Archives: மார்ச் 2026

ஈஸ்டர் முரண்பாடு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு விடுதிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகின. செய்தி பரவியதால், சில தேவாலயங்கள் தங்கள் ஆராதனைகளைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டன. மக்கள் திகைத்து, பயந்து வீட்டிற்கு விரைந்தனர். அவர்களின் மகிழ்ச்சியான கொண்டாட்டம் சோகமாக மாறியது.

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், ஈஸ்டர் இப்போது "ஈஸ்டர் குண்டுவெடிப்பு" என்று குறிப்பிடப்படும் அர்த்தமற்ற வன்முறையால் மாண்ட அன்புக்குரியவர்களின் நினைவுகளை மீண்டும் கொண்டுவருகிறது. ஆயினும்கூட துயரம், அப்பாவிகளின் படுகொலை மற்றும் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் சோகம் ஆகியவை உயிர்த்தெழுதலில் உள்ள முரண்பாட்டிற்கு அப்பட்டமான நினைவூட்டல்களே ஆகும். நாம் பிழைக்கும்படி இயேசு மரித்தார். நாம் ஒரு நாள் மரித்தாலும், அவருடைய ஜீவனில் பங்கடைவதால், நாம் மீண்டும் உயிர்த்தெழுவோம் என்பதையும் அறிவோம். அதுதான் உயிர்த்தெழுதலின் நம்பிக்கை.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், பவுலின் கேள்வியை நாமும் நம்பிக்கையுடன் உறுதிப்படுத்தச் செய்கிறது, “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?" மேலும், “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (வ.55-57) எனலாம்.

உயிர்த்தெழுதல் ஞாயிறு என்பது பாவம் மற்றும் மரணத்தின் மீதான கிறிஸ்துவின் வெற்றியின் கொண்டாட்டமாகும், மேலும் இது நாம் பெறக்கூடிய மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. 4 ஆம் நூற்றாண்டின் சபை முற்பிதா ஜான் கிறிசோஸ்டம், "கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், நீ (மரணம்) தூக்கி எறியப்பட்டாய்! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், பேய்கள் வீழ்ந்தன! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், தேவதூதர்கள் களித்தனர்! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், ஜீவன் ஆள்கிறது! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், கல்லறையில் ஒருவர் கூட மரித்திருக்கவில்லை!" என்றார். எதிர்பாராத அல்லது காலத்திற்கு முன்னான இழப்பை நாம் சந்திக்கும்போது, இயேசு ஜீவிப்பதால் அவருடைய ஜெயமான உயிர்த்தெழுதலில் களிகூர முடியும் என்ற இந்த உறுதியையே மையமாகக் கொண்டு நமது நம்பிக்கை இருப்பதாக. 

அடிப்படையை தவறவிடுதல்

பல தசாப்தங்களாக, துரித உணவு வகையில் மெக்டொனால்ட் நிறுவனம் தனது குவார்ட்டர் பவுண்டர் பர்கர் கொண்டு ஆண்டது. 1980 களில் அதின் போட்டி நிறுவனம் தனது அற்புதமான திட்டத்தால் அதனை வீழ்த்த நினைத்தது. ஏ அண்ட் டபுள்யு நிறுவனம் மெக்டொனால்டை விட பெரிதான தர்ட் பவுண்ட் பர்கரை அதே விலைக்கு விற்றது. மேலும் அதின் ருசிக்காக பல விருதுகளையும் வென்றது. ஆனால் அது நிலைக்கவில்லை. அதை வாங்க ஆளில்லை. இறுதியில், அவர்கள் அதை மெனுவிலிருந்து எடுத்துவிட்டனர். தர்ட் பவுண்ட் பர்கர் குவார்ட்டர் பவுண்டர் பர்கரை விட சிரியதென்று நுகர்வோர் தவறாய் புரிந்துகொண்டதே அதின் தோல்விக்கு காரணமென்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையிட்டது. 

அடிப்படைகளை தவறவிடுவது எவ்வளவு எளிது என்று இயேசு எச்சரித்தார். மதத் தலைவர்கள், அவர் சிலுவையில் அறையப்பட்ட வாரத்தில் அவரை இழிவுபடுத்த திட்டமிட்டனர், ஏழு முறை விதவையான ஒரு பெண்ணைப் பற்றி ஒரு விசித்திரமான, கற்பனையான காட்சியை முன்வைத்தனர் (மத்தேயு 22:23-28). இந்த சிக்கலான தடுமாற்றம் ஒரு பிரச்சனையே இல்லை என்று இயேசு பதிலளித்தார். மாறாக, அவர்கள் "வேதத்தையும் தேவனின் வல்லமையையும்" அறியவில்லை என்பதுதான் அவர்களின் பிரச்சனை (வச. 29). வேதவசனங்களின் நோக்கம் தர்க்கரீதியாகவும் தத்துவப் புதிர்களுக்கும் பதிலளிப்பதில்லை என்று இயேசு வலியுறுத்தினார். மாறாக, இயேசுவை அறியவும் நேசிக்கவும், அவரில் "நித்திய ஜீவனை" பெறவும் நம்மை வழிநடத்துவதே அவைகளின் முதன்மையான நோக்கம் (யோவான் 5:39). தலைவர்கள் தவறவிட்ட அடிப்படைகள் இவையே. 

நாம் அடிக்கடி அடிப்படைகளையும் தவறவிடுகிறோம். உயிரோடிருக்கும் இயேசுவை கண்டுகொள்வதே வேதத்தின் முக்கிய நோக்கம். அதைத் தவறவிட்டால் மனவேதனையே மிஞ்சும். 

இயேசுவில் மறுமலர்ச்சி

லியோனார்டோ டா வின்சியை மறுமலர்ச்சியின் மனிதராக நாம் அறிவோம். அவரது அறிவாற்றல் திறன், பல படிப்புகள் மற்றும் கலைகளில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும், லியோனார்டோ பிரசித்தி பெட்ரா தனது வரிகளில் "நம்முடைய இந்த மோசமான நாட்கள்" என்றும், "மனிதர்களின் மனதில் நம்மைப் பற்றிய எந்த நினைவையும் விட்டுச் செல்லாமல்" நாம் இறந்துவிடுகிறோம் என்று புலம்பினார்.
"நான் வாழ கற்றுக்கொள்ளும்போதே, சாகவும் கற்றுக்கொள்கிறேன்" என்கிறார் லியோனார்டோ. அவர் புரிந்துகொண்டதை காட்டிலும் உண்மைக்கு அருகே இருந்தார். எப்படி மாிக்க வேண்டுமென்று கற்றுக்கொள்வதே வாழ்வுக்கான வழி. எருசலேமில் இயேசுவின் வெற்றி பவனிக்கு பின்இப்போது நம் குருத்தோலை ஞாயிறென்று கொண்டாடுகிறோம்; பார்க்கவும் யோவான் 12:12–19), அவர், " கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்" (வ. 24) என்றார். அவர் தனது சொந்த மரணத்தைப் பற்றி இப்படி பேசினார், ஆனால் நம் அனைவரையும் உள்ளடக்கியதாக அதை விரிவுபடுத்தினார்: "தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்" (வ. 25).
அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவுடன் "அடக்கம்" பண்ணப்படுவதை பற்றி, "மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்" (ரோமர் 6:4–5) என்று எழுதினார். அவரது மரணத்தின் மூலம், இயேசு நமக்கு மறுபிறப்பை வழங்குகிறார், அதுவே மறுமலர்ச்சியின் அர்த்தம். அவர் தனது பிதாவுடன் நித்திய வாழ்வுக்கான வழியை உருவாக்கினார். 

தேவனுடைய தற்போதைய மற்றும் நிரந்திர பிரசன்னம்

மிர்னாளினி சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு இருந்த கிறிஸ்தவ நண்பர்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை எப்படிக் கையாண்டார்கள் என்பதை அவள் மதித்தாள். அவர்கள் மீது கொஞ்சம் பொறாமைகூட அவளுக்கு இருந்தது. ஆனால் மிர்னாளினி அவர்கள் வாழ்ந்ததுபோல் வாழ முடியும் என்று நினைக்கவில்லை. கிறிஸ்துவை பின்பற்றுவதற்கு அதிக ஒழுங்குகளை கையாளவேண்டும் என்று எண்ணியிருந்தாள். இறுதியில் ஓர் கல்லூரி மாணவி, இயேசு அவளுடைய வாழ்க்கையை பாழாக்குகிற தேவனல்ல, மாறாக, வாழ்க்கையின் கடினமான தருணங்களில், அவர் நம்மோடிருந்து உதவிசெய்கிற தேவன் என்று அவளுக்கு உணர்த்தினாள். அதை புரிந்துகொண்ட மாத்திரத்தில், மிர்னாளினி, இயேசுவை ஏற்றுக்கொள்ளவும் அவளுக்கான தெய்வீக அன்பையும் ருசிக்க தீர்மானித்தாள்.

சாலொமோன் ராஜாவும் மிர்னாளினிக்கு இதேபோன்ற அறிவுரைகளை வழங்கியிருக்கலாம். இந்த உலகத்திற்கு அதன் பாடுகள் உண்டு என்பதை அவர் ஒப்புக்கொள்ளுகிறார். “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு” (பிரசங்கி 3:1) என்றும் “புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு” (வச. 4) என்றும் பிரசங்கி சொல்லுகிறார். அதுமட்டுமல்ல, இன்னும் அநேகம் இருக்கிறது. தேவன் “உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்” (வச. 11). உலகம் என்றால், தேவனுக்கு முன்பாக நாம் வாழும் வாழ்க்கையைக் குறிக்கிறது.

மிர்னாளினி இயேசுவை விசுவாசித்தபோது (யோவான்-10:10), அவர் வாக்களித்த நிறைவான வாழ்க்கையை பெற்றுக்கொண்டாள். அதைக்காட்டிலும் மேலானவைகளையும் பெற்றாள். விசுவாசத்தின் மூலம் அவளுடைய இருதயத்தில் இருக்கும் நித்தியமானது (பிரசங்கி 3:11), பிரச்சனையில்லாத எதிர்காலத்தையும் (ஏசாயா 65:17) நித்தியமான தேவனுடைய பிரசன்னத்தையும் அடையாளப்படுத்துகிறது. 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, மெதடிஸ்ட் பாடல் புத்தகத்தில் முதலாவதாக வைக்கப்பட்ட பாடல் சார்லஸ் வெஸ்லியால் எழுதப்பட்ட “ஓ ஆயிரம் நாவுகள் பாடுவதற்கு” என்ற பாடலே. “ஒருவருடைய மனந்திரும்புதலின் ஆண்டுவிழா” என்றே அப்பாடல் முதலாவது தலைப்பிடப்பட்டிருந்தது. இயேசுவின் மீதான அவரது நம்பிக்கையால் தூண்டப்பட்ட தீவிரமான புதுப்பித்தலை நினைவுகூரும் வகையில் இந்த பாடல் இயற்றப்பட்டது. மனந்திரும்பி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு தேவனுடைய குணாதிசங்களின் மகிமையைப் பறைசாற்றும் பதினெட்டு வரிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அத்தகைய நம்பிக்கை கொண்டாடத் தகுந்தது; பகிர்ந்து கொள்ளத்தக்கது. 2 தீமோத்தேயு 2ல், பவுல் தீமோத்தேயுவை தனது விசுவாசத்தில் உறுதியாக இருக்கவும், அதைப் பகிர்ந்து கொள்வதில் விடாமுயற்சியுடன் இருக்கவும் ஊக்குவிக்கிறார். மேலும், “இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்” (வச. 8-9) என்று குறிப்பிடுகிறார். அவருடைய தெரிவுகளை இரண்டாவதாக யூகிப்பதற்குப் பதிலாக, பவுல் தீமோத்தேயுவுக்கு “தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்” (வச. 8) என்று சுவிசேஷத்தை நினைப்பூட்டுகிறார். அவர் ஆளுகை செய்வதற்காக அல்ல, ஊழியம் செய்வதற்காகவே வந்தார்; நாம் சமாதானமாய் இருக்கும்பொருட்டு உலகத்தின் பாவங்களுக்காய் அவர் மரித்தார். மரணம் ஜெயங்கொள்ளவில்லை. இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

மேலும் அது நம்பிக்கை கொண்டவர்களை விடுதலையை பெறுவது போல், அதின் செய்தியும் கட்டுப்பட்டு இருக்கவில்லை. சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், கல்லறைகள் போன்று மரணம் தன் ஆளுகையை செயல்படுத்தும் இடங்களில் கூட, “தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை” (வச. 9) என்று பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் அனைவருக்கும் நம்பிக்கை துளிர்விடுகிறது. அந்த செய்தி கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி! 

 

ஜெபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது

“நான் ஐம்பது ஆண்டுகளாக உங்களுக்காக ஜெபம் செய்கிறேன்,” என்று வயதான பெண் ஒருவர் கூறினார். என் நண்பன் லூ அவருடைய கண்களை ஆழ்ந்த நன்றியுடன் பார்த்தான். அவன் ஒரு இளைஞனாய் தனது தந்தை வளர்ந்த பல்கேரிய கிராமத்திற்குச் சென்றிருந்தான். இயேசுவின் விசுவாசியான அந்தப் பெண், அவருடைய தாத்தா பாட்டியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். ஒரு கண்டத்திற்கு அப்பால் தொலைவில் லூவின் பிறப்பைக் கேள்விப்பட்ட உடனேயே அவள் லூவுக்காக ஜெபிக்க ஆரம்பித்தாள். இப்போது, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, அவர் ஒரு வணிகப் பயணமாக கிராமத்திற்குச் சென்றிருந்தான். அங்கு அவன் தனது நம்பிக்கையைப் பற்றி ஒரு குழுவிடம் பேசினான். ஏறக்குறைய முப்பது வயது வரை லூ இயேசுவின் விசுவாசியாக மாறவில்லை. இந்த வயதான தாயார் அவனை அணுகியபோது, அவன் இரட்சிக்கப்படுவதற்கு அவரது தொடர்ச்சியான ஜெபங்கள் அவன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அவன் ஆச்சரியப்பட்டான்.

பரலோகத்தின் இந்தப் பக்கத்தில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்களின் முழு விளைவை நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். ஆனால் வேதம் நமக்கு இந்த அறிவுரையை அளிக்கிறது: “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோசெயர் 4:2). கொலோசே என்ற சிறிய பட்டணத்தில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் இந்த வார்த்தைகளை எழுதியபோது, அவர் எங்கு சென்றாலும் தேவன் தனது செய்திக்காக வாசலை திறந்தருளும்படிக்கு (வச. 4) ஜெபிக்கும்படியாய் கேட்கிறார்.

சில நேரங்களில் நாம் நினைக்கலாம், ஜெபம் என்ற ஆவிக்குரிய வரம் என்னிடம் இல்லை. ஆனால் வேதாகமத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவிக்குரிய வரங்களிலும் ஜெபம் இடம்பெறவில்லை. ஒருவேளை இதற்குக் காரணம், தேவன் கிரியை நடப்பிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் உண்மையாக ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். 

 

கிறிஸ்துவில் ஒன்றாக இருப்பது சிறந்தது

டாக்டர் டிஃப்பனி கோல்சன் தனது சிறிய அமெரிக்க நகரமான இல்லினாய்ஸில் இருக்கும் ஈஸ்ட் செயிண்ட் லூயிஸில் பல வழிகளில் குற்றச் செயல்களின் தாக்கத்தைக் கண்டார். இருப்பினும், 2023 ஆம் ஆண்டில், நகரம் கொலைகளில் 31 சதவிகிதம் வீழ்ச்சியையும், ஒட்டுமொத்த குற்றங்களில் 37 சதவிகித வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது. என்ன நடந்தது? ஒரு கூட்டு முயற்சி. நகரின் பொதுப் பாதுகாப்பு அமலாக்கக் குழுவானது, மாநில மற்றும் நகர காவல்துறை, நகரப் பள்ளி மாவட்டம் மற்றும் நம்பிக்கை அமைப்பு உட்பட அனைத்தும் குடிமக்களுக்கு ஆதரவாக இணைந்து செயல்பட ஆரம்பித்ததே அதற்கு காரணம்.

“இது ஒரு திருமணம் என்று நாங்கள் கூறுகிறோம்,” என்று டாக்டர் கோல்சன் கூறினார். நகர கூட்டாளிகளின் அனைத்து உறுப்பினர்களும் குடிமக்களுக்கு உதவ ஒன்றாக இணைந்தனர். அவர் வழிநடத்தும் பள்ளியின் ரேபரவுண்ட் வெல்னஸ் சென்டர், குற்றம் அல்லது விபத்துகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக பள்ளி சமூக சேவகர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை உள்ளடக்கியது. மற்ற ஏஜென்சிகள் தங்கள் தோ்ச்சிப் பெற்ற உதவியை பகிர்ந்து கொள்கின்றன. தெருவில் உள்ளவர்களுடன் அதிகம் பேசவும், கேட்கவும் காவல்துறை உறுதியளிக்கிறது.

சங்கீதக்காரனாகிய தாவீது “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங்கீதம் 133:1) என்கிறார். மேலும் ஒருமித்து வாசம்பண்ணுவது “எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது” (வச. 3) என்று ஒப்பிடுகிறார். தேவன் மீது ஒருங்கிணைக்கும் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் மக்களை தாவீது குறிப்பிடுகிறார். கொள்கைகள் அல்லது அரசியலால் பிரிக்கப்பட்டாலும் நாம் ஒன்று தான். இது குழப்பமாய் தெரியலாம், ஆனால் ஆசீர்வாதமான ஒன்று. கிறிஸ்தவ அன்பு தேவைப்படும் நாம் வாழும் ஊர்களில், ஒருவருக்கொருவர் அன்பு காண்பிக்கவேண்டியது விசுவாசிகளின் அழகான இலக்காய் அமைந்திருக்கிறது.