ஓக்லஹாமாவில் வாழ்ந்துவந்த கேட் போப் என்ற 12 வயது சிறுவன், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தேசிய கால்பந்தாட்டக் குழுவில் பொறுப்பாளர்களாயிருந்த 32 அதிகாரிகளுக்கு, அவன் கைப்பட கடிதங்கள் எழுதி அனுப்பினான். அதில் “நானும் என் குடும்பத்தாரும் கால்பந்து விளையாட்டை அதிகமாக ரசிப்பவர்கள். எங்களுக்குள்ளாக நாங்கள் கற்பனையில் கால்பந்து விளையாடுவோம். ஒவ்வொரு வார இறுதியிலும் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளை விரும்பிப் பார்ப்போம். தேசிய கால்பந்தாட்ட குழுவிலுள்ள ஏதாவது ஓர் அணிக்கு என் வாழ்நாள் முழுவதும் உற்சாகப்படுத்துபவனாக இருக்க நான் ஆயத்தமாக உள்ளேன்” என்று கேட் எழுதினான்.

கரோலினா பான்தர்ஸ் (Carolina Panthers) கால்பந்து விளையாட்டு அணிக்கு உரிமையாளரான ஜெரி ரிச்சட்சன் அவரது கைப்பட கேட்டுக்கு பதில் கடிதம் எழுதி அனுப்பினார். அக்கடிதத்தின் முதல் வரி “எங்களுடைய அணி உங்களது அணியோடு சேர்வதில் பெருமிதம் அடைகிறோம். உன்னை பெருமைப்படுத்த விரும்புகிறோம்” என்று இருந்தது. மேலும் ரிச்சட்சன் அவரது அணியிலுள்ள சில விளையாட்டு வீரர்களை புகழ்ந்து எழுதியுள்ளார். அவரது கடிதம் தனிப்பட்ட முறையிலும் அன்போடும் கூட கேட்டுக்கு எழுதப்பட்டிருந்தது. அவன் எழுதின 32 கடிதங்களுக்கு இவரிடமிருந்து மட்டும்தான் பதில் கடிதம் கிடைக்கப்பெற்றான். ஆகவே கேட், கரோலினா பான்தர்ஸ் அணியின் விசுவாசமுள்ள ரசிகனாக மாறிவிட்டதில் எந்தவித ஆச்சரியமுமில்லை.

சங்கீதம் 86ல் தாவீது உண்மையான மெய்தேவன் மேல் அவனுக்குள்ள விசுவாசத்தைப் பற்றிக் கூறியுள்ளான். “நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர். ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை” (சங். 86:7, 8) என்று கூறியுள்ளான். தேவனைக் குறித்த நமது பக்தி அவரது சிறந்த குணாதிசயங்களாலும், நம்மீது அவருக்குள்ள கரிசனையினாலும் உருவாகிறது. அவர் நமது ஜெபங்களுக்கு பதில் அளிப்பதாலும், அவருடைய ஆவியினாலும், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மூலமாகவும் நம்மை வழிநடத்துகிறார். நமது வாழ்நாள் முழுவதும் நமது விசுவாசத்திற்கு அவர் உரியவராக இருக்கிறார்.