இந்தியாவில் பணியாற்றிய இருபதாம் நூற்றாண்டின் முன்னோடி மிஷனரியான டாக்டர் பால் ப்ரான்ட், தொழுநோயாளிகள் இழிவாக நடத்தப்படுவதை கண்கூடாகப் பார்த்தார். ஒருமுறை, சிகிச்சைமூலம் சரி செய்யலாம் என்று உறுதி அளிக்கும் விதமாக ஒரு தொழுநோயாளியைத் தொட்டுப் பேசினார். அப்போது அந்த தொழுநோயாளி அழ ஆரம்பித்தார். “நீங்கள் அவனைத் தொட்டதால் அழுகிறார். ஏனென்றால் பல வருடங்களாக அவரை யாரும் தொடவில்லை. சந்தோஷத்தில் அழுகிறார்,” என்று டாக்டரின் உதவியாளர் அவருக்கு அந்த மனிதன் அழுவதற்கான காரணத்தை விளக்கினார்.

இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பகாலத்தில் ஒரு குஷ்டரோகி அவரை அணுகினான். அந்த காலக்கட்டத்தில் தொற்றக்கூடிய தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் குஷ்டரோகம் என்று அழைக்கப்பட்டன. அவனுடைய வியாதியின் காரணமாக, பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டதுபோல அவன் ஊரைவிட்டு வெளியே குடியிருக்க வேண்டியிருந்தது. ஒருவேளை மற்றவர்கள் அருகில் அவன் வர நேர்ந்தால், மற்றவர்கள் அவனைத் தவிர்க்கும் விதமாக “தீட்டு, தீட்டு” என்று அவன் சத்தமிடவேண்டும் (லேவியராகமம் 13:45-46). இதனால் இப்படிப்பட்ட நோயாளிகள் மாதக்கணக்காக அல்லது வருடக்கணக்காக மனிதத் தொடர்பே இல்லாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது.

இயேசு மனதுருகி, கையை நீட்டி அந்த மனிதனைத் தொட்டார். ஒரே வார்த்தையால் சுகப்படுத்தக்கூடிய வல்லமையும், அதிகாரமும் இயேசுவுக்கு இருந்தது (மாற். 2:11-12). அவனது வியாதியின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு, தள்ளி வைக்கப்பட்ட மனிதனை இயேசு சந்தித்தபோது, இயேசு தொட்டதால் தான் தனியே இல்லை, ஏற்றுக்கொள்ளப்பட்டேன் என்ற உணர்வை அந்த மனிதன் பெற்றான்.

தேவன் நமக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும்போது, கண்ணியத்தையும், மதிப்பையும் தெரிவிக்கும் விதமாக நாமும் தொடுவதின்மூலம், நம் மனதுருக்கத்தை வெளிப்படுத்தலாம். சுகமளிக்கும் எளிய தொடுதல், கவலையில் இருப்பவர்களுக்கு நமது அக்கறையை வெளிப்படுத்தும்.