மிக மிக சிறந்தது.
எனது தாயாரின் பிறந்த நாளுக்கு மறுநாள் எனது பிறந்த நாளாகும். நான் வாலிப வயதிலிருந்த பொழுது எனது பொருளாதார நிலைமைக்கு ஏற்ப எனது தாயாருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய என்ன பரிசைக் கொடுக்கலாம் என்று அதிகமாக யோசித்தேன். எனது கையிலிருந்த பணத்தைப் போட்டு எனது தாயாருக்கு பரிசு ஒன்று வாங்கி அவர்களுக்கு கொடுக்கும் பொழுது, எனது தாயார் அதை மிகவும் நன்றியுடனும், பாராட்டுடனும் ஏற்றுக் கொள்வார்கள். மறுநாள் வரும் எனது பிறந்த நாளுக்கு எனது தாயார் ஒரு வெகுமதியை எனக்கு பரிசாக அளிப்பார்கள் அவர்களது பரிசு நான் அவர்களுக்கு அறித்த பரிசை விட நிச்சயமாக மிகச் சிறந்ததாக இருக்கும். நான் அவர்களுக்கு அளித்த பரிசின் மதிப்பை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படிச் செய்யவில்லை. ஆனால் என்னிடமுள்ள பணத்தைவிட அவர்கள் அதிகமாக பணம் வைத்திருந்த நிலைமைக்கு தகுந்தபடி தாராளமாக கொடுப்பார்கள்.
எனது தாயாருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற எனது விருப்பம், தேவனுக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டும் என்று தாவீதின் விருப்பத்தை எனக்கு நினைப்பூட்டியது. அவன் வாழ்ந்து வந்த ஆடம்பரமான அரண்மனைக்கும், தேவன் அவரை வெளிப்படுத்தும் எளிமையான கூடாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு அவனை அதிகம் பாதித்தது. ஆகவே தேவனுக்கு ஓர் ஆலயம் கட்ட அதிகமாக விரும்பினான். தாவீதின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, மிகச் சிறந்த ஒரு பரிசை தேவன் தாவீதிற்கு அருளினார். தாவீதின் குமாரர்களின் ஒருவனாகிய சாலமோன் அவருக்கு ஆலயத்தை கட்டுவான் என்று கூறினதோடு, தேவன் தாவீதிற்கு ஒரு வீட்டை கட்டப்போவதாகவும், ஒரு இராஜ்ஜியத்தை அருளப்போவதாகவும் வாக்குப் பண்ணினார் (1 நாளா. 17:11). அந்த வாக்குத்தத்தம் சாலமோனில் ஆரம்பித்து இறுதியில் என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய (வச. 12) இராஜ்ஜியத்தையுடைய இயேசுவில் நிறைவேறியுள்ளது. தாவீது அழிந்து போகக்கூடிய அவனது ஆஸ்தியிலிருந்து தேவனுக்கு கொடுக்க விரும்பினான். ஆனால், தேவனோ என்றென்றும் அழியாமல் நிலைதிருக்கக்கூடிய ஒன்றை தாவீதிற்கு வாக்குப் பண்ணினார்.
தாவீதைப் போல நாமும் நமது நன்றி உணர்வினாலும், அன்பினாலும் தேவனுக்கு கொடுக்க வேண்டும் என்று எப்பொழுதும் உந்தப்படுவோம். தேவன் இயேசுவின் மூலமாக நமக்கு அருளிய அளவற்ற ஆசீர்வாதங்களை நாம் எப்பொழுதும் காணலாம்.
போதுமானது
ஒரு சிறு குழுவை எங்களது வீட்டில் வைத்து உபசரிக்க வேண்டுமென்று என் கணவரிடமும் என்னிடமும் கேட்ட பொழுது உடனே அதை மறுத்துவிட நினைத்தேன். அவர்களை உபசரிக்கும் அளவிற்கு எனக்கு வசதிகள் இல்லை. எங்களது வீடு மிகச் சிறியது. அதிக ஆட்கள் அதில் தங்க இயலாது. அனைவருக்கும் போதுமான இருக்கைகள் கூட இல்லை. அவர்களோடு உரையாடலில் ஈடுபடுமளவிற்கு எங்களிடம் திறமைகளும் இல்லை. அச்சிறிய குழுவிற்கு தேவையான உணவை தயாரித்து தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டால், அதற்காக செயல்படும் திறமையோ பணவசதியோ என்னிடம் இல்லை. அவர்களை பராமரிக்க என்னிடம் போதுமான வசதிகள் இல்லை. ஆனால், தேவனுக்கும் இந்த சமுதாயத்திற்கும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆவல் உண்டு. ஆகவே எங்களது பயங்களை புறம்பே தள்ளிவிட்டு அச்சிறு குழுவை பராமரிக்க ஒத்துக் கொண்டோம். அச்சிறு குழுவை எங்களது வரவேற்பரையில் ஏற்றுக் கொண்டது, கடந்த ஐந்து அண்டுகளாக, மகிழ்ச்சியைத் தந்தது..
தேவனுடைய மனுஷனான எலிசாவிற்கு, அப்பங்களை கொண்டுவந்த மனிதனுக்கும் இதைப் போலவே தயக்கமும் சந்தேகமும் இருந்தது. அந்த மனிதன் கொண்டு வந்த அப்பத்தை மனிதர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும்படி எலிசா கூறினான். அவனது பணிவிடைக்காரனோ அந்த இருபது அப்பங்களை எப்படி நூறு பேருக்கு கொடுக்க முடியும் என்று கேட்டான். மனிதர்கள் எண்ணத்தின்படி அந்த இருபது அப்பங்கள் நூறு பேரை போஷிக்க போதுமானதாக இருக்காது என்று எண்ணி அவற்றை மனிதர்கள் முன்பு வைக்க வேண்டாமென்று எண்ணினான். ஆனால், அந்த அப்பங்கள் அவர்களது தேவைக்கு அதிகமாக இருந்தது (2 இரா. 4:44). ஏனென்றால் அந்த மனிதன் கீழ்ப்படிந்து கொடுத்ததினால் தேவன் அவற்றை அளவிற்கு அதிகமாக ஆசீர்வதித்து தேவைகளை சந்தித்தார்.
நாம் தகுதியற்றவர்களன்றோ கொடுப்பதற்கு நம்மிடம் போதுமானது இல்லை என்று எண்ணும்பொழுதோ, நம்மிடம் உள்ளது எதுவோ அதை விசுவாசத்துடன் கூடிய கீழ்ப்படிதலோடு தேவனிடம் கொடுக்க வேண்டுமென்று அவர் நம்மிடம் கேட்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேவனே அனைத்தையும் போதுமானதாக மாற்றுகிறவர்.
வெறுமையினின்று நிறைவிற்கு
பிரபலமான ஒரு குழந்தைகளின் கதைப் புத்தகம், ராஜாவைக் கனம்பண்ணி தன் தொப்பியைக் கழற்றின ஒரு ஏழை கிராமத்துப் பையன் பர்த்தொலொமேயுவின் கதையைக் கூறுகிறது. அவன் தொப்பியைக் கழற்றியவுடன் அவன் தலையில் இன்னொரு தொப்பி வந்தது, ராஜா தன்னை இந்தப்பையன் அவமதித்தாக நினைத்துக் கோபப்பட்டான். அவனை அரமனைக்குக் கொண்டுசெல்லும்பொழுது அவன் தலையிலிருந்து எடுக்க எடுக்க இன்னொரு தொப்பி வந்துகொண்டேயிருந்தது. ஒவ்வொரு தொப்பியும் விலையேறப்பெற்ற கற்கள் பதிந்து இன்னும் அழகாக இருந்தது. 500வது தொப்பி ராஜா டெர்வினுக்கே பொறாமையூட்டுவதாய், வைரங்களாலும் அழகிய இறகுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ராஜா பர்த்தலோமேயுவை மன்னித்து அந்த தொப்பியை 500 பொற்காசுகளுக்கு வாங்கினான். பர்த்தலோமேயுக்கு இப்பொழுது தொப்பியில்லை. ஆனால், 500 பொற்காசுகளுடன் சுதந்திரமாக வீட்டிற்குச் சென்றான்.
கடன்கொடுத்தவன் தன் பிள்ளைகளைப் பிடித்துக்கொள்ளப் போகிறானென்று, ஒரு விதவை எலிசாவிடம் ஓடி வந்தாள். அவளிடம் ஒரு குடம் என்ணெய் மாத்திரமே இருந்தது. ஆனால், அண்டை வீட்டுக்காரரிடத்தில் இரவல் வாங்கின பாத்;திரங்களையெல்லாம் தேவன் எண்ணெய்யால் நிரப்பினார். அவள் அதை விற்று, கடனை அடைத்து மீந்ததை வீட்டுச்செலவிற்கும் வைத்துக்கொண்டாள் (4:7).
தேவன் எப்படி எனக்கு இரட்சிப்பை இலவசமாய்க் கொடுத்தாரோ அப்படியே அந்த விதவைக்கும் பொருளாதார விடுதலை கொடுத்தார். நான் பாவத்தினின்று விடுபடுவதற்கான கிரயம் செலுத்தமுடியாமல் இருந்தேன். இயேசு அந்தக் கிரயத்தைச் செலுத்தி என்னை விடுவித்ததுமல்லாமல், நித்திய ஜீவனையும் எனக்களித்தார். எப்படி பர்த்தலோமேயு ராஜாவை அவமதித்ததற்கான கிரயத்தை செலுத்த முடியாதிருந்தாதானோ, அப்படியே நாமும் இருந்தோம். தேவனோ அற்புதமாய் கிரயம் செலுத்தி நம்மை மீட்டார். அவரை நம்புகிற ஒவ்வொருவருக்கும் தேவன் பரிபூரண ஜீவனைத்தருகிறார்.
தேவனிடம் கொடுத்துவிடு
ஒரு வாலிபனாக அநேக சவால்களைச் சந்திக்கும் போதும், விளைவு அல்லது உயர் விளைவு தீர்மானங்களை எடுக்கும் போதும், என் தாயார் எனக்குக் கற்றுக் கொடுத்த ஒரு நண்மையான காரியம் என்னவெனில், எல்லாவற்றையும் ஒரு தாளில் எழுதினால் சரியான கோணத்தில் பிரச்சனையை பார்க்க முடியும் என்பதே. சரியான பாடங்களை தேர்ந்தெடுத்தலின் தெளிவற்ற நிலையோ அல்லது எந்த வேலையை தேர்ந்தெடுப்பதென்பதோ, வயது வந்தோரினை பயமுறுத்தும் சூழல்களை எவ்வாறு சமாளிப்பது போன்ற தெளிவற்ற நிலையின் போது, நான் என் தாயாரின் எழுதும் வழக்கத்தின்படி செய்வேன். அடிப்படை உண்மைகள், அதன் தீர்வுக்கான வழிமுறைகள் அதன் பின் விளைவுகள் என எழுத ஆரம்பித்தேன். என் இருதயத்தை அந்த பக்கங்களில் கொட்டியபின் பிரச்சனையிலிருந்து எளிதாக வெளிவரமுடிந்தது. என் உணர்வு சார்ந்த நோக்கங்களை விட அப்பிரச்சனைகளின் நிலையைத் தெளிவாகக் காண முடிந்தது.
என் எண்ணங்களை ஒரு தாளிள் பதித்ததின் மூலம் புதிய கோணத்தில் அணுக முடிந்தது போல என் இருதயத்தை தேவனிடம் ஜெபத்தின் மூலம் ஊற்றும் போது அவருடைய கண்ணோட்டம், அவருடைய வல்லமையை நான் புரிந்து கொள்ள முடிந்தது. எசேக்கியா ராஜா தன்னை அச்சுறுத்தும் சத்துருவிடமிருந்து ஒரு வருத்தமான கடிதத்தைப் பெற்ற போது இதனையே செய்கிறான். ஆசீரியர் பல தேசங்களை அழித்தது போல எருசலேமையும் அழித்து விடுவோம் என பயமுறுத்தியபோது எசேக்கிய அக்கடிதத்தை தேவனுக்கு முன்பாக விரித்தான். விண்ணப்பத்தோடு அவரை நோக்கிக் கூப்பிட்டான். இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜயங்கள் எல்லாம் அறியும்படிக்கு எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் பண்ணினான் (2 இரா. 19:19).
நாம் நம்மை பதட்டத்துக்குள்ளாக்கும் பயத்தைக் கொண்டுவரும். அதனால் நம்மீடத்திலுள்ளது போதாது என்ற விழிப்புணர்வு ஏற்படும்பொழுது, எசேக்கியாவின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி கர்த்தரை நோக்கி ஓடுவோம். நம் பிரச்சனைகளை அவருக்கு முன்பாக சமர்ப்பிப்போம். அவர் நம் நடைகளை நல் வழிப்படுத்துவார். அமைதியற்ற இருதயத்தை அமைதிப்படுத்துவார் என அவர் மீது நம்பிக்கை வைப்போம்.
மிகவும் கவனமாகத் தேடுதல்!
எங்களது மகள் உயர் நிலைப்பள்ளி குழு ஓட்டப்பந்தயக் குழுவில் ஓடும் போது, எங்களது குடும்பத்தினர் ஒவ்வொரு சனிக்கிழமையும் பந்தய மைதானத்தில் ஓரத்தில் வரிசையாக நின்று அவளை உற்சாகப்படுத்தி கோஷமிடுவோம். பந்தயத்தின் முடிவு கோட்டைத் தொட்டபின் விளையாட்டு வீரர்கள் கூட்டமாக வெளியே வந்து தங்களது சக வீரர்களையும் பயிற்சியாளர்களையும் பெற்றோரையும் சந்திப்பர். 300-க்கும் மேற்பட்ட கூட்டத்தினர் அவர்களை அப்படியே சூழ்ந்துகொள்வதால், அக் கூட்டத்தில் யாராவது ஒருவரை காண்பது மிகவும் சிரமமானது. நாங்கள் எங்களது மகளை தேடி கண்டுபிடித்து, நாங்கள் காணவிரும்பிய அந்த ஒரே ஒரு வீராங்கனையை உற்சாகமாய் கட்டித் தழுவுவோம். அவள் எங்களது அன்பான மகள்.
பாபிலோனில் 70 ஆண்டுகள் சிறைப்பிடிக்கப்பட்ட பின், தேவன் யூதர்களை எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பப் பண்ணினார். தேவன் அவர்கள் மீது கொண்டிருந்த மகிழ்ச்சியையும், அவர்கள் யாத்திரையாக சொந்த வீட்டிற்குத் திரும்புவதற்காக வழிகளை ஆயத்தம் பண்ணின அவரது கிரியைகளையும் அவர்களை வரவேற்க வாசல்களைத் தேவன் ஆயத்தமாக்கினதையும் ஏசாயா விரிவாக எடுத்துரைக்கிறார். அவர்கள் தமது பரிசுத்த ஜனமென்பதை உறுதிப்படுத்தும் கர்த்தர், அவர்களது பெருமையை புதிய நாமத்தின் மூலம் திரும்பக் கொண்டுவருகிறார். “தேடிக்கொள்ளப்பட்டதென்றும் புதிய நகரமென்றும் பெயர் பெறுவாய்” (62:12) பாபிலோனில் சிதறடிக்கப்பட்ட அவர்கள் அனைவரையும் தேடிச் சேர்த்து, தம்மிடம் திரும்பிய அவர்களை அழைத்துவந்தார்.
இஸ்ரவேல் புத்திரரைப் போலவே, தேவனால் கவனமாகத் தேடப்படும் தேவனுடைய அன்பான பிள்ளைகளாய் நாம் இயேசுவானவரின் தியாகபலி திரும்பவும் நம்மைத் தேவனிடம் கொண்டுசேர்க்கிறது. நம்மை மனதாரத் கட்டித் தழுவும்படி நம் ஒவ்வொருவரையும் கவனமாய்த் தேடும் அவர், அந்தத் தருணத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.
ஆழத்திலிருந்து
பிரச்சனை ஏற்படுவதற்கான அறிகுறி ஏதும் தோன்றுகிறதாவென்று அறிய, நீச்சல் குளத்தின் நீர்ப்பரப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். நீச்சல் குளத்தில் உயிர்காப்புப் பணியாளராக அன்று, எனது ஆறு மணிநேர முறைமாற்று வேலையிலிருந்த நான், நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருப்பவர்களது பாதுகாவல் குறித்து கண்காணிப்பதற்காக குளத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். நான் நிற்கும் இடத்தைவிட்டு அகன்றாலோ அல்லது சற்று கவனக் குறைவாக இருந்தாலோ நீச்சல்குளத்திலிருப்பவர்களுக்கு ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டுவிடும். காயத்தினாலோ அல்லது நீச்சல் திறமைக் குறைவினாலோ நீந்துபவர் நீரில் மூழ்கக்கூடிய ஆபத்திலிருந்தால், உடனே அவர்களை குளத்திலிருந்து தூக்கி பாதுகாப்பாக கரைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது எனது பொறுப்பாகும்.
பெலிஸ்தர்களுக்கு எதிரான யுத்தத்தில் (2 சாமு. 21:15-22) தேவன் தாவீதுக்கு உதவி செய்த அனுபவத்தை “ ஆழமான தண்ணீரிலிருந்து” (வச. 22:17) தூக்கி எடுக்கப்பட்ட அனுபவத்தோடு தாவீது ஒப்பிட்டுக் கூறியுள்ளார். தாவீதின் வாழ்க்கையும், அவனோடுகூட இருந்த மக்களின் வாழ்க்கையும், அவர்களது சத்துருக்களால் ஏற்பட்ட ஆபத்துக்களால் நிறைந்திருந்தது. அழிவுக்குள் மூழ்கின தாவீதை தேவன் தூக்கி எடுத்தார். உயிர்காப்பாளர்கள் நீந்துபவர்களுக்காக பாதுகாப்பு பணியில் உள்ளதால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால் தேவனோ தாவீதின் மேலுள்ள பிரியத்தினால் (வச. 20) அவனைக் காப்பாற்றினார். தேவன் என்னை கண்காணித்து காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தினால் அல்லாமல் என்மேலுள்ள பிரியத்தினால், தேவன் என்னைக் காப்பாற்ற விரும்புவதை நான் உணரும் பொழுது, என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது.
நாம் நமது வாழ்க்கையின் போராட்டங்களினால் நாம் மேற்கொள்ளப்படும்பொழுது, நமது உயிர் காப்பாளரான தேவன் நமது போராட்டங்களை காண்கிறாரென்றும், நம்மேலுள்ள பிரியத்தினால் நம்மைக் கண்காணித்து காப்பாற்றுகிறார் என்ற நம்பிக்கையோடிருக்கலாம்.
முதன்மையாகச் செயல்படுதல்
எங்களது மகன், அவனது குழந்தைபருவத்தில் ஓர் அனாதை இல்லத்தில் வளர்ந்ததால் ஏற்பட்ட பேரதிர்ச்சியினால், மனம் நிலைகுலைந்து காணப்பட்டான். அதனால் அவன் எதையும் எதிர் மறையாக சிந்திக்கவும், செயல்படவும் செய்தான். ஆகவே, அவன் எங்கள் குடும்பத்தோடு இணைந்து ஒத்துப்போக, அவனை பழக்கப்படுத்துவதற்காகவும், அவனது மனநிலை சரியாவதற்கும் நாங்கள் பொறுமையோடு அவனுக்கு உதவி செய்தோம். அவனது குழந்தை பருவத்தில், அவன் கடந்து வந்த கடினமான வாழ்க்கையைக் குறித்து, நான் மிகவும் கரிசனைப்பட்டாலும், அவனது எதிர்மறை நடவடிக்கை காரணமாக, உணர்வளவில் நான் அவனை விட்டு தூரமாக விலக ஆரம்பித்தேன். மன நோய் சிகிச்சை அளிப்பவரிடம் என் மனப் போராட்டத்தைப் பகிர்ந்து கொண்டேன். “நீங்கள் முதலாவது அன்பைக் காட்டுவது அவனுக்கு தேவையாக உள்ளது. அவன் நேசிக்கப்படத் தகுதியானவன் என்று நீங்கள் அவனுக்கு காண்பித்தால், அவனும் அதற்கு ஏற்றபடி தகுதியாக நடந்து கொள்வான்” என்ற அவரது அன்பான ஆலோசனை என் மனதில் ஆழமாக பதிந்தது.
தேவனுடைய அன்பே ஒருவர் மேல் ஒருவர் அன்புகூருவதற்கு வழி நடத்துகிற மூல ஆதாரமாகவும், காரணமாகவும் உள்ளதென்று அப்போஸ்தலனாகிய யோவான் அவரது நிருபத்தை வாசிக்கும் மக்கள் ஒருவரோடொருவர் ஆழமாக அன்புகூரத்தக்கதாக வழிநடத்துகிறார் (1 யோவா. 4:7,11). எனது சினேகிதர்களோ, எனது சொந்த பிள்ளைகளோ அல்லது எனக்கு அறிமுகமாகாதவர்களோ, யாராக இருந்தாலும், அப்படிப்பட்ட உண்மையான அன்பை அவர்கள்மீது காண்பிக்கவில்லை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆயினும், யோவானுடைய வார்த்தைகள் பிறரை உண்மையோடு நேசிக்க வேண்டுமென்ற ஆவலை எனக்குள் தூண்டி எழுப்புகிறது. தேவன் முதலாவது நம்மில் அன்பு கூர்ந்தார். தேவன் அவருடைய பரிபூரண அன்பை நம் ஒவ்வொருவர் மேலும் செயல்படுத்தி காண்பிக்க, அவரது ஒரே பேரான குமாரனை அனுப்பினார். நாம் செய்வதுபோல அவர் அவரது இருதயத்தை நம்மை விட்டு விலக்கிக்கொள்ளாததை எண்ணி நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்.
நமது பாவச் செயல்கள் தேவனுடைய அன்பு நம்மீது வெளிப்பட தடையாக இருந்தாலும், அவர் அவரது அன்பை நம்மீது பொழிவதில் தயக்கம் காட்டாமல் மன உறுதியுடன் இருக்கிறார் (ரோம. 5:8). அவர் முதலாவது நம்மை நேசித்ததால், அந்த அன்பின் பிரதிபலிப்பாக நாமும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்று அவருடைய அன்பு வலியுறுத்துகிறது.
கற்பாறை மேஜை
எங்கள் ஊரைப் பார்த்தவாறு உள்ள கற்பாறை மேஜை (table rock) என்னும் பீடபூமியில் மின்னொளி வீசும் பெரிய சிலுவை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. கற்பாறை மேஜையை சுற்றியுள்ள நிலங்களில் அநேக வீடுகள் உள்ளன. அனால் சமீபத்தில் பாதுகாப்பு கருதி, அவ்வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை காலி செய்யவேண்டிய கட்டாயத்துக்குள்ளானார்கள். மிக உறுதியான கற்பாறை படுகை கொண்ட டேபிள் ராக்கிற்கு அருகில் இருந்தாலும், அவர்களுடைய வீடுகள் பாதுகாப்பாக இல்லை. ஏனென்றால் அவை தங்கள் அஸ்திபாரங்களை விட்டு ஒவ்வொரு நாளும் மூன்று அங்குலங்கள் முன்னும்பின்னும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இவை நகர்ந்து கொண்டே இருப்பதினால் முக்கியமான தண்ணீர் குழாய்கள் உடைந்து போய், அவ்வீடுகள் சரிவதின் வேகம் அதிகரித்துவிடும்.
தன் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செய்கிறவன் தன் வீட்டை கற்பாறையின் மீது கட்டுகிறவனைப் போலிருக்கிறான் என்று இயேசு கூறுகிறார் (லூக். 6:47-48). இவ்வீடுகள் கடும்புயலிலும் உறுதியாய் நிற்கும். ஆனால், அதற்கு எதிர்மாறாக, தன் அறிவுரைகளை கேட்டு அதன்படி செய்ய கவனமாயில்லாதவர்கள், சரியான அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் கட்டப்பட்ட வீட்டைப் போலிருப்பார்கள். கடும் மழையும் வெள்ளமும் உண்டாகும்போது அவ்வீடுகள் விழுந்துவிடும் என்று கூறுகிறார்.
தேவன் என்னிடம் எதிர்பார்த்ததை நான் பரிபூரணமாய் செய்யாவிட்டாலும், அவருடைய எதிர் பார்ப்புகளை நான் நெருங்கிவிட்டதாகவே எண்ணி பல சமயங்கள் என்னுடைய மனச்சாட்சியின் தூண்டுதல்களை அலட்சியப்படுத்தியுள்ளேன். ஆனால், உறுதியான டேபிள் ராக்கின் மலையடி வாரத்தின் ‘அருகே’ ஆட்டங்கண்டு கொண்டிருக்கும் அவ்வீடுகள் நம்முடைய ‘கீழ்ப்படிதல்’ தேவனுடைய எதிர்பார்ப்புகளின் ‘அருகில்’ இருந்தாலும் போதாது என்பதை எனக்கு விவரித்து காட்டியது. நம்முடைய வாழ்வில் நம்மை தாக்கும் புயல்களை எதிர்கொண்டு உறுதியாய் நிற்க, கற்பாறையின் மீது கட்டப்பட்ட வீட்டைப்போல நாம் நம் தேவனுடைய வார்த்தைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டும்.
விட்டுவிடுங்கள்!
எங்களது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடனும், சாகசத்துடனும் கொண்டாடும் விதத்தில் என் கணவர் ‘இருவர் மிதிக்கும் மிதிவண்டியை’ வாடகைக்கு வாங்கிவந்தார். என் கணவர் முன்னால் அமர, நான் பின்னால் அமர்ந்துகொண்டேன். இருவரும் எங்களது பெடல்களை மிதிக்க ஆரம்பித்தோம். அப்போதுதான் பல காரியங்கள் புலப்பட்டது. முதலில், எனக்கு பாதையே தெரியவில்லை. முன்னால் அமர்ந்திருந்த என் கணவரின் பரந்த தோள்கள் அதை மறைத்துவிட்டது. அடுத்து, என் கைப்பிடி ஒரே நிலையில் நிற்கும்படியாக பொருத்தப்படிருந்தது. அதை வைத்துக்கொண்டு வண்டியை திருப்பமுடியாது. முன்னால் அமர்ந்திருக்கும் ஓட்டுநரால்தான் வண்டியின் திசையை மாற்றமுடியும். என்னுடைய கைப்பிடி என்னை தாங்கிப்பிடித்துக்கொள்ளத்தான் உபயோகமாகயிருந்தது. கட்டுப்படுத்தப் பட்ட எனது நிலையை எண்ணி கடுப்பாகியிருக்கலாம் அல்லது எனது கணவர் மைக் பாதுகாப்பாகதான் ஓட்டிச்செல்வார் என நம்பிக்கை வைத்து எல்லாவற்றையும் விட்டு பயணத்தை குதூகலத்துடன் ரசிக்கத் தொடங்கலாம்.
தேவன் ஆபிராமை தன் தாயகத்தையும் குடும்பத்தினரையும் விட்டு வெளியே வரச்சொன்ன பொழுது, அவர் இலக்கை பற்றி அதிகமாக ஒன்றும் கூறவில்லை. புதிய தேசத்தின் நிலப்பகுதி குறித்தும் அதன் இயற்கைவளங்கள் குறித்தும் விவரிக்கவில்லை. அதை சென்றடைய எவ்வளவு காலம் ஆகும் என்றுகூட தேவன் சொல்லவில்லை. அவர் காண்பிக்கப் போகும் தேசத்தை நோக்கி “போ” என்று மாத்திரம் அறிவுறுத்தினார். துல்லியமான விவரங்களை எதிர்பார்க்கும் மக்களைப்போல் அல்லாமல், ஆபிராம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சென்றதே அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது (எபி.11:8).
நம் வாழ்வு கட்டுப்பாடில்லாமல் சென்றுகொண்டிருக்கும் பொழுதும், நிச்சயமற்ற சூழ்நிலைகளை சந்திக்கும் பொழுதும், ஆபிரகாமின் வாழ்க்கை நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கட்டும். அவரைப்போல் நாமும் தேவனை நம்பி பின்தொடரலாம். ஏனெனில் தேவன் நம்மை செவ்வையான பாதையின் வழியே அழகாய் நடத்திச்செல்வார்.