எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெனிபர் பென்சன் ஷுல்ட்கட்டுரைகள்

தேவனோடு தனித்திருத்தல்

அன்றைய தினத்தில் காலைவேளையில் சபையின் ஓர் அறை மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. ஒரு டஜன் குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு நான் உதவியாளராய் இருந்தேன். சற்று நேரத்தில் அறையின் சீதோஷண நிலைமாறி வெப்பம் அதிகரித்தது. அதனால் நான் கதவைத் திறந்து வைத்தேன். ஒரு சிறுவன் இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு யாரும் பார்க்காத வேளையில் தப்பித்து ஓடினான். நானும் பின் தொடர்ந்து ஓடினேன். அப்பொழுது அவன் தன் தந்தையிடம் ஓடிச் சென்றதைக் கண்டு நான் ஆச்சரியம் அடையவில்லை.

பரபரப்பான வாழ்க்கையில் நாம் சிக்கிக் கொள்ளும்போது அந்த சிறுவன் செய்ததைதான் நாமும் செய்ய வேண்டும். அதாவது அவன் தன் தந்தையிடம் சென்றான். இயேசு தன்னுடைய பரலோக பிதாவோடு நேரம் செலவிடவும் ஜெபிக்கவும் வாய்ப்புகளைத் தேடினார். மாம்சத்தில் அவரது பெலனை எல்லாம் ஊழியத்திற்கு செலவிட்ட போது இப்படி தனித்திருந்து தான் அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் என்று சிலர் கூறுவதுண்டு. மத்தேயு எழுதின சுவிசேஷத்தில், இயேசு தனித்திருக்க எண்ணி தனிமையான இடத்தை நோக்கிச் செல்வதைக் காணலாம். அப்போது அவரை மக்கள் சூழ்ந்து கொண்டு பின் தொடர்ந்தனர். அவர்களது தேவை அறிந்த இயேசு அற்புதமாய் சுகமும் உணவும் அளித்தார். “அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்” (மத். 14:23).

இயேசு திரும்ப திரும்ப அநேக ஜனங்களுக்கு உதவி செய்தார். ஆனால் அவர் பரபரப்புடனோ, சோர்வுடனோ காணப்படவில்லை. அவர் தேவனோடு கொண்ட நல்லுறவை ஜெபத்தினால் எப்போதும் ஸ்திரப்படுத்திக் கொண்டேயிருந்தார். நீங்கள் எப்படி செயல்படுகின்றீர்கள்? தேவனை அநுபவித்து அவரது அன்பையும், பெலனையும், முழுமையையும் அறிந்து கொள்ள ஆர்வத்துடன் அவரோடு நேரம் செலவிடவும், தனித்திருக்கவும் செய்கிறீர்களா?

வெளிச்சத்தில் ஜீவித்தல்

அன்று காலை நேரம் இருளாயிருந்தது. சற்று தாழ கரு மேகங்கள் வானத்தை நிறைத்திருந்தன. ஆகவே சுற்றுப்புறம் சற்று மங்கியே காணப்பட்டதால், நான் புத்தகம் படிக்க மின் விளக்கை உபயோகிக்க வேண்டியிருந்தது. நான் அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே அந்த அறை முழுவதும் வெளிச்சம் உண்டாயிற்று. காற்று அந்த கரு மேகங்களை கிழக்கு நோக்கி தள்ளச் செய்து, வானத்தை தெளிவுறச் செய்து, சூரியன் பிரகாசிக்கும்படி செய்ததை கண்டேன்.

அந்த அருமையான காட்சியை நன்கு கண்டுகளிக்க நான் ஜன்னலருகே சென்ற பொழுது, “இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது” (1 யோவா. 2:8) என்ற வசனம் என் நினைவுக்கு வந்தது. விசுவாசிகளை உற்சாகப்படுத்தும் பொருட்டு அப்போஸ்தலனாகிய யோவான் அவர்களுக்கு இதை எழுதினார். பிறரை வெறுக்கிறவன் இருளிலே சுற்றித்திரிகிறான் என்று வேறுபடுத்தி காண்பிக்கிறார். வெறுப்பு நம்மை திசை விலகி போகச் செய்யும். நல் வழியிலே நடக்க வேண்டிய உணர்வை அது நம்மை விட்டு அகற்றிவிடும்.

மற்றவர்களை நேசிப்பது சுலபமானது அல்ல. ஆனாலும் தேவனின் அன்பிலும், ஒளியிலும் ஆழ்ந்த தொடர்பு வைத்திருக்க, விரக்தி, மன்னிப்பு மற்றும் உண்மை ஆகியவை பங்களிக்கிறது என்பதை ஜன்னல் வழியாய் பார்க்கும் பொழுது நினைவுறுத்தப்பட்டேன். வெறுப்பிற்கு பதில் அன்பை நாம் தெரிந்து கொள்ளும் பொழுது, தேவனோடு உள்ள நம்முடைய உறவையும், அவருடைய வெளிச்சத்தையும் நாம் இந்த உலகிற்குக் காண்பிக்கிறோம். “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1 யோவா. 1:5).

இப்பொழுது அனைத்தும் ஒன்றாக

ஆஸ்திரேலியா தேசத்தின், பெர்த் (Perth) நகரில், நிக்கோலஸ் டெய்லர் (Nicholas Taylor) ஓர் ரயிலில் ஏற முயன்றார். அப்பொழுது அவருடைய கால் பிளாட்பாரத்திற்கும் ரயில் பெட்டிக்கும் இடையில் மாட்டிக் கொண்டது. ரயில் நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் அவரை விடுவிக்க முடியவில்லை. அதைப்பார்த்த மக்கள் உதவ முன்வந்தனர். கிட்டத்தட்ட 50 பயணிகள் ஒன்றாக சேர்ந்து ரயிலைத் தள்ள முயன்றனர். அனைவரும் சேர்ந்து முழு பலத்துடன் ‘ஒன்று, இரண்டு, மூன்று’ எனக் கூறி ரயிலை நகர்த்தினர். அப்பொழுது அவரது கால் விடுபட்டது.

அப்போஸ்தலனாகிய பவுலும், ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்யும் கிறிஸ்தவர்களின் பலத்தை நன்கு அறிந்திருந்தார். அப்படி செயல்பட எல்லா சபை மக்களையும் உற்சாகப்படுத்தி கடிதங்கள் அனுப்பினார். ரோம விசுவாசிகளிடம் கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று போதித்தார். “நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப் படுத்தும்படிக்கு, பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தை உள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக” (ரோம. 15:5-6) என்றான்.

பிற விசுவாசிகளோடு நாம் ஒன்றுபட்டு நல்ல ஐக்கியத்துடன் வாழ்ந்து வந்தால், தேவனுடைய வல்லமையை நாம் எளிதாக உலகிற்கு பிரசங்கிக்க முடியும். அதுவே உலகத்தின் உபத்திரவத்தை தாங்கும் பெலத்தை நமக்கு தரும். பிலிப்பியர்கள் அவர்களது விசுவாசத்திற்காக ஓர் விலைகிரயத்தை செலுத்துவார்கள் என்பதை நன்கு அறிந்திருந்த பவுல், அவர்களை ஒன்றாய் செயல்பட உற்சாகபடுத்தினார். “நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிஷேசத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று” (பிலி. 1:27) அறிவேன் என்றான்.

சாத்தானுக்கு எப்பொழுதும் பிரித்து ஆள்வது பிடிக்கும், ஆனால் அவன் தந்திரங்களை நாம் தேவனுடைய உதவியோடு முறியடிக்கலாம். “சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாய் இருங்கள்” (எபே. 4:3).

நன்றாக பார்ப்பது

ராலீக் ஓர் பெரிய நாய். 45 கிலோ எடையுடன் பலவானாய் தோற்றமளிக்கும். உடல் முழுவதும் அடர்ந்த முடி காணப்படும். பயமளிக்கும் தோற்றத்தை கொண்டிருந்தாலும் அது மனிதர்களோடு நன்றாக பழகும். அதன் உரிமையாளர் மருத்துவமனைகளுக்கு அதைக் கூட்டி செல்லும்பொழுது அனைவரது முகத்திலும் புன்முறுவல் பூக்கும்.

ஒரு நாள் நான்கு வயதுள்ள சிறுமி ராலீகைப் பார்த்தாள். அதை ஆசையோடு தடவிக் கொடுக்க விரும்பினாள். ஆனால் அருகில் வருவதற்கு பயம். கடைசியில் அவளது ஆர்வம் பயத்தை மேற்கொண்டது. அதன் பக்கம் வந்து அதனோடு பேசிக் கொஞ்சி மகிழ்ந்தாள். அப்பொழுது தான் ஒரு காரியத்தை அறிந்து கொண்டாள். ராலீக் பெரிய தோற்றத்தை பெற்றிருந்தாலும் அது மிகவும் சாந்த குணமுடைய பிராணி.

இந்தக் குணங்களின் கலவை எனக்குப் புதிய ஏற்பாட்டில் உள்ள இயேசுவைத்தான் ஞாபகப்படுத்துகிறது. இயேசு எளிதாக அணுகக்கூடிய நபராக விளங்கினார். அவர் சிறு பிள்ளைகளை வரவேற்றார் (மத். 19:13-15), மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட விபச்சார பெண்ணிடம் கனிவோடு நடந்துகொண்டார் (யோவா. 8:1-11). இரக்கத்தினால் உந்தப்பட்டு மக்களுக்கு போதித்தார் (மாற். 6:34). அதே சமயம், அவர் ஆச்சரியப்படத்தக்க வல்லமையையும் வெளிப்படுத்தினார். பிசாசைத் துரத்தி, புயலின் மேல் அதிகாரம் செலுத்தி, மரித்தோரை உயிர்த்தெழச் செய்த செயல்களால் மக்கள் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தனர் (மாற். 1:21-34; 4:35-41; யோவா. 11).

நாம் எப்படி இயேசுவைப் பார்க்கிறோமோ அப்படித் தான் அவரோடு உறவாடுவோம். அவரது வல்லமையை மாத்திரம் நாம் கண்ணோக்கினால், அவரை ஓர் புத்தகத்தில் வாழும் மாவீரனைப் போல அவரை ஓர் பீடத்தில் வைத்து போற்றி வணங்கி ஆராதனை செய்துவிடுவோம். அதே சமயம் அவருடைய அன்பை மாத்திரம் நோக்கினால் அவரை சர்வ சாதாரணமாய் நடத்த ஆரம்பித்து விடுவோம். உண்மை என்னவென்றால் இயேசு வல்லமையும், அன்பும் ஒரு சேர நிறைந்துள்ளவர். தாழ்மையோடு நம்மை நண்பர் என்றழைத்த போதிலும் நம்முடைய கீழ்ப்படிதலுக்கு பாத்திரர் அவரே.

என்னிடம் ஓடி வா

ஒரு சமயம் நானும், என்னுடைய பிள்ளைகளும் அருகிலிருந்த பூங்காவில் நடந்து கொண்டிருக்கையில், கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இரண்டு நாய்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அதில் ஒரு நாய் என்னுடைய மகனை தொந்தரவு செய்ய ஆரம்பித்ததை நாயின் உரிமையாளர் கவனிப்பதாகத் தெரியவில்லை. என்னுடைய மகன் அதைத் துரத்த முயற்சித்த பொழுது அது இன்னும் அதிகமாக அவனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.

 கடைசியில், என் மகன் மிகவும் பயந்துபோய் சில அடிகள் தூரம் விலகி ஓடினான். ஆனால் அந்த நாய் அவனை விடாமல் துரத்தியது. அப்பொழுது நான், “என்னிடம் ஓடி வா!” எனக் கத்தினேன். என் மகன் இரண்டு மடங்கு வேகத்துடன் என்னிடம் ஓடி வந்து அமைதியானான். அதைக்கண்ட அந்த நாய் வேரிடத்தில் சேட்டை புரிய சென்று விட்டது.

 இதைப் போலவே, நம்முடைய வாழ்விலும், “என்னிடம் ஓடி வா!” என தேவன் நம்மை அழைக்கும் நேரங்கள் உண்டு. நம்மைத் தொந்தரவு செய்யும் ஒன்று நம்மை பின்தொடர்ந்து வருகிறது. அதைவிட்டு அதி வேகமாக, மிகத் தூரமாக செல்ல அது நம்மை மிக நெருக்கமாகப் பின் தொடர்ந்து வருகிறது. நம்மால் அப்பிரச்சனையை உதறித் தள்ளவும் முடிவதில்லை, திரும்பிப்பார்த்து அதை நாமாக எதிர்கொள்ளும் தைரியமும் இருப்பதில்லை. ஆனால் உண்மை என்னவெனில் நாம் தனியாக இல்லை. நமக்கு உதவவும், நம்மை ஆறுதல்படுத்தவும், தேவன் நம்மோடிருக்கிறார். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம்மைப் பயமுறுத்தும் காரியத்தை விட்டுத் திரும்பி அவரண்டைச் செல்ல வேண்டும். “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” (நீதி. 18:10) என வேதம் சொல்லுகிறது.

மாற்றத்தை தேர்ந்தெடுத்தல்

எனது மகனுக்கு ஒரு சிறிய ரோபோ கிடைத்தபொழுது, அவன் விரும்பின சிறிய, சிறிய வேலைகள் செய்யத்தக்கதாக அதை திட்டமிட்டு அமைத்தது அவனுக்கு நல்ல பொழுதுபோக்காக இருந்தது. அந்த ரோபோவை முன்புறமாக நடக்கவைக்க, நடப்பதை நிறுத்த, பின்நோக்கி நடக்கவைக்க அவனால் முடிந்தது. அது பீப் ஒலி எழுப்பவோ அல்லது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலியை திரும்பக்கூறவோ வைத்தான். என் மகன் கூறினபடியே அந்த ரோபோ எல்லாவற்றையும் செய்தது. ஆனால், இயற்கையாக சிரிக்கவோ அல்லது ஏற்கனவே திட்டமிடப்படாத திசையில் திரும்பவோ அதனால் இயலாது. ஏற்கனவே திட்டமிட்டவைகளைத் தவிர வேறு எந்த செயலையும் அதனால் செய்ய இயலாது.

தேவன் மனிதர்களை சிருஷ்டித்த பொழுது, (அவர்களை) ரோபோக்களைப்போல சிருஷ்டிக்கவில்லை. தேவன் அவருடைய சாயலில் நம்மை சிருஷ்டித்தார். அதனால் நாம் சிந்தித்து செயலாற்றலாம். நாமே தீர்மானங்களை எடுக்கலாம். நன்மை எது, தீமை எது என்பதை நாம் அறிந்து தேர்ந்தெடுக்கலாம். தேவனுக்கு கீழ்ப்படியாத தன்மையை நாம் பழக்கப்படுத்தியிருந்தாலும் கூட, நமது வாழ்க்கையை மறுபடியும் திருத்திக்கொள்ள நம்மால் தீர்மானம் எடுத்துக்கொள்ள இயலும்.

தேவனுடைய வழிகளில் நடப்பதைவிட்டு, இஸ்ரவேல் புத்திரர் வழிதவறினபொழுது, எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலம் தேவன் பேசினார். “நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை… புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக்கொள்ளுங்கள்” (எசே. 18:30–31) என்று எசேக்கியேல் கூறினார்.

இப்படிப்பட்ட மாற்றம், நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு காரியத்தின் மூலமாக ஆரம்பிக்கப்பட்டு பரிசுத்தாவியின் வல்லமையினால் செயல்படுகிறது (ரோம. 8:13). மிகவும் நெருக்கடியான நேரத்தில் தேவையற்ற தேர்ந்தெடுத்தலை தவிர்க்கவேண்டிய நிலையாகும். வம்பு வார்த்தைகள் கிடையாது, பேராசை கிடையாது, பொறாமை கிடையாது ______________ (கோடிட்ட இந்த இடத்தில் நீங்கள் விடவேண்டும் என்று நினைக்கிற காரியங்களை நிரப்பிக்கொள்ளுங்கள்). நீங்கள் இயேசுவை அறிந்திருந்தீர்களானால் நீங்கள் பாவத்திற்கு அடிமைகளல்ல. நீங்கள் மாறுவதற்கான காரியங்களை தேவனுடைய உதவியோடு தேர்ந்தெடுக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றத்தை இன்றே துவங்கலாம்.

வாழ்நாள் முழுவதும் ரசிகர்

ஓக்லஹாமாவில் வாழ்ந்துவந்த கேட் போப் என்ற 12 வயது சிறுவன், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தேசிய கால்பந்தாட்டக் குழுவில் பொறுப்பாளர்களாயிருந்த 32 அதிகாரிகளுக்கு, அவன் கைப்பட கடிதங்கள் எழுதி அனுப்பினான். அதில் “நானும் என் குடும்பத்தாரும் கால்பந்து விளையாட்டை அதிகமாக ரசிப்பவர்கள். எங்களுக்குள்ளாக நாங்கள் கற்பனையில் கால்பந்து விளையாடுவோம். ஒவ்வொரு வார இறுதியிலும் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளை விரும்பிப் பார்ப்போம். தேசிய கால்பந்தாட்ட குழுவிலுள்ள ஏதாவது ஓர் அணிக்கு என் வாழ்நாள் முழுவதும் உற்சாகப்படுத்துபவனாக இருக்க நான் ஆயத்தமாக உள்ளேன்” என்று கேட் எழுதினான்.

கரோலினா பான்தர்ஸ் (Carolina Panthers) கால்பந்து விளையாட்டு அணிக்கு உரிமையாளரான ஜெரி ரிச்சட்சன் அவரது கைப்பட கேட்டுக்கு பதில் கடிதம் எழுதி அனுப்பினார். அக்கடிதத்தின் முதல் வரி “எங்களுடைய அணி உங்களது அணியோடு சேர்வதில் பெருமிதம் அடைகிறோம். உன்னை பெருமைப்படுத்த விரும்புகிறோம்” என்று இருந்தது. மேலும் ரிச்சட்சன் அவரது அணியிலுள்ள சில விளையாட்டு வீரர்களை புகழ்ந்து எழுதியுள்ளார். அவரது கடிதம் தனிப்பட்ட முறையிலும் அன்போடும் கூட கேட்டுக்கு எழுதப்பட்டிருந்தது. அவன் எழுதின 32 கடிதங்களுக்கு இவரிடமிருந்து மட்டும்தான் பதில் கடிதம் கிடைக்கப்பெற்றான். ஆகவே கேட், கரோலினா பான்தர்ஸ் அணியின் விசுவாசமுள்ள ரசிகனாக மாறிவிட்டதில் எந்தவித ஆச்சரியமுமில்லை.

சங்கீதம் 86ல் தாவீது உண்மையான மெய்தேவன் மேல் அவனுக்குள்ள விசுவாசத்தைப் பற்றிக் கூறியுள்ளான். “நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர். ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை” (சங். 86:7, 8) என்று கூறியுள்ளான். தேவனைக் குறித்த நமது பக்தி அவரது சிறந்த குணாதிசயங்களாலும், நம்மீது அவருக்குள்ள கரிசனையினாலும் உருவாகிறது. அவர் நமது ஜெபங்களுக்கு பதில் அளிப்பதாலும், அவருடைய ஆவியினாலும், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மூலமாகவும் நம்மை வழிநடத்துகிறார். நமது வாழ்நாள் முழுவதும் நமது விசுவாசத்திற்கு அவர் உரியவராக இருக்கிறார்.

துதித்தலும், விண்ணப்பித்தலும்

தவறான வழிகளில் எளிதாக செல்லக்கூடிய வாலிபப் பருவத்தினர் மத்தியில் ஊழியம் செய்வதற்காக, நியூயார்க் நகரத்தில், பதின்ம வயதினரின் சவால் என்ற ஊழியம் வழக்கத்திற்கு மாறான அர்ப்பணிப்பான ஜெபத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஸ்தாபகரான டேவிட் வில்கர்சன், அவரது தொலைக்காட்சி பெட்டியை விற்றுவிட்டு, அனுதினமும் இரவில் தொலைக்காட்சி பார்க்கும் இரண்டு மணிநேரத்தை ஜெபத்தில் செலவிட்டார். தொடர்ந்து வந்த மாதங்களில் அவரது புதிய முயற்சியைப் பற்றிய தெளிவு உண்டானதோடு, தேவனைத் துதிப்பதும், அவரிடம் உதவிக்கான விண்ணப்பங்களை ஏறெடுப்பதும் சமமாக இணைந்து செயல்படுவதிலுள்ள வெற்றியையும் பற்றி அறிந்து கொண்டார்.

இந்த சமநிலைப் பிரமாணத்தைப் பற்றி, தேவாலயத்தை பிரதிஷ்டை செய்த சாலொமோன் ராஜாவின் ஜெபம் தெளிவாக விளக்குகிறது. தேவனுடைய பரிசுத்தத்தையும், அவருடைய உண்மைத் தன்மையையும் விவரித்து சாலமோன் அவரது ஜெபத்தை ஆரம்பித்தார். பின்பு அந்த தேவாலயம் சிறப்பாகக் கட்டிமுடிக்கப்பட தேவன்தாம் முழுமையான காரணம் என்று கூறி தேவனுடைய வல்லமையைப் புகழ்ந்து “இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?” (2 நாளா. 6:18) என்று அறிவித்தார்.

தேவனை மகிமைப்படுத்தி உயர்த்தின பின், ஆலயத்திற்குள் நடக்கும் ஒவ்வொரு காரியத்திலும், விசேஷமான கவனத்தைச் செலுத்தும்படி தேவனிடம் வேண்டிக் கொண்டார். மேலும் இஸ்ரவேல் மக்களுக்கு இரக்கம் காண்பிக்கவும், அவர்களது பாவங்களை அவர்கள் அறிக்கையிடும் பொழுது, மன்னித்து அவர்களது தேவைகளைச் சந்திக்கும்படியும் தேவனிடம் மன்றாடினார்.

“சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று” (2 நாளா. 7:1). நம்மால் இயலாத இந்த செயலின் மூலம் நாம் நமது ஜெபத்தில் துதித்து உரையாடும் தேவனே நம்முடைய தேவைகளைக் குறித்து கரிசனையுடன் கண்காணிக்கிறவராக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

உயிர் காக்கும் மிதவை

எனக்கு முன்பாக இருந்த நீச்சல் குளத்தில் சூரிய ஒளி மின்னியது. தற்செயலாக, அதிக நேரம் தண்ணீரிலிருந்த மாணவனைப் பார்த்து, “நீ சோர்வடைவது போலத் தெரிகிறது, ஆழத்திலிருக்கும் பொழுது சோர்வடைந்தால், உயிர் காக்கும் மிதவையை உபயோகி” என்று பயிற்சியாளர் கூறுவதைக் கேட்டேன்.

சில சூழ்நிலைகள், நாம் நம் மனதாலோ, சரீர பெலத்தினாலோ, நம்முடைய உணர்ச்சிகளினாலோ தாங்கிக்கொள்ள முடியாதபடி இருக்கக் கூடும். தாவீது ஒருமுறை எதிரிகளின் பயமுறுத்துதலையும், அவர்களுடைய கோபத்தின் ஆழத்தையும் எதிர்கொண்டது குறித்து விவரிக்கிறான். அவன் எதிர்கொண்ட துயர நிலையிலிருந்து தப்பிப்பது அவசியமாயிருந்தது.

இவ்வாறு அவன்…