செவ்வாய் கிரகத்தில் “ஆப்பர்டியூனிட்டி” என்னும் விண்வெளி ரோவர் வாகனம் பதினான்கு ஆண்டுகளாக நாசாவின் விமான உந்துவிசை ஆய்வுக் கூடத்திற்கு செய்தியைத் தொடர்புகொண்டிருந்தது. 2004இல் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டபின், 28 மைல்கள் தூரத்திற்கு அது பயணம் செய்து, ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுத்து, பல காரியங்களை ஆய்வு மேற்கொண்டது. ஆனால் 2018இல் ஏற்பட்ட விண்வெளி புயலினால் அதின் சூரிய தகட்டில் தூசு படிந்ததால், அது அந்த வாகனத்தை செயலிழக்கப்பண்ணியது. அதினால் ஆப்பர்டியூனிட்டிக்கும் நாசா விஞ்ஞானிகளுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

உலகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நபரோடு நம்முடைய தொடர்பை, இந்த தூசு படிவங்களினால் தடுக்க முடியுமா? ஆனால் ஜெபம் என்று வரும்போது, தேவனிடத்தில் தொடர்பு ஏற்படுத்தும் பாதையில் சில காரியங்கள் இடையூறாக அமைகிறது. 

பாவத்தினால் தேவனோடுள்ள உறவைத் தடைசெய்ய முடியும் என்று வேதாகமம் சொல்லுகிறது. “என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” (சங்கீதம் 66:18). இயேசு சொல்லுகிறார், “நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்” (மாற்கு 11:25). தேவனுடனான நம்முடைய தொடர்பை, சந்தேகம் மற்றும் உறவு ரீதியான பிரச்சனைகள் தடை செய்யக்கூடும் (யாக்கோபு 1:5-7; 1 பேதுரு 3:7).  

ஆப்பர்டியூனிட்டியின் துண்டிக்கப்பட்ட தகவல் தொடர்பு நிரந்தரமானது. ஆனால் நம்முடைய ஜெப தகவல்தொடர்பு தடைபடக்கூடாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் தேவன் தடைசெய்யப்பட்ட நம்முடைய உறவை மீண்டும் அன்போடு புதுப்பிக்கிறார். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவரிடத்தில் திரும்பும்போது, உலகம் வியக்கும் ஆச்சரியமான தொடர்புக்கு உட்படுத்தப்படுகிறோம்: அதுவே நமக்கும் பரிசுத்த தேவனுக்கும் நேருக்கு நேரான உரையாடல்.