படைப்பவரும் காப்பவரும்
பெரிதாக்கிக் காட்டும் ஒரு லென்ஸையும், நுண்ணிய ஓர் இடுக்கியையும் கொண்டு வேலை செய்துகொண்டிருக்கும், சுவிஸ் கடிகாரம் செய்யும் பிலிப், அதிக கவனத்தோடு அந்த கடிகாரத்தின் பாகங்களை எப்படி பிரிப்பது, சுத்தப்படுத்துவது, மீண்டும் அந்த இயந்திரத்தின் நுண்ணிய பாகங்களை எப்படி பொருத்துவது என எனக்கு விளக்கிக் காண்பித்தார். அதிலுள்ள மிக நுணுக்கமான பகுதிகளுக்குள்ளே, கடிகாரத்திற்குத் தேவையான மிக முக்கியமான, ஒரு சிறிய சுருள்வில்லைக் (ஸ்பிரிங்) காண்பித்தார். அந்த முக்கிய சுருள்வில்தான் அங்குள்ள கியர் அமைப்பினை இயங்கச்செய்து சரியான நேரத்தைக் காட்ட உதவுகின்றது. எத்தனை சிறப்புமிக்க கடிகாரமாயிருந்தாலும் இந்த முக்கிய ஸ்பிரிங் இல்லாமல் இயங்க முடியாது என்றார்.
புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள எபிரெயர் புத்தகத்தில் அதனை எழுதியவர் இயேசுவின் மூலமாக தேவன் பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்தார் என்பதால், இயேசுவை மனதாரப் போற்றுகின்றார்.
ஒரு சிறப்புமிக்க கடிகாரத்தின் நுணுக்கங்களைப் போன்று, இந்த உலகின் ஒவ்வொரு நுணுக்கமும் இயேசுவால் படைக்கப்பட்டது (எபி. 1:2). சூரிய மண்டலம் முதல் நம்முடைய விரல் ரேகையில் தனித்துவம் வரை எல்லாம் அவராலேயே படைக்கப்பட்டது.
ஒரு கடிகாரத்தின் இயக்கத்திற்கு நுண்ணிய முதன்மை சுருள்வில் எப்படி முக்கியமானதோ அப்படியே எல்லாப் படைப்புகளும் இயங்கவும், செழித்தோங்கவும் காரணமான இயேசு படைப்பாளியையும் விட மேலாகத் திகழ்கின்றார். அவருடைய பிரசன்னம், 'தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்கிறவராய்" (வச. 3) காணப்படுகின்றார். மேலும் அவருடைய படைப்புகள் அனைத்தையும் அவற்றின் வியத்தகு இணைப்புகளோடு இணைந்து இயங்கச் செய்யவும் வல்லமையுள்ளதுமாயிருக்கிறது.
படைப்புகளின் அழகை அனுபவிக்கும் வாய்ப்பு உனக்கிருப்பதால், 'எல்லாம் அவருக்குள் நிலை நிற்கிறது" (கொலோ. 1:17) என்பதையும் நினைவில் கொள். இயேசுவே எல்லா படைப்புகளுக்கும், அவற்றின் பராமரிப்புக்கும் காரணர் என்பதை உணரும்போது நம் உள்ளத்தில் எழும் மகிழ்ச்சியோடு நாம் அவரைப் போற்றி புகழ்வோம். அவருடைய படைப்புகளின் தேவைகளையெல்லாம் அவரே தருகின்றார் என்பதையும் நினைத்துப் போற்றுவோம்.
தேசங்களின் மத்தியில் நீதிமான்கள்
இஸ்ரவேல் தேசத்தில் யாட் வாஷேம் என்ற இடத்திலுள்ள, ஓர் இனப்படுகொலை அழிவைக் குறித்த பழங்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட ஓர் அரங்கிற்குச் சென்றிருந்தோம். என்னுடைய கணவனும் நானும் தேசங்களின் மத்தியில் நீதிமான்களாகத் திகழ்ந்த மக்களை கவுரவிக்கும் அந்த இடத்தைச் சுற்றி வந்தோம். யூத மக்களின் பேரழிவின் போது, தங்கள் உயிரையும் பணயம் வைத்துச் சில யூதர்களைக் காப்பாற்றியவர்களின் நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்டபோது, நெதர்லாந்திலிருந்து வந்திருந்த ஒரு குழுவினரைச் சந்தித்தோம். அங்கு வந்திருந்த ஒரு பெண்மணி தன்னுயை முன்னோர்களின் பெயர்களை அங்கிருந்த ஒரு பெயர் பட்டியலில் தேடிக் கொண்டிருந்தாள். அவர்களுடைய குடும்பத்தைப் பற்றிய கதையை ஆர்வமிகுதியால் கேட்டோம்.
தடையை மீறி செயல்பட்ட மக்களின் வரிசையிலிருந்த அந்தப் பெண்ணின் தாத்தாவும், பாட்டியும் போதகர் பயட்டரும், ஏட்ரியானா மியூல்லரும் 1943-1945 ஆம் ஆண்டுகளில் இரண்டு வயது நிரம்பிய ஒரு யூத பையனை, எட்டு குழந்தைகளடங்கிய தங்கள் குடும்பமெனக் கூறித் கடத்தினர்.
அந்தக் கதையைக் கேட்டு அசைக்கப்பட்டவர்களாக நாங்கள், “அந்த சிறுபையன் பிழைத்தானா?" என வினவினோம். அந்தக் குழுவிலிருந்து ஒரு முதியவர் முன்னால் வந்து, “நான் தான் அந்தப் பையன்!" என அறிவித்தார்.
யூத ஜனங்களுக்குச் சாதகமாக அநேகர் தைரியமாகச் செயல்பட்டது எனக்கு எஸ்தர் ராஜாத்தியை நினைவுபடுத்தியது. ஏறத்தாழ கி.மு. 475 ஆம் அண்டில், சகல யூதரையும் கொன்று அழித்துப் போடும்படி அகாஸ்வேரு ராஜாவால் எழுதப்பட்ட கட்டளையை எஸ்தர் ராஜாத்தி அறிந்திருந்தும், தான் தன்னுடைய பூர்வீகத்தை வெளிப்படுத்தாமையால் தப்பித்துக் கொள்ளலாம் என எண்ணியிருக்கலாம். ஆனாலும் அவள் தன் உயிரையும் பணயம் வைத்து செயல்படும்படி தூண்டப்பட்டாள். அவளுடைய உறவினன் அவளிடம், “நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்" என்று சொல்லச் சொன்னான் (எஸ். 4:14). நாமும் ஒருவேளை இத்தகைய முடிவுகளை எடுக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்படாவிடினும், ஓர் அநீத செயலுக்கு எதிராகப் பேசும்படி சந்தர்ப்பம் நமக்களிக்கப்படலாம், அல்லது அதைக் கண்டும் அமைதியாகப் போய்விடலாம். ஆனால், பிரச்சனையிலிருக்கும் ஒருவருக்கு உதவுகின்றாயா? அல்லது திரும்பிப் போய் விடுகின்றாயா? செயல்படும்படி தேவன் நமக்கு தைரியத்தைத் தருவாராக.
குளிர்காலப் பனி
குளிர்காலத்தில் நான் அடிக்கடி காலையில் விழித்து இந்த பூமி அதிகாலைப் பனியினால் (ளுழெற) மூடப்பட்டு அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்கின்றதைக் கண்டு வியப்பதுண்டு. வசந்தகால இடியோடு கூடிய புயலின் ஓசை இரவிலும் அதன் செயலைத் தெரிவிப்பது போலில்லாமல், பனி அமைதியாக இறங்குகின்றது.
ஆட்ரே ஆசாத் எழுதியுள்ள “குளிர்கால பனி” என்ற பாடலில், இயேசு இப்புவிக்கு சுழல்காற்றின் வல்லமையோடு வந்திருக்கலாம். ஆனால், அவர், என் ஜன்னலுக்கு வெளியே இரவில் மென்மையாக இறங்கியிருக்கும் பனியைப்போல அமைதியாக வந்தார் எனப் பாடியுள்ளார்.
இயேசுவின் வருகை அநேக அமைதியான ஆச்சரியங்களைக் கொண்டுவந்தது. அவர் ஓர் அரண்மனையில் பிறப்பதற்குப் பதிலாக எதிர்பாராத ஓரிடத்தில், பெத்லகேமின் புறப்பகுதியில் தாழ்மையாக வந்துதித்தார். அவர் அங்கிருந்த ஒரே படுக்கையான தீவனத் தொட்டியில் உறங்கினார் (லூக். 2:7). ராஜமரியாதையோடும், அரசு மரியாதையோடும் கவனிக்கப்பட வேண்டியவர் தாழ்மையான மேய்ப்பர்களால் வரவேற்கப்பட்டார் (வச. 15-16). செல்வந்தராய் இருக்க வேண்டியவர், ஆனால், இயேசுவின் பெற்றோர் அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க தேவாலயத்திற்கு எடுத்து வந்த போது, எளிய இரண்டு பறவைகளையே பலியாக அவர்களால் கொடுக்க முடிந்தது (வச. 24).
நாம் நினைக்க முடியாத வகையில் இயேசு இவ்வுலகினுள் வந்தார் என்பது ஏசாயா தீர்க்கதரிசியினால் முன்பே உரைக்கப்பட்டது. இரட்சகராகிய அவர் வரும்போது, “ அவர் கூக்குரலிடவுமாட்டார்; தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்” (ஏசா. 42:2). அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும் இருக்கிற தேவன் (வச. 3). அவர் மென்மையாக வந்து நம்மை அவர்பக்கம் இழுக்கும்படியாகவும், தேவன் தரும் சமாதானத்தை நமக்குத் தரும்படியாகவும் வந்தார். நாம் எதிர்பார்த்திராத வகையில் புல்லணையில் வந்துதித்த நமது இரட்சகரை நம்புகிற யாவருக்கும் அவர் தரும் சமாதானம் காத்திருக்கின்றது.
மொசைக் கற்களின் அழகு
இஸ்ரவேல் நாட்டில் ‘என் கேரம்’ என்ற இடத்திலுள்ள தேவாலயத்தை பார்வையிடச் சென்றிருந்த போது அந்த ஆலயத்தின் வளாகத்தில் அமர்ந்திருந்து அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன். அங்கு அறுபத்தேழு மொசைக் கற்களில் லூக்கா 1:46-55 வரையுள்ள வார்த்தைகள் வௌ;வேறு மொழிகளில் எழுதப்பட்டிருந்த அழகினைக் கண்டு வியந்து நின்றேன். “மரியாளின் கீதம்” என்று அழைக்கப்படும் இந்த வார்த்தைகள், தேவதூதன் மரியாளிடம் அவள் மேசியாவின் தாயாகப் போகின்றாள் என அறிவித்தபோது, மரியாள் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தின வார்த்தைகளே இப்பாடல்.
ஓவ்வொரு சட்டத்திலுமுள்ள மரியாளின் வார்த்தைகள், “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது… வல்லமையுள்ளவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்” (வச. 46-49) என ஆரம்பிக்கின்றன. அந்த மொசைக் கற்களில் பதிக்கப்பட்டுள்ள வேதாகமப் பாடல் ஒரு ஸ்தோத்திரப் பாடல். தேவன் தனக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் உண்மையுள்ளவராகவேயிருக்கிறார் என்பதை நினைத்து மரியாள் தேவனைப் போற்றிப் பாடும் பாடல்.
தேவனுடைய கிருபையைப் பெற்ற மரியாள் நன்றியுணர்வோடு, தன் இரட்சகராகிய தேவனில் மகிழ்ந்து பாடுகின்றாள் (வச. 47) தேவனுடைய இரக்கம் அவருக்குப் பயந்தவர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக இருக்கிறது (வச. 50). கடந்த நாட்கள் முழுவதும் தேவன் இஸ்ரவேலரைப் பாதுகாத்து வந்திருக்கிறார், தம் ஜனங்களுக்காக அவர் செய்த வல்லமையுள்ள அவருடைய செயல்களுக்காகவும் அவரைப் போற்றுகின்றார் (வச. 51) தங்களுடைய அனுதின தேவைகளையெல்லாம் தேவன் தம் கரத்திலிருந்து தருகின்றார் என்று சொல்லி நன்றி செலுத்துகின்றார் (வச. 53).
தேவன் நமக்குச் செய்துள்ள நன்மைகளையும் பெரிய காரியங்களையும் நினைத்து அவருக்குத் துதி செலுத்தும் போது நமக்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதை மரியாள் நமக்குக் காண்பித்துள்ளாள். இந்த கிறிஸ்மஸ் நாட்களில் நாமும் தேவன் நமக்கு கடந்த ஆண்டு முழுவதும் பாராட்டியுள்ள நன்மைகளை நினைத்துப் பார்த்து அதிக அழகான ஒரு நன்றிப் பாடலை எழுதமுடியம்.
தேவன் இங்கே இருக்கிறார்
எங்கள் வீட்டில் “அழைக்கப்பட்டாரோ அழைக்கப்படவில்லையோ, தேவன் இங்கே இருக்கிறார்” என்ற வாசகப் பலகை உண்டு. “ஏற்றுக்கொள்கிறீர்களோ, ஏற்றுக்கொள்ளவில்லையோ தேவன் இங்கே இருக்கிறார்” என்பது அதன் புது வாசகமாக இருக்கலாம்.
எட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியில் (கி.மு. 755-715) வாழ்ந்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா இதை ஒத்த வார்த்தைகளை எபிரேய ஜனங்களுக்கு எழுதினார். அவர்கள் தேவனை மறந்துவிட்டதால் (ஓசியா 4;1), தேவனை “தொடர்ந்து” அறியும்படி அவர் இஸ்ரவேலர்களை ஊக்கப்படுத்தினார் (ஓசியா 6:3). தேவனின் பிரசன்னத்தை ஜனங்கள் மறந்ததால், அவர்கள் அவரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தனர் (6:12). அதன்பின் அவர்களுடைய சிந்தனைகளில் தேவனுக்கு இடமே இல்லாமல் போயிற்று (சங். 10:4).
நம்முடைய சந்தோஷத்திலும், நம்முடைய பாடுகளிலும் தேவன் நம் அருகே இருக்கிறார், நம்மில் கிரியை செய்கிறார் என்பதை “கர்த்தரை அறியுங்கள்” என்ற ஓசியாவின் எளிய ஆனால் ஆக்கபூர்வ வார்த்தைகள் நமக்கு நினைவுபடுத்துகின்றன.
தேவனை அங்கீகரிப்பது என்பது அலுவலகத்தில் பணி உயர்வு கிடைக்கும்போது தேவன் நமக்கு ஞானத்தைத் தந்து, நம் வேலையை குறித்த பண ஒதுக்கீட்டில், குறித்த நேரத்தில் முடிக்க உதவினார் என்று நினைப்பதாகும். நாம் விரும்பிய வீடு கிடைக்காதபோதும் தேவனை அங்கீகரிப்பது அந்த சூழ்நிலையை நமக்கு நன்மையானதாக மாற்றித் தருவார் என்று நம்புவதாகும்.
நாம் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காதபோதும், நம்முடைய ஏமாற்றத்திலும் தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அங்கீகரிப்பது, அவருடைய பிரசன்னத்தில் ஆறுதல் பெற உதவும். நாம் உணவை ரசித்து சாப்பிடும்போது, தேவனை அங்கீகரிப்பது, தேவன் நமக்கு சமைப்பதற்குத் தேவையான பொருள்களைக் கொடுத்ததோடு, சமைப்பதற்கு இடத்தையும் கொடுத்திருக்கிறார் என்று நினைவுகூர உதவும்.
தேவனை நாம் அங்கீகரிப்பது, நம் வாழ்க்கையில் சிறிய விஷயத்திலும், பெரிய விஷயத்திலும், வெற்றியிலும், துக்கத்திலும் தேவனின் பிரசன்னத்தை நினைவுகூருவதாகும்.
தொடுவதின் வல்லமை
இந்தியாவில் பணியாற்றிய இருபதாம் நூற்றாண்டின் முன்னோடி மிஷனரியான டாக்டர் பால் ப்ரான்ட், தொழுநோயாளிகள் இழிவாக நடத்தப்படுவதை கண்கூடாகப் பார்த்தார். ஒருமுறை, சிகிச்சைமூலம் சரி செய்யலாம் என்று உறுதி அளிக்கும் விதமாக ஒரு தொழுநோயாளியைத் தொட்டுப் பேசினார். அப்போது அந்த தொழுநோயாளி அழ ஆரம்பித்தார். “நீங்கள் அவனைத் தொட்டதால் அழுகிறார். ஏனென்றால் பல வருடங்களாக அவரை யாரும் தொடவில்லை. சந்தோஷத்தில் அழுகிறார்,” என்று டாக்டரின் உதவியாளர் அவருக்கு அந்த மனிதன் அழுவதற்கான காரணத்தை விளக்கினார்.
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பகாலத்தில் ஒரு குஷ்டரோகி அவரை அணுகினான். அந்த காலக்கட்டத்தில் தொற்றக்கூடிய தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் குஷ்டரோகம் என்று அழைக்கப்பட்டன. அவனுடைய வியாதியின் காரணமாக, பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டதுபோல அவன் ஊரைவிட்டு வெளியே குடியிருக்க வேண்டியிருந்தது. ஒருவேளை மற்றவர்கள் அருகில் அவன் வர நேர்ந்தால், மற்றவர்கள் அவனைத் தவிர்க்கும் விதமாக “தீட்டு, தீட்டு” என்று அவன் சத்தமிடவேண்டும் (லேவியராகமம் 13:45-46). இதனால் இப்படிப்பட்ட நோயாளிகள் மாதக்கணக்காக அல்லது வருடக்கணக்காக மனிதத் தொடர்பே இல்லாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது.
இயேசு மனதுருகி, கையை நீட்டி அந்த மனிதனைத் தொட்டார். ஒரே வார்த்தையால் சுகப்படுத்தக்கூடிய வல்லமையும், அதிகாரமும் இயேசுவுக்கு இருந்தது (மாற். 2:11-12). அவனது வியாதியின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு, தள்ளி வைக்கப்பட்ட மனிதனை இயேசு சந்தித்தபோது, இயேசு தொட்டதால் தான் தனியே இல்லை, ஏற்றுக்கொள்ளப்பட்டேன் என்ற உணர்வை அந்த மனிதன் பெற்றான்.
தேவன் நமக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும்போது, கண்ணியத்தையும், மதிப்பையும் தெரிவிக்கும் விதமாக நாமும் தொடுவதின்மூலம், நம் மனதுருக்கத்தை வெளிப்படுத்தலாம். சுகமளிக்கும் எளிய தொடுதல், கவலையில் இருப்பவர்களுக்கு நமது அக்கறையை வெளிப்படுத்தும்.
இயேசுவின் வாழ்க்கை சம்பவங்கள்
சிறுமியாக இருந்தபோது, எங்கள் ஊரின் சிறிய நூலகத்துக்குச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் வளர் இளம் பருவத்தினருக்கான புத்தகங்கள் இருந்த பகுதியைப் பார்த்தபோது, அதில் இருந்த ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்கமுடியும் என்று நினைத்தேன். என்னுடைய ஆர்வத்தில், நூலகத்தில் புதிய புத்தகங்கள் வாங்கிச் சேர்க்கும் வழக்கம் இருப்பதை மறந்துவிட்டேன். நான் அதிக முயற்சி செய்தாலும், மிக அதிகமான புத்தகங்கள் இருந்ததால் என்னால் எல்லாவற்றையும் படிக்க முடியவில்லை.
அதிகமான புத்தக அலமாரிகளில், புதிய புத்தகங்கள் சேர்க்கப்படுகின்றன. யோவான் அப்போஸ்தலர் இத்தனை புத்தகங்களைப் பார்த்து ஆச்சரியப்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அவர் எழுதிய யோவான்; 1, 2 & 3 யோவான்; மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் ஆகிய புத்தகங்கள் தோல் சுருள்களில் எழுதப்பட்டன.
இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியங்களை (1 யோவான் 1:1-4) அருகில் இருந்து பார்த்ததை கிறிஸ்தவர்களுக்குத் தெரிவிக்க, ஆவியானவரால் ஏவப்பட்டு, யோவான் அந்த புத்தகங்களை எழுதினார். ஆனால் இயேசுவின் ஊழியங்களின், அவர் போதனைகளின் ஒரு சிறு பகுதியே யோவானின் புத்தகங்களில் உள்ளன. இயேசு செய்த அனைத்தையும் எழுதினால் “எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று” (யோவான் 21:25) யோவான் கூறினார்.
யோவான் சொன்னது இன்றைக்கும் பொருந்தும். அநேக புத்தகங்கள் இயேசுவைப்பற்றி எழுதப்பட்டிருந்தாலும், இயேசுவின் அன்பையும், கிருபையையும் குறித்த ஒவ்வொரு சம்பவத்தையும் இந்த உலகத்தின் நூலகங்களில் அடக்கமுடியாது. மற்றவர்களோடு பகிர்வதற்கு நமது சொந்த அனுபவங்களும் உண்டு என்பதாலும், அவற்றை நாம் சதாகாலமும் பறைசாற்ற முடியும் என்பதாலும் நாம் சந்தோஷப்படலாம் (சங்கீதம் 89:1).
ஊக்குவிப்பவர்களின் ஆசீர்வாதம்
ராஜாவின் பேச்சு என்று அர்த்தம் கொள்ளும் த கிங்ஸ் ஸ்பீச் (The King’s Speech) என்ற 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம், தன் சகோதரன் அரியணையைத் துறந்ததால் எதிர்பாராத விதமாக மன்னராகும் இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் VI ஐப் பற்றியது. இரண்டாம் உலகப்போர் வரக்கூடும் என்ற சூழ்நிலையில், பிரபலமாகி வந்த வானொலியில் பேச, நன்கு பேசக்கூடிய தலைவர் வேண்டும் என்று அரசு அதிகாரிகள் விரும்பினார்கள். ஆனால் ஜார்ஜ் VI மன்னருக்கு திக்குவாய் ஒரு பெரிய தடையாக இருந்தது.
ஜார்ஜ் மன்னரின் மனைவி எலிசபெத் அந்தத் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்த விதம் என்னை அதிகம் கவர்ந்தது. ஜார்ஜ் மன்னர் தனது திக்குவாய் பிரச்சனையை சமாளிக்க முயற்சி செய்யும்போது, எலிசபெத் தொடர்ந்து அவரை ஊக்கப்படுத்துகிறார். மன்னரது பிரச்சனையைத் தாண்டி, போரின்போது நல்ல முறையில் அவர் ஆட்சி செய்ய எலிசபெத்தின் மாறாத அர்ப்பணிப்பு பெரிதும் உதவியது.
கடினமான சூழ்நிலைகளில் நிலையான ஆதரவு அளித்து ஊக்குவித்தவர்களைப்பற்றி வேதாகமம் எடுத்துக்கூறுகிறது. இஸ்ரவேலின் யுத்தங்களின்போது, மோசேக்கு ஆரோன் மற்றும் ஊர் ஆகிய இருவரின் ஆதரவு கிடைத்தது (யாத்திராகமம் 17:8-16). எலிசபெத் கர்ப்பந்தரித்திருந்த தன் உறவினர் மரியாளை ஊக்கப்படுத்தினாள் (லூக். 1:42-45).
பவுல் மனந்திரும்பிய பிறகு, அவருக்கு பர்னபாவின் ஆதரவு தேவைப்பட்டது. பர்னபா என்ற பெயருக்கு “ஆறுதலின் மகன்” என்று பொருள். சீஷர்கள் பவுலைக்கண்டு பயந்தபோது, தனக்கிருந்த நற்பெயர் கெடும் வாய்ப்பு இருந்தாலும், பவுலுக்காக உத்தரவாதம் அளித்தார் (அப்போஸ்தலர் 9:27). கிறிஸ்தவ சபையினர் பவுலை ஏற்றுக்கொள்ள பர்னபாவின் உத்தரவாதம் தேவைப்பட்டது. பின்னர் பர்னபா பவுலின் பயணத்திலும், பிரசங்கத்திலும் உற்ற துணையாக இருந்தார் (அப்போஸ்தலர் 14). ஆபத்துகள் சூழ்ந்திருந்தாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து சுவிசேஷத்தை அறிவித்தனர்.
கிறிஸ்தவ விசுவாசிகள் இன்றும் “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்ய” அழைக்கப்படுகிறார்கள். பிறரை, குறிப்பாக கஷ்டமான சூழ்நிலையில் இருப்பவர்களை, ஊக்குவிக்க விருப்பம் கொண்டவர்களாக நாம் இருப்போமாக.
வாழ்க்கைப் பயணத்திற்கு பெலன்
கிறிஸ்தவ வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு கதை உயர்ந்த ஸ்தலங்களில் பின்னங்கால்கள் (Hinds Feet on High Places)என்ற உருவகக்கதை, ஆபகூக் 3:19 ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கதை “அதிக-அச்சம்" (Much-Afraid)என்ற கதாபாத்திரம் “மேய்ப்பரோடு" (Shepherd)செல்லும் பயணத்தைப் பற்றியது.
“அதிக-அச்சம்" பயத்தின் மிகுதியால் “மேய்ப்பர்" தன்னை தூக்கிச் செல்லும்படி கேட்கிறாள்.
“நீயாக ஏறி வரட்டும் என்று உன்னை இங்கே விட்டுச் செல்லாமல், உயர்ந்த ஸ்தலங்கள் வரைக்கும் உன்னைத் தூக்கிச் செல்ல என்னால் முடியும். ஆனால், நான் அவ்வாறு செய்தால், உன் பின்னங்கால்கள் நன்றாக பலப்படாது. என் துணையாக நான் போகும் இடங்களுக்கு உன்னால் என்னோடு வர முடியாது" என்று மேய்ப்பர் அன்போடு சொல்கிறார்.
பழைய ஏற்பாடு ஆபகூக்குடைய கேள்விகளை (உண்மையைச் சொன்னால், என் கேள்விகளும்கூட) “அதிக அச்சம்" எதிரொலிக்கிறாள், “நான் ஏன் துன்பம் அனுபவிக்க வேண்டும்?" “என் பயணம் ஏன் கடினமாக இருக்க வேண்டும்?"
ஆபகூக் கி.மு. 7 ம் நூற்றாண்டின் இறுதியில், இஸ்ரவேலர் அடிமைகளாவதற்கு முன் யூதாவில் வசித்து வந்தார். இந்த தீர்க்கதரிசி வாழ்ந்த சமுதாயம், சமூக அநீதியை தட்டிக் கேட்காமல் இருந்தது. பாபிலோனியர் எப்போது வேண்டுமானாலும் படையெடுத்து வரலாம் என்ற பயத்திலேயே வாழ்ந்தார்கள் (ஆப. 1:2-11). ஆண்டவர் தலையிட்டு கஷ்டத்தை நீக்கும்படி ஆபகூக் ஆண்டவரிடத்தில் கேட்டார் (1:13). ஆண்டவர் தன்னுடைய வேளையில் நியாயம் செய்வதாகக் கூறினார் (2:3).
ஆபகூக் விசுவாசத்தில் கர்த்தரைநம்பினார். அந்தக் கஷ்டம் நீங்காவிட்டால் கூட கர்த்தர்தன்னுடைய பெலனாக இருப்பார் என்று இந்த தீர்க்கதரிசி நம்பினார்.
நம் கஷ்டத்தை பொறுத்துக்கொள்ள நம் பெலனாக இருந்து ஆண்டவர் உதவி செய்வார் என்பதில் நாமும் ஆறுதல் பெறலாம். கிறிஸ்துவுடனான நம் ஐக்கியத்தை வலுப்படுத்த நமது வாழ்க்கைப் பயணத்தின் கடினமான சவால்களை ஆண்டவர் உபயோகிப்பார்.