எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லிண்டா வாஷிங்டன்கட்டுரைகள்

என் தந்தையின் ஆலோசனை

ஒரு பத்திரிக்கை ஆசிரியர் வேலையிலிருந்து நான் நிறுத்தப்பட்ட பின்பு, தேவனை நோக்கி ஒரு புதிய வேலை கிடைக்க உதவுமாறு ஜெபித்தேன். வாரங்கள் சென்றன. ஒன்றும் கிடைக்கவில்லை. நான் வலைதளங்களில் தேடுவதிலும், விண்ணப்பப்படிவங்களை நிரப்புவதிலும் சலிப்படைந்து, “எனக்கொரு வேலைமிக முக்கியமானது என்பது உமக்குத் தெரியாதா?” என தேவனைக் கேட்டேன். என் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்பதால் தேவனுக்கு நேராக நீட்டப்பட்ட என்கரங்களை மடக்கி கொண்டேன்.

நான் என்னுடைய தந்தையோடு பேசிக்கொள்ளும் போதெல்லாம், அவர் அடிக்கடி தேவனுடைய வாக்குத்தத்தங்களின் மீது நம்பிக்கையோடிருக்கச் சொல்வார். என்னுடைய வேலையைக் குறித்து அவர், “தேவன் என்ன சொல்கின்றாரோ அதன் மீது நம்பிக்கையோடிருக்கும்படி நான் உன்னிடம் எதிர்பார்க்கின்றேன்” என்றார்.

என்னுடைய தந்தையின் ஆலோசனை எனக்கு நீதிமொழிகள் 3ஆம் அதிகாரத்தை நினைவுபடுத்தியது. அது ஒரு தந்தை தன் அன்பு மகனுக்கு கொடுக்கும் ஞானமுள்ள ஆலோசனைகள். இந்தப் பகுதி என்னுடைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமாயிருக்கின்றது. “உன் சுய புத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைக் செவ்வைப்படுத்துவார்” (நீதி. 3:5-6) உன்பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் என்பது தேவன் நாம் வளரும்படி நம்மை அவருடைய சித்தத்திற்கு நேராக வழிநடத்துவார் என்பதும், அவருடைய முழுமையான இலக்கு எதுவெனின் நான் அவரைப் போல மாற வேண்டும் என்பதுவுமே.

அப்படியானால் அவர் தேர்ந்தெடுக்கும் பாதைகள் வெகு இலகுவானவை என்பதல்ல. ஆனால், அவருடைய வழிநடத்துதலும், அவருடைய நேரமும் எனக்கு முற்றிலும் நன்மையாகவே இருக்கும் என நான் அவரையே நம்பியிருக்கத் தேர்ந்துகொண்டேன்.

நீயும், தேவன் உனக்கு பதிலளிக்க வேண்டுமென காத்திருக்கின்றாயா? தேவனையே நம்பி அவர் உன்னை வழி நடத்துவார் என்ற உறுதியோடு அவரோடு நெருங்கி செல்ல தேர்ந்து கொள்.

ஒரு புதிய சமுதாயம்

என்னுடைய சிநேகிதி கேரியின் ஐந்து வயது மகள் மைஜா. ஒரு புதிய முறையில் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அவளுக்கு வெவ்வேறு விதமான பொம்மைகளை ஒன்றாக வைத்து, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி விளையாடுவது மிகவும் விருப்பமான ஒன்று. அவளுடைய கற்பனை உலகத்தில் எல்லாம் ஒன்றுக்கொன்று சொந்தமானவை. அவர்களே அவளுடைய ஜனங்கள். அவர்கள் யாவரும் வெவ்வேறு வடிவம், நிறம் உருவத்திலிருந்தாலும் ஒன்றாயிருக்கும்போது தான் மகிழ்ச்சியாயிருப்பர் என நம்பினாள்.

அவளுடைய படைப்பாற்றல், தேவன் சபையில் விரும்பும் ஒன்றினை நினைவுபடுத்துகின்றது. பெந்தெகொஸ்தே என்ற நாளில் ‘‘வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவ பக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம் பண்ணினார்கள்” (அப். 2:5) என லூக்கா சொல்கின்றார். இந்த ஜனங்கள் வெவ்வேறு கலாச்சாரம், பாஷைக்காரராயிருந்த போதிலும், பரிசுத்த ஆவியானவர் வந்து அவர்களை ஒரு புதிய சமுதாயமாக்கினார். அன்றிலிருந்து சபை அவர்களை ஒரே சரீரமாக, இயேசுவின் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் இணைக்கின்றது.

இயேசு இவ்வுலகில் இருந்தபோது ஒன்றாக இணைந்த ஒரு கூட்ட மனிதர்களே, அவருடைய சீடர்களே, இந்தச் சமுதாயத்தின் தலைவர்கள். இயேசு அவர்களை இணைக்காதிருந்தால், அவர்கள் ஒன்றாக இணைந்திருக்கவே முடியாது. இப்பொழுது இன்னும் அதிகமானோர், கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் (2:41) கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக இணைந்தனர். ஒரு காலத்தில் பிரிந்திருந்த இந்த குழுவினர் இப்பொழுது பரிசுத்த ஆவியானவரால் இணைக்கப்பட்டனர். அவர்கள் ‘‘சகலத்தையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள்” (வச. 44). அவர்கள் தங்களுக்குரிய யாவற்றையும் பிறரோடு
பகிர்ந்துகொள்ளத் தயாராயிருந்தனர்.

பரிசுத்த ஆவியானவர் மக்கள் பிரிவுகளுக்கிடையே பாலமாக அமைந்து அவர்களை இணைக்கின்றார். நாம் எப்பொழுதும் மற்றவர்களோட இணைந்து எளிதாக அவர்களைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் கிறிஸ்துவின் விசுவாசிகளாக நாம் இணைந்து கொள்கின்றோம்.

ஒருவர் பாடுபட்டால், எல்லோரும் பாடுபடுவார்கள்

உடன்பணியாளர் ஒருவர் தன் சரீரத்தில் பயங்கர வலியினால் கஷ்டப்படுகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், அலுவலகத்தில் உள்ள அனைவரும் கலங்கினர். மருத்துவமனைக்கு சென்று ஒருநாள் ஓய்வெடுத்து வேலைக்கு திரும்பினதும், அவர் தன் வலிக்கான காரணம், சீறுநீரகக் கல் என்றார். அந்த கல்லை ஞாபகார்த்தமாய் மருத்துவரிடம் பெற்றவர் என்னிடமும் காட்டினார். அதைக் கண்ட நான் அவருக்காக பரிதபித்தேன், அநேக ஆண்டுகளுக்கு முன் பித்தப்பை கல்லினால் நான் பட்ட கஷ்டம் என் நினைவுக்கு வந்தது. உண்மையிலேயே கொடுமையான வலி அது.

இவ்வளவு சிறிய ஒரு பொருள் சரீரமுழுவதிலும் ஒரு மோசமான வேதனையை கொடுக்கமுடியும் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாய் இருக்கிறதல்லவா? ஆனாலும், ஒருவிதத்தில் 1 கொரிந்தியர் 12:26-ல் அப்போஸ்தலனாகிய பவுல் இதனையே குறிப்பிடுகிறார்: “ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்...”. பன்னிரெண்டாம் அதிகாரம் முழுவதும் பவுல் சரீரத்தை உருவகப்படுத்தி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களின் நிலையை விளக்குகிறார். “தேவனே சரீரத்தின் அவயவங்களை ஒன்றோடு ஒன்று இணைத்து அமைத்துள்ளார்” என்று சொல்லுகையில் அவர் கிறிஸ்துவின் சரீரத்தை குறிப்பிடுகிறார் – அனைத்து கிறிஸ்தவர்கள். நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான வரங்களும் பொறுப்புகளும் உண்டு. ஆனாலும், நாமெல்லாரும் ஒரே சரீரத்தைச் சேர்ந்த அவயங்களாக காணப்படுவதால், ஒருவர் பாடுபடும்போது, எல்லோரும் பாடுபடுகிறோம். நம்முடைய கிறிஸ்தவ சகோதரன் அல்லது சகோதரி உபத்திரவம், துக்கம் மற்றும் போராட்டங்களை சந்திக்கும்போது, நாமும் அந்த வேதனையை அனுபவிப்பதால் நாமும் பாடுபடுகிறோம்.

என் சகபணியாளரின் வலி தன் சரீரம் சுகமடைவதற்கு தேவையான உதவியை பெற அவரைத் துரத்திற்று. கிறிஸ்துவின் சரீரத்திலும், ஒருவருடைய வலி நம்முடைய மனதை உருக்கி பாதிக்கப்பட்டவருக்கு எதையாவது செய்யவேண்டும் என்கின்ற மனதுருக்கத்தை நமக்குள் மூட்டிவிடுகிறது. நாம் ஜெபிக்கலாம், உற்சாகமூட்டக்கூடிய வசனத்தை சொல்லலாம் அல்லது குணப்படுத்தும் வழிமுறையில் உதவக்கூடிய எதையாகிலும் செய்யலாம். அப்படித்தான் சரீரத்தின் அவயவங்கள் ஒன்றோடொன்று இணைந்து செயல்படும்.

கன்மலைக்கு என்னை வழி நடத்தும்

ஓர் ஈரப்பதமூட்டியை வாங்குவதற்கு கடைக்குச் சென்ற போது, ஒரு மூதாட்டி நடைபகுதியில் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்ததைக் கவனித்தேன். ஒரு வேளை அவளும் ஈரப்பதமூட்டியைத்தான் வாங்க வந்திருப்பாளோ என வியந்தேன். எனவே நான் நகர்ந்து அவள் அருகே வருவதற்கு இடங்கொடுத்தேன். சற்று நேரத்தில், நாங்கள் எங்கள் பகுதியில் பரவி வருகின்ற வைரஸ் காய்ச்சலைப் பற்றி பேசிக் கொண்டோம். அது அவளுக்குத் தொடர்ந்து இருமலையும், தலைவலியையும் தந்து கொண்டிருப்பதாகக் கூறினாள்.

சில நிமிடங்கள் கழித்து அவள் ஒரு கசப்பான செய்திக்குள் சென்றாள். அந்த வைரஸின் தோற்றம் பற்றிய கொள்கைகளை விளக்க ஆரம்பித்தாள். நான் என்ன செய்வதென்று தெரியாமல் கவனித்தேன். சீக்கிரத்தில் அவள் அந்த கடையை விட்டு கோபத்துடனும், விரக்தியுடனும் வெளியேறினாள். அவளுடைய விரக்தியை வெளிக்காட்டியும், அவளுடைய அந்த வேதனையை எடுத்துப் போட என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தாவீது இஸ்ரவேலின் இரண்டாவது அரசன். அவன் தன்னுடைய விரக்தியையும் கோபத்தையும் தேவனிடம் தெரிவிக்கும்படி சங்கீதங்களை எழுதினான். ஆனால் தேவன் அவனுடைய வேதனையை கவனிப்பதோடு மட்டுமல்ல, அவனுடைய வலியையும் போக்க அவரால் ஏதாவது செய்ய முடியும் என்பது தாவீதுக்குத் தெரியும். சங்கீதம் 61ல் அவர் எழுதுகிறார். என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்திரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்” (வச. 2). தேவனே அவனுடைய அடைக்கலம் (வ.3) தாவீது ஓடி வந்தடையத்தக்க கன்மலை, தேவன்.

நாம் வேதனையில் இருக்கும்போது, அல்லது வேதனையில் இருக்கும் ஒருவரைச் சந்திக்கும் போது, தாவீதுடைய அனுபவம் நாம் பின்பற்றக் கூடிய ஒரு வழியைக் காட்டுகிறது. நாம் ‘‘உயரமான கன்மலையை” நோக்குவோம். அல்லது யாரையாகிலும் அக்கன்மலையிடம் வழி நடத்துவோம். நான் தேவனைப் பற்றி அந்த மூதாட்டியிடம் சொல்லியிருக்க வேண்டுமென நினைத்தேன். தேவன் நம் வேதனை அத்தனையும் எடுத்து விடுபவரல்ல. மாறாக, நாம் அவர் தரும் சமாதானத்தில் அமர்ந்திருந்து, நம் கூப்பிடுதலை அவர் கேட்கிறார் என்ற உறுதியைப் பெற்றுக் கொள்வோம்.

பிரச்சனைகளினூடாய் துதித்தல்

 ‘‘இது புற்று நோய்’’ இந்த வாத்தைகளை என் தாயார் என்னிடம் கூறியபோது, நான் என்னைத் திடப்படுத்திக் கொள்ள நினைத்தேன். ஆனால் என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வார்த்தைகளை நாம் ஒருமுறை கூட கேட்க விரும்பமாட்டோம். ஆனால் என் தாயாருக்கு இது மூன்றாவது முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேமோகிராம், பையாப்ஸி எடுப்பதன் மூலம் என் தாயார் தனக்கு புயத்தின் கீழே கேடு விளைவிக்கும் கட்டி உருவாகியிருக்கிறதென தெரிந்து கொண்டார்.

என் தாயாருக்கு கெட்ட செய்தியாக வந்த போதிலும் அவர்கள் என்னைத் தேற்றும்படியாகிவிட்டது. அவருடைய செயல்பாடு என் கண்களைத் திறந்தது.  ‘‘தேவன் எனக்கு நல்லவராகவே இருக்கிறார். அவர் எப்பொழுதும் உண்மையுள்ளவர்’’ எனக் கூறினார். அவர்கள் கடினமான அறுவை சிகிச்சை, கதிர் வீச்சு சிகிச்சை, என சந்தித்தபோதும் தேவ பிரசன்னத்தையும் அவரின் உண்மையையும் உறுதியாகப் பெற்றுக் கொண்டார்.

யோபுவைப் போன்று, தன் பிள்ளைகள், செல்வம், சுகம் யாவற்றையும் இழந்த செய்தியைக் கேட்ட போது (யோபு 1:20) அவர் செய்தது,  ‘‘அவன் தரையிலே விழுந்து பணிந்து கொண்டான்.’’  ‘‘தேவனை தூஷித்து ஜீவனை விடும்’’; என்று அவன் மனைவி கூறிய போது  ‘‘தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெற வேண்டாமோ?’’ (யோபு 2:10) என்கின்றான். எத்தனை உறுதியான தீர்மானம். பின்பு யோபு குறை கூறின போதும், பின்னர் தேவன் மாறாதவர் என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறான். தேவன் தன்னோடு இருக்கிறார். அவர் தன்னை கவனிக்கிறார் என யோபு நம்பினான்.

துன்பம் வரும்போது துதித்தல் என்பது அநேகருக்கு வருவதில்லை. சில வேளைகளில், சில சூழ்நிலைகளில் வேதனைகள் நம்மை மேற்கொள்ளும் போது நாம் கோபத்தாலும் பயத்தாலும் இழுக்கப்படுகிறோம். ஆனால் என் தாயாரின் செயலை கவனிக்கும் போது தேவன் இன்னமும் நல்லவராகவே இருக்கிறார். அவர் கடின நேரங்களில் நமக்கு உதவுகிறார் என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.

கோபமுள்ள தேவனா?

கல்லூரி படிப்பில் நான் கிரேக்க, ரோம புராணங்களைக் கற்கும்போது, அந்தக் கதைகளில் வரும் தெய்வங்களெல்லாம் மோசமான மனநிலையோடு எளிதில் கோபப்படுபவர்களாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அந்த கோபத்தைச் சந்திக்கின்ற மக்களின் வாழ்வும் அழிக்கப்பட்டது. சில வேளைகளில் ஒரு கணப்பொழுதில் இது நடைபெற்றது.

இப்படிப்பட்ட தெய்வங்களை எப்படி ஒருவரால் நம்ப முடிகிறது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அப்படியானால் உண்மையான தெய்வத்தைக் குறித்த எனது கருத்து இவற்றைவிட முற்றிலும் வேறுபட்டதா? என்று எனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டேன். நான் எப்பொழுதெல்லாம் அவரைச் சந்தேகிக்கிறேனோ அப்பொழுதெல்லாம் நானும் அவரை எளிதில் கோபப்படுகிறவராகப் பார்க்கவில்லையா? வருத்தத்தோடு ஆமோதித்தேன்.

எனவேதான் மோசே தேவனிடம், “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” (யாத். 33:18) எனக் கேட்டதை நான் பாராட்டுகிறேன். தனக்கு எதிராக அடிக்கடி முறுமுறுக்கின்ற, அதிக எண்ணிக்கையிலுள்ள ஒரு மக்கள் கூட்டத்தை வழிநடத்தும்படி தெரிந்து கொண்ட மோசே, இந்த பெரிய வேலையைச் செய்ய தேவன் தன்னோடிருந்து உதவுவாரா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினான். எனவே தேவன் மோசேயின் விண்ணப்பத்தை அங்கிகரித்து அவருடைய மகிமையைக் காண்பித்தார். தேவன் மோசேக்கு தன்னுடைய பெயரையும், குணாதிசயங்களையும் தெரிவித்தார். “கர்த்தர், இரக்கமும், கிருபையும் நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” (யாத். 34:6).

இந்த வார்த்தைகள், தேவன் உடனடியாகக் செயல்பட்டு கோபத்தில் அடிக்கிறவர் அல்ல என்பதைக் காட்டுகின்றன. நான் எனது கோபத்தில் பொறுமையின்றி அவர்மீது சாடுகின்ற வேளைகளில், இந்தவார்த்தைகள் நமக்கு உறுதியளிக்கின்றன. தேவன் என்னை அவரைப் போல மாற்றுவதற்கு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

நாம் தேவனையும், அவருடைய மகிமையையும் அவர் நம்மிடம் காட்டும் பொறுமையிலும், ஒரு நண்பனின் ஊக்கமளிக்கும் வார்த்தையிலும், அழகிய சூரிய மறைவிலும் எல்லாவற்றிற்கும் மேலாக பரிசுத்தாவியானவர் நமக்குள்ளே பேசுகின்ற மெல்லிய குரலிலும் காணலாம்.

தேவனுடைய உதவியுடன்

எனக்கு வயதாகிவிட்டதினால், முக்கியமாக குளிர்காலங்களில், மூட்டுகளில் வலி என்னைத் தாக்குகிறது. சில நாட்களில் என்னை வெற்றிவீரனாக நினைக்க முடியவில்லை; மூத்தக் குடிமகனாவதின் சவால்களால் தோற்றுப்போனவனாகவே உணருகிறேன்.

அதனால் தான் வாக்குப்பண்ணப்பட்ட தேசமாகிய கானானை வேவுபார்க்க மோசேயினால் அனுப்பப்பட்ட வயதான காலேபு என் அபிமான வீரன். வேவு பார்க்க அனுப்பப்பட்ட பன்னிரண்டு பேரில், பத்துபேர் துர்ச்செய்தியைக் கொண்டுவந்த போதும், காலேபும், யோசுவாவும் மட்டுமே கர்த்தரால் கானானுக்குள் பிரவேசிக்கும் கிருபை பெற்றனர். தேசத்தில் காலேப் தன் சுதந்தரத்தைப் பெறப்போகும் நேரம் வந்ததை யோசுவா 14ல் வாசிக்கிறோம். இன்னும் துரத்தப்பட வேண்டிய எதிரிகள் இருந்தனர். இளையதலைமுறைக்கு இப்பொறுப்பைக் கொடுத்துவிட்டு ஓய்வுபெற மனதில்லாத காலேப், “அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீர். கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்” (யோசு. 14:12).

“கர்த்தர் என்னேடிருப்பாரானால்” என்ற மனத்திடம்தான் காலேபை யுத்ததிற்கு ஆயத்த நிலையில் வைத்திருந்தது. அவன் தான் வயதானதை எண்ணாமலும், தன் பலத்தை நம்பாமலும், கர்த்தருடைய வல்லமையையே சார்ந்திருந்தான். என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய தேவன் அவனுக்கு உதவுவார் என்று எண்ணினான்.

நம்மில் அநேகர், ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியபின் பெரிய சாதனை எதையும் சாதிக்க விரும்புவதில்லை. நாம் எவ்வளவு வயது சென்றவர்களாயிருந்தாலும், தேவனுக்கென்று பெரிய காரியங்களைச் செய்ய முடியும். காலேபுக்கு வந்த பெரிய வாய்ப்பை அவன் பற்றிக்கொண்டது போல, நமக்கும் அது போன்ற வாய்ப்பு வருமானால், நாம் அதைத் தவிர்க்கக் கூடாது! கர்த்தரின் உதவியுடன் நாம் வெற்றி பெற முடியும்.

ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்

நான் தேவனைத் தவறாமல் ஆராதிக்க ஒரு ஆலயத்தைத் தேடிக்கொண்டிருந்தபொழுது என் சிநேகிதி தன் ஆலய ஆராதனைக்கு வருமாறு அழைத்தாள். ஆராதனை நடத்தினவர்கள், எனக்குப் பிரியமான ஓர் குறிப்பிட்ட பாடலொன்றைப்பாடினதால், நான்  என் கல்லூரி நாட்களில் பாடல் குழுவை நடத்துபவர் “இதை ஓர் ஆராய்ச்சியாக எடுத்துக்கொள்” என்று கூறிய ஆலோசனையை மனதில்கொண்டு, மிகவும் உற்சாகத்துடன் உரத்த சத்தத்துடன் தேவனை ஆராதித்துத் பாடினேன்.

அந்தப் பாட்டு முடிந்தவுடன், என் சிநேகிதியின் கணவர் என்னைப் பார்த்து “நீ நல்ல உரத்த சத்தமாய் பாடினாய்” என்றார். அவர் கூறியது புகழ்ச்சியாயல்ல, ஏளனமாகச் சொன்னார். அதன்பின் நான் என் சத்தத்தை குறைத்து என்னைச் சுற்றியுள்ளவர்களைவிட மெல்லிய குரலில், என் பாடலை விமரிசிப்பார்களோ என்ற பயத்துடன் பாடினேன்.

ஒரு ஞாயிறன்று, ஆலயத்தில் எனக்கடுத்திருந்த ஒரு பெண் பாடக்கேட்டேன். அவள் தன்னையே அறியாமல் மிகவும் உற்சாகமாய் தேவனைத் துதித்துப்பாடினாள். அது, தாவீது தன் வாழ்க்கையில் உற்சாகமாய்த் தன் உள்ளத்திலிருந்து பாடி ஆராதித்ததை நினைவு படுத்தியது. சங்கீதம் 98ல் பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள் என்றான் (வச. 4).

சங்கீதம் 98:1,  நாம் ஏன் தேவனை ஆராதிக்க வேண்டும் என்று கூறுகிறது. அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறபடியால், ஆனந்தமாய் ஆர்ப்பரிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஜாதிகளுக்கு அவருடைய உண்மையையும் நீதியையும், அவருடய இரக்கத்தையும், இரட்சிப்புமாகிய அதிசயங்களை இச்சங்கீதம் முழுவதிலும் தாவீது நினைவு கூருகிறான். தேவன் யாறென்பதைக்குறித்தும், அவர் செய்ததைக்குறித்தும் தியானித்தால், நம் உள்ளம் துதியினால் பொங்கிவழியும்.

உங்களுடைய வாழ்க்கையில் அவர் செய்த “மாபெரும் அற்புதங்களென்ன? ” நன்றி பலி செலுத்தும் நேரமே அவருடைய அதிசயமான கிரியைகளை நினைவுகூர ஏற்ற வேளை. ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!

பிரிந்தோம் ஆனால் கைவிடப்படவில்லை

மாசாசூசெட்டிலுள்ள பாஸ்டன் பல்கலை கழகத்தில் முதுகலைப்பட்டப்படிப்பிற்காக என் சகோதரியின் மகள் புறப்பட்டாள். அவளுக்கு பிரியாவிடை கொடுக்கும்பொழுது என் தொண்டை அடைத்துக்கொண்டது. இரண்டரை மணி நேரப் பிரயாண தூரத்திலுள்ள ஒரு கல்லூரியில் தனது நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருந்தாள். எங்கள் மாநிலத்திற்கு வெளியே செல்லாததினாலும், அடிக்கடி சந்திக்க வாய்ப்பிருந்ததினாலும் பிரிவு அவ்வளவு துக்கமாயில்லை. ஆனால் இப்பொழுதோ 1280 கிமீ அப்பால் செல்வதால் அடிக்கடி சந்திக்க வாய்ப்பில்லை. தேவன் அவளைப் பாதுகாத்துக்கொள்வார். என்றுதான் நம்ப வேண்டும்.

எபேசு சபை மூப்பர்களிடமிருந்து விடைபெறும்போது, பகுலுக்கும் இதே துக்க உணர்வுதான் இருந்திருக்கும். மூன்று வருடமாய் இந்த சபையினருக்குப்போதித்து சபையைக் கட்டியதால், எபேசு சபையினரும் மூப்பர்களும் பவுலின் குடும்பத்தினராகிவிட்டனர். பவுல் எருசசேமுக்குப் போவதால் இனி அவர்களைக் காணமாட்டான்.

பவுல் இனி அவர்களுக்குப் போதகராயிருக்கப்போவதில்லை என்றாலும் எபேசியர் கைவிடப்பட்டதாக நினைக்க வேண்டாமென்றும், தேவன் தமது கிருபையுள்ள வசனத்தால் (அப். 20:32) அவர்களைப் போதித்து சபையை நடத்தப் பயிற்றுவிப்பார் என்று பவுல் அவர்களுக்கு ஆலோசனை கூறினான். பவுல் கடந்து போய்விட்டான். ஆனால், தேவனோ என்றென்றும் அவர்களோடிருப்பார்.

பறவைகளைப்போல பிள்ளைகள் வீட்டைவிட்டு சென்றாலும், பழகின குடும்பங்களோ நண்பர்களோ பிரிந்து செல்லும் பொழுது வருத்தமாகத்தானிருக்கும். அவர்கள் நம்மைவிட்டு புது வாழ்வமைக்க சென்றுவிட்டனர். நாம் அவர்கள் கையைக் குலுக்கி விடும்பொழுது, தேவன் அவர்களைத் தமது கைகளில் பிடித்துக் கொண்டார் என்று நம்புவோம். அவர் அவர்கள் தேவைகளைச் சந்தித்து அவர்களது வாழ்வை வடிவமைப்பார். இதை நாம் ஒருபோதும் செய்ய முடியாது.