எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கெவின் எம். வில்லியம்ஸ்கட்டுரைகள்

பரிசுத்த ஆவியானவர் இருக்கிறாா்

விமானப் பணிப்பெண் ஒருவர் உள்நாட்டு விமானத்திற்கான தனது முன்னோட்டச் சோதனைகளை மேற்கொண்டபோது, ​​ஒரு பயணி ஒருவர், பயணத்தைப் பற்றி கவலையுடனும் பயத்துடனும் இருப்பதைக் கண்டார். அவளுக்கு அருகே அமர்ந்து, அவள் கையைப் பிடித்து, விமானச் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்தையும் விளக்கி, அவள் பத்திரமாக இருக்கிறாள் என்று அவளைச் சமாதானப்படுத்தினார். "நீங்கள் ஒரு விமானத்தில் ஏறினால், அதின் காரியம் எங்களைப் பற்றியது அல்ல, அது உங்களைப் பற்றியது. உங்களுக்குச் சௌகரியமாக இல்லை என்றால்,  'என்னவாயிற்று? என்னால் ஏதாவது செய்ய முடியுமா?’ என்று நான் உதவ விரும்புகிறேன்” என்றார்.  இந்த கரிசனையான அக்கறை, தம்மை விசுவாசிக்கிறவர்களுக்காகப் பரிசுத்த ஆவியானவர் என்ன செய்வார் என்று இயேசு சொன்னதைப் பற்றிய ஒரு சித்திரமாக இருக்கலாம்.

கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் ஆகியவை ஜனங்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்கு அவசியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது, ஆனால் அது சீடர்களின் இதயங்களில் உணர்ச்சி பெருக்கத்தையும் ஆழ்ந்த துக்கத்தையும் உருவாக்கும் (யோவான் 14:1). எனவே உலகில் தனது பணியை நிறைவேற்ற அவர்கள் தனித்து விடப்பட மாட்டார்கள் என்று அவர்களுக்கு உறுதியளித்தார். “என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை” (வ. 16), அவர் அவர்களுடன் இருக்கும்படி பரிசுத்த ஆவியானவரை அனுப்புவார். ஆவியானவர் இயேசுவை குறித்து சாட்சி கொடுத்து, கிறிஸ்து செய்த மற்றும் சொன்ன அனைத்தையும் அவர்களுக்கு நினைவூட்டுவார் (வ. 26). கடினமான காலங்களில் அவர்கள் அவரால் "ஆறுதல்" (அப்போஸ்தலர் 9:31) அடைவர்.

இந்த வாழ்க்கையில் அனைவரும் (கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் உட்பட) கவலை, பயம் மற்றும் துக்கத்தின் கொந்தளிப்பை அனுபவிப்பார்கள். ஆனால் அவர் இல்லாத நிலையில், நமக்கு ஆறுதல் அளிக்கப் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்று அவர் வாக்களித்துள்ளார்.

கசக்கும் திருடப்பட்ட இனிப்பு

ஜெர்மானிய தேசத்தில் இருபது டன்களுக்கும் அதிகமான சாக்லேட் நிரப்பப்பட்ட டிரக்கின் குளிரூட்டப்பட்ட டிரெய்லரை திருடர்கள் திருடிச் சென்றனர். திருடப்பட்ட இனிப்பின் மதிப்பிடப்பட்ட  தொகை 80,000 டாலர்கள் (சுமார் 66 லட்சம்). வழக்கத்திற்கு மாறாக யாராவது அதிகப்படியான சாக்லேட்டுகளை விநியோகிப்பது தெரிந்தால், உடனடியாக அதைப் புகாரளிக்க உள்ளுர் காவல்திறையினர் கேட்டுக்கொண்டனர். பெரிய அளவிலான இனிப்புகளைத் திருடியவர்கள் பிடிபட்டு வழக்குத் தொடரப்பட்டால் அவர்கள் கசப்பான மற்றும் திருப்தியற்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!

நீதிமொழிகள் இந்தக் கொள்கையை உறுதிப்படுத்துகின்றன: “வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்” (20:17). வஞ்சகமாகவோ அல்லது தவறாகவோ நாம் பெற்றுக்கொண்ட விஷயங்கள் முதலில் தற்காலிக இன்பத்தையளிக்கும் வகையில் இனிமையாகத் தோன்றலாம். ஆனால் சுவையானது இறுதியில் மாறிவிடும். மேலும் நம்முடைய தவறான செய்கை நம்மை சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும். குற்ற உணர்வு, பயம், பாவம் ஆகியவற்றின் கசப்பான விளைவுகள், நம் வாழ்க்கையையும் நற்பெயரையும் அழித்துவிடும். “பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்” (வச. 11). நம்முடைய வார்த்தை மற்றும் செயல்கள் நமது சுயநல ஆசைகளை வெளிப்படுத்தாமல், தூய்மையான தேவனுடையஇருதயத்தை பிரதிபலிக்கட்டும். 

நாம் சோதிக்கப்படும்போது, அவருக்கு உண்மையாய் செயல்படுவதற்கு தேவன் நம்மை பெலப்படுத்துபடிக்கு அவரிடத்தில் விண்ணப்பிக்கலாம். நம்முடைய தற்காலிக இன்பத்திற்கு நம்மை அடிபணியச் செய்யாமல், நிரந்திர மகிமைக்கு நம்மை நடத்திச்செல்லும்படிக்கு அவரிடத்தில் நாம் விண்ணப்பிக்கலாம். 

 

தேவன் கறைகளைக் கழுவுகிறார்

நாம் குடிக்கும் பானங்கள் சிந்தி கறைபடியும் நம்முடைய துணியானது அதுவாகவே தன்னை சுத்தப்படுத்திக்கொண்டால் எப்படியிருக்கும்? பிபிசி செய்தியின்படி, சீன ஆய்வளார்கள் துணியின் மீது பூசப்படும் ஒருவிதமான பூச்சை கண்டுபிடித்தனர், “புறஊதா விளக்குகளில் காண்பிக்கும்போது, பருத்தி உடைகள், கறைகளையும், துர்நாற்றத்தையும் தானே சுத்திகரித்துக் கொள்ளுமாம்.” தானே சுத்திகரித்துக் கொள்ளும் துணிகளின் பாதிப்புகள் உங்களுக்குத் தெரிகிறதா?

தானே சுத்திகரித்துக் கொள்ளும் மேற்பூச்சு, கறைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால், கறைபடிந்த உள்ளத்தை தேவனால் மட்டுமே சுத்திகரிக்க முடியும். பண்டைய யூதேயா ஜனங்கள் கறை படிந்தவர்களாய், விக்கிரக ஆராதனைக்கு தங்களை உட்படுத்தி, தேவனுக்கு புறமுதுகைக் காட்டினதினால் தேவன் அவர்கள் மீது கோபங்கொள்ளுகிறார் (ஏசாயா 1:2-4). அத்துடன் அவர்கள் தங்களை சுத்திகரித்துக் கொள்வதற்கு பலிகளை செலுத்தி, தூபங்காட்டி, பல்வேறு ஜெபங்களை ஏறெடுத்து, சபைக்கூடி வருதலையும் ஆசரித்து, நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றனர் (வச.12-13). அதற்கு தீர்வு, அவர்கள் தங்கள் பாவத்தை உணர்ந்து மனந்திரும்பி, தங்கள் உள்ளத்தில் இருக்கும் பாவகறைகளை பரிசுத்தமும் அன்புமான தேவனிடத்தில் கொண்டு வரவேண்டும். அவருடைய கிருபை அவைகளை சுத்திகரிக்கும். அவைகள் “உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்” (வச.18). 

நாம் பாவம் செய்யும்போது, அதுதானாகவே தன்னை சுத்திகரித்துக்கொள்ளாது. மனந்திரும்புதலின் இருதயத்தோடும், தாழ்மையோடும் நம்முடைய பாவத்தை நாம் அறிக்கையிட்டு அவற்றை சுத்திகரிக்கும் தேவனுடைய பரிசுத்த ஒளியிடத்தில் சமர்பிக்க வேண்டும். அவைகளிலிருந்து விடுபட்டு தேவனிடத்திற்கு திரும்ப வேண்டும். நம்முடைய இருதயத்தை சுத்திகரிக்கும் வல்லமை கொண்ட ஒரே தேவன், நமக்கு மன்னிப்பை அருளி, அவரோடு ஒப்புவரவாகும்படி செய்வார். 

பழிவாங்காதீர்கள்

2011ல் நடந்த விளம்பர நிகழ்வின்போது, இரண்டு 73 ஆண்டுகள் கடந்த முன்னாள் கனடியன் கால்பந்தாட்ட லீக் ஆட்டக்காரர்கள், மேடையிலேயே சண்டைபோட்டுக் கொண்டனர். 1963ல் அவர்கள் விளையாடிய ஆட்டத்திற்கான மதிப்பெண் விவகாரத்தில் அவர்களுக்குள் திருப்தியில்லை. ஆட்டக்காரர் ஒருவர் மேடையிலே அடுத்தவரை இடித்தபோது, கூட்டத்தினர் “விட்டுவிடுங்கள் போகட்டும்” என்று கூறினர். பழிவாங்குகிற எண்ணங்களை விட்டுவிடுங்கள் என்று அவர்கள் சொன்னார்கள். 

பழிவாங்குகிற எண்ணம் கொண்ட பலரைக் குறித்து வேதம் சொல்லுகிறது. தேவன் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக் கொண்டதால், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலின் மீது எரிச்சலுற்றான் (ஆதியாகமம் 4:5). இந்த வெறுப்பு அதிகமாகி அது கொலையில் போய் முடிந்தது. “காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி அவனைக் கொலை செய்தான்” (வச. 8). “ஏசா யாக்கோபைப் பகைத்து...” ஏனென்றால் யாக்கோபு ஏசாவுக்கு உரிய சேஷ்டபுத்திர பாகத்தை திருடிக்கொண்டான். இந்த வெறுப்பு மிகவும் ஆழமாக இருந்ததால் யாக்கோபு தன் உயிருக்கு பயந்து ஓடினான்.

வேதாகமம் பழிவாங்குதலை செயல்படுத்திய பல உதாரணங்களை முன்வைத்தாலும், அந்த வெறுப்பை அழிக்கும் வழிகளையும், மன்னிப்பையும், ஒப்புரவாகும் வழிமுறைகளையும் அறிவுறுத்துகிறது. பிறரிடம் அன்புகூர தேவன் நம்மை அழைக்கிறார் (லேவியராகமம் 19:18). நம்மை அவமானப்படுத்துபவரையும் காயப்படுத்துபவரையும் மன்னிக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும், அனைவரிடமும் சமாதானத்தோடு வாழவும், பழிவாங்குதலை தேவனிடம் விட்டுவிடவும், தீமையை நன்மையால் மேற்கொள்ளவும் (ரோமர் 12:18-21) தேவன் நமக்கு அறிவுறுத்துகிறார். அவருடைய வல்லமையால் இன்றே நாம் பழிவாங்குகிற எண்ணத்தையும் பகையையும் அழிப்போமாக. 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நம் தேர்ந்தெடுப்புகள் முக்கியம்

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஒரு நீச்சல் பயிற்றுவிப்பாளர், நெவார்க் விரிகுடாவில் கார் ஒன்று மூழ்குவதைக் கண்டார். அந்த கார் தண்ணீரில் மூழ்கும்போது அதின் ஓட்டுநர் “எனக்கு நீச்சல் தெரியாது” என்று அலறும் சத்தத்தைக் கேட்டார். கரையிலிருந்து ஒரு கூட்டம் பார்த்தபோது, அந்தோனி விளிம்பில் இருந்த பாறைகளுக்கு ஓடி, தனது செயற்கை காலை அகற்றி, அறுபத்தெட்டு வயது முதியவரைக் காப்பாற்றி, அவரைக் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். அந்தோனியின் துரிதமான முயற்சிக்கு நன்றி. அதின் மூலம் மற்றொரு நபர் காப்பாற்றப்பட்டார். 
நம்முடைய தேர்ந்தெடுப்புகள் முக்கியமானவைகள். யாக்கோபைப் பாருங்கள். அநேகருக்கு தகப்பனான யாக்கோபு தன்னுடைய பதினெழு வயது நிரம்பிய யோசேப்பை அதிகமாய் நேசித்தான் (ஆதியாகமம் 37:3). அதின் விளைவு? யோசேப்பின் சகோதரர்கள் அவனை நேசித்தனர் (வச. 4). அவர்களுக்கு சமயம் கிட்டியபோது அவனை அடிமைத்தனத்தில் விற்றுப்போட்டனர் (வச. 28). யோசேப்பின் சகோதரர்கள் அவனை வெறுத்து ஒதுக்கினாலும், தேவன் யோசேப்பை எகிப்துக்கு கொண்டுபோய், அங்கே அவனுடைய ஸ்தானத்தை உயர்த்தி, ஏழு ஆண்டுகள் பஞ்சத்தின்போது தன்னுடைய குடும்பத்தை பராமரிக்கும்படி செய்தார் (50:20). யோசேப்பு அந்த மேன்மையை அடைவதற்கு போத்திபாரின் மனைவியிடத்திலிருந்து ஓடுவதை தெரிந்துகொண்டான் (39:1-12). அதின் விளைவு சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டான் (39:20), ஆனால் பார்வோனை சந்திக்கிறான் (41அதி.).  
அந்தோனி மிகவும் நேர்த்தியாய் பயிற்சிபெற்ற ஒரு நபராய் இருந்திருக்கலாம், ஆனால் அவன் துரிதமாய் தீர்மானம் எடுக்கவேண்டியது அவசியமாயிருந்தது. நாமும் தேவனை நேசித்து அவருக்கு ஊழியம் செய்வோமாகில், அவர் வாழ்க்கையை ஸ்திரப்படுத்துகிற மற்றும் தேவனை மகிமைப்படுத்துகிற தீர்மானங்களை எடுக்க நமக்கு உதவிசெய்வார். இதுவரை அதை நாம் செய்யாமல் இருந்திருப்போமாகில், இயேசுவை நம்புவதின் மூலம் இனி அதை நாம் துவக்கலாம்.  

தொடர்பில் இருப்போம்

மேடலின், வாரம் ஒருமுறை தன் அம்மாவை போனில் தொடர்புகொண்டு அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். ஆவிக்குரிய எழுத்தாளரான அவளது அம்மா தன்னுடைய முதிர்வயதில், “என்னோடு அடிக்கடி தொடர்பில் இரு” என்று சொல்லுவார்களாம். அதுபோலவே மேடலின் தனது குழந்தைகளையும் அழைத்து அந்த உறவை பராமரிக்க விரும்பினாள். சில நேரங்களில் அது குறிப்பிடத்தக்க கேள்விகள் மற்றும் பதில்கள் நிறைந்த நீண்ட உரையாடலாக இருந்தது. மற்ற நேரங்களில், அந்த தொலைபேசி எண் இன்னும் செயல்பாட்டில் இருக்கிறதா என்று பரிசோதிக்கும் சாதாரண அழைப்பாய் கூட இருந்தது. அவரது புத்தகமான “வாக்கிங் ஆன் வாட்டர்” என்ற புத்தகத்தில், “குழந்தைகள் தொடர்பில் இருப்பது நல்லது. குழந்தைகளாகிய நாம் அனைவரும் அப்பாவுடன் தொடர்பில் இருப்பது நல்லது” என்று எழுதுகிறார்.  
மத்தேயு 6:9-13இல் இடம்பெற்றுள்ள பரமண்டல ஜெபம் நமக்கு தெரியும். அதின் துவக்கவரிகள் தொடர்ந்து இடம்பெறும் வரிகளுக்கு அடிப்படையாய் அமைகிறது என்பதினால் அது மிகவும் முக்கியமானது. மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காய் நாம் ஜெபிக்கக்கூடாது (வச. 5). நம்முடைய ஜெபம் எவ்வளவு நீளமாயிருக்கிறது என்பது முக்கியமில்லை. “வீண்வார்த்தைகளை” பயன்படுத்தி ஜெபிக்க வேண்டியதில்லை (வச. 7). நாம் கேட்பதற்கு முன்பதாகவே நம்முடைய தேவைகளை அறிந்திருக்கிற தேவனிடத்தில் (வச. 8) ஜெபிக்க தூண்டுவது என்பது அவருடனான நம்முடைய உறவை வளர்த்துக்கொள்வதற்காகவே. பிதாவோடு உறவில் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இயேசு வலியுறுத்துகிறார். பின்பு “நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது” (வச. 9) என்று கற்றுக்கொடுக்கிறார்.  
நம்முடைய தேவனோடும், உலகத்தின் பிதாவுமாயிருக்கிற தேவனிடத்தில் தொடர்புகொள்ள வைக்கிறதினால், ஜெபம் என்பது இன்றியமையாதது.  

உங்கள் வியாகுலங்கள் கேட்கப்பட்டது

“இயற்பியல்” என்ற புத்தகத்தில், ஆசிரியர்கள் சார்லஸ் ரிபோர்க் மான் மற்றும் ஜார்ஜ் ரான்சம் ட்விஸ் ஆகியோர், “யாருமில்லாத தனிமையான காட்டில் மரம் விழுந்தால், அந்த சத்தத்தைக் கேட்க அருகில் எந்த மிருகமும் இல்லையென்றால், அது ஒலி எழுப்புமா?” என்ற கேள்வியை கேட்கிறார்கள். பல ஆண்டுகளாக, இந்த கேள்வி, ஒலி, உணர்தல் மற்றும் இருப்பு பற்றிய தத்துவ மற்றும் அறிவியல் விவாதங்களைத் தூண்டியது. இருப்பினும், ஒரு உறுதியான பதில் இன்னும் கண்டறியப்படவில்லை.  
ஒரு நாள் இரவில் நான் சோர்ந்துபோய் கவலையாயிருந்த தருணத்தில், நான் யாரிடத்திலும் சொல்லாமல், இந்த கேள்வியைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தேன்: “உதவிக்கான என்னுடைய அழுகுரலுக்கு யாருமே செவிகொடுக்காத வேளையில், தேவன் அதைக் கேட்கிறாரா?” 
116-ம் சங்கீதத்தை எழுதியவர், மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டு, பாடுகள் அனுபவித்ததால், கைவிடப்பட்டவராக உணர்ந்திருக்கலாம். எனவே அவர் தேவனை அழைத்தார். அழைத்தால் அவர் கேட்கிறார், கேட்டு அவருக்கு உதவிசெய்வார் என்பதை அறிந்திருந்தார். “கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால்… அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால்..” அவரை தொழுதுகொள்வதாக சங்கீதக்காரன் அறிவிக்கிறான் (வச. 1-2). நம்முடைய வேதனையை யாரும் அறியாத நேரத்தில் தேவன் அறிகிறார். நம்முடைய அழுகுரலை யாரும் கேட்காதவேளையில் தேவன் கேட்கிறார்.  
கடினமான தருணங்களில் தேவன் தன்னுடைய அன்பையும் பாதுகாப்பையும் அருளுவார் என்று அறிந்து, இளைப்பாறலாம் (வச. 7). “இளைப்பாறுதல்” (மனோக்) என்பதற்கு பயன்படுத்தப்படும் எபிரெய வார்த்தையானது யாருமில்லாத பாதுகாப்பான ஓர் இடத்தைக் குறிக்கிறது. தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற உறுதியுடன் நாம் இளைப்பாறுதலையும் உதவியையும் பெற்றுக்கொள்ளலாம்.  
அந்த இரண்டு இயற்பியல் ஆசிரியர்கள் கேட்ட கேள்வியானது பல்வேறு பதில்களை கொண்டுவந்தது. ஆனால் தேவன் நம்முடைய வியாகுலத்தைக் கேட்கிறாரா? என்னும் கேள்விக்கு ஆம்! என்ற ஒற்றை பதில் மட்டுமே உள்ளது.