நான் இங்கிலாந்து தேசத்து மனிதரை திருமணம் செய்து கொண்டு அங்கு சென்றபொழுது, சுமார் ஐந்து ஆண்டுகள் அங்கு சுவாரஸ்யமாக கழிக்கக்கூடும் என எண்ணினேன். ஆனால் திரும்பிப் பார்ப்பதற்குள் 20 வருடங்கள் உருண்டோடி விட்டன. நான் இன்னும் இங்கிலாந்து தேசத்தில்தான் வசிக்கிறேன். சில சமயம், என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், நான் பார்த்த வேலை மற்றும் எனக்கு நன்கு பரிச்சயமான அனைத்தையும் எண்ணிப் பார்க்கும்பொழுது, என் வாழ்க்கையை தொலைத்தது போல இருக்கும். ஆனால், உண்மை என்னவெனில் என் பழைய வாழ்க்கையை இழந்ததினால் அதைவிட சிறந்த புதிய வாழ்வை கண்டுகொண்டேன்.

நம்முடைய வாழ்வை இழக்கும்பொழுது, அதை திரும்ப பெற்றுக்கொள்வோம் என்கின்ற இந்த தலைகீழான ஈவை இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு வாக்குப் பண்ணினார். தன்னுடைய பன்னிரெண்டு சீஷர்களையும் சுவிசேஷம் அறிவிக்க அனுப்பும் பொழுது, தங்கள் தாய், தகப்பனாரை விட, பிள்ளைகளை விட தன்னை அதிகமாக நேசிக்கும்படி அவர்களிடம் கூறினார் (மத். 10:37). குடும்பங்களை சமூதாயத்தின் மூலைக் கல்லாகவும் விலையேறப்பெற்றதாகவும் கருதிய கலாச்சார சூழ்நிலையில் இவ்வார்த்தைகளை இயேசு கூறினார். ஆனால் தனக்காக அவர்கள் ஜீவனையும் கொடுத்தால், அதை திரும்ப பெற்றுக் கொள்வார்கள் என வாக்குப் பண்ணினார் (வச. 39).

வெளிநாட்டிற்கு சென்றுதான் கிறிஸ்துவுக்குள்ளாக நம்மை அறிந்துகொள்ள வேண்டியதில்லை. சீஷர்களைப் போல அர்ப்பணிப்புடன் சேவை செய்து பரலோக ராஜ்ஜியத்தின் நற்செய்தியை பகிர்ந்து கொள்ளும் பொழுது, தேவன் தம்முடைய அளவற்ற அன்பை நம்மீது பொழிந்து, அதன் மூலம் நாம் கொடுத்ததைக் காட்டிலும் அதிகமாக பெற்றுக் கொள்வதைக் காணலாம். ஆனால் நாம் செய்யும் ஊழியத்தைப் பொறுத்து அவர் நம்மை நேசிப்பதில்லை. அவர் எப்பொழுதும் நம்மை நேசிக்கிறவராய் இருக்கிறார். ஆனால் பிறருடைய நலனுக்காக நம்மையே அர்ப்பணிக்கும்பொழுது, ஓர் அர்த்தமுள்ள பூரண மனநிறைவை நாம் கண்டுகொள்கிறோம்.