எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எமி பவுச்சர் பைகட்டுரைகள்

நான் உன்னைக் காண்கிறேன்

இணையதளத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாய் உற்சாகப்படுத்தி எழுதும் எழுத்தாளர்கள் உண்டு. இணையதளத்தில் ஓர் நாள் என் தோழி, “நான் உன்னைக் காண்கிறேன்,” என்று கூறினாள். கவலையோடு மனஅழுத்தத்திலிருந்த எனக்கு அவளுடைய வார்த்தைகள் சமாதானத்தையும், நல்லுணர்வையும் ஏற்படுத்தியது. ‘அவள் என்னைக் கண்டாள்’. அதாவது என்னுடைய எதிர்பார்ப்புகள், பயங்கள், போராட்டங்கள் மற்றும் கனவுகளையும் கண்டாள். கண்டு, அவள் என்னை நேசித்தாள்.

நான் என்னுடைய தோழியின் சாதாரணமான, ஆனால் மிக வல்லமையான ஊக்கத்தை கேட்டபொழுது, ஆபிரகாம் வீட்டில் அடிமையாய் இருந்த ஆகாரை நினைவு கூர்ந்தேன். பல வருடங்களாக ஒரு வாரிசுக்காக காத்திருந்த சாராளும், ஆபிரகாமும் பின்பு அவர்களுடைய கலாச்சார வழக்கத்தின்படி ஆகாரின் மூலம் ஒரு குழந்தை பெறும்படி தன் கணவரிடம் கூறினாள். ஆகார் கருவுற்ற பிறகு சாராளை அற்பமாக எண்ணினாள். ஆகவே சாராள், ஆகாரை கடினமாக நடத்தினாள். இதனால் ஆகார் வனாந்திரத்திற்கு ஓடிப்போனாள்.

வேதனையோடும், குழப்பத்தோடும் இருந்த ஆகாரை தேவன் கண்டு, அவள் அநேக சந்ததியருக்கு தாயாக இருப்பாள் என வாக்குப்பண்ணி ஆசீர்வதித்தார். அந்த சந்திப்பிற்குப் பிறகு ஆகார் தேவனை “எல் ரோயீ” என அழைத்தாள். அதற்கு “என்னைக் காண்கிற தேவன்” (ஆதி. 16:13) என அர்த்தம். ஏனெனில் அவள் தனிமையாகவோ, கைவிடப்பட்டவளாகவோ இல்லை என்பதை அறிந்தாள்.

ஆகாரைக் கண்டது போல, நேசித்தது போல தேவன் நம்மையும் காண்கிறார், நேசிக்கிறார். ஒருவேளை நாம் நம்முடைய நண்பர்களால் அல்லது குடும்பத்தினர்களால் உதாசீனப் படுத்தப்படுவது போல அல்லது நிராகரிக்கப்படுவது போல உணரலாம். அப்படியிருக்க நாம் இந்த உலகத்திற்கு காட்டும் நம்முடைய முகத்தை மட்டுமல்ல, நம்முடைய எல்லா ரகசிய உணர்வுகளையும், பயங்களையும் நம்முடைய பிதா காண்கிறார். கண்டு ஜீவனளிக்கும் வார்த்தைகளைப் பேசுகிறார்.

கவனிக்கப்படாத ஹீரோக்கள்

வேதாகமத்திலுள்ள கதைகள் நம்மை வியப்பில் ஆழ்த்தி சிந்திக்கத் தூண்டுபவை. உதாரணமாக, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு தேவ ஜனங்களை மோசே அழைத்துக்கொண்டு சென்றபொழுது, அமலேக்கியர் அவர்களைத் தாக்கினார்கள். அப்பொழுது, மலையுச்சிக்கு சென்று தேவனுடைய கோலை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்று மோசேவுக்கு எப்படித் தெரியும்? (யாத். 17:8-15). அதைப்பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப் படவில்லை. ஆனால் மோசே தன் கரங்களை உயர்த்தினபொழுது, இஸ்ரவேலர்கள் யுத்தத்தில் மேற்கொண்டார்கள், அவன் கைகளை கீழே இறக்கினபொழுது அமலேக்கியர் மேற்கொண்டார்கள். ஆகவே மோசே சோர்வுற்ற பொழுது, அவருடைய சகோதரனாகிய ஆரோனும், ஊர் என்பவனும் மோசேயினுடைய கரங்களை தாங்கிப் பிடித்து இஸ்ரவேலர் வெற்றிசிறக்க உதவினார்கள்.

இந்த ஊர் என்னும் மனிதனைப் பற்றி நமக்கு அதிகமாக சொல்லப்படவில்லை. ஆனால் அவர் இஸ்ரவேலருடைய வரலாற்றின் இப்பகுதியில் மிக முக்கியமான பங்களித்தார். இது கவனிக்கப்படாத ஹீரோக்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அவர்கள் கண்டு கொள்ளப்படாத பாத்திரமாக விளங்கினாலும், தலைவர்களுக்கு ஆதரவளித்து உற்சாக மூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

ஒரு வேளை தலைவர்கள் மாத்திரமே வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடப்பட்டும், சமூக ஊடகங்களில் பாராட்டுப்பெற்றும் இருக்கலாம், ஆனால் அமைதியாகவும், உண்மையாகவும் வேறு வழிகளில் ஊழியம் செய்யும் சாட்சியுள்ள நபர்களை தேவன் ஒருபோதும் கவனியாதிருக்க மாட்டார். தினமும் ஜெபத்திலே தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக பரிந்து பேசுபவனை தேவன் காண்கிறார். ஆலயத்திலே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாற்காலிகளை எடுத்துப்போடும் பெண்ணை அவர் காண்கிறார். தன்னுடைய அயலானுக்கு ஆறுதலான வார்த்தை கூறுபவனை அவர் காண்கிறார்.

நம்முடைய பணி நமக்கு அற்பமாகத் தோன்றினாலும், உண்மை என்னவெனில் தேவன் நம்மை பயன்படுத்துகிறார். அதைப்போலவே நமக்கு உதவி செய்திடும் கவனிக்கப்படாத ஹீரோக்களை, நாம் கவனித்து நன்றி கூறுவோமாக.

ஜீவசுவாசம்

கடுமையான குளிரும், உறைபனியும் கொண்ட ஒரு காலை வேளையிலே நானும், என் மகளும் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் சுவாசம் நீராவியாக மாறுவதைக் கண்டு, இருவரும் விதவிதமான நீராவி மேகங்களை உருவாக்கி, சிரித்து கொண்டிருந்தோம். நான் உயிரோடிருக்கவும், என் மகளோடு குதூகலமாக நேரத்தை செலவிடவும் கிடைத்த அத்தருணத்தை ஈவாக கருதி கொண்டாடுகிறேன்.

பொதுவாக கண்ணுக்குப் புலப்படாத நம்முடைய சுவாசம், அன்று அந்த குளிர்ந்த காற்றினிலே காண முடிந்தது. அது நம் ஜீவ சுவாசத்தின் ஊற்றாகிய நமது சிருஷ்டி கர்த்தரை நினைவுகூரச்செய்தது. ஏனெனில், பூமியின் மண்ணினாலே உருவாக்கப்பட்ட ஆதாமிற்கு ஜீவசுவாசத்தை அளித்தவர், நமக்கும், இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவனை அளித்துள்ளார் (ஆதி. 2:7). நாம் சுவாசிக்கும் பொழுது, நாம் எண்ணிப்பார்க்காத சுவாசக்காற்று உட்பட அனைத்தும் அவரிடமிருந்தே வந்துள்ளது.

நம்முடைய ஆரம்பத்தையும், தேவனே நமக்கு ஜீவனை அளித்தவர் என்பதையும் நாம் மறந்து போகும்படி இன்றைக்கு நாம் அனுபவித்து கொண்டிருக்கும் சவுகரியங்களையும், தொழில்நுட்பங்களையும் கொண்டு நாம் சோதிக்கப்படலாம். ஆனால் தேவனே நம்முடைய சிருஷ்டி கர்த்தர் என்பதை நிதானித்து நினைவுகூரும் பொழுது, நம்முடைய அன்றாட வாழ்வில் நன்றியறிதலுள்ள மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ளலாம். அவருடைய உதவியை நாடி ஈவாக பெற்றுக்கொண்ட இவ்வாழ்வை எண்ணி தாழ்மையோடு உள்ளத்தின் ஆழத்தினின்று நன்றி கூறலாம். நம்முடைய நன்றியுணர்வு நம்மிலிருந்து வழிந்து மற்றவர்களையும் தொட்டு, அதன் மூலம் தேவனுடைய நன்மையையும், உண்மையையும் எண்ணி அவர்களும் நன்றிகூரட்டும்.

கண்டடையும்படியாக தொலைத்தல்

நான் இங்கிலாந்து தேசத்து மனிதரை திருமணம் செய்து கொண்டு அங்கு சென்றபொழுது, சுமார் ஐந்து ஆண்டுகள் அங்கு சுவாரஸ்யமாக கழிக்கக்கூடும் என எண்ணினேன். ஆனால் திரும்பிப் பார்ப்பதற்குள் 20 வருடங்கள் உருண்டோடி விட்டன. நான் இன்னும் இங்கிலாந்து தேசத்தில்தான் வசிக்கிறேன். சில சமயம், என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், நான் பார்த்த வேலை மற்றும் எனக்கு நன்கு பரிச்சயமான அனைத்தையும் எண்ணிப் பார்க்கும்பொழுது, என் வாழ்க்கையை தொலைத்தது போல இருக்கும். ஆனால், உண்மை என்னவெனில் என் பழைய வாழ்க்கையை இழந்ததினால் அதைவிட சிறந்த புதிய வாழ்வை கண்டுகொண்டேன்.

நம்முடைய வாழ்வை இழக்கும்பொழுது, அதை திரும்ப பெற்றுக்கொள்வோம் என்கின்ற இந்த தலைகீழான ஈவை இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு வாக்குப் பண்ணினார். தன்னுடைய பன்னிரெண்டு சீஷர்களையும் சுவிசேஷம் அறிவிக்க அனுப்பும் பொழுது, தங்கள் தாய், தகப்பனாரை விட, பிள்ளைகளை விட தன்னை அதிகமாக நேசிக்கும்படி அவர்களிடம் கூறினார் (மத். 10:37). குடும்பங்களை சமூதாயத்தின் மூலைக் கல்லாகவும் விலையேறப்பெற்றதாகவும் கருதிய கலாச்சார சூழ்நிலையில் இவ்வார்த்தைகளை இயேசு கூறினார். ஆனால் தனக்காக அவர்கள் ஜீவனையும் கொடுத்தால், அதை திரும்ப பெற்றுக் கொள்வார்கள் என வாக்குப் பண்ணினார் (வச. 39).

வெளிநாட்டிற்கு சென்றுதான் கிறிஸ்துவுக்குள்ளாக நம்மை அறிந்துகொள்ள வேண்டியதில்லை. சீஷர்களைப் போல அர்ப்பணிப்புடன் சேவை செய்து பரலோக ராஜ்ஜியத்தின் நற்செய்தியை பகிர்ந்து கொள்ளும் பொழுது, தேவன் தம்முடைய அளவற்ற அன்பை நம்மீது பொழிந்து, அதன் மூலம் நாம் கொடுத்ததைக் காட்டிலும் அதிகமாக பெற்றுக் கொள்வதைக் காணலாம். ஆனால் நாம் செய்யும் ஊழியத்தைப் பொறுத்து அவர் நம்மை நேசிப்பதில்லை. அவர் எப்பொழுதும் நம்மை நேசிக்கிறவராய் இருக்கிறார். ஆனால் பிறருடைய நலனுக்காக நம்மையே அர்ப்பணிக்கும்பொழுது, ஓர் அர்த்தமுள்ள பூரண மனநிறைவை நாம் கண்டுகொள்கிறோம்.

கேட்பவர்களும், செயல்படுத்துகிறவர்களும்

ஊழியக்காராகிய என் கணவருக்கு, இரவு நேரத்தில் தொலைபேசியில் அழைப்பு வந்தது. எங்கள் சபையிலே ஜெப வீரராக இருந்த மூதாட்டி ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு 70 வயதிற்கு மேலிருக்கும். அவர் தனியாக வாழ்ந்து வந்தார். எதுவும் சாப்பிடவும், குடிக்கவும் முடியாத அளவிற்கு சுகவீனமாய் இருந்தார். மேலும் அவரால் பார்க்கவோ, நடக்கவோ இயலவில்லை. அவர் பிழைப்பாரோ அல்லது மரித்து விடுவாரோ என்று விளங்காமல், அவருடைய நல் வாழ்விற்காக தேவனிடம் அவருடைய இரக்கத்தையும், உதவியையும் நாடினோம். அவர்களை கவனித்துக் கொள்வதற்காக உடனடியாக சபையிலே ஒரு செயல்திட்டம் வகுத்து, இருபத்தினான்கு மணிநேரமும் அவர்களோடு யாராவது ஒருவர் இருக்கும்படியாக செயல்படுத்தப்பட்டது. இதனால், அவருக்கு மாத்திரம் சேவை செய்வதோடல்லாமல் கிறிஸ்தவ அன்பை அங்குள்ள மற்ற வியாதியஸ்தர்களுக்கும், அவர்களை விசாரிக்க வந்தவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் காண்பிக்க முடிந்தது.

சபையானது திக்கற்றவர்களுக்கு உதவுமாறு ஆதி கிறிஸ்தவர்களுக்கு யாக்கோபு தான் எழுதிய கடிதத்தில் அவர்களை உற்சாகப்படுத்துகிறார். விசுவாசிகள், கேட்பதோடு மாத்திரம் நின்று விடாமல், தாங்கள் கேள்விப்பட்டதை செயல்படுத்தும்படியாக அவர் விரும்பினார் (1:22-25). ஆதி நாட்களில், அனாதைகளையும், விதவைகளையும் கவனிக்க வேண்டியது (வச. 27) அவரவர் குடும்பங்களின் கடமையாக கருதப்பட்டது. அதாவது, அனாதைகளும், விதவைகளும் அவர்கள் குடும்பத்தையே எல்லாவற்றிக்கும் எதிர்பார்த்திருந்த பெலவீனமான ஒரு கூட்டம். ஆகவே தான் யாக்கோபு அவர்களை விசாரிக்குமாறு கூறகிறார்.

நம்முடைய சபையிலோ அல்லது சமுதாயத்திலோ பாரமாக கருதப்படுகிறவர்களுக்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம்? விதவைகளையும், திக்கற்ற பிள்ளைகளையும் விசாரிப்பது நம்முடைய விசுவாச வாழ்வின் அதிமுக்கியமான அங்கமாக நாம் கருதுகிறோமா? தேவையில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்ய நம் முன் இருக்கும் சந்தர்ப்பங்களை காண நம் கண்களை தேவன் திறந்தருளுவாராக.

என்றும் கிடைக்காத சிறந்த சலுகை!

போதும் என்பது எவ்வளவு? வளர்ந்த நாடுகள் பல பொருட்களை வாங்குவதற்கென்றே ஒதுக்கப்பட்ட அந்த நாளில் இந்தக் கேள்வியை கேட்டால் நலமாயிருக்கும். அமெரிக்க நன்றியறிதல் விடுமுறை நாளுக்கு அடுத்த நாளாகிய கருப்பு வெள்ளிக்கிழமையைப் பற்றி கூறுகிறேன். அன்று அநேக கடைகள் சீக்கிரமே திறக்கப்பட்டு தள்ளுபடி விலையில் விற்பனை செய்வார்கள்; இது அமெரிக்காவிலிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவிவிட்டது. குறைந்த அளவு பணமுடையவர்கள், தங்களால் இயன்றதை வாங்க முற்படுவார்கள். ஆனால் வருந்ததக்கவிதமாக, ஒரு சிலருக்கோ பேராசையே தூண்டுகோளாக இருப்பதால் பேரம் பேசுவதினால் ஏற்படும் சண்டையில் வன்முறை வெடிக்கிறது.

பிரசங்கி (பிர. 1:1) என்று அழைக்கப்படும் பழைய எற்பாட்டு ஆசிரியருடைய ஞானத்தின் மூலம், வெறிபிடித்தது போல கடைகளில் பொருள் வாங்குவதற்கு ஒரு மாற்று மருந்தை அறிந்துகொள்ளலாம். இது நம் இருதயத்திற்கும் பொருந்தும். பணத்தை நேசிப்பவர்கள் ஒரு போதும் திருப்தியடைவதில்லை. ஆகவே அவர்களுடைய உடைமைகளால் அவர்கள் ஆளப்படுவார்கள் என்று சுட்டிக் காட்டுகிறார். ஆனாலும், அவர்கள் இறக்கும் பொழுது ஒன்றையும் கொண்டு செல்வதில்லை. “வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப் போவான்” (5:15). பண ஆசை எல்லா தீமைக்கும் வேறாயிருக்கிறது. ஆகவே “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியை,” (1 தீமோ. 6:6-10) முயன்று நாட வேண்டுமென்று, பிரசங்கியின் கூற்றை திமோத்தேயுவுக்கு எழுதும் கடிதத்தில் பவுல் எதிரொலிக்கிறார்.

நம்முடைய நிறைவிலும் சரி குறைவிலும் சரி, நம் இருதயங்களில் தேவன் இல்லாத காலி இடத்தை முறையற்ற வழிகளிலே நாம் நிரப்ப முயற்சிக்கலாம். ஆனால் நம்முடைய சமாதானம் மற்றும் சுகத்திற்காக தேவனையே நோக்கினால், அவர் நம்மை அவருடைய நன்மையினாலும் அன்பினாலும் நிரப்புவார்.

தியாகம் நிறைந்த விசுவாசம்

என்னுடைய கணவர் போதகராக உள்ள ஆலயத்தின் அருகில் எங்கள் வீடு உள்ளது. ஒரு ஞாயிற்றுகிழமை மத்தியான வேளையிலே, என் வீட்டு தோட்டத்தில் அமர்ந்தவாரு, ஆலயத்திலிருந்து பாரசீக மொழியில் மிதந்து வந்த துதி ஆராதனை சத்தத்தை கேட்டுக்கொண்டிருந்தேன். லண்டனில் உள்ள எங்கள் ஆலயத்தில் உற்சாகமிக்க ஈரானிய அங்கத்தினர் உள்ளனர். அவர்கள் எதிர்கொண்ட சில உபத்திரவங்களைப் பற்றி கேட்கும்பொழுது, கிறிஸ்துவின் மேலுள்ள அவர்களுடைய வாஞ்சையை அறிந்து கொள்ளலாம். அவற்றோடு ஒப்பிடும்பொழுது நாம் நம்மை சிறியவர்களாக எண்ணக்கூடும். உதாரணத்திற்கு, கிறிஸ்துவை விசுவாசித்ததினால் தன் உயிரைத் துறக்க நேர்ந்த தலைமைப் போதகருடைய சகோதரனின் தியாகம். இந்த உண்மையான விசுவாசிகள், முதலாவது இரத்தசாட்சியான ஸ்தேவானுடைய வழியை பின்பற்றுகிறார்கள்.

ஆதி திருச்சபையிலே முதலாவதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவரான ஸ்தேவான், “பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும்” (அப். 6:8) செய்த பொழுது, எருசலேமிலே அநேகரால் கவனிக்கப்பட்டு, யூத அதிகாரிகள் முன்பு, தன்னுடைய செய்கைகளுக்கு விளக்கமளிக்குமாறு கொண்டு செல்லப்பட்டான். அவனை குற்றப் படுத்தியவர்களின் இருதய கடினத்தை விவரிக்கும் முன்பு, கிறிஸ்துவின் மேலுள்ள தன்னுடைய விசுவாசத்தைக் குறித்து உணர்ச்சிமிக்க விளக்கமளித்தான். அதைக்கேட்டு மனந்திரும்புவதற்கு பதிலாக அவர்கள் “மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லை கடித்தார்கள்” (7:54). ஆத்திரமடைந்த அவர்கள் அவனை நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு வந்து கல்லெறிந்து கொன்று போட்டார்கள். அவனோ அப்பொழுதும் அவர்களை மன்னிக்குமாறு ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்.

கிறிஸ்துவின் சுவிசேஷம் மூர்க்கத்தனமான எதிர்ப்பை உண்டுபண்ணக் கூடும் என்பதை ஸ்தேவான் மற்றும் இன்றைய இரத்த சாட்சிகளின் கதைகள்மூலம் அறிந்து கொள்ளலாம். ஒருவேளை நம்முடைய விசுவாசத்தினிமித்தம் நாம் எந்த ஒரு எதிர்ப்பையும் எதிர்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், இன்று உலகத்தில் உபத்திரவப்படும் சபைக்காக நாம் ஜெபிக்க வேண்டும்; ஒருவேளை நாமும் சோதிக்கப்பட்டால் நமக்காக எல்லா பாடுகளையும் அனுபவித்த கிறிஸ்துவின் முன்பு உண்மையுள்ளவர்களாய் நிற்க கிருபை பெறுவோமாக.

செயல்படும் அன்பு

“ஏதாவது சில துணிகள் துவைக்க வேண்டி இருந்தால், துவைத்துத் தரட்டுமா?” என லண்டனில் உள்ள எங்கள் வீட்டிற்கு வந்த விருந்தினரைப் பார்த்துக் கேட்டேன். உடனே அவருடைய முகம் பிரகாசமாகி, அப்பொழுது எங்களைக் கடந்து சென்ற அவருடைய மகளைப் பார்த்து, “உன் அழுக்குத் துணிகளை எல்லாம் கொண்டு வா. எமி நம்முடைய துணியையெல்லாம் துவைக்கப் போகிறாள்!” என்றார். சில துணிகள் மாத்திரமே துவைக்கும்படி உதவ நினைத்து, இப்பொழுது ஒரு அழுக்கு மூட்டையையே துவைக்க ஏற்பட்ட நிலையைக் குறித்து நான் புன்னகைத்தேன்.

பின்பு அத்துணிகளை கொடியிலே காயப்போட்டுக் கொண்டிருந்தபொழுது, அன்று காலை வாசித்த வேத பகுதியிலுள்ள ஒரு வசனம் என் நினைவுக்கு வந்தது. அது “மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (பிலி. 2:3). பவுல், பிலிப்பியருக்கு எழுதிய கடிதத்தை நான் படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் பிலிப்பியர்களை நோக்கி தேவனுடைய அழைப்பின் மகிமைக்கேற்ப, நாம் ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழும்படியாய் உபதேசித்து உற்சாகப்படுத்துகிறார். உபத்திரவப்பட்டு கொண்டிருந்த அவர்களைப் பார்த்து பவுல் ஒரே மனதுடையவர்களாய் இருக்கும்படி உற்சாகப்படுத்துகிறார். ஏனெனில் கிறிஸ்துவுக்குள்ளான அவர்களுடைய ஐக்கியத்தின் விளைவாகப் பிறக்கும் அவர்களுடைய ஒற்றுமை, ஒருவருக்கொருவர் உதவி செய்வதின்மூலம் வெளிப்பட்டு, விசுவாசத்திலே அவர்களை பலப்படச் செய்யும் என்பதை பவுல் நன்கு அறிந்திருந்தார்.

நாம் சுயநலமான நோக்கமோ அல்லது வீண் பெருமையோ இல்லாமல் பிறரை நேசிப்பதாகக் கூறலாம், ஆனால், நம் இருதயத்தின் உண்மையான நிலை, நம்முடைய அன்பை செயலில் காட்டும்பொழுது தான் வெளிப்படுகிறது. அவ்வளவு துணிகளைத் துவைக்கும்போது முறுமுறுக்கத் தோன்றியது. ஆனால் கிறிஸ்துவை பின்பற்றுபவளாக என்னுடைய அன்பை, சுத்த இருதயத்துடனே, செயலிலே என் நண்பர்களுக்கு வெளிப்படுத்தும்படியாகவே அழைக்கப்பட்டிருக்கிறேன்.

தேவனுடைய மகிமைக்கென்று நாம் நம்முடைய குடும்பத்தினர், நண்பர் மற்றும் அருகில் இருப்பவர்களுக்கு உதவ வழிகளை கண்டடைவோம்.

செவிகொடுக்கும் தேவன்

ஜலதோஷத்தாலும், ஒவ்வாமையினாலும் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு சத்தங்கள் எதையும் தெளிவாகக் கேட்க முடியாமல், நீருக்குள் மூழ்கி இருந்ததுபோல உணர்ந்தேன். அநேக வாரங்களுக்கு சத்தத்தை தெளிவாக கேட்க இயலாமல் கஷ்டப்பட்டேன். அவ்வாறு நான் கஷ்டப்பட்ட பொழுதுதான் சாதாரண நாட்களில் தெளிவாகக் கேட்ககூடிய தன்மையை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருந்ததை உணர்ந்தேன்.

சிறுவனான சாமுவேல் ஆலயத்தில் தூங்கிக்கொண்டிருந்தபொழுது, அவனது பெயரைச் சொல்லி கூப்பிட்ட சத்தம் கேட்டபொழுது, அரைகுறை தூக்கத்திலிருந்து எழுந்தான் (1 சாமு. 3:4). மூன்று முறை அவன் பிரதான ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாக வந்து நின்றான். மூன்றாவது முறைதான், தேவன் சாமுவேலைக் கூப்பிடுகிறார் என்பதை ஏலி உணர்ந்தான். அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாக இருந்தது (வச. 1). இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கும் பழக்கமில்லாதிருந்தார்கள். ஆனால், தேவனுடைய சத்தத்திற்கு எவ்வாறு மாறுத்தரம் கூறவேண்டுமென்று ஏலி சாமுவேலுக்குப் போதித்தான் (வச. 9).

சாமுவேலின் காலத்தில் இருந்ததை விட இந்தக் காலங்களில் தேவன் அதிகமாக பேசுகிறார். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்” (எபி. 1:1–2) என்று எபிரெயருக்கு எழுதின நிரூபம் கூறுகிறது. அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் கிறிஸ்து நமக்கு கற்பித்தவைகளில் வாழ, நம்மை வழிநடத்துகிற, பரிசுத்தாவியானவர் பெந்தெகொஸ்தே நாளன்று அருளப்பட்டதைப்பற்றி வாசிக்கின்றோம். ஆனால் அவருடைய சத்தத்தைக் கேட்கவும், அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய ஜலதோஷத்தின் பொழுது நான் தண்ணீருக்கு அடியில் உள்ளவளைப் போல, எதையும் தெளிவாக கேட்க முடியாமல் இருந்தேனோ, அது போலவே நாம் இருக்கிறோம். கர்த்தருடைய வழிநடத்துதல் இதுதான் என்று நாம் எண்ணும் காரியங்களை வேதாகமத்தின் உதவியின் மூலமாகவும், மூத்த விசுவாசிகளின் மூலமாகவும் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும். தேவனுக்கு பிரியமான பிள்ளைகளாக இருப்பதால் நாம் அவருடைய சத்தத்தைக் கேட்கிறோம். நமக்கு ஜீவனை கொடுப்பதைப்பற்றி நம்மோடு கூடப்பேச தேவன் அதிகம் விரும்புகிறார்.