் அகியவற்றில் நாம் அனைவரும் ஒருவரிலிருந்து மற்றவர் வித்தியாசப்படுகிறோம் என்பதினால் ஸ்பர்ஜனைப் போல் நாம் இருக்கமுடியாது. ஆனால் இயேசு நமக்காய் செய்ததை புரிந்துகொள்ளும்போது ஜாக்கிரதையாகவும் உண்மையாகவும் வாழ நாம் தூண்டப்படுகிறோம். அவருக்காய் வாழவும் அவரையே சேவிக்கவும் தேவன் நமக்குக் கொடுத்த ஆதாரங்களினால் நாம் பெலப்படுத்தப்படுகிறோம். சிறியதோ, பெரியதோ, நம்முடைய முயற்சிகளை தேவன் தம்முடைய ஆவியானவராலே அதிகாரப்பூர்வமாய் அங்கீகரிக்கிறார்.