இது உனக்கு நல்லது
2016 ஆம் ஆண்டு, உலகெங்குமுள்ள மக்கள் ஏறத்தாள 9800 கோடி ரூபாய்களை சாக்லேட்டுகளுக்காகச் செலவிட்டுள்ளனர் என்று கணக்கிடப்பட்டது. இத்தனை பெரும் தொகை அதிர்ச்சியைத் தருவதாக இருந்தாலும், ஆச்சரியப்படவேண்டாம். சாக்லேட் ஒரு சுவை மிகுந்த பொருள், அதனை நாம் மகிழ்ச்சியோடு சாப்பிடுகிறோம். அதன் இனிமையை உலகம் முழுமையும் அநுபவித்துள்ளது. இந்த இனிப்பிற்கு, குறிப்பிடத்தக்க சுகாதார நன்மைகளும் உள்ளன. சாக்லேட்டுகளில் ஃபிளாவனாய்டு என்ற பொருள் உள்ளது. இது, உடல் வயதாகுவதைத் தடுக்கிறது, இருதய நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. ஆனால் இதனை மருந்தாக பயன் படுத்தியதாக எங்குமே கேட்டதில்லை. (சிறிதளவு கூட!)
நாம் முதலீடு செய்வதற்கு தகுதி பெற்ற மற்றொரு இனிப்பைக் குறித்து சாலமோன் கூறுகின்றார். அது, ஞானம். அவர் தன்னுடைய மகனிடம், “தேனைச் சாப்பிடு, அது நல்லது.” (நீதி 24:13) என்கின்றார். அதனுடைய இனிமையை ஞானத்திற்கு ஒப்பிடுகின்றார். வேத வாக்கியங்களாகிய ஞானத்தை ஒருவன் உட்கொள்ளும் போது, அது அவனுடைய ஆன்மாவிற்கு இனிமையைத் தருவதோடு, உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் பயன் படுவதோடு, “எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும்” ஆக்க உதவுகிறது. அதை நம் வாழ்வில் எப்படியாகிலும் அடைந்து விட வேண்டும். (2 தீமோ 3:16-17)
ஞானம், நம்மை சரியான தீர்மானங்கள் எடுக்க வழிநடத்துவதோடு, நம்மைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது. இதனை நாம் கண்டடையும்படி, நம் முழு முயற்சியையும் செலவளிக்கத் தகுதியானது. சாலமோன் தன்னுடைய மகனுக்கு கூறுவதைப் போன்று, நாம் நேசிப்பவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் உகந்தது. ஞானம் நிறைந்த வேத வார்த்தைகளை நாம் உட்கொள்ளும் போது, நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது, நம் இருதயத்திற்குத் தெவிட்டாத இனிய விருந்தாக இருக்கிறது, உண்மையில், அது நமக்கு உற்சாகமளிக்கிறது! தேவனே, உம்முடைய வேதம் தரும் இனிமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்.
தள்ளப் பட்ட கடன்கள்
2009 ஆம் ஆண்டு, லாஸ் ஏஞ்சலஸ் தேசம், பிள்ளைகளின் சிறையிருப்பிற்கான செலவுத் தொகையை அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து வசூலிப்பதை நிறுத்தியது. புதிதாக கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை என்றாலும், இந்த கொள்கை மாற்றம் வருவதற்கு முன்பிருந்தே செலுத்தாத தொகை, கடனாகவே இருந்தது. 2018 ஆம் ஆண்டு, அத்தேசம், எல்லா கடன் தொகைகளையும் ரத்து செய்தது.
இவ்வாறு, கடனை ரத்து செய்தது, பிழைப்பதற்குப் போராடிக் கொண்டிருந்த சில குடும்பங்கள் வாழ்வதற்கு உதவியாக இருந்தது. அவர்களின் சொத்துக்கள் அல்லது கூலியின் மீதிருந்த கடன் சுமை நீக்கப்பட்டதால், அவர்களின் அனுதின சாப்பாட்டிற்கு ஒரு வழி பிறந்தது. இத்தகைய கஷ்டங்களினாலேயே, தேவனாகிய கர்த்தர், ஏழாம் வருஷத்தின் முடிவில் கடன் யாவையும் விடுதலை பண்ணும் படி சொல்கின்றார். (உபா. 15:2). கடன் சுமையால் ஜனங்கள் குறுகிப் போவதை தேவன் விரும்பவில்லை.
தன் ஜனங்களில் சிறுமைப் பட்டிருந்த ஒருவனுக்குப் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், அவனிடத்தில் வட்டி வாங்க வேண்டாம் என (யாத்திராகமம் 22:25) கூறுகின்றது. தனக்கு சரியான விளைச்சல் இல்லாததினால், கஷ்டத்தை அநுபவிக்கின்ற தன்னுடைய அயலானுக்கு உதவும் படி கொடுக்கின்ற கடன் தொகையில், லாபம் சம்பாதிக்க எண்ண வேண்டாம். ஒவ்வொரு ஏழு ஆண்டுகளிலும் கடனை முற்றிலும் விட்டு விடுவாயாக, எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும் படியாக இப்படிச் செய்ய வேண்டும் என்கின்றார். (உபா. 15:4).
இந்நாட்களில், இயேசுவின் விசுவாசிகள் கூட இந்த கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பதில்லை. கடன் நிமித்தம் போராடிக்கொண்டிருப்பவர்களும் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழும்படி, அவர்களுடைய கடனைத் தள்ளுபடி செய்யும் படி, தேவன் அவ்வப்போது நம்மை தூண்டிக்கொண்டேயிருக்கின்றார். நாம் இத்தகைய கருணையையும், தாராள குணத்தையும் மற்றவர்களுக்கு காண்பிக்கும் போது, நாமும் தேவனுடைய குணத்தைப் பிரதிபலித்து, மற்றவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பவர்களாகின்றோம்.
பந்தயப் பொருளைக் குறிவைத்தல்
1994 ஆம் வருடம் வெளியான “ஃபோரெஸ்ட் கம்ப்” என்ற துப்பறியும் திரைப்படத்தில் வரும், ஃபோரெஸ்ட் ஒட்டத்தின் மூலம் பிரபல்லமானார். அவர் சிறிய ஓட்டத்தைத் துவக்கினார், நாளடைவில் 3 வருடங்கள், 2 மாதங்கள், 14 நாட்கள், 16 மணி நேரம் தொடர்ந்து ”சாலையின் கடைசிவரை” ஓடி முடித்தார். ஒவ்வொரு முறையும் அவர் இலக்கினை அடையும் போது, மற்றொரு இலக்கினை நிர்ணயித்து, தொடர்ந்து ஓடுவார். அமெரிக்கா தேசத்தில் குறுக்கும், நெடுக்குமாக ஓடி, இதுவரை நினையாத அளவு ஓடினார். ‘ஏதோ செய்ய வேண்டும் “ என்பதாக ஆரம்பித்தது அந்த ஓட்டம். “அன்றைய தினம், எந்தவொரு நோக்கமும் இல்லாமல், ஒரு சிறிய தொலைவு ஓட ஆரம்பித்தேன் “ என்றார் ஃபோரெஸ்ட்.
எந்த நோக்கமும் இல்லாமல் ஓடிய ஃபோரெஸ்ட்டைப் போல்லல்லாமல், அப்போஸ்தலனாகிய பவுல் “பந்தயப் பொருளை பெற்றுக்கொள்ளத் தக்கதாக ஓடுங்கள்” (1 கொரி. 9:24) என்று வாசகர்களை, தன்னை மாதிரியாகப் பின் பற்றச் சொல்கின்றார். பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களைப் போன்று ஓட்டத்தில், அதாவது வாழ்க்கையாகிய ஓட்டத்தில், நாமும் சில உலக சிற்றின்பங்களை வேண்டாம் என ஒதுக்கி விட வேண்டும். நம்முடைய உரிமைகளை விட்டுக் கொடுக்க நாம் முன் வரும் போது, அது, நாம் மற்றவர்களுக்கு பாவத்திலிருந்து மீட்பு, நித்திய வாழ்வு ஆகிய நற்செய்திகளை கொடுக்க உதவியாயிருக்கும்.
இந்த இலக்கை நோக்கி நம்மோடு ஓட , நாம் மற்றவர்களையும் அழைக்கும் படி நம் இருதயத்தையும், மனதையும் ஆயத்தப்படுத்தும் போது, நமக்கும் அந்த பந்தயப்பொருள் நிச்சயமாகக் கிடைக்கும். நாம் தேவனோடு, நித்திய காலமாக வாழுவோம். நம் ஓட்டத்தை முடிக்கும் போது, தேவன் நமக்கு வழங்கும் கிரீடம் என்றென்றும் அழியாதது. அவரை அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு அவர் தரும் பெலத்தோடே நாம் ஓடும் போது, பந்தயப் பரிசை பெற்றுக்கொள்வோம். இது, ஓடுவதற்கு என்ன அருமையான காரணம் !
தெருப் பணியாளர்களோடு சேர்ந்து கொள்
சான் பிரான்ஸிஸ்கோ நகரின் சுகாதார பணியாளர்கள், போதை மருந்துக்கு அடிமையாகி, வீடற்று, தெருக்களில் வசிப்போருக்கு, மருத்துவ உதவியளித்து அவர்கள், தங்கள் போதை பழக்கத்திலிருந்து விடுபட உதவினர். வீடற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இது ஆரம்பிக்கப்பட்டது. சாதாரணமாக நோயாளிகளைச் சந்திக்கும்படி, மருத்துவர்கள், தங்கள் மருத்துவ மனையில் காத்திருப்பர். ஆனால் இங்கு, நோயாளிகள் மருத்துவரைத் தேடிச் செல்லத் தேவையில்லை, அவரைச் சந்திக்கும் நேரத்தை ஏற்கனவே பெற்றிருக்க வேண்டிய அவசியமுமில்லை. மருத்துவ உதவி, பாதிக்கப்பட்டவர்களைத் தேடி வரும்.
இந்த சுகாதார பணியாளர்கள், விருப்பத்தோடு பாதிக்கப்பட்டவர்களைத் தேடி வரும் காட்சி, இயேசு கிறிஸ்துவும் நம்முடைய தேவைகளில் நம்மைத் தேடி வந்ததை நினைவுப்படுத்துகின்றது. அந்நாட்களில் மதத் தலைவர்கள் யாரைப் புறக்கணித்தார்களோ, அவர்களையே, இயேசு தம் பணிக்காலத்தில் தேடி வந்தார், “அவர் ஆயக்காரரோடும், பாவிகளோடும்’’ உணவருந்தினார், (வச. 16) அவர் ஏன் இப்படிச் செய்கிறாரெனக் கேட்டபோது, “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ள வர்களுக்கு வேண்டியதில்லை” என்றார். (வச. 17) மேலும் அவர், நீதிமான் களையல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன், என்றார்
நாம் சுகவீனராக, நமக்கொரு மருத்துவர் தேவையென உணரும்போது, (ரோம. 3:10) இயேசு விருப்பத்தோடு “ஆயக்காரோடும், பாவிகளோடும்” போஜனம் பண்ணினதையும், அவர் நம்மையும் சந்திக்க ஆர்வமாயிருப்பதையும் ஏற்றுக்கொள்வோம். அந்த சான் பிரான்சிஸ்கோ நகரின் சுகாதாரப் பணியாளர்களைப் போன்று, தேவன் நம்மையும் தெரு பணியாளர்களாக நியமித்துள்ளார். நாம், அவர் தரும் மீட்பின் செய்தியை தேவையிருப்போருக்கு எடுத்துச்செல்வோம்.
உண்மை: கசப்பா? அல்லது இனிப்பா?
என்னுடைய மூக்கின் மேல்பகுதியில் அநேக மாதங்களாக ஒரு கட்டி இருந்தது. நான் மருத்துவரை அணுகினேன். அந்தப் பகுதியின் திசு ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு சில நாட்களில் கிடைத்தது. அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது தோல் புற்றுநோய். அந்த நோயை குணப்படுத்த முடியுமென்றாலும், அதனால் உயிருக்கு எந்த ஆபத்துமில்லையென்றாலும் அந்தச் செய்தியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
தேவன் எசேக்கியேலிடம் ஒரு கசப்பான மருந்தை, அதாவது புலம்பல்களும், தவிப்பும் நிறைந்த வார்த்தைகள் அடங்கிய ஒரு புத்தகச் சுருளை விழுங்கச் சொல்கின்றார் (எசே. 2:10; 3:1-2). அவன் அதை உட்கொண்டு, வயிற்றை நிரப்பி, பின்னர் அந்த வார்த்தைகளை கடின முகமும், முரட்டாட்ட இருதயமும் (2:4) உள்ள இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசும்படி சொல்கின்றார். கர்த்தருடைய வார்த்தைகளடங்கிய ஒரு புத்தகச் சுருள் சாப்பிடுவதற்கு கசப்பான மருந்து போல இருக்கும் என்று தான் யாரும் எதிர்பார்க்கக் கூடும். ஆனால் எசேக்கியேல், “அது என் வாய்க்கு தேனைப்போல் தித்திப்பாயிருந்தது” என்கின்றார் (3:3).
தேவன் தரும் எச்சரிப்பு எசேக்கியேலுக்கு இனிமையாக இருந்தது. அவருடைய கடிந்துகொள்ளுதலை அவன் வெறுப்போடு பார்க்காமல், அதனை தன் ஆன்மாவுக்கு “இனிமை”யானதாக எடுத்துக்கொண்டான். தேவன் நமக்கு அன்போடும், கருணையோடும் எச்சரிப்பைக் கொடுத்து நம்மைத் திருத்திக் கொண்டு, அவரை கனப்படுத்தி, பிரியப்படுத்தி வாழ உதவி செய்கின்றார்.
சில உண்மைகள், விழுங்குவதற்கு கசப்பான மருந்தாகத் தோன்றும். சில நமக்கு தேனைப்போல இனிமையாயிருக்கும். தேவன் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தால், அவருடைய உண்மை நமக்கு தேனைப்போல இனிமையாயிருக்கும். அவருடைய வார்த்தைகள் நமது நலனுக்காக கொடுக்கப்படுகின்றன. அவை நமக்கு ஞானத்தையும், பிறரை மன்னிக்க பெலனையும் தந்து ,வீண் பேச்சுகளிலிருந்து நம்மை விலக்கிக் காக்கும். சோதனையைச் சகிக்க பெலன் தரும். தேவனே, உம்முடைய ஞானம், இனிமையான ஆலோசனை என்பதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவியருளும்.
நீலக் கோடுகள்
கீழ் நோக்கிய பனிச் சறுக்கலில், பாதையைக் குறிப்பிட நீல வண்ணப் பட்டைகள் வெண்மையான பனியின் மீது தீட்டப்படும். விகற்பமான வளைவுகள் கவனச் சிதறலை ஏற்படுதுவது போல பார்வையாளர்களுக்குத் தோன்றினாலும், பங்கு பெறும் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பிற்கும், வெற்றிக்கும் அது முக்கியமானதாக அமைகின்றது. வீரர்கள் வேகமாக மலையடிவாரத்தையடைய அந்த வண்ணப் பட்டை ஒரு வழிகாட்டியாக செயல்படுகின்றது. வெண்பனியில் வரையப்பட்ட தெளிவான கோடுகள் வீரர்கள் சரியான பாதையைக் காண உதவுகின்றது. மிக வேகமாகச் செல்லும் போது அவர்களின் பாதுகாப்பிற்கும், மேடு பள்ளங்களைச் சரியாகக் கவனித்து, பாதுகாப்பாகச் செல்லவும் இத்தகைய வண்ணக் கோடுகள் உதவுகின்றன.
வாழ்க்கையாகிய ஓட்டத்தில், பாதுகாப்பாக ஓடுவதற்கு ஞானத்தைத் தேடும்படி தன் மகன்களை சாலமோன் வற்புறுத்துகின்றார். நீலக் கோடுகளைப் போல் ஞானம் அவர்களின் வாழ்வை நேரானப் பாதையில் அழைத்துச் செல்லும். அவர்கள் தடுமாறி விழாதபடி காத்துக் கொள்ளும் என்கின்றார் (நீதி. 4:11-12) தேவன் தரும் ஞானத்தை விட்டு விலகாமல் வாழ்ந்தால், அவர்கள் செல்வ வாழ்வை அநுபவிக்கலாம் என்பது அவர்களின் தந்தையின் ஆழ்ந்த நம்பிக்கை.
நம்முடைய அன்புத் தந்தையாகிய தேவன் நமக்கு “நீலக் கோடு” வழிகாட்டியாக வேதாகமத்தைத் தந்துள்ளார். இவ்வுலகில் நாம் எங்கு வேண்டுமானாலும் சறுக்கி விளையாட உரிமையைத் தந்துள்ளார். வேதத்தின் வழியாக அவர் தரும் ஞானம் சறுக்குதலுக்கு வழிகாட்டியாக செயல் படுகின்றது அதைக் கண்டுபிடிப்பவர்கள் வாழ்வடைவர். (வச. 22). நாம் தீமையை விட்டு விலகி, தேவனோடு நடப்போமாகில் அவருடைய நீதி, நாம் நடக்க வேண்டிய வழியைக் காட்டும். நம் கால்கள் வழுவாதபடி அவை நம்மை காத்து ஒவ்வொரு நாளும் நாம் முன்னேறிச் செல்ல, அவை நம்மை வழி நடத்தும் (வச. 12,18)
ஒன்றினை சொந்தமாக்கிக்கொண்ட மனிதனைக் கேளுங்கள்
1900களின் ஆரம்பத்தில் பேக்கார்ட் மோட்டார் கார் கம்பெனி ஒரு வாக்கியத்தை உருவாக்கி, வாங்குபவர்களை ஊக்குவித்தது. அது என்னவெனில், 'ஒன்றினை சொந்தமாகக்கொண்ட மனிதனைக் கேளுங்கள்" என்பதே. இது ஒரு வல்லமையான வாக்கியமாக அந்நாளில் திகழ்ந்தது. அது அந்தக் கார் கம்பெனியின் நன்மதிப்பை அதிகரித்து, அந்தக் காலகட்டத்தில் மிக உயர்ந்த, மற்றும் விலையுயர்ந்த காரினை உருவாக்குகின்ற கம்பெனியாய் உயர்த்தியது. இந்த பேக்கார்ட் கார் கம்பெனியின் எண்ணம் என்னவென்றால், கார் வாங்கின தனிப்பட்ட மனிதனின் சாட்சியானது கேட்பவர்களை உற்சாகமூட்டும் எனவும், தன்னுடைய நண்பன் தான் வாங்கின ஒருபொருளைக் குறித்த திருப்தியானது, ஒரு சக்தி மிகுந்த ஆதரவு என்று நினைத்தது.
தேவனோடு நமக்கு உள்ள நெருக்கமான உறவினை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது என்பது மற்றவர்கள் மீது நல்லதொரு தாக்கத்தை உருவாக்குகிறது. தேவன், நம்முடைய நன்றிகளையும் மகிழ்ச்சியையும் அவரோடு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமும் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார். (சங். 66:1) சங்கீதக்காரன், தன் சங்கீதத்தில், தன் பாவத்திலிருந்து முற்றிலுமாக திரும்பினபோது, தேவன் தனக்கு அளித்த மன்னிப்பினைக் குறித்து மிகவும் வாஞ்சையோடு பகிர்ந்து கொள்ளுகிறார் (வச. 18-20).
வரலாற்றிலே தேவன் மகத்துவமான காரியங்களை செய்து கொண்டிருக்கிறார். உதாரணமாக, செங்கடலை இரண்டாகப் பிளந்தது (வச. 6). அவர் நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் மகத்துவமான காரியங்களைச் செய்கிறார். அதன்மூலம் நம் பாடுகளின் மத்தியில் நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவரை நமக்குக் கொடுத்து, அவருடைய வார்த்தையை நாம் புரிந்துகொள்ளச் செய்கிறார். நம்முடைய அன்றாடத் தேவைகளையும் அவர் சந்திக்கிறார். நாம் இப்படிப்பட்ட சொந்த அனுபவங்களில் தேவனுடைய இடைப்படுதலைக் குறித்து, மற்றவர்களிடம் கூறும் பொழுது, நாம் மற்றெல்லா காரியங்களையும் விட விலையுயர்ந்த காரியத்தினை அவர்களுக்கு கொடுக்கிறோம் - நாம் தேவனுடைய நன்மைகளை உணர்ந்தவர்களாய் மற்றவர்களையும் அவர்களுடைய வாழ்விற்கான பயணத்தில் அவர்களை உற்சாகப்படுத்துகிறவர்களாயும் காணப்படுவோம்.
தலைக்கு பின்புறமும் கண்கள் உண்டு
என் சிறுபிராயத்தில், மற்ற சிறுவர்கள் போலவே நானும் ஒரு குறும்புக்கார சிறுமிதான். யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் திருட்டுத்தனமாக சேட்டைசெய்வேன். ஆனாலும் அம்மாவிடம் மாட்டிக்கொள்வது வழக்கமான ஒன்று. என் குறும்புத்தனங்களை சரியாகவும், உடனடியாகவும் அம்மா கண்டுபிடிப்பார், எனக்கு ஆச்சரியமாக இருக்கும். உண்மை எப்படி அம்மாவுக்குத் தெரிகிறது என்கிற பிரமிப்போடு அவரிடம் அதுபற்றிக் கேட்பேன்; உடனே அவர் “தலைக்கு பின்புறமும் எனக்கு கண்கள் உண்டு” என்று சொல்வார். அதனால் அம்மா திரும்பி நிற்கிற சமயங்களில் எல்லாம் கண்களைத் தேடிப்பார்த்திருக்கிறேன். ‘என்னுடைய பார்வைக்கு அந்தக் கண்கள் தெரியாதோ, அம்மாவின் சிவப்புநிற முடிகளுக்குள் கீழ் மறைந்திருக்குமோ?’ என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். நான் வளர்ந்தபிறகு, கண்களைத் தேடுவதை நிறுத்தினேன். அம்மாவுக்குத் தெரியாமல் எதுவும் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பது புரிந்தது. அதாவது அவ்வளவுக்கு அவர் தன் பிள்ளைகளைக் கவனித்திருக்கிறார். அன்போடு தன் பிள்ளைகள்மேல் அவர் காட்டிய அக்கறைதான் அதற்கு காரணம்.
அம்மாவின் அன்பான கவனிப்புக்கு நான் நன்றிசொல்ல வேண்டும் (அம்மாவிடம் மாட்டிக்கொள்ளாமல் ஒரு குறும்புத்தனம்கூட செய்யமுடியவில்லையே என்று அவ்வப்போது நான் நினைப்பதும் உண்டு.) ஆனால், பரேலாகத்திலிருந்து தேவன் நம்மைப் பார்க்கிறார் , “எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்” என்பது அவர்மேல் மிகுந்த நன்றியுணர்வை உண்டாக்குகிறது (சங். 33:13). நாம் செய்கிறவற்றை மட்டுமல்ல, அதற்கும் அதிகமாக அவருக்குத் தெரியும். நம்முடைய வருத்தங்கள், சந்தோஷங்கள், ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பு என அனைத்தையும் அவர் அறிவார்.
தேவன் நம்முடைய மெய்யான குணத்தைப் பார்த்து, நமக்கு இன்னும் என்ன தேவைப்படுகிறது என்பதை மிகசரியாக அறிகிறார். நம்முடைய இருதயங்களின் உள்ளிந்திரியங்களையும் காண்கிற அளவுக்கு ஊடுருவி பார்க்க வல்லவர், தம்மேல் அன்புகூர்ந்து, தம்மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள்மேல் கண்ணோக்கமா யிருக்கிறார் (வச. 19). நம்மேல் அன்பும் அக்கறையும் வைத்திருக்கும் பிதா அவர்.
பகிர்ந்துண்டு வாழுதல்
ஸ்டீவுக்கு 62 வயது; இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர், வீடில்லாமல் திறந்த வெளிகளில் தங்கி வருபவர். ஒருநாள் சாயங்காலப் பொழுதில், தான் கையால் வரைந்த ஓவியம் ஒன்றை காட்சிக்கு வைத்திருந்தார். பணம் சம்பாதிப்பதற்காக அவர் அவ்வாறு செய்வதுண்டு. அப்போது அங்கே வந்த ஒரு வாலிபப்பெண்மணி, ஸ்டீவுக்கு பல பீஸ்ஸாக்களைக் கொடுத்தாள். அதை நன்றியோடு வாங்கிக் கொண்டார் ஸ்டீவ். பிறகு தன்னிடமிருந்த அதிகமான உணவை, தன்னைப்போலவே வீடின்றி, பசியோடிருந்த ஒருவருடன் பகிர்ந்துகொண்டார். அந்தச் சமயத்தில் மீண்டும் திரும்பி வந்த அந்த வாலிபப்பெண்மணி, மறுபடியும் ஒரு தட்டு நிறைய உணவைக் கொடுத்துவிட்டுச் சென்றார். ஏற்கனவே தான் கொடுத்த உணவை ஸ்டீவ் அடுத்தவருடன் பகிர்ந்ததால், அந்த உணவைக் கொண்டுவந்ததாக அந்த வாலிபப்பெண் சொன்னாள்.
நீதிமொழிகள் 11:25ல் சொல்லப்பட்டுள்ளது போலவே ஸ்டீவின் வாழ்க்கையில் நடந்தது. நாம் மற்றவர்களிடம் இரக்கத்துடன் நடந்துகொள்ளும்போது, நாமும் அதேவித இரக்கத்தைப் பெற்றுக்கொள்வோம். ஆனால், ஏதாவது திரும்பக் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் எதையும் செய்யக்கூடாது. ஸ்டீவுக்கு நடந்ததுபோல உடனே பிரதிபலன் எப்போதும் கிடைப்பதில்லை. மாறாக, தேவன் சொல்லியிருக்கிறார் என்பதால் நாம் மற்றவர்களிடம் இரக்கமாக நடந்துகொள்ள வேண்டும். பிலிப்பியர் 2:3-4; 1யோவான் 3:17. அவ்வாறு நாம் செய்வதில் தேவன் பிரியப்படுகிறார். அவர் திரும்ப நமக்கு பணஉதவியோ, பொருள் உதவியோ பண்ணவேண்டுமென்கிற எந்த கட்டாயமும் கிடையாது. அப்படியிருந்தும், ஏதாவது வழியில் அவர் நமக்கு உதவுவார். சில சமயம் பொருள்ரீதியாகவும், சிலசமயம் ஆவிக்குரிய ரீதியாகவும் உதவுவார்.
இரண்டாவது தனக்குக் கொடுக்கப்பட்ட பீஸ்ஸாவையும் ஸ்டீவ் சிரித்த முகத்துடன் இன்னொருவருடன் பகிர்ந்துகொண்டார். தனக்கு வசதியில்லாவிட்டாலும் தயாளத்துடன் வாழ்வதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். தான் பெற்றதை தனக்கென வைத்துக்கொள்ளாமல், சந்தோஷமாக பிறருடன் பகிர்ந்துகொள்ள ஆயத்தமாக இருந்தார். தேவன் நம்மை வழிநடத்தி, நம்மைப் பெலப்படுத்தினால், நாமும்கூட அப்படிப்பட்டவர்களாக வாழலாம்.